செவ்வாய், 28 ஜூலை, 2020

கவிஞர் சிற்பி அவர்களுக்கு அகவை 85 தின வாழ்த்துகள்





ஆழியாற்றங்கரையில்
ஊற்றெடுத்த தமிழ்ச்சுனைக்கு
அகவை எண்பத்து ஐந்து

பொள்ளாச்சி மண்ணில்
ஊற்றாகி
தமிழ் நிலமெங்கும்
ஆயிரமாயிரம்
கவிதைக் கிளைகளாகப் பரவிப்
பாய்ந்த எங்கள் கிராமத்து நதி இது

இரு முறை
இந்தியாவின்
சாகித்ய அகாதமியை
கிராமத்துக்கு இழுத்து வந்த
கவிதை சாரதி இவர்

சொற்களைச் செதுக்கிச் செதுக்கி
கவிதைச் சிலைகளைக்
கவினுற வடித்துக்கொண்டே இருப்பதால்
இவர் புதுக்கவிதைச் சிற்பி

எண்பத்து ஐந்து என்பது வெறும்
எண்தான்
அதனினும் ஆயுள் அதிகம்
மொழியோடு இவர் கொண்ட உறவு

திக்கெட்டும் சிறகுவிரித்துப்
பறந்த இந்தப் பறவையின்
ஒவ்வொரு சிறகசைவிலும்
கவிதைகள் சிதறின

வானளாவ வளர்ந்த
இந்தக் கவிதை மரத்தின்
பெரு நிழல் தான்
எத்தனையோ இளைஞர்களின்
அடைக்கலமானது

இன்னும் இன்னும்
எழுதிக் குவிக்கவும்
பேசித் தீர்க்கவும்
உங்களுக்கு

தமிழன்னை அருள்வாள்
ஆயுள் ஆயிரம்

உங்கள்
கவிதைகள்
தன்
உயிர் விதைகள் என்று
அறிவாளல்லவா அவள் ..

வாழ்க ஐயா பல்லாண்டு
வளமுடனும் நலமுடனும்

அன்பின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

1 கருத்து: