செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

பசிக்கு மரணத்தையா உண்ணத் தருவது ?

பசிக்கு மரணத்தையா
உண்ணத் தருவது ?
ஆதிவாசி என்றொரு
சொல்லுக்குள் அடங்கி விடுபவனா மது ?
எத்தனை ஆண்டுகாலப் பசியை
எத்தனை ஆண்டுகாலக் கொடுமையை
ஆதிக்கத்தின் ஆணவத்தை
ஒரே பார்வையில் உரக்கச் சொல்லிவிட்டாய் மது
உனது வனத்தைத் திருடிக்கொண்டு
உனது உணவைத் திருடிக்கொண்டு
உனது இருப்பிடத்தைத் திருடிக்கொண்டு
உனது வாழ்வைத் திருடிக்கொண்டு
உனக்குப் பசியைப் பரிசளித்தோம்.
பசிக்கு நீ திருட திரும்ப எப்படி அனுமதிப்போம் ?
ஆனாலும்
உன்னைக் கொல்லும் கணத்தில்
இப்படிப் பார்த்திருக்கக் கூடாது நீ
பார்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
எங்கள் மனசாட்சியை
இப்படி
வெறித்துப் பார்த்து
வெறித்துப் பார்த்து
உலுக்கித் தொலைப்பாயோ ...



செய்தி :

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள கடுகுமண்ணா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மது (27). அந்தப் பகுதி கடைகளில் புகுந்து திருடியதாக அவர்மீது வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், சமீபத்தில் ஒரு கடையில் நடந்த திருட்டு தொடர்பாகச் சந்தேகப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் காட்டின் உள்சென்று அந்த இளைஞரை சிறைபிடித்ததுடன், அவரை நகர் பகுதிக்கு அழைத்து வந்த பொதுமக்கள் அவரின் உடைமைகளைச் சோதித்தனர். 
ஒருகட்டத்தில் அவரின் கைகளைக் கட்டி அடித்த பொதுமக்கள் பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காவல்நிலையம் அழைத்து சென்றபோது போலீஸ் வாகனத்தில் இளைஞர் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவர் பாதியிலேயே உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மதுவை அடித்துக் கொன்றதுடன் அச்சமயம் அதை தற்படம் எடுத்தும் மகிழ்ந்திருக்கிறார்கள் .. கொடுமை


ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

நான்

உங்கள் காதுகளில்
மிக ரகசியமாகச்
சொல்லப்பட்டிருக்கலாம்.
நான் சாத்தானின்
சிற்றுருவென.
எனது கொம்புகளை
ஒளித்து வாழ்கிறேனென
எப்போதேனும் எதிர்ப்படுகையில்
நீங்கள் ஒரு முறை
கை குலுக்கிப் பாருங்கள்
கட்டியணைத்தும்
ஒரு முத்தமிட்டும்
எதிர் நின்றொரு புன்னகைத்தேனும்
பாருங்களேன்
பிற்பாடு மனமுவந்து அந்த ரகசியத்தை
நீங்கள் ஒரு சாக்கடையில்
எறிந்து விட்டு வரும் வழியில்
போலியற்ற உங்களுக்கான
எனதன்பைக்
கண்களில் தேக்கிக் காத்திருப்பேன்
உங்கள் ப்ரியத்துக்குரிய
வளர்ப்பு விலங்கைப் போல


தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருது

தேனியில் இயங்கி வரும் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின்
சிறந்த இலக்கிய செயல்பாட்டாளருக்கான எச்.ஜி.ரசூல் நினைவு விருது எனக்கு வழங்கப்பட்டது..

கடந்த 03.02.2018 அன்று தேனியில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் ரோஹிணி அவர்களும் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களும் இணைந்து இந்த விருதை
எனக்கு வழங்கினர்.


உடன் விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மேடைக்கு நன்றி