ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அன்பின் நிமித்தம் ...

கொலுசு மின்னிதழில் கவிஞர் மு.அறவொளி அவர்கள் எனக்கு போதித்தவர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதி வருகிறார். ஒவ்வொரு மாதமும் தன்னை பாதித்த மனிதர்களைப்பற்றிய பதிவுகளைப் பதிந்து வருகிறார்.

இந்த மாதம் அந்தப் பகுதியில் என்னைப் பற்றிப் பதிவு செய்துள்ளார்.
பகிர்கிறேன் இங்கு ...






அன்பின் நிமித்தம் நடைபெறும் அத்துணை செயல்களும் அன்பையே விதைக்கின்றன.

நன்றி திரு.அறவொளி அவர்களுக்கு.

இந்த உறவு நீளட்டும்

கொலுசு மின்னிதழில் வாசிக்க :

http://kolusu.in/kolusu/kolusu_dec_17/mobile/index.html#p=3

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகாகவி

அன்பு செய்தல்

இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? 

வேறு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!


மனிதர்க்குத் தொழில் இங்கு அன்பு செய்தல் மட்டும் தான் எனச் சொன்ன பாரதியின் பிறந்தநாள் இன்று.

ஒவ்வொருவருக்கும் சக மனிதர்களின் மீதும் சக உயிரினங்களின் மீதும் அன்பு பெருகுமாயின் இந்த உலகம் எத்துணை அழகாய்ச் சுழலும் ? 

சக மனிதனின் மீது நேர்மையான அன்பு நீடிக்குமானால் சமுதாயத்தின் எந்தப் பிறழ்வுகளும் , கொடுமைகளும் , இன்னல்களும், தீமைகளும் சாத்தியமற்றுப் போய்விடும்.

ஆகவே தான் அன்பு செய்தால் போதுமென்றான் பாரதி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகாகவி ...

அன்பைத்தான் படைப்புகளின் வழியும் உரையாடல்களின் வழியும் செயல்பாடுகளின் வழியும் தொடர்ந்து தேடிக்கொண்டும் விதைத்துக்கொண்டுமிருக்கிறோம் ..





திங்கள், 4 டிசம்பர், 2017

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் விருது

நண்பர்களுக்கு வணக்கம்,

இன்னுமோர் மகிழ்வான செய்தி

தேனியில், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பை நடத்தி வருகிறார் தோழர் விசாகன்.

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கு, படைப்பாளர்களுக்கு, இலக்கிய செயல்பாட்டாளர்களுக்கு என பல்வேறு விருதுகளை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கி  கெளவரவித்து வருகிறது. சென்ற ஆண்டு எனக்கு வளரும் படைப்பாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு சிறந்த இலக்கிய செயல்பாட்டாளருக்கான எச்.ஜி.ரசூல் நினைவு விருது எனக்கு வழங்கப்படுகிறது.

அதைவிடவும் மகிழச் செய்வது பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் கிடைக்கப்போகும் விருதுகள் பற்றிய அறிவிப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத் தலைவர் கவிஞர் க.அம்சப்ரியா மற்றும் கவிஞர் சோலைமாயவன் . கவிஞர் ஆன்மன், கவிஞர் யாழ் தண்விகா ஆகியோருக்கு அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது வழங்கப்படுகிறது.

கவிஞர் ஜெ.நிஷாந்தினி, கவிஞர் ச.ப்ரியா மற்றும் கவிஞர் வே.கோகிலா ஆகியோருக்கு வளரும் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது.

மக்கள் கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை விருது 
கவிஞர் செங்கவின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விருதுப்பட்டியலில் 118 படைப்பாளர்கள் இருக்கிறார்கள். பேராச்சர்யமும் பேரானந்தமுமாக இருக்கிறது. இத்துணை படைப்பாளர்களையும் தேடிப்பிடித்து அவர்களைச் சிறப்பு செய்வது மிகப்பெரிய மகத்தான காரியம். விசாகனுக்கும் , தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்புக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.

விருது பெறுகின்ற அத்துணை படைப்பாளர்களும் மனதுக்கு நெருங்கிய நண்பர்கள், மதிக்கும் ஆளுமைகள். இவர்கள் அனைவரையும் விருது விழாவில் ஒருங்கே சந்திக்க வாய்த்தாலே அது பெரிய கொண்டாட்டம் தான். 

விருது பெறுகிற நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தேர்வுக்குழுவினருக்கும் தோழர் விசாகன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி...