ஞாயிறு, 22 நவம்பர், 2020

ஐயா என்கிற 95 வயது குழந்தை - தந்தைமையையும் அனுபவத்தையும் போற்றுதல்

வெட்சி இதழில் வெளியாகியிருக்கும் ஐயா நூலுக்கான எனது வாசிப்பனுபவம் : 




மனிதன் குகைகளில் வாழ்ந்த காலம் முதலே தனி ஒருவன் அல்லன். சக மனிதன் அருகில் இருந்த வரைக்கும் அவன் உறவுக்காரன் தான். உறவுமுறைகள் வகுத்துக்கொண்ட பின்பும் அவன் குடும்ப உறவுக்குள் நுழைந்த பின்பும் இன்னும் பலப்பட்டான். ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு மதிப்புண்டு. உயிரும் உடலும் அளித்த தாய் தந்தையர் தலையாய உறவானது மனிதன் ஆறாவது அறிவை ஆழமாகப் பயன்படுத்தத் துவங்கிய போது தான். தந்தை என்கிற உறவு ஒவ்வொரு மனித வாழ்விலும் மிக முக்கியமானது. உலகின் பல வெளிச்சங்களைக் காட்டிக் கொடுப்பவர் அப்பா தான்.

 அப்பா ஓவ்வொரு மனிதனுக்கும் முதல் ஆசான்; முதல் கதாநாயகன்; முதல் நண்பன். அப்பாவைப் பற்றிய கவிதைகள், கதைகள் தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் வெளியாகியும் கொண்டாடப் பட்டும் இருக்கின்றன. 95 வயதான தனது அப்பாவுடனான ஒரு மகனின் அனுபவங்களையும், தந்தைமையின் மகத்துவத்தையும் , தனது கிராமத்தின். அழகையும், கிராமத்து வாழ்க்கையின் மேன்மையையும் மிக அழகாக கட்டுரைகளாக வடிவரசு எழுதி வெளியிட்டிருக்கும் நூல் தான் ஐயா என்கிற 95 வயது குழந்தை எனும் 102 பக்க அளவிலான கையடக்க சிறு நூல்.

 மிகப்பெரிய குடும்பத்தின் பொறுப்புள்ள தலைவனாக, தந்தையாக, இயற்கை வைத்தியத்தையும், இயற்கையையும் இயல்பிலேயே தெரிந்து கொண்டிருப்பவராக, மூலிகைச் செடிகளை, மரங்களை அதன் பயன்களை அறிந்தவராக, சக மனிதர்களின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவராக, 

ஊர் மதிக்கும் வெள்ளந்தி மனிதராக தனது தந்தையை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் வடிவரசு.


இந்த அனுபவக் கட்டுரைகளில் முதலானதும், முத்தாய்ப்பானதும் தனது 

வயதான தந்தையின் ஆசையை இன்ப அதிர்ச்சி கொடுத்து நிறைவேற்றியது. ஐயாவுக்கு ஆகாய விமானத்தில் ஒரு முறை போய் விட வேண்டும் என்பது நெடுநாள் ஆசை, தமிழகத்தின், திருவண்ணாமலை மாவட்டத்தின் தென்கோடி கிராமமான திருவடத்தனூர் கிராமத்தில் வாழ்ந்து வரும் அவரை அவரது 94ஆவது வயதில் கடைசி மகன் வடிவரசு அவர்கள் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வந்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, திரும்பும் போது அம்மாவின் ஆசைப்படி இரயிலில் அழைத்துச் சென்றும், அவர்கள் விரும்பிய கோவிலுக்கு அழைத்துச் சென்றதுமான நினைவுகளை மிக நெகிழ்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார்.

 

ஐயா , பல ஏக்கர் சொத்தாக இருந்த மேட்டு நிலங்களை இல்லாதவர்களுக்கு தானமாகக் கொடுத்துவிட்டு மிச்சமிருக்கும் சிறு நிலத்தில் விவசாயமும் வீடுமாக வாழ்ந்து வருபவர். தனது மகனை வறுமையிலும் கல்லூரி அனுப்பிப் படிக்க வைக்கிறார். மகன் வளர்ந்து ஒரு மென்பொருள் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் இருக்கும் போதே தான் பத்திரிகை துறையில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்த போது மனதுக்குப் பிடித்ததைச் செய் என்று அனுமதி அளிக்கிறார், அந்த வேலையையும் விட்டுவிட்டு சினிமாவில் பாட்டெழுதப் போகிறேன் என்றால் அப்போதும் மனதுக்குப் பிடித்ததைச் செய் என்கிறார், தனக்கு விருப்பமான பெண்ணைக் காதலிப்பதைச் சொன்னால் அப்போதும் 

மனம் கோணாமல் உனக்கு விருப்பமானதைச் செய் என்று வாழ்த்துகிறார். இப்படி

 ஒரு அப்பா அதுவும் பெரிய படிப்போ, நவநாகரீக வளர்ச்சியோ அடைந்திடாத ஒரு கிராமத்து மனிதர் இவ்வளவு முற்போக்காக இருக்கிறார் என்றால் அவர் தான் கதாநாயகன். ஆம், அவர் அப்படித்தான் இருக்கிறார்.

 ஆடு மாடு என வீட்டு விலங்குகளுக்கு என்ன ஆனாலும் கண்டுபிடித்து வைத்தியம் பார்த்துவிடுபவராக இருக்கிறார். ஊர் மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு ஏதாவது கோளாறென்றால் அவரிடம் தான் கேட்கின்றனர். மாடு மேயவில்லை எனில் தைதாலத் தழை, வீது தழை, வெள்ளை அருவு, கிளுகிளுப்பித் தழை போன்றவற்றைப் பறித்து ஒன்றாகச் சுருட்டி மடக்கி மாட்டுக்குக் கொடுத்தால் பின் எப்போதும் மேல மேய ஆரம்பித்துவிடும்

 எனும் வைத்தியத்தை எந்த அகராதியிலும், எந்த வைத்திய முறைகளிலும் பார்க்க முடியாது. ஐயா அதைத் தெரிந்தவராக இருக்கிறார். நமக்கோ இந்த இலை தழைகளின் பெயர்கள் கூடப் பரிச்சயம் இருப்பதில்லை.ஐந்தாம் வகுப்பு பாஸ் ஆன தன் மகனைப் பள்ளிக்கு அழைத்துப் போய் இவன் என்ன படிச்சு கிழிச்சான்னு பாச் போட்டீங்க, ஃபெயில் போடுங்க என்று சொல்லி மீண்டும் ஐந்தாம் வகுப்பே படிக்க வைக்கும் கண்டிப்பான தந்தையாகவும் ஐயா இருந்திருக்கிறார்.

 வடிவரசு இந்த நூலின் வழியாக தனது ஐயாவை மட்டும் நமக்கு அறிமுகம் செய்யவில்லை. சூரக்கொடி, ஆதண்டங்காய்,ஞானாப்பழம்,காராப்பழம்,  சூரப் பழம், பொரிப் பூண்டு, கெளாப்பழம் என நாம் அறிந்திடாத அல்லது மறந்துவிட்ட இயற்கையின் கொடைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மேலும் ஒரு கிராமத்து மூத்தோருக்குத் தெரியும் கிராமியப் பாடல்கள், சொலவடைகள், அனுபவங்கள், என பலவற்றையும் அறிமுகம் செய்வதோடு இந்தப் புத்தகம் வழியாக ஆவணப் படுத்தியிருக்கிறார்.

 நாடோடிக் கதைகள், செவி வழிக் கதைகள், வாய் வழியாகவே புழங்கி வந்த மருத்துவக் குறிப்புகள் என நம் முன்னோர்களிடம் பெருஞ்செல்வமாக இருந்த பண்பாட்டு, கலாச்சாரக் கூறுகள் பலவற்றையும் நாம் இழந்து விட்டிருக்கிறோம். எங்கோ எப்போதோ அந்தச் சங்கிலி அறுபட்டுப் போய்விட்டது. உலகமயமாக்கலில், பொருள் தேடி கிராமத்து வேர்களைக் கைவிட்டு நகரத்துக்கு நகர்ந்ததில், நமது மண்ணின் பெருமைகளை உணர மறந்து நாகரீக மோகத்தில் திளைத்தது என நாம் தான் இழப்புகளுக்குக் காரணிகளாகவும் இருக்கிறோம். இன்னும் ஒரு தலைமுறை இப்படியே தாண்டிப்போனாலும் கூட நாம் இழந்தது என்ன என்பது கூட நமக்குத் தெரியாது ஒரு மாய வாழ்க்கை முறைக்கு நாம் மாறிவிடக்கூடும்.

 மூத்தகுடிகளின் அனுபவங்களைக் கேட்டும், அறிவுரைகளைக் கேட்டும் நாம் நமது வாழ்வின் பல இடர்களைக் களைந்துகொள்ள முடியும் என்பதற்கு இந்த புத்தகம் சாட்சி. பெற்றோரை முதியோர் இல்லங்களில் தள்ளிவிட்டு பொருள் தேடி ஓடும் ஒரு தலைமுறை பெருகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தந்தையை, தனது கிராமத்து மண்ணை, மனிதர்களை நேசிக்கும் இப்படியான ஒரு படைப்பு மிக அவசியமானது.

 காலத்திற்கும் மானுடத்துக்கும் படைப்பிலக்கியத்தின் வழி நமது மரபை ஆவணப்படுத்துதலும் நினைவு கூறுதலும் அத்தியாவசியம். சுவாரஸ்யமாகவும், நெகிழ்ச்சியாகவும் பல்வேறு தகவல் களஞ்சியமாகவும் இந்த நூலை எழுதியிருக்கும் வடிவரசு அவர்களை வாழ்த்தலாம்.

  

வெளியீடு : விஜயா பதிப்பகம் , கோவை 90470 87058

ஆசிரியர் : வடிவரசு, பேச : 8973882339

விலை : ரூ 80     


தன்னந்தனிமை - வெட்சி இதழில் கவிதைகள்

 தன்னந்தனிமை


🌱

எதுவும் செய்ய முடியாத
தனிமையால்
பதற்றத்துக்குள்ளாகிறது.  
இந்த வாழ்வு

சுற்றிலும்
யாவும் நிகழ்ந்து கொண்டிருக்க
தான் மட்டும்
உறைந்து போய்விட்ட 
இந்தத் தனிமைக்கு
சவ விழிகள்

🌱  

தனிமையின் பல்லாயிரம்
கண்களும் குருடாகிவிட
பல நூறு காதுகளும்
செவிடாகி விட
ஒரே ஒரு
இதயம் மட்டும் சதா துடித்துக் கொண்டிருக்கிறது
அதி வேகமாக

🌱  

தனிமையை
அழகான சித்திரமாக்க
நேர்த்தியான கவிதையாக்க
ஒரு சுவையான பதார்த்தமாக்க
அழகான கலையாக்க
அர்த்தமான சொற்களாக்க
நினைவிலாவது
யாராவது வேண்டியிருக்கிறது


🌱  

யாருமற்றிருப்பது
எதுவுமற்றிருப்பது
எப்படி தனிமையாகும்
தனித்திருப்பது மட்டுமா தனிமை
அது
தன்னை தனக்குள்ளேயே
சதா சுழல விடல்
தன்னையே
மீட்டுக் கொடுத்தல்
தன்னிடமே தன்னை
தற்காத்துக் கொள்ளல்

🌱
  
யாருமற்ற எதுவுமற்ற
தனிமையில்
சகலமுமிருக்கிறது

🌱  

வாழ்வை சாவை
இன்மையை இருப்பை
கனவை நனவை
புரிந்து கொள்ள
புரிந்து கொண்ட யாவற்றையும்
அழித்துக் கொள்ள
அவசியமாயிருக்கிறது
ஒரு
தனிமை



செவ்வாய், 22 செப்டம்பர், 2020

வாசகசாலை இணையதளத்தில் எனது கவிதைகள்

இந்த மாத வாசகசாலை இணைய இதழில் எனது மூன்று கவிதைகள் வெளியாகியுள்ளன .. உங்கள் வாசிப்புக்கு இங்கு ..

கவிதை # 1

அப்போதுதான் முதன் முதலில்
பார்த்த அவளை அப்போதே
பின் தொடர ஆரம்பித்துவிட்டேன்

அவளை அழகு என்று சொல்வதற்கான
சொற்களை அந்தக் கணத்திலேயே
தொலைத்துவிட்டிருந்தேன்

ஊரின் மிக நீண்ட வளைவுகளில்
அவள் நடந்து கொண்டிருந்தாள்
நான் பின்தொடர்ந்து
ஓடிக் கொண்டிருந்தேன்

வெளி ஒரு கருந் திரையைப் போல
திக்கற்று நிறைந்திருந்த இரவிலும்
அவளின் ஒளிர்தலில்
எனது பாதையில் எந்த இடரலும்
இருக்கவில்லை

ஊர் எல்லைக் கண்மாயில்
நீள் கூந்தலைப் பரப்பி
அவள் குளித்தெழுந்த போது
நான் மறைந்திருந்து பார்த்தேன்
எனது சிறுவயது தேவதைக் கதைகளில்
ஒன்றுக்குள் தான்
நுழைந்து விட்டேனோ என்ற
சந்தேகம் வந்தது
அவள் குளித்தெழுந்த மறுகணம்
கண்மாய் மீண்டும்
குப்பை மேடாகி மூடிக் கொண்டது

பூந்தோட்டங்களுக்குள் புகுந்தவள்
பரந்திருந்த மலர்க் கூட்டங்களில்
வண்ணங்களைத் தேர்ந்து
சூடிக் கொண்டனள்
வழக்கம் போல அவள்
சூடி முடித்துக் கிளம்பியதும்
கருவேலமுட்களின் பீக்காடாக
மீளுருவானது பூந்தோட்டம்

கிணற்று நீரில் மிதக்கும்
நிலவை கைகளால் அசைத்து
ஒரு மிடறு நீர் குடித்தாள்
அவள் தாகம் அணைந்ததும்
கிணறு உள்வாங்கி
கட்டிடம் வெளியில் தெரியத் துவங்கியது

செங்காட்டில் வள்ளிக் கிழங்குகளை
அகழ்ந்து கூடையில் நிரப்பிக் கொண்டனள்
ஆம்
செங்காடு இப்போது
கிரீன் வேலி ரெஸிடென்சியாக
வெண்ணிற நடுகற்களோடு மீண்டது

நடந்து நடந்து
இரவின் விளிம்புக்கு வந்தவள்
ஊர் எல்லை
பேச்சி அம்மன் சிறுகோவிலுக்குள்
ஒளிக் கீற்றென நுழைந்து
சிலையாகி மீண்டும் விரல் விரித்து
நின்று கொண்டாள்

வெளிமாடத்தில் 
அணைந்து கிடந்த
அகல் விளக்கில்
என்னை சுடரேற்றி விட்டு
ஓடி வந்து விட்டேன்
நான் என் புதிய நகரத்துக்கு


கவிதை # 2

நெடுங்கவிதையொன்றிலிருந்து
வெட்டி நீக்கப்பட்ட ஒரு சொல் என் தனிமை
எதனோடும் ஒட்டாமல் 
துண்டித்துக் கிடக்கிறது

சறுக்குமரம் விளையாட நீண்ட வரிசையில் 
காத்திருந்து இடையிலேயே
இழுத்து விலக்கப்பட்ட 
சவலைப் பிள்ளை என் தனிமை
கேவி அழுதபடிக் கிடக்கிறது

மின் தொடர் வண்டியினின்று
இடறி விழுந்து
கால்கள் அரைபட்டு
அரையுடலாகத்
தண்டவாளத்தருகில்
துடிக்கும் பிண்டம் என் தனிமை
உயிர் வலியில் கதறியபடிக் கிடக்கிறது

கம்பிகள் தொய்ந்து
பரண் மேலில் கிடத்தப்பட்டிருக்கும்
ஓயாது இசைத்த வயலின் கருவி 
என் தனிமை
ஏக்கத்தின் மெளனத்தில் ஆழ்ந்து கிடக்கிறது

நாளெங்கும் வடிந்தபடியிருக்கும்
என் தனிமையின் குருதியின்
நிண வாடை தான்
என் சொற்களாகின்றன

பாருங்களேன்
இந்தக் கவிதையில்
அது
எவ்வளவு சிங்காரித்துக்கொண்டு
வீச்சம் பரப்புகிறது

கவிதை # 3

எப்போதும் 
நிறைந்தும் இரைந்தும் கிடக்கும்
எனது அறையை
மிகக் கவனமாக
ஒழுங்கு செய்கிறேன்

எப்போதும் ஒழுங்காகவே
இருப்பவர்களின் வாயில்
அரைபட்டுக் கொண்டேயிருக்கிறது
என் அறை

பழையன கழிக்கவும்
புதியன நிறைக்காமல் இருக்கவுமான
முன் முடிவுகளுடன்
ஒரு விடுமுறை நாளில்
என் அறையுடன் துவங்கியது
 சமர்

வகைகளாக
வண்ணங்களாக
பயன்பாடுகளாகப்
பகுத்து தொகுத்து
அறையை அரைவாசியாக்கி விட்டேன்

வெளியில் வீசியெறிந்துவிட்ட
 பாதி அறை மீதான
என் காருண்யம்
என்னைச் சமன் குலைக்கிறதுதான்

இருப்பினும்
இந்த அறையின்
உபயோகமற்ற அத்துணையையும்
கழித்திடத் துணிந்தவன்
கக்கடைசியில்
கடையினும் கடை உபயோகியான
என்னை
இழுத்து வெளியே எறிந்து விட்டேன்

எனது அறையில்
இப்போது அவ்வளவு ஒழுங்கு
அவ்வளவு ஒளி
அவ்வளவு தெய்வீகம்


வாசகசாலை இணையதளத்தில் வாசிக்க :

சனி, 22 ஆகஸ்ட், 2020

வாசகசாலை இணைய இதழில் கவிதைகள்

வாசகசாலை இணைய இதழில் எனது மூன்று கவிதைகள் பிரசுரமாகியுள்ளன

வாசிக்க : 


கவிதை # 1

மலையுச்சியில் அமர்ந்தபடி 
தனியனாய்ப் பேசிக்கொண்டிருந்தேன். 
யாருடன் பேசுகிறாய் என்றார்கள் 
என்னுடன் தான் என்றது மலை 
பாவம் அவர்களுக்கு 
அது கேட்கவில்லை 
பொருட்படுத்தாது சிரித்தபடிக் 
கிளம்பிவிட்டார்கள் 
விநோதப் பார்வைகளை 
தங்களோடே எடுத்துக் கொண்டு, 
பிறகொரு முறை நீங்கள் வந்தால் 
இந்தப் பள்ளத்தாக்கின் பச்சை பாதாளத்துக்குக் 
கொஞ்சம் செவி கொடுத்துப் பாருங்கள்
நானும் மலையும் 
பேசிக் கொண்டிருப்பது கேட்கலாம்

*******

கவிதை # 2 

என்ன செய்கிறாய் என்றொரு கேள்வி 
எப்போதும் பின் தொடர்ந்தபடியிருக்கிறது 

கண்விழித்த கணத்தில் 
எதிரில் விழும் அந்தக் கேள்விக்கு 
கண்விழித்தேன் என 
பதிலளிக்க வேண்டியிருக்கும் 

குளியலறை நீங்கியதும் 
என்ன செய்கிறாய் என்று வந்து நிற்கும் 

அலுவலகப் பணிகளுக்கிடையில் 
அரைமணிக்கொரு முறை 
திர்கொள்ள வேண்டியிருக்கும் அதை 

தேநீர் இடைவெளைகளில் 
உணவு நேரங்களில் 
நிற்கையில் நடக்கையில் 
வாகனத்தில் விரைகையில் 

என்ன செய்கிறாய் 
என்ன செய்கிறாய் 

அதன் முன் ஒரு 
அகதியைப் போல 
கை பிசைந்து நிற்பேன் 
அவ்வப்போது சினமேறி 
அதை தட்டாமாலை 
சுற்றியெறிவது போல 
எறிந்துவிடத் துடிப்பேன் 
ஆனாலும் 
ஒரு நாள் 
ஒரு பொழுது 
ஒரு முறையேனும் 
என்ன செய்கிறாய் 
எதிரில் வராமல் போனால் 
ஒரு அநாதையைப் போல 
பரிதவித்து நிற்கிறேன்

****

கவிதை # 3

நெடுங்காலம் தொடர்பு எல்லைகளுக்கு 
அப்பாலேயே இருந்தும் 
அலைபேசியில் அழித்திடவே 
முடியாத ஓர் எண் எப்போதும் இருக்கிறது 

நெடுங்காலம் ஒரு பதிவுமற்று 
வெற்றுச் சுவராய் இருந்தும் 
நட்பு நீக்கம் செய்திடாது 
இருக்கவே செய்கிறது 
ஒரு முகநூல் நட்பு 

ஒரு போதும் சென்றிடாத போதும் 
ஒரு கடிதமும் எழுதிடாத போதும் 
நினைவில் எப்போதும் இருக்கிறது 
ஒரு அஞ்சல் முகவரி 
எப்போதும் தொடர்பு கொள்ளவியலா 
தொடர்பு கொள்ள விரும்பா 
ஓர் அன்பு 
எங்கோ தொலைவில் 
இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது 

என்னைப் போலவே 
அங்கும் இருக்கும் 
தொடர்பு கொள்ளவியலா 
ஒரு அலைபேசி எண் 
ஒரு முகவரி 
மற்றும் 
சதா புலம்பல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் 
ஒரு முகநூல் கணக்கை 
ரகசியமாய் வந்து படித்துச் செல்லும் 
தவிப்பின் பாதை 

*********

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

பொம்மைகளின் மொழி - கவிதைத் தொகுப்பு

பொம்மைகளின் மொழி - எனது முதல் கவிதைத் தொகுப்பு

முதல் காதலைப் போல, முதல் கவிதைத் தொகுப்பும் விசேசமானது

இலக்கிய உலகம் பற்றிய பரிச்சயம் அதிகம் இல்லாத  வாசகநாட்கள் அவை. வாசிப்பு, எழுத்து என்று இருந்த நாட்களில் அவ்வப்போது ஆனந்தவிகடன், கணையாழி மற்றும் பல சிற்றிதழ்களில் கவிதைகள் வெளியாகும் அவற்றை எல்லாம் முதலாவதாக எங்கள் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவரும் என் நலத்தில் எப்போதும் அக்கறை கொண்டிருப்பவருமான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு அனுப்புவேன். மனமார வாழ்த்துவார். மற்றவர்களிடமும் என் கவிதைகள் குறித்து சிலாகிப்பார். ஒரு நாள் புத்தகம் போடு என்று அவர் சொன்ன போது; அதற்கான சூழல் இல்லை என்று நான் தயங்கியதும் தனது சொந்தச் செலவிலேயே எனது முதல் தொகுப்பு எனும் கனவை நனவாக்கிக் கையில் கொடுத்தார். தனது செலவிலேயே என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்களை கவுரவித்து வெளியீட்டு விழாவும் நடத்தினார்.

என் நிறுவனத்தில் என் நண்பர்களே அந்தத் தொகுப்பின் பிரதிகளில் பெரும்பாலானவற்றை வாங்கிக் கொண்டனர். இலக்கிய வட்டங்களுக்கும் கடைகளுக்கும் மிக சொற்பமானவற்றையே கொடுத்தேன். 

ஒரு பிரதி கூட என் கைவசம் இல்லாத நிலையில் அந்தத் தொகுப்பு வேண்டும் என பல நண்பர்கள் இப்போது வரை கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். மறுபதிப்பு கொண்டு வரவோ, மின்பதிப்பு கொண்டு வரவோ ஆர்வமின்றி இருந்தேன். நண்பர்கள் பலரும் இந்த ஊரடங்கு காலத்தில் கிண்டில் மின்னூலாக வெளியிட, எனக்கும் இந்த யோசனை வந்தது. ஆகவே எனது முதல் தொகுப்பை மின்னூலாகக் கொண்டு வந்திருக்கிறேன்.

கீழுள்ள லிங்கைப் பின்பற்றி அமேசான் கிண்டிலில் எனது பொம்மைகளின் மொழியை வாங்கி வாசிக்கலாம். வாசியுங்கள் அந்தக் காலத்தின் நான் உங்களோடு உரையாடக் காத்திருக்கிறேன்.


இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான தொகுப்பு. இந்தத் தொகுப்பு எனக்குக் கொடுத்த அங்கீகாரமும் அடையாளமும் பெரிது. மேலும் இந்தத் தொகுப்பின் வழியாகத்தான் முகம் தெரியாது தொகுப்பை வாங்கி வாசித்து நண்பர்களாக ஆகிப்போன வைகறை, இயற்கை, அனாமிகா போன்ற நண்பர்கள் கிடைத்தார்கள்.

நண்பர்கள் வாங்கி வாசிக்கவும்


புதன், 5 ஆகஸ்ட், 2020

புத்த முகம் அச்சடிக்கப்பட்ட இரவு உடை - கணையாழி கவிதை

இந்த மாதம் கணையாழி இதழில் என் கவிதை வெளியாகியுள்ளது..

வாசிக்க


வியாழன், 30 ஜூலை, 2020

கவிஞர் கலாப்ரியா கவிதைகள்

நவீன கவிதை முகங்களில் மிக முக்கிய முகமான கவிஞர் கலாப்ரியாவின் பிறந்தநாளான இன்று அவரது கவிதைகள் சில இங்கு வாசிப்புக்கு ..



விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை தெரியவில்லை


ஆளிருக்கும் வீட்டில்
அழைப்பு மணி
அமுக்கி விட்டு
ஓடுவதில்
குழந்தைகளுக்கிருக்கும்
பரபரப்பே
கவிதையில்
கவிஞர்களுக்கு


சாப்பாடில்லாத பிள்ளைகள்

சாப்பாடில்லாத பிள்ளைகள்
புழுதிக் காலுடன்
அடுப்பெரிகிறதை
வந்து வந்து பார்த்து
விளையாடப்போகும்,
பசியை வாசல்ப்படியிலேயே
விட்டுவிட்டு.


யாரால் செமிக்க முடியும்

ஜெயிலுக்குப் பொறத்தால
நடக்கும் கல்யாணங்களில்
தோட்ட வேலைக்கைதிகள்
மாத்திரம்
வேலியருகே வந்து
இட்லியக் கெஞ்சி வாங்கி
மறைச்சபடி
உள்ளே ஓடற ஓட்டத்தை
யாரால்
செமிக்க முடியும்


ஒரே மாதிரி

பிள்ளைகளின் பசியடக்க
புதிய வசவுகள் தேடி
மூலையடைவாள்,அம்மை.
பீடிகள் தேடிச்சலித்து,
யூனிபாரத்தை தேடச்சொல்லி
அன்பாய்க் கூப்பிடுவான்
‘ஒரே மாதிரி’வசவுகளில்
அழவும் மரத்துப்போன
பிள்ளைகளை
அப்பன்.


என்பிலதனை

புழுவெனச்
சொருகிய வார்த்தைகளுடன்
தூண்டிலிட்டுக் காத்திருக்கிறான்.

கள்ளப்பட்டுப் போன மீன்கள்
எல்லை தள்ளி
வளைய வருகின்றன.

எல்லை தாண்டியோரின்
எலும்புகளை
குறிப்பாய் முதுகெலும்புகளை
வலையினடியில்க்
கனத்துக்காய்க் கோர்த்து
வீசுவோருண்டென

அவை பேசிக் கொள்வதைக்
கேட்க விடுவதில்லையவனது
‘ஞாபகங்களை அழிக்கும்
ஒரே ஞாபகமான பசி’

புழுவெனச் சொருகிய்
வார்த்தைகள்
மிதக்கிறது
தென்கடலெங்கும்
அவன் கை விட்ட
தூண்டிலுடன்...


பயணம்.

கூட்டிலிருந்து
தவறி விழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப்போலவே 
தானும் பறப்பதாய்
நினைத்தது.
தரையில் மோதிச்சாகும்வரை.


அவளின் பார்வைகள்

காயங்களுடன் 
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும் 
காக்கைகள்


தொலைவில் புணரும்
தண்டவாளங்கள்
அருகில் போனதும்
விலகிப் போயின


எச்சியிலைத் தொட்டியில்
ஏறிவிழும்
தெருநாயின்
லாவகம் எனக்கொரு 
கவிதை தரப்பார்க்கிறது


கரித்துண்டொன்றை
தரையில் பைத்தியக்
கிறுக்கலாய்ப் படம் 
போட்டுச் சாகடிக்கிறேன்
எரித்துக்கொள்வதைவிட இது
எவ்வளவோ மேல்


கூட்டிலிருந்து 
தவறிவிழுந்த 
குஞ்சுப்பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை


பகலின்
வெளிச்சத்திற்கேற்ப
தன் ஒப்பனைகளைக்
கலைத்துக் கலைத்து
மாற்றி மாற்றி
அழகு காட்டுகிறது
பிரகாரச் சிலை


மரங்கள்
நிழல் விரிப்பது
உதிர்ந்த
பூக்களுக்காகத்தான்

மனிதன் எதைத்தான்
பறித்துக் கொள்ளவில்லை


எல்லாக் கிளைகளிலும் இலை
ஏதாவது சில கிளைகளில்
பூ
யார் கண்களிலும் படாமல்
வேர்


பயணத்தில்
ஜன்னல் ஓரம்
கண் மூடிக்
காற்று வாங்குபவன்
போல்
கிடக்கிறான்
பனிப் பெட்டிக்குள்

பின்னகரும் மரங்கள்
போல வந்து
சாத்துயர் கேட்டுப்
போகிறார்கள்


கனியாகப் பார்த்தால்
வியாபாரி
விதையாகப் பார்த்தால்
விவசாயி
வேராகப் பார்த்தால்
தத்துவவாதி
பூவை பூவாகவே
பார்த்தால்
படைப்பாளி


நின்று பார்ப்பவனுக்குத்தான்
சித்திரம் வரைந்து காட்டுகிறது
இயற்கை




புதன், 29 ஜூலை, 2020

கவிஞர் சிற்பி - 85

" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - மகாகவி பாரதி 



மகாகவி பாரதியின் வரிகளுக்கு இணங்கி, மகாகவியைத் தன் ஆசானாகக் கொண்டு வாழ்க்கையையே கவிதையாக, கவிதையையே வாழ்க்கையாக வாழ்ந்து வருபவர் கவிஞர் சிற்பி அவர்கள்.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இன்று அகவை 85.

இருபதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், பத்துக்கும் மேற்பட்ட உரைநடை இலக்கிய நூல்கள் , பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், மேலும் புதினங்கள், நாடகங்கள், சிறுவர் இலக்கிய நூல்கள்,  இலக்கிய வரலாற்று நூல்கள் என தன் பரந்துபட்ட எழுத்துகளால் ஒரு மாபெரும் எழுத்து உலகத்தைக் கட்டமைத்து தமிழின் மிக முக்கியமான கவியாகவும் எழுத்து ஆளுமையாகவும் , முன்னோடியாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர்.

மொழிபெயர்ப்புக்கு ஒரு முறை, சுய படைப்புக்கு ஒரு முறை என இரண்டு முறை சாகித்திய அகாடெமி விருது பெற்ற பொள்ளாச்சியின் மிகப்பெரிய இலக்கிய அடையாளம் இவர். அது மட்டுமல்லாது , இவரால் அடையாளம் காணப்பட்டு அங்கீகாரம் செய்யப்பட்ட எழுத்தாளர்களின் எண்ணிக்கை இவர் அகவையினும் அதிகம் இருக்கும். எந்தப் பிரதிபலனும் இல்லாது இவர் செய்யும் தமிழ்ப்பணிகளில் இளையவர்களை கவிதைக்குள் இழுத்து வருவதும் ஒன்று. நதி என்றைக்கு பிரதிபலனை எதிர் பார்த்திருக்கிறது. அது ஓடிக் கொண்டிருக்கிறது தன் பாதையில்... 

அவர் பிறந்த மண்ணில் வாழ்வதற்கும், அவர் வாழும் காலத்தில் வாழ்வதற்கும், அவர் அருகாமையில் இருந்து அவரை ரசிப்பதற்கும் பெரும் பேறு பெற்றவனாயிருக்கிறேன்.

நம் காலத்தின் மகத்தான ஆளுமை அவர். ஊரடங்குக் காலம் இல்லாமல் போயிருந்தால் இந்த எண்பத்து ஐந்தாவது பிறந்தநாளை நாம் மிகச் சிறப்பாகக் கொண்டாடி இருப்போம் ஒரு கவிதைத் திருவிழாவாக. இப்போதும் இணையம் வழியாக பேச்சு எழுத்து என கவிஞர் சிற்பியைக் கொண்டாடி வருகிறோம்.

கவிஞர் சிற்பி மகத்தான கவிஞர். மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. அதைத் தாண்டி நான் அவரிடம் வியந்து பார்ப்பது அவர் ஒரு தீவிர வாசகர். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரைக்கும்  நீண்டு பரந்தது அவரது வாசிப்புப் பரப்பு. அவரது கைகளுக்கு வந்து சேரும் எல்லாப் புத்தகங்களையும் அவர் வாசித்து விடுகிறார். அவருடன் உரையாடும் பொன் தருணங்களில் அவரது வாசிப்பின் எல்லைகளை உணர முடியும்.

தமிழ் இலக்கியங்கள், மலையாள இலக்கியங்கள், ஆங்கில மற்றும் பிற மொழி இலக்கியங்கள் என ஒரு தகவல் சுரங்கமாக அவர் நம்மோடு உரையாடும் போது நம் முன் ஒரு மலைச் சூரியன் போல ஒளிர்வார். நாம் கண்கள் கூச அவரது உரை வெள்ளத்தில் மிதக்கலாம்.

இன்றைய நவீன கவிஞர்கள் எழுத்தாளர்கள் வரைக்கும் அனைவரது படைப்பையும் வாசித்துவிடுகிற அவர் இளைஞர்களின் சிறந்த கவிதைகளை தன்னுடன் அழைத்துச் செல்ல தயங்கியதே இல்லை. 


பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்கள் இணைந்து ஐயாவின் பிறந்தநாளுக்கு அவரது கவிதைகளை வாசித்தும், அவருக்காக நாங்கள் கவிதை எழுதி வாசித்தும் எங்கள் அன்பை ஒரு காணொலியில் காட்டியிருக்கிறோம். அவசியம் முழுதும் பாருங்கள்




காணாத புலி ஒன்று

புலியை நேரில் பார்த்திருக்கிறாயா அப்பா
என்றவள் கேட்ட போது
என் 37 வருடங்களை
நான் காணாத
வனங்களின் நாலா திசைகளிலும்
சுழற்றிப் பார்க்கிறேன்.
ஒரு முறையும்
ஒரு புலியையும்
நேரில் பார்த்ததில்லை
மகளே

காடுகளில் சுற்றித் திரிந்த
என் தகப்பனின் கதைகளை
நான் உனக்குச் சொன்ன போது
நானும் உடனிருந்திருப்பதாக
நீ ஒரு நினைவின் படத்தை
வரைந்து வைத்திருக்கிறாய்

நான் காடு புகும் காலங்களிலெல்லாம்
காடு கான்கிரீட் கலவைகளைப்
பூசியிருந்தது

புலிகளை நான்
உன்னைப் போல
தொடுதிரையிலல்லாமல்
புத்தகங்களில்
முத்தமிட்டேன் அவ்வளவே

பள்ளிச் சுற்றுலாக்களில்
பயணக்கட்டணங்கள்
புலியினும் அதிகம்
பயமுறுத்தியதை உன்னிடம்
சொல்வதற்கில்லை

நம் தேசிய விலங்கை
சரணாலயங்களின் கூண்டுகளுக்குள் கூட
பார்த்ததில்லையா என்று
மேலும் மேலும்
நீ புலி வாலைப் பிடித்திழுத்த போது
நான் புலியைப் பார்த்து
உறுமத் தொடங்கிவிட்டேன்
அது குதித்தோடி விட்டது
நம் அறையை விட்டு

செவ்வாய், 28 ஜூலை, 2020

கவிஞர் சிற்பி அவர்களுக்கு அகவை 85 தின வாழ்த்துகள்





ஆழியாற்றங்கரையில்
ஊற்றெடுத்த தமிழ்ச்சுனைக்கு
அகவை எண்பத்து ஐந்து

பொள்ளாச்சி மண்ணில்
ஊற்றாகி
தமிழ் நிலமெங்கும்
ஆயிரமாயிரம்
கவிதைக் கிளைகளாகப் பரவிப்
பாய்ந்த எங்கள் கிராமத்து நதி இது

இரு முறை
இந்தியாவின்
சாகித்ய அகாதமியை
கிராமத்துக்கு இழுத்து வந்த
கவிதை சாரதி இவர்

சொற்களைச் செதுக்கிச் செதுக்கி
கவிதைச் சிலைகளைக்
கவினுற வடித்துக்கொண்டே இருப்பதால்
இவர் புதுக்கவிதைச் சிற்பி

எண்பத்து ஐந்து என்பது வெறும்
எண்தான்
அதனினும் ஆயுள் அதிகம்
மொழியோடு இவர் கொண்ட உறவு

திக்கெட்டும் சிறகுவிரித்துப்
பறந்த இந்தப் பறவையின்
ஒவ்வொரு சிறகசைவிலும்
கவிதைகள் சிதறின

வானளாவ வளர்ந்த
இந்தக் கவிதை மரத்தின்
பெரு நிழல் தான்
எத்தனையோ இளைஞர்களின்
அடைக்கலமானது

இன்னும் இன்னும்
எழுதிக் குவிக்கவும்
பேசித் தீர்க்கவும்
உங்களுக்கு

தமிழன்னை அருள்வாள்
ஆயுள் ஆயிரம்

உங்கள்
கவிதைகள்
தன்
உயிர் விதைகள் என்று
அறிவாளல்லவா அவள் ..

வாழ்க ஐயா பல்லாண்டு
வளமுடனும் நலமுடனும்

அன்பின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

திங்கள், 27 ஜூலை, 2020

அந்தச் சொல்லின் வயது ஒரு பத்தாயிரம் ஆண்டுகள் - ஆங்கிலத்தில் எனது கவிதை

கவிஞர் , எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தமிழிலிருந்து பல கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்து வருகிறார். என்னுடைய சில கவிதைகளை அவ்வப்போது மொழி பெயர்த்திருக்கிறார்.
சாகித்ய அகாடெமி டெல்லியில் நடைபெற்ற கவிதை வாசிப்புக்கும் அவர் ஒரே இரவில் எனது மூன்று கவிதைகளை மொழி பெயர்த்துத் தந்து பேருதவி செய்தார்.

தற்பொது எனது ஒரு கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து  தனது இருமொழி மின்னிதழ் வலைப் பூவில் வெளியிட்டுள்ளார். 

வாசிக்க : 



அவரது மொழி பெயர்ப்பை இங்கும் தருகிறேன்

That Word is about ten thousand years of age


That Word is of the hue of dense black
well-soaked and rooted in the soil
That Word’s strength
Is diamond-like
The flavor of the Word
salt of the sweat
That Word we found in archeological excavation
as the remains of ancient human civilization
The Word has eyes all over its being
They are blessing this world
with benevolence immense
Splitting the Word a little
excelling one another
million words
are born.
Only a few could realize
the real strength of it
and it became an armament of might
Realizing that a word can create a world
We hailed it paying our tribute.
When we perceived its pristine beauty
Its all too clear shine
startled us a little.
It is that glow
that guided us all the way
and subsequently
It became the radiance of our very life.
That Word
turning into a painting brush
is drawing me now
in front of thee.
That’s our Mother tongue
I’m its offspring
I’m the lover of its Everything


கவிதை தமிழில் :


அந்தச் சொல்லிற்கு வயது
ஒரு பத்தாயிரம் ஆண்டுகள்
அந்தச் சொல்லுக்கு நிறம்
மண்ணில் ஊறி மட்கி இறுகிய கருப்பு
அந்தச் சொல்லின் திண்மை
வைரத்தின் கெட்டி
அந்தச் சொல்லின் சுவை
வியர்வைக் கரிப்பு
அந்தச் சொல்லை தொன்மையான
நாகரீக எச்சமொன்றாக
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்தோம்
அந்தச் சொல்லின் உடலெங்கும்
கண்கள்
அவை இந்த உலகைத் தனது
கருணையால் ஆசீர்வதித்துக் கொண்டிருந்தன
அந்தச் சொல்லை
கொஞ்சம் உடைத்தால்
ஒரு சொல்லின் அழகை
இன்னொரு சொல் விஞ்சியபடி
ஒரு லட்சம்
சொற்கள் பிறந்தன
வெகு சிலருக்கே அந்தச் சொல்லின்
வலிமை புரிந்தது
அச்சொல் ஆயதமானது
ஒரு சொல் ஒரு உலகத்தைப் படைக்கும்
என்பதை நாங்கள் உணர்ந்து
தொழுதோம்
அதன் பரிசுத்த அழகை தரிசித்த போது
அதன் கூரொளியில் நாங்கள் கொஞ்சம்
திடுக்கிட்டுத்தான் போனோம்
அந்த வெளிச்சம் தான்
எங்களை எங்களுக்குக் காட்டியது
பின்னர் தான் அது எங்கள் வாழ்வின் ஒளியானது
அந்தச் சொல் தான் ஒரு தூரிகையாகி
என்னை உங்கள் முன்
வரைந்து கொண்டிருக்கிறது இப்போது.
அது எங்கள் தாய்ச் சொல்
நான் அதன் பிள்ளை
நான் அதன் காதலன்

சனி, 25 ஜூலை, 2020

புலம்பெயர் வேர்களிலும் அப்பிக் கிடக்கும் மண்வாசம்

     

     நதியில் எப்போதோ மூழ்கிப்போன கூழாங்கல் ஒன்று விடும் மூச்சு, காலம் முழுவதும் நீர்க்குமிழிகளாக மேலே வந்த வண்ணம் இருக்கும். நதியறிந்த ஒன்று, கல்லறிந்த ஒன்று அந்த பெருமூச்சுகளின் வெப்பம். ஒரு வகையில் நாம் நகரத்து நதியில் அமிழ்க்கப்பட்ட கூழாங்கற்கள் தாம். நம்மை வாழ்க்கையும் பொருளாதாரமும் சேர்ந்து நகரத்துத் தெருக்களில் இழுத்து வந்து வாழ வைத்து விட்டாலும் நமது வேர்கள் ஏதோ ஒரு கிராமத்தின் சாணம் மொழுகிய வீதிகளில் தான் படர்ந்து கிடக்கும். நமது நாட்கள் நகரத்தில் நகர்ந்தாலும் நாம் வாழ வேண்டியது நாம் வாழ விரும்புவது நமது மிகப் பழைய வாழ்க்கையைத் தான். ஒரு கிராமத்தானாக இந்த வாழ்க்கையை வாழ்வது என்பது எப்போதும் கொண்டாட்டமானது. அந்தக் கொண்டாட்டத்தை, மகிழ்வை, கிராமத்து வாழ்க்கையும் கிராமத்து அசல் மனிதர்கள் தரும் மன நெகிழ்வை கவிதைகளாக நமக்குத் தந்திருக்கிறார் கவிஞர் ஆண்டன்பெனி.

Image may contain: 1 person, standing, text and outdoor

கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தி மனதை, மிக விநோதமான ஆனால் மிக அழகான மனித இயல்புகளை, பெயரில்லா மிக நெருக்கமான உறவுகளை, இந்தத் தொகுப்பின் வழியாக கவிஞர் அறிமுகப் படுத்துகிறார். உண்மையில் இது அறிமுகமன்று ஆவணம். ஆவணப்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த நூற்றாண்டில் நாம் இப்படியான உண்மையான மனிதர்களையும் உறவுகளையும் இழந்து விடுவோம் என்றே தோன்றுகிறது.

அங்காயி, காட்டு ரோசா, முத்துக்காள,முத்தாலம்மா,சுப்பையா,தவசி கிழவன், பூமாரி, மரிக்கொழுந்து என மிக அற்புதமான மனிதர்களின் சித்திரங்களை இந்தத் தொகுப்பு பதிவு செய்கிறது. கருப்பன், அம்மன் என நாம் தூரத்தில் பய பக்தியுடன் தள்ளி வைத்திருக்கும் கடவுள்களை வெகு நெருக்கமான கிராமத்துக் கடவுள்களாகப் பதிவு செய்கிறது, தட்டான் குழி, பாவைக் கூத்து என கிராமத்தின் நிழல் பாவிய நினைவுகளை மிக அழகாகப் பதிவு செய்கிறது. டூரிங் டாக்கீஸ், ஐஸ் வண்டி என இந்தத் தொகுப்பு நம்மை ஒரு கிராமத்துக் கூரை வீட்டின் திண்ணையில் அமர்த்தி வேப்பமரத்தின் மென் காற்றை உடலெங்கும் பரவச் செய்து மகிழ்ச்சியின் சாரலை நம் மீது தெளித்தபடியிருக்கிறது ஒவ்வொரு பக்கங்களிலும். மொத்தத்தில் இந்தத் தொகுப்பு ஒரு அழகான கிராமத்தின் அசலான மனிதர்களின் ஆவணம்.

பேச்சு வழக்கில், வட்டார வழக்கில் ஒரு முழுமையான கவிதைத் தொகுப்பு. இதில் கவித்துவத்தை விடவும் ஒரு வாழ்வியல் பதிவாகியிருக்கிறது. வாழ்வியல் கவிதையாகும் போது அதன் பயன்பாடு மிக அதிகம்.  கிராமம் என்றதும் நிலம் காட்சிப் படுகிறது. மனிதனின் ஆன்ம மற்றும் பொருளாதார பலம் நிலம். நிலத்தோடு புலர்ந்து நிலத்தோடு புதையும் வாழ்வு தான் கிராமத்து வாழ்வு. நிலத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து, மனிதர்களை இழந்து, உண்மையை இழந்து இந்த வாழ்க்கைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்பது இந்தத் தொகுப்பை வாசித்து முடிக்கும் போது நம் அறிவைச் சுடும் உண்மையாக உரைக்கும். 

உறவுகளின் பலம் என்பது உறவு முறைப் பெயரில் இல்லை அதை நினைத்த மாத்திரத்தில் நம் மனதுக்குள் படரும் நம்பிக்கையின் ஆணி வேரில் இருக்கிறது. எதிர் வீட்டுக்காரனின் பெயர் கூட அறியாத நகரத்து வாழ்க்கை எங்கே ? மொத்த கிராமமும் சொந்த உறவைப் போல உறவாடி வாழ்கின்ற வாழ்க்கை எங்கே ? கவிஞர் ஆண்டன் பெனி இந்தத் தொகுப்பின் வழியாக காலச் சக்கரத்தை ஒரு சுழற்று சுழற்றி விடுகிறார். நமது காலத்தின் பொன் பரப்பில் நாம் சில கணங்கள் வாழ்ந்து திரும்பும் வரத்தை நமக்கு வழங்கியிருக்கிறார். நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது, நம்மிடம் மிச்சம் மீதியிருக்கும் கொஞ்சநஞ்ச கிராமங்களையும் , உறவுகளையும் சிதைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான். 

தனது முந்தைய தொகுப்புகளின் முத்திரைகளை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு இந்தத் தொகுப்பில் வேறு ஒரு உயரத்துக்குச் சென்றிருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது, ஒரு கதாநாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள். அவர்கள் நாம் பால்யத்தில் சந்தித்திருக்கக் கூடிய சாத்தியமான முகங்களோடு இருக்கிறார்கள். அவர்களை தரிசிப்பது மனதை நெகிழச் செய்கிறது.

இந்தக் கவிதைத் தொகுப்பின் பக்கங்களுக்குள் புகுந்து குதூகலமாக ஓடி விளையாடியபடி இருக்கும் சிறுவன் நான் தான். உணர்ந்து வாசித்துப் பாருங்கள் இந்தக் கவிதைகளை .. அது நீங்களாகவும் இருக்கலாம்.

தட்டான் குழி தொகுப்பிலிருந்து சில கவிதைகள் :

எந்தாயி

திலகராஜ் துணிக்கடையில
தம்பிக்குத் துணியெடுக்கலாம் அத்தேனு
மதினி சொன்னதும் ‘ஓங் கொழுந்தனுக்கு
நீ எங்கனாலும் எடும்மா’னுருச்சி அம்மா.

புருசன் கூடப்பொறந்தவன் கொழுந்தனாலும்
மதினி என்னைய தம்பினுதான் சொல்லும்
அண்ணங்கிட்ட பேசும்போதுகூடப்
பொதுவா தம்பின்னு சொல்லுமே தவிர
தவறிக்கூட உங்கதம்பின்னு சொல்லிடாது.

‘நம்ம இனத்துல புள்ள இல்லனா
ரெண்டாந்தாரம் கட்டுறதொண்ணும்
குத்தமில்லையேன்னு’ பேச்சி வந்தபெறகு
மதினி வீட்டோட பேசுனதே எம்மூலமாத்தான்.

ரெண்டாந்தாரம் கல்யாணம்
வீட்டோடனு முடிவானாலும்
மதினியோட கண்ணுத்தண்ணி
வத்துறவரைக்கும் காத்திருந்தது வீடு.

கல்யாணத்துக்குத் துணி
அம்மையார்பட்டிக் கடையிலனு முடிவானாலும்
எனக்குத் திலகராஜ் கடைதான்னு
மதினி முன்னமே முடிவு பண்ணியிருக்கும் போல.

‘ஏத்தா… இந்தத்துணி இவனுக்கு
நல்லாருக்குமில்ல’ன்னு ஆத்தா கேட்டதும்
என்னை நெஞ்சோட அணைச்சி
‘எம்புள்ளைக்கு எதுனாலும் நல்லாத்தான் இருக்கும்’னது

அண்ணாந்து பாத்தேன்
ஒசரத்துல மதினி முகம்
ஆத்தா மொகம்போலவே இருந்திச்சி.


பேச்சியம்மா ஊரு


பேச்சி ஒரு காட்டு சிறுக்கி

நெதமொரு பூத்தேடி காடெல்லாம் திரியுறவெ

புதுசாப் பூ கெடைக்கலீன்னு ஒருநா

ஊமத்தம்பூவயே வெச்சிக்கிட்டா

தலப்பூவுக்குக் காடெல்லாம் அலைஞ்சவ

சொல்லித்தான் அம்பூட்டுப்பூ

இருக்கிறதே ஊருக்குத் தெரியும்

தலயில வெக்க அதெல்லாம் லாயக்கில்லன்னு

பூக்கார ராசய்யாண்ணன் எம்புட்டுச் சொல்லியும்

காதெடுத்துக் கேக்கிலியே அவெ

பொண்ணுபாக்க வாரவுகளும்

கிறுக்கச்சியா இருப்பாளோன்னு

சொல்லிக்காமலே போயிட்டாகெ

ஆத்தா அப்பன் செத்தப்போ

அத்தன மால சாத்தியும்

அவ கொண்டாந்த பூவப் போட்ட பெறகுதான்

பொணத்தையே எடுக்கவிட்டா

தனிக்கட்டையா வாழப்பிடிக்காம

காட்டுக்குப் போனவள

ஊரே தேடியும் கெடைக்கலெ

எந்த வருசமும் இல்லாத மழயும்

அந்த வருசம் கொட்ட

காடெல்லாம் பேச்சிப்பூ வாசம்

இப்பவும் ஊருல

பேய்யுறதும் பேச்சி

பூக்குறதும் பேச்சி

வெளயுறதும் பேச்சி


இரவில் தூரமாகும் ஊர்


கோவில்பட்டியிலிருந்து

புளியங்குளம் கிராமத்திற்கு

இரவில் போவதென்றால்

பத்துக் கண் பாலத்தில்

ஒரு பேயையும்

ஒற்றைப் பனைமர முனியையும்

மஞ்சனெத்தி மரத்தில் இருக்கும் ஆவியையும்

தாவுபால வெள்ளைப் பிசாசையும் கடந்தே

இன்று வரை ஊர் வழக்கத்தில்

வெகுதூரம் பயணிக்கிறோம்


பகலில் போவதென்றால்

காலேஜ் தாண்டியதும்

ஒத்தக்கடை நிறுத்தத்தில்

வலது பக்கம் திரும்பினால்

ஊர் வந்துவிடுகிறது