ஞாயிறு, 22 நவம்பர், 2020

தன்னந்தனிமை - வெட்சி இதழில் கவிதைகள்

 தன்னந்தனிமை


🌱

எதுவும் செய்ய முடியாத
தனிமையால்
பதற்றத்துக்குள்ளாகிறது.  
இந்த வாழ்வு

சுற்றிலும்
யாவும் நிகழ்ந்து கொண்டிருக்க
தான் மட்டும்
உறைந்து போய்விட்ட 
இந்தத் தனிமைக்கு
சவ விழிகள்

🌱  

தனிமையின் பல்லாயிரம்
கண்களும் குருடாகிவிட
பல நூறு காதுகளும்
செவிடாகி விட
ஒரே ஒரு
இதயம் மட்டும் சதா துடித்துக் கொண்டிருக்கிறது
அதி வேகமாக

🌱  

தனிமையை
அழகான சித்திரமாக்க
நேர்த்தியான கவிதையாக்க
ஒரு சுவையான பதார்த்தமாக்க
அழகான கலையாக்க
அர்த்தமான சொற்களாக்க
நினைவிலாவது
யாராவது வேண்டியிருக்கிறது


🌱  

யாருமற்றிருப்பது
எதுவுமற்றிருப்பது
எப்படி தனிமையாகும்
தனித்திருப்பது மட்டுமா தனிமை
அது
தன்னை தனக்குள்ளேயே
சதா சுழல விடல்
தன்னையே
மீட்டுக் கொடுத்தல்
தன்னிடமே தன்னை
தற்காத்துக் கொள்ளல்

🌱
  
யாருமற்ற எதுவுமற்ற
தனிமையில்
சகலமுமிருக்கிறது

🌱  

வாழ்வை சாவை
இன்மையை இருப்பை
கனவை நனவை
புரிந்து கொள்ள
புரிந்து கொண்ட யாவற்றையும்
அழித்துக் கொள்ள
அவசியமாயிருக்கிறது
ஒரு
தனிமை



1 கருத்து: