சனி, 22 ஆகஸ்ட், 2020

வாசகசாலை இணைய இதழில் கவிதைகள்

வாசகசாலை இணைய இதழில் எனது மூன்று கவிதைகள் பிரசுரமாகியுள்ளன

வாசிக்க : 


கவிதை # 1

மலையுச்சியில் அமர்ந்தபடி 
தனியனாய்ப் பேசிக்கொண்டிருந்தேன். 
யாருடன் பேசுகிறாய் என்றார்கள் 
என்னுடன் தான் என்றது மலை 
பாவம் அவர்களுக்கு 
அது கேட்கவில்லை 
பொருட்படுத்தாது சிரித்தபடிக் 
கிளம்பிவிட்டார்கள் 
விநோதப் பார்வைகளை 
தங்களோடே எடுத்துக் கொண்டு, 
பிறகொரு முறை நீங்கள் வந்தால் 
இந்தப் பள்ளத்தாக்கின் பச்சை பாதாளத்துக்குக் 
கொஞ்சம் செவி கொடுத்துப் பாருங்கள்
நானும் மலையும் 
பேசிக் கொண்டிருப்பது கேட்கலாம்

*******

கவிதை # 2 

என்ன செய்கிறாய் என்றொரு கேள்வி 
எப்போதும் பின் தொடர்ந்தபடியிருக்கிறது 

கண்விழித்த கணத்தில் 
எதிரில் விழும் அந்தக் கேள்விக்கு 
கண்விழித்தேன் என 
பதிலளிக்க வேண்டியிருக்கும் 

குளியலறை நீங்கியதும் 
என்ன செய்கிறாய் என்று வந்து நிற்கும் 

அலுவலகப் பணிகளுக்கிடையில் 
அரைமணிக்கொரு முறை 
திர்கொள்ள வேண்டியிருக்கும் அதை 

தேநீர் இடைவெளைகளில் 
உணவு நேரங்களில் 
நிற்கையில் நடக்கையில் 
வாகனத்தில் விரைகையில் 

என்ன செய்கிறாய் 
என்ன செய்கிறாய் 

அதன் முன் ஒரு 
அகதியைப் போல 
கை பிசைந்து நிற்பேன் 
அவ்வப்போது சினமேறி 
அதை தட்டாமாலை 
சுற்றியெறிவது போல 
எறிந்துவிடத் துடிப்பேன் 
ஆனாலும் 
ஒரு நாள் 
ஒரு பொழுது 
ஒரு முறையேனும் 
என்ன செய்கிறாய் 
எதிரில் வராமல் போனால் 
ஒரு அநாதையைப் போல 
பரிதவித்து நிற்கிறேன்

****

கவிதை # 3

நெடுங்காலம் தொடர்பு எல்லைகளுக்கு 
அப்பாலேயே இருந்தும் 
அலைபேசியில் அழித்திடவே 
முடியாத ஓர் எண் எப்போதும் இருக்கிறது 

நெடுங்காலம் ஒரு பதிவுமற்று 
வெற்றுச் சுவராய் இருந்தும் 
நட்பு நீக்கம் செய்திடாது 
இருக்கவே செய்கிறது 
ஒரு முகநூல் நட்பு 

ஒரு போதும் சென்றிடாத போதும் 
ஒரு கடிதமும் எழுதிடாத போதும் 
நினைவில் எப்போதும் இருக்கிறது 
ஒரு அஞ்சல் முகவரி 
எப்போதும் தொடர்பு கொள்ளவியலா 
தொடர்பு கொள்ள விரும்பா 
ஓர் அன்பு 
எங்கோ தொலைவில் 
இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது 

என்னைப் போலவே 
அங்கும் இருக்கும் 
தொடர்பு கொள்ளவியலா 
ஒரு அலைபேசி எண் 
ஒரு முகவரி 
மற்றும் 
சதா புலம்பல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் 
ஒரு முகநூல் கணக்கை 
ரகசியமாய் வந்து படித்துச் செல்லும் 
தவிப்பின் பாதை 

*********

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

பொம்மைகளின் மொழி - கவிதைத் தொகுப்பு

பொம்மைகளின் மொழி - எனது முதல் கவிதைத் தொகுப்பு

முதல் காதலைப் போல, முதல் கவிதைத் தொகுப்பும் விசேசமானது

இலக்கிய உலகம் பற்றிய பரிச்சயம் அதிகம் இல்லாத  வாசகநாட்கள் அவை. வாசிப்பு, எழுத்து என்று இருந்த நாட்களில் அவ்வப்போது ஆனந்தவிகடன், கணையாழி மற்றும் பல சிற்றிதழ்களில் கவிதைகள் வெளியாகும் அவற்றை எல்லாம் முதலாவதாக எங்கள் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவரும் என் நலத்தில் எப்போதும் அக்கறை கொண்டிருப்பவருமான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு அனுப்புவேன். மனமார வாழ்த்துவார். மற்றவர்களிடமும் என் கவிதைகள் குறித்து சிலாகிப்பார். ஒரு நாள் புத்தகம் போடு என்று அவர் சொன்ன போது; அதற்கான சூழல் இல்லை என்று நான் தயங்கியதும் தனது சொந்தச் செலவிலேயே எனது முதல் தொகுப்பு எனும் கனவை நனவாக்கிக் கையில் கொடுத்தார். தனது செலவிலேயே என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்களை கவுரவித்து வெளியீட்டு விழாவும் நடத்தினார்.

என் நிறுவனத்தில் என் நண்பர்களே அந்தத் தொகுப்பின் பிரதிகளில் பெரும்பாலானவற்றை வாங்கிக் கொண்டனர். இலக்கிய வட்டங்களுக்கும் கடைகளுக்கும் மிக சொற்பமானவற்றையே கொடுத்தேன். 

ஒரு பிரதி கூட என் கைவசம் இல்லாத நிலையில் அந்தத் தொகுப்பு வேண்டும் என பல நண்பர்கள் இப்போது வரை கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். மறுபதிப்பு கொண்டு வரவோ, மின்பதிப்பு கொண்டு வரவோ ஆர்வமின்றி இருந்தேன். நண்பர்கள் பலரும் இந்த ஊரடங்கு காலத்தில் கிண்டில் மின்னூலாக வெளியிட, எனக்கும் இந்த யோசனை வந்தது. ஆகவே எனது முதல் தொகுப்பை மின்னூலாகக் கொண்டு வந்திருக்கிறேன்.

கீழுள்ள லிங்கைப் பின்பற்றி அமேசான் கிண்டிலில் எனது பொம்மைகளின் மொழியை வாங்கி வாசிக்கலாம். வாசியுங்கள் அந்தக் காலத்தின் நான் உங்களோடு உரையாடக் காத்திருக்கிறேன்.


இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான தொகுப்பு. இந்தத் தொகுப்பு எனக்குக் கொடுத்த அங்கீகாரமும் அடையாளமும் பெரிது. மேலும் இந்தத் தொகுப்பின் வழியாகத்தான் முகம் தெரியாது தொகுப்பை வாங்கி வாசித்து நண்பர்களாக ஆகிப்போன வைகறை, இயற்கை, அனாமிகா போன்ற நண்பர்கள் கிடைத்தார்கள்.

நண்பர்கள் வாங்கி வாசிக்கவும்


புதன், 5 ஆகஸ்ட், 2020

புத்த முகம் அச்சடிக்கப்பட்ட இரவு உடை - கணையாழி கவிதை

இந்த மாதம் கணையாழி இதழில் என் கவிதை வெளியாகியுள்ளது..

வாசிக்க