செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

ஆழி சூழ் கேரளத்துக்கு அன்பு சூழ நிதி...

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பில் கேரளத்துக்கு நிதி மற்றும் பொருள் உதவி சேகரித்து வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 19 இலக்கிய வட்ட நிகழ்வில் வழங்கலாம் என அறிவித்திருந்தோம்.

கடுமையான பணிச்சூழல் காரணமாக நிறைய நாட்கள் முன்னர் கடலூர் வெள்ளத்தின் போது செய்தது போல அலைய முடியவில்லை என்றாலும் நண்பர்கள் ஒரே நாளில் தங்களால் இயன்றவற்றைக் கொடுத்து உதவிவிட்டனர்.

அறிவிப்பை வாட்சப், முகநூலில் கண்ட நண்பர்களும் இலக்கிய வட்டத்துக்கு வந்திருந்த நண்பர்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 40000 ரூபாய்க்கு மேல் பணமும் பொருளுமாக அனுப்பி விட்டனர்.

நிதி திரட்டுகிறோம் என்று கேள்விப்பட்டவுடன் முதல் ஆளாக எனது கல்லூரி நண்பன் பாலமுருகன் பெங்களூரிலிருந்து 15000 தந்து உதவினான், பின்னர் இலக்கிய வட்ட நண்பர் முரளிகிருஷ்ணன் 5000 தந்து உதவ, கவிஞர் அன்பாதவன், அருள்செல்வி, உமாமகேஸ் என தொடர்ந்து நண்பர்கள் பணமாகக் கொடுத்தனர். பணம் கொடுத்தவர்களின் விபரம் கீழே கொடுத்துள்ளேன்.






பெயர் தொகை

பாலமுருகன் ( பெங்களூரு ) 15000.00

முரளிகிருஷ்ணன் 5000.00

செ.கார்த்திகா 500.00

செ.ரமேஷ்குமார் 1000.00

பொள்ளாச்சி அபி 1000.00

தமிழரசன் ( சே தமிழா ) 2000.00

அருள் செல்வி 1000.00

சிவசங்கரி 200.00

ஆனந்தகுமார் 100.00

த.வாசுதேவன் 1000.00

மயிலவன் 500.00

திருமால் ( சுக்கு காபி ) 200.00

பொள்ளாச்சி முருகானந்தம் 500.00

உமா மகேஸ் 1000.00

நாச்சிமுத்து 500.00

நிமோஷினி 100.00

கார்த்தி 500.00

செல்வக்குமார் 100.00

க.மாசிலாமணி 100.00

சி.செல்வராஜ் 200.00

ச.ப்ரியா 500.00

சீனிவாசன் 200.00

கெளரி 500.00

ஷைல்தேவ் 50.00

அன்பாதவன் 2000.00

ஆறுமுகம் ஆசிரியர் 500.00

ரகுபதி 500.00

மெளனம் ரமேசு 500.00

சி.நா.மலையப்பன் 420.00

ரங்கராஜ் 2000.00

செல்வராஜ் 100.00

மொத்தம் 37770.00




வசூலான தொகை 37770 ரூபாய்க்கு என்ன வாங்கலாம் என ஆன்மன், இனியன் போன்ற நண்பர்களிடம் விசாரித்ததில் இடுக்கி முகாமுக்கு சில பொருட்கள் தேவை என சொன்னார்கள். கீதா ப்ரகாஷிடம் பட்டியல் கேட்டு வாங்கி 38000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி எதிர் வெளியீடு அனுஷ் மூலமாக கேரளாவுக்கு இன்று பொருட்கள் செல்கின்றன.

பணமாக உதவியது போகவும்,

கவிஞர் ச.ப்ரியா மெழுகுவர்த்தி,ப்ளீச்சிங்க் பவுடர் மற்றும் மளிகைப் பொருட்கள் கொண்டு வந்து தந்தார், மேலும் அபிநயா அவர்களிடமிருந்தும் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்தார்.

தோழி அஸ்வினி அவர்கள் என்ன வேண்டும் எனக் கேட்டு  மெழுகுவர்த்தி,ப்ளீச்சிங்க் பவுடர் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்து தந்தார்,

திருமதி மாரியம்மாள் அவர்கள் தனது கணவருடன் வந்து ஒரு அரிசிப்பை தந்துவிட்டுச் சென்றார்.

திருமதி கல்பனா அவர்கள் வேட்டி சேலைகள் வாங்கித் தந்திருந்தார்.

நகரவை ஆண்கள் மேனிலைப்பள்ளி பொருளியல் ஆசிரியர். திருமதி அம்பிகா அவர்கள் பொருட்களாக உதவிகளை செய்தார்கள்.

இப்படியாக அத்துணை பொருட்களும் இன்று சென்று சேரும். இவ்வாறு பொதுக் காரியத்தில் ஈடுபடும் போது சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் நேரும், நமக்கும் அது நேர்ந்தது

- இலக்கிய வட்டத்துக்கு சுக்கு காபி தரும் திருமால் அண்ணன் நமது அறிவிப்பைக் கேட்டு நம்மிடம் சுக்கு காபி விற்ற பணத்தில் ரூபாய் 200ஐத் திருப்பி நம்மிடமே தந்து இதை வெள்ள நிவாரண நிதியா வச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டுப் போனார்.

- ச.ப்ரியாவின் மகன் ஷைல் தேவ் தான் சேமித்து பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு புத்தம் புதிய ஐம்பது ரூபாய் நோட்டை வெள்ள நிவாரண நிதியாக அளித்தார்.

 - பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் கவிதை வாசிப்பவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு கவிதைகளுக்கு தலா 100 ரூபாய் வீதம் நமது பொள்ளாச்சி இலக்கிய வட்ட ஆலோசகர் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தந்து வருகிறார். இந்த மாதம் கல்லூரி மாணவன் செல்வக்குமார் மற்றும் ஆசிரியர் செல்வராஜ் அவர்களின் கவிதைகள் தேர்வாகின. அவர்கள் இருவரும் பரிசாகப் பெற்ற அந்தத் தொகையை அப்படியே திருப்பி நிவாரணமாகக் கொடுத்துவிட்டனர்.

பொள்ளாச்சி அபி, நாச்சிமுத்து,மயிலவன், செ.இரமேஷ்குமார் உட்பட இங்கு பணமாகக் கொடுத்த பலரும் ஏற்கனவே வெவ்வேறு இடங்களில் உதவியிருந்தாலும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலமாகவும் தங்களது உதவி போய்ச் சேர வேண்டும் என விரும்பி அளித்துள்ளனர்.

கவிஞர் அம்சப்ரியா அவர்களும், கவிஞர் சோலைமாயவன் அவர்களும் தாம் இவற்றைச் சேகரித்து கொண்டு போய்ச் சேர்த்தார்கள். சோலைமாயவன் பொள்ளாச்சியில் எங்கு யார் பொருட்களைச் சேகரித்து வைத்திருந்தாலும் தனது சொந்த வாகனத்தில் அவற்றைத் தூக்கி வந்து அனுஷ் அல்லது கீதா ஆகியோரிடம் சேர்த்திருக்கிறார். அவர் அப்படித்தான்.

பணமாகவும், பொருளாகவும், உடல் உழைப்பாகவும், மன ஆறுதலாகவும், ஆலோசனைகளாகவும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கும் அதன் மூலம் கேரள சகோதரர்களுக்கும் உதவிய தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியும் , நெகிழ்ந்த அன்பும் ...


ஆழி சூழ் கேரளத்தை அன்பு சூழ மீட்டெடுப்போம் 

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

கேரளத்துக்கு கரம் சேர்ப்போம்

நண்பர்களுக்கு வணக்கம்

நமது அண்டை மாநிலம் கேராளா பெருவெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்தபடி இருக்கிறது. நாம் கரம் சேர்க்க வேண்டிய தருணம் இது. சென்னை கடலூர் வெள்ளத்தின் போது பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய உணவுப் பொருட்கள் உடைகளை வழங்கினோம். சென்னை வெள்ளத்தின் போது நமது கேரள சகோதரர்களும் நமக்குச் செய்த உதவியை நாம் மறக்கக் கூடாது. நாம் பணமாக, பொருளாக, அன்பாக, ஆதரவாக அவர்களுக்கு எவ்வகையிலேனும் உதவ வேண்டும்.

பொள்ளாச்சி நண்பர் ஆன்மன் கேரள முகாமில் இருந்தபடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் திரட்டி உதவும் பெரும் பணியைச் செய்துவருகிறார். பொள்ளாச்சியில் கீதா ப்ரகாஷ், எதிர் வெளியீடு அனுஷ் போன்றோரும் திரட்டி வருகின்றனர்.

எனவே

வரும் ஞாயிறு நமது பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 64ஆவது சந்திப்பு நிகழ்ச்சி என்பது முன்னர் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளுடன் மறைந்த தலைவர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கேரள சகோதரர்களுக்கான உதவிப் பொருட்களைத் திரட்டும் முகாமாகவும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்...

வரும் ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாங்கள் தங்களாலான உணவுப் பொருட்கள், புதிய உடைகள் ( பழையதைத் தவிர்க்கவும் ), மருந்துப் பொருட்கள், பாக்கெட் உணவுகள் என தங்களால் ஆன பொருட்களைக் கொண்டு வந்து தரலாம். பணமாகத் தருபவர்களும் தரலாம் அவற்றை பத்திரமாக நண்பர்கள் மூலம் நேரடியாக பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்குக்  கொண்டு சேர்க்கப்படும்.

தொடர்புக்கு

க.அம்சப்ரியா 9095507547
இரா.பூபாலன் 98422 75662

சோலைமாயவன்,  புன்னகை பூ ஜெயக்குமார்,  ச.தி.செந்தில்குமார்


செவ்வாய், 31 ஜூலை, 2018

சிற்பி இலக்கிய விருது 2018

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் பொள்ளாச்சியில் கவிஞர் சிற்பி அவர்களது அறக்கட்டளையின் பெயரில் சிற்பி இலக்கிய விருது விழா நடைபெறும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி சனிக்கிழமை, பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் நடைபெறுகிறது..

இந்த முறை விருது பெறுபவர்கள் என் மதிப்பிற்கும் அன்புக்கும் உரியவர்கள், தொடர்ந்து நான் அவர்களது படைப்புகளையும் செயல்பாடுகளையும் விரும்பி கவனித்து வருகிறேன். நான் மட்டுமல்ல, தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அத்துணை பேருக்கும் தெரிந்த முகங்கள்.

இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது பெறுபவர்  கவிஞர் மகுடேஸ்வரன் அவர்கள். மிகச் சிறந்த கவிஞர்,  எழுத்தாளர், பேச்சாளர், அற்புதமான தமிழ் அறிஞர்,ஆய்வாளர்,ஆர்வலர், பல்வேறு புதிய தமிழ்ச்சொற்களையும் , மொழிபெயர்ப்புச் சொற்களையும் தமிழுக்கு தொடர்ந்து வழங்கி வருபவர். 

கவிஞர் மகுடேஸ்வரனை நான் எனது கல்லூரிக் காலத்திலிருந்து வாசித்து வருகிறேன். எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனது கற்றதும் பெற்றதும் பகுதியில் மகுடேஸ்வரனின் பல்வேறு கவிதைகளையும் குறுங்கவிதைகளையும் அறிமுகம் செய்துள்ளார்.

வாழ்ந்து கெட்டவனின் 
பரம்பரை வீட்டை 
விலை முடிக்கும்போது 
உற்றுக் கேள் 
கொல்லையில் 
சன்னமாக எழும் 
பெண்களின் விசும்பலை

கவிஞர் மகுடேஸ்வரனின் இந்தக் கவிதையை பல நிகழ்வுகளில், மேடைகளில் நான் சொல்லி வந்திருக்கிறேன்.

 ஆட்டுக்குட்டிகள்
 முதுகு தேய்த்துரச உதவட்டும்
 என் கல்லறைச் சுவர்

- இதுவும் அவர் கவிதை தான். எப்போதும் நினைவில் இருக்கும் கவிதை. என்னை அடீங்கோ, கொல்லுங்கோ எனத்துவங்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் குரலில் ஒலிக்கும் கவிதையும், அந்தக்காலம் போலில்லை இந்தக்காலம் என்கிற அவரது கவிதையும் எப்போதும் நினைவில் ஊறிக்கொண்டேயிருக்கக் கூடிய கவிதைகள்.


பல்வேறு கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர். தனித் தமிழ் எழுத்தும் பேச்சும் இவரது சிறப்பு. கவிஞர் மகுடேஸ்வரன் பெறும் விருது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது

வாழ்க நீங்களும் தங்களது தமிழ்ப்பணியும் அண்ணா ...

மேலும் கவிஞர் மகுடேஸ்வரனுடன் இந்த ஆண்டு சிற்பி அறக்கட்டளையின்  பி.எம்.எஸ் விருது மணல் வீடு ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மு.ஹரிகிருஷ்ணன் தவசி கருப்புசாமி என்ற பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார். மணல்வீடு என்ற சிற்றிதழை கடின உழைப்போடும் அர்ப்பணிப்போடும் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாது  நாட்டுப்புறக் கூத்து, மரப்பாவை, தோற்பாவைக் கூத்து முதலிய கூத்துக்கலையையும் நாடகக் கலையையும் ஆவணப்படுத்தியும் அழிந்துவிடாமல் காக்கவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் என்ற அமைப்பைத் துவங்கி ,  தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.மணல் வீடு இலக்கிய வட்டம் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இலக்கிய விருதுகளும் வழங்கி வருகிறார்.

மணல் வீடு பதிப்பகம் மூலம் நவீன இலக்கியத்தின் முக்கியமான புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பவர் என பல்வேறு முகம் கொண்ட ஆளுமை.  ஹரிகிருஷ்ணனுக்கான விருதும் மிகப் பொருத்தமானது.

வாழ்த்துகள் மு.ஹரிகிருஷ்ணன்.


எழுத்தாளர் நாஞ்சில்நாடன் வாழ்த்துரை வழங்க தமிழறிஞர் கரு.ஆறுமுகத் தமிழன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.. விருது விழா, தமிழ்த் திருவிழாவாக இருக்கப் போகிறது ..

நிகழ்வின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன் .. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வருக..



செவ்வாய், 17 ஜூலை, 2018

கேடுகெட்ட உலகம்


                இவ்வளவு எதிர்மறையாக என்றுமே நான் எழுதியதாக நினைவில் இல்லை. ஆனால், இந்த உலகம் கேடு கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது, சீரழிந்து கொண்டிருக்கிறது என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது இந்தச் செய்தியைப் படித்தவுடன்..

சென்னை அயனாவரத்தில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்  வசிக்கும் 11 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.
வாய் பேசும், காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும்  தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்தச் சிறுமி பேசுவாராம்.

இதைப் பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னைத் தீர்த்துக்கட்டிவிடுவோம்’, என்று கத்தியைக் காட்டி மிரட்டியதால் அந்தச் சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்

முதலில் அந்த 4 காமக் கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்தச் சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் மேலும் 5 காவலாளிகளின் காமப்பசிக்கு இரையாக்கப்பட்டு இருக்கிறாள். அக்குடியிருப்பின் மொட்டை மாடி பகுதியிலும், ‘லிப்ட்’டுக்குள் வைத்தும் இந்த காமக் கொடூரர்கள் அந்த சிறுமியை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். அத்தோடு விடாமல் அக்குடியிருப்புக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் என்று மொத்தம் 22 பேர் கடந்த 7 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

கேட்கவே உடல் நடுங்குறது. ஒரு 11 வயது சிறுமியை 23 வயது முதல் 60 வயது வரை உள்ள 22 ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியிருப்பது மிகுந்த பதற்றத்தையும், அச்சத்தையும், பெரும் கோபத்தையும் வரவழைக்கிறது.. 22 பேரில் 17 பேரை இப்போது கைது  செய்திருக்கிறார்கள்.

இவர்களை என்ன செய்வது ?????

பிடிபட்ட குற்றவாளிகளின் படம் இதோ ..

மாற்றுத் திறனாளி மாணவி விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்கள்.


இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் கிடைக்கும் தண்டனை ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இந்தக் கொடுமையை தனது பெற்றோரிடம் சொல்லத் தயங்கியிருந்த சிறுமி,  வெளிமாநிலத்தில் தங்கி படித்துக்கொண்டிருந்த தனது மூத்த சகோதரி விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது அவரிடம் சொல்லி அழுதிருக்கிறார். அதன் பின்னர் தான் இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை ஏன் பெற்றோரிடம்  உடனே சொல்லவில்லை, குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏதோ ஒரு இடைவெளி இருக்கிறதல்லவா ?  பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளி நவீன காலச் சூழலில் அதிகரித்துக் கொண்டே போவது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். சரியோ தவறோ எதுவாக இருப்பினும் பெற்றோரிடம் பகிர வேண்டும், அதற்கான இடத்தையும் நேரத்தையும் பெற்றோர் அல்லவா தரவேண்டும். நாம் அதைத் தருவதில்லை.

இந்த நிலையை நாம் களைய வேண்டும்.. தினமும் சிறிது நேரம் நம் பிள்ளைகளுடன், பெற்றோர்களாக அல்லாது நண்பர்களாக உரையாட வேண்டும். அவர்கள் அன்றாடம் சிறு செயல்களில் விளையும் சிறு சிறு வெற்றிகளைப் பாராட்ட வேண்டும், சிறு சறுக்கல்களுக்கு அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும்.

நல்ல தொடுகை, கெட்ட தொடுகையைக் கற்றுத் தருவதின் அவசியமும் இப்போது உணரப்படுகிறது.

இன்னும் இந்த உலகம் மோசமாகிக் கொண்டே தான் இருக்கப் போகிறது. நமது குழந்தைகளை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்...

அவர்களது எதிர்காலம் நமது கைகளிலும் இருக்கிறது...

ஞாயிறு, 17 ஜூன், 2018

குரலற்றவனின் எதிர்க்குரல்

தகவு மின்னிதழில் நான் எழுதிய நூல் விமர்சனம் வெளியாகியுள்ளது இங்கு பகிர்கிறேன் .

தகவு மின்னிதழ் வாசிக்க : http://padaippu.com/ta/thagavu-2

குரலற்றவனின் எதிர்க்குரல் 

- கவிஞர் சோலை மாயவனின் விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி கவிதைத் தொகுப்பை முன்வைத்து


 ஒரு கவிதையை நாம் முழுமையாக உணர்ந்து கொள்வது என்பது ஒரு கவிஞனை அவனது உணர்வுகளோடு முழுமையாக உள்வாங்கிக் கொள்வது என்பதையும் சேர்த்தது தான். ஒரு கவிதையை நாம் புரிந்து கொள்வது என்பது வாசக மனநிலையை ஒத்தது. வாசிப்பின் சூழல்,காலம்,மனோநிலை என அத்தனையையும் உள்ளடக்கிய ஒன்றுதான் ஒரு நவீன கவிதையை நாம் புரிந்துகொள்ளுதல் என்பது. ஒரு கவிதை, படைப்பாளனால் என்ன தொனியில் எழுதப்பட்டதோ அதே தொனியில் வாசகன் அதை உள்வாங்கிக் கொள்ளும் இடம் படைப்பாளனின் வெற்றி உறுதி செய்யப்படும் இடம். போலவே, படைப்பாளன் சொல்லாத அல்லது பூடகமாக வைத்திருக்கும் பொருள் அனைத்தையும் சேர்த்து வாசகன் உள்வாங்கிக் கொள்ளும் இடம் என்பது அந்தப் படைப்பின் வெற்றியை உறுதி செய்யும் இடம். ஒரு கவிஞன் தான் சொல்ல நினைத்ததை வாசகனுக்குக் கடத்துவதும், சொல்லாமல் விட்டு வைத்திருக்கும் செய்தியையும் வாசகனுக்குக் கடத்துவதும் கவிதையில் சாத்தியம் தான்.

ஒரு கவிதைத் தொகுப்பு அதனளவில் மனநிறைவைத் தர, குறைந்தபட்சம் ஐந்து கவிதைகளாவது நினைவில் நிற்கும் கவிதைகளாக இருந்தால் போதுமானது. ஒரே ஒரு கவிதையாவது முத்திரைக் கவிதையாக தொகுப்பின் அடர்த்தியைச் சொல்லும்படி அமைவது இன்னும் சிறப்பு.

கவிஞர் சோலை மாயவனின் விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி கவிதைத் தொகுப்பின் கவிதைகள் நவீன மொழிதலில் சொல்லப்பட்ட நூற்றாண்டு கால பழைய வலிகள். அவற்றை இந்த நூற்றாண்டிலும், அதிலும் கவிதையில் பேச வேண்டி வைத்திருக்கிற நம் காலத்தைத் தான் சபிக்க வேண்டியிருக்கிறது.


தேயிலை நிழலில்
உறங்குகிறது
வனமிழந்த சிறுத்தை

இந்த ஒரு கவிதை தரும் அழுத்தமும் இந்த ஒரு காட்சி விரியச் செய்கிற பெரும் வரலாற்றுப் பிழையின் கொடூரச் சித்திரமும் தான் ஒரு கவிதையில் ஆவணப்படுத்தப் பட வேண்டிய காலச் சித்திரம் என உணரச்செய்கிறது. வனத்தை அழித்து தேயிலைச் செடிகளை நட்டு பன்னாட்டு வணிகத்தைப் பெருக்கச் செய்ய நம் வயிறு கிழித்து இடம் கொடுத்த பின் வனத்தின் உயிர்கள் போக்கிடமின்றி சமநிலத்துக்கு வருவதும் அவற்றை நாம் விரட்டுவதுமான விலங்குகளுக்கும் மனிதனுக்குமான போரை வேதனையுடன் நினைவு கூறச் செய்கிறது இந்தக் கவிதை.
தேயிலை குத்துச் செடிக்கடியில் படுத்துக்கிடக்கும் சிறுத்தை ஒரு குறியீடு தான். அது ஒரு மிகப்பெரிய வன உயிர்க் கூட்டத்தை, செழித்த பெருங்காட்டை தனது உருவத்துக்குள் அது மறைத்து வைத்திருக்கிறது. தேநீருக்கு நாம் விலை போன கதையையும் நமது குறிஞ்சிக் காடுகளை அழித்து தேயிலைச் செடிகள் வேரூன்றிய கதையையும் நாம் அறிந்திருந்தால் இந்தக் கவிதை நம் நெஞ்சத்தைத் தைக்கும்.

எம் நூற்றாண்டின்
தாகம் தீர்க்க மறுத்த
ஆதிக்க சாதியின்
சாபத்தின் அடையாளமாக

எம் குழந்தையின்
பீ துடைத்த துணியை
தூக்கி வீசும்
குப்பைத் தொட்டியாக இருக்கிறது

ஊரின் நடுவே
பொதுக்கிணறு

பொதுக்கிணறு தூர்ந்து போனதன் காரணம் கோடையும், நிலத்தடி நீர் வற்றியதும் என நாம் நினைத்துக்கொண்டிருக்க, அதன் பின்னாலும் இப்படி ஒரு சாபம் இருக்கிறது எனச் சொல்லும் இந்தக் கவிதை நம் காலத்தின் சாட்சிதானே ? குடிநீர் மறுத்த ஆதிக்க சாதிக்கான சாபத்தில் தான் நீரின்றி வறண்டு தூர்ந்து போயிருக்கக் கூடும் பொதுக்கிணறு என்ற உண்மை நம்மை இன்னும் பல காலத்துக்கு முகத்திலறைந்து கொண்டே இருக்கட்டும்.

காலகள் இடறி
தலைகுப்புற விழுந்து கிடந்தேன்
கூடவே
சிதறியது கழனி வேலைக்குப் போன
அம்மாவுக்குக் கொண்டு சென்ற
கேழ்வரகுக் கூழ்
மீதமான கூழில் ஆற்று நீரை நிரப்பி
அம்மாவின் பசி போக்கினேன்
அம்மா இருக்கிறாள்
நான் இருக்கிறேன்
காணாமல் போயிருந்தது
பசி தீர்த்த
ஆறு


இந்தக் கவிதை நம் மனக்கண் முன்னால் கொண்டு வரும் சித்திரம் ஒரு விவசாய வாழ்வு அதை நீங்கி நாம் இப்போது நகரத்துக்கு நகர்ந்துவிட்டோம். மேலும் இரண்டாவது தலைமுறைக்கே ஆறு என்ற ஒன்று இல்லை எனக் கவிஞர் பதிவு செய்கிறார். என்றால், அடுத்த தலைமுறைக்கு நீராவது இருக்குமா என்ற அச்சத்தைக் கிளப்புகிறது இந்தக் கவிதை. தமது படைப்புகளில், தமது நிலம், தமது வாழ்க்கை முறை, தமது மண் சார்ந்த காட்சிகளைப் பதிவு செய்யும் எழுத்தாளர்கள் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் தாம் நமது வரலாற்றை இலக்கியங்களின் வழி ஆவணப்படுத்துகிறார்கள். அப்படியான கவிதைகளை கவிஞர் நிறையத் தந்திருக்கிறார் இந்தத் தொகுப்பின் வழி.

நீர் நிலைகள் வற்றிவிட்டதன் கொடுமைகள், அதிகாரத்தின் ஒடுக்குமுறைகள், தீண்டாமையின் கொடுஞ்செயல்கள், என சமூகத்துக்கான புறக் கவிதைகளோடு சில அகக் கவிதைகளையும் சேர்த்து தொகுப்பாக்கியிருக்கிறார்.

தாய்மையடைந்திருக்கும் ஒரு பூனையின் வருகைக்காக சன்னல்களைத் திறந்து வைத்துக் காத்திருக்கும், தட்டு நிறைய பாலுடன் காத்திருக்கும் மனிதம் தான் இந்தக் கவிதைகளின் அடிநாதம். மனிதமும், சாதீய ஒதுக்குதலுக்கெதிரான உரத்த குரலும், இயற்கை, உயிர்களின் மீதான வன்முறைகளைச் சாடும் குரலாகவும் இந்தக் கவிதைகள் ஓங்கி ஒலிக்கின்றன.

இரண்டாவது தொகுப்பிலேயே இவ்வளவு அடர்த்தியான கவிதைகளோடும் இவ்வளவு செங்கோபத்துடனும் வந்திருக்கும் கவிஞர் சோலைமாயவனை வாழ்த்தி வரவேற்போம்.  நல்ல கவிதைகள் காலத்தின் அத்தியாவசியாமாக இருக்கின்றன. நல்ல படைப்பாளர்கள் காலத்தின் பெரும் தேவையாயிருக்கின்றனர்.

ஆசிரியர் : கவிஞர் சோலைமாயவன் -  9597014283
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
தொடர்புக்கு : 9095507547 , 98422 75662

தகவு மின்னிதழ்


முகநூல் குழுக்கள் என்றாலே ஒரு ஒவ்வாமை இருந்திருக்கிறது.  அவ்வளவு ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. எந்தக் குழுக்களிலும் எட்டிப்பார்ப்பதும் இல்லை. சமீப காலமாக, நண்பர்களின் வாயிலாகக் கேள்விப்பட்டு படைப்பு குழுமத்தின் படைப்புகளை, செயல்பாடுகளை கவனித்தே வந்தேன். முற்றிலும் மாறுபட்ட , மேம்பட்ட ஒரு குழு. அதை ஒரு இயக்கம் என்றும் சொல்லலாம். கவிதைகளை குழுவில் வெளியிடுவது சிறந்த கவிதைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து கெளரவிப்பது, அவற்றை நூலாக்கி வெளியிடுவது, விருதுகள் வழங்குவது என மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது படைப்பு குழுமம்.

படைப்பு குழுமத்தின் அடுத்த பாய்ச்சலாக தகவு என்ற மின்னிதழை வெளியிட்டிருக்கிறார்கள். முதல் இதழை வாசித்தபோதே எழுதிவிட நினைத்திருந்தேன். இயலவில்லை. இப்போது இரண்டாவது இதழ் வெளியாகியுள்ளது.

ஒரு சிற்றிதழை நடத்துவது என்பது ஒரு சர்க்கஸ் சாகசக்காரனின் கம்பி விளையாட்டு போன்றது. வெறும் கைகளை நம்பி அந்தரத்தில் பல்டி அடிப்பது போன்றது. அத்தனை பிரயத்தனங்களையும் செய்து இலக்கியத்தை வளர்த்ததில் சிற்றிதழ்களின் பங்கு மிக முக்கியமானது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் இப்போது நிறைய மின்னிதழ்கள், இணைய இதழ்களும் சிறப்பாக சிற்றிதழின் பணிகளைச் செய்தவண்ணம் இருக்கின்றன.

படைப்பு மின்னிதழ், ஒரு அச்சு இதழுக்கான அத்தனை வடிவமைப்பு நேர்த்திகளோடும், கனமான உள்ளடக்கங்களோடும் மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. இதழைப் பார்த்தவுடன் கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும் போல இருக்கிறது. நானும் கொலுசு மின்னிதழின் ஆசிரியராக இருக்கிறேன் என்பதால், இந்த இதழை உருவாக்க எவ்வளவு உடல் உழைப்பு, நேரம், மன உழைப்பு, பொருளாதாரம் தேவைப்பட்டிருக்கும் என்பதை என்னால் வியந்து யூகிக்க முடிகிறது.

ஜின்னா அஸ்மி உள்ளிட்ட படைப்பு மின்னிதழ் உருவாக்கத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். இந்த இதழ் அச்சு இதழாகவும் வெளிவரவேண்டும் மேலும் தொய்வின்றி மிகச் சிறப்பாக பல காலம் வெளி வரவேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்

இரண்டாவது இதழ், கவிஞர் சல்மாவுடன் நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மாணவர் பக்கம், சங்க இலக்கியம் என பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது. கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கலாம். படைப்புகள் அனுப்புக ...

http://padaippu.com/ta/thagavu-2



தந்தையர் தினம்

மிகச் சன்னமாக வானம் மழைத் தூறல்களால் பூமியை ஆயிரமாயிரம்  கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிற இந்த நள்ளிரவிலும் நான் இதை எழுதியிருக்க மாட்டேன் தான்.

இன்று தந்தையர் தினம் என்பதால் மற்ற நாட்களை விடவும் அப்பாவின் நினைவுகள் அதிகதிமாக மேலெழுந்த படியே இருந்தது. அப்பாவைப் பற்றி எதையாவது எழுதத் துவங்கினால் அது இப்போது இருக்கிற மனநிலையை இன்னும் இறுக்கமாக்கி விடும் என்பதால் எதுவும் செய்யாமல் இருந்தேன். கோவையிலிருந்து மகிழுந்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் தமிழ்க் கலைஞர்கள் சங்கம் தந்த இலக்கிய நெறிச் செம்மல் விருது பெற்றுக்கொண்டு. உடன் விருது பெற்ற கவிஞர் அம்சப்ரியா அவர்களையும் உடன் வந்த மாமாவையும் வழியில் இறக்கிவிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்புகையில் நள்ளிரவு. வீட்டுக்குள் நுழையும் போது மகிழுந்தில் அந்தப் பாடல் ஒலித்திருக்க வேண்டாம். வாசலுக்கு வெளியில் வாகனத்தை நிறுத்திவிட்டு மழையிசையுடன் சேர்ந்து முழுதுமாக அந்தப்பாடலைக் கேட்டுவிட்டு தான் உள்ளே நுழைகிறேன்.

“ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே "

நா.முத்துக்குமார் என்ற காலம் அவசரமாக விழுங்கிவிட்ட கவிஞனின் நெகிழ்த்தும் வரிகள் என்னை இந்த இரவில் மேலும் மேலும் உருகச் செய்துவிட்டது.

சென்ற முறை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் விருது விழாவுக்குப் போய்விட்டு வந்ததை மகள் பாரதி இன்று காலையில் தான் நினைவுகூர்ந்தாள். அப்பா என்னுடைய ஒரு பேனாவை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தான் விருது விழாவுக்கு வந்தாராம். பேத்தியிடம் இது அப்பாவுடைய பேனா, நான் முன்பெல்லாம் அப்பா பிறந்தநாளுக்கு பேனா பரிசளிப்பேன் என்றெல்லாம் நிறைய சொல்லியிருக்கிறார். அவள் அதைச் சொன்ன போது நினைவில் வந்தது. சிறு வயதில் எனது பிறந்தநாளுக்கு உடை தவிர அப்பா தரும் அன்புப் பரிசு பேனா தான். எனக்கு பேனா பிடிக்கும் என்பது மட்டுமல்லாது நான் எழுத வேண்டும் , படிக்க வேண்டும் என்பது அப்பாவின் கனவாகவே இருந்தது. பள்ளிக்கே செல்லாத அப்பாவுக்கு என் கல்வியின் மீது பெரும் காதல் இருந்தது. இந்த நினைவுகளின் வழியே நான் முடிவு செய்திருக்கிறேன் இதோ வருகிற ஜூன் 21 மகள் பாரதியின் பிறந்தநாளுக்கு நான் ஒரு பேனாவைப் பரிசளிப்பேன் அது என் அப்பா எனக்குக் கொடுத்ததைப் போல என் கனவுகளை, அன்பை, அப்படியே தூக்கிக் கொடுப்பதாக. படி , எழுது பாரதி என்பதாக...

இன்னொன்றும் தோன்றியது... இது இன்று விருது விழாவில் நான் பேச நினைத்தது.. வாய்ப்பில்லாததால் இங்கு எழுதுகிறேன்.. இந்தத் தந்தையர் தினத்தில் அப்பா உடன் இல்லை, ஆனால் அப்பாவைப் போலவே என் மீது அன்பும் கண்டிப்பும் வழிகாட்டுதலுமாக என்னோடு  மாமா ச.தி.செந்தில்குமார் இருக்கிறார்.  அப்பாவைப் போலவே எனது எல்லா செயல்பாடுகளிலும் உடன் இருக்கிறார், உடன் வருகிறார், ஆற்றுப்படுத்துகிறார், இதோ இன்றும் விருது வாங்க காலையில் என்னுடன் வந்து நள்ளிரவில் தான் வீடு திரும்புகிறார், அப்பாவைப் போலவே பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு அப்படி ஓட்டு , இப்படி ஓட்டு என்று நல்வழி காட்டிக்கொண்டிருக்கிறார்....  அப்பாக்கள் தினத்தன்று அப்பா இல்லாத குறைக்கு முழுநாளும் என்னுடனே இருந்திருக்கிறார் ... அவருக்கானதும் தான் இந்த நாள்.

அப்படிப் பார்த்தால் , நாங்கள் நண்பர்கள் தினத்தையும் , சகோதர தினத்தையும் ஏன் காதலர் தினத்தையும் சேர்ந்து தான் கொண்டாட வேண்டும். கொண்டாடுவோம்.

அப்பாக்கள் அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவதில்லை தங்கள் பிள்ளைகளை...

புதன், 13 ஜூன், 2018

த.மு.எ.க.ச கோவை மாவட்ட மாநாடு


கடந்த ஞாயிறு கோவையில் த.மு.எ.க.ச மாவட்ட மாநாடு நடைபெற்றது.
அதில், கோவை  படைப்பாளர்களுக்கும், கோவை மாவட்டத்தில் விருது பெற்ற படைப்பாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

எனது ஆதி முகத்தின் காலப்பிரதி நூலுக்கு மூன்று விருதுகள் பெற்றமைக்காக என்னையும் சிறப்பு செய்தார்கள்.




நிகழ்வு காலையில், தூத்துக்குடி படுகொலைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்துடனும் , கையெழுத்து இயக்கத்துடனும் துவங்கியது. பின்பு நிமிர்வு குழுவினரின் அதிரும்  பறை இசையுடன் ஆரம்பமானது.



பொள்ளாச்சி இலக்கிய வட்டப் படைப்பாளர்கள் க.அம்சப்ரியா, சோலைமாயவன், பொள்ளாச்சி அபி, ச.ப்ரியா, வே.கோகிலா, கோவை சசிக்குமார், கீதாப்ரகாஷ் உள்ளிட்ட கோவையின் பல்வேறு எழுத்து ஆளுமைகளுக்கும் சிறப்பு செய்யப்பட்டது








கவிஞர் முத்துநிலவன் அவர்களின் சிறப்புரை , நிகழ்வின் முத்தாய்ப்பு உரை.

பின்பும் கலை நிகழ்வுகளும் பல்வேறு நிகழ்வுகளும் அந்த நாளை நிறைத்தன.
அறிமுகப் படைப்பாளர் முதற்கொண்டு மூத்த படைப்பாளர்கள் வரையிலும் ஒருவர் விடாது அனைவரையும் த.மு.எ.க.ச சிறப்பு செய்தது. தொடர் செயல்பாடுகளின் மூலம் த.மு.எ.க.ச தனித்த இடத்தில் எப்போதும் உயர்ந்து நிற்கிறது.