வெள்ளி, 30 மார்ச், 2018

உலகெங்கும் இட்லிகள்

நேற்று ( 30.03.2018 ) உலக இட்லி தினம் நேற்று இட்லியைப் பற்றி எழுதத் துவங்கி வேலைப் பளுவால் விடிந்து இன்றாகிவிட்டது … அதனாலென்ன தினமும் இட்லி சாப்பிடுவர்களுக்கு தினம் தினமே இட்லி தினம் தான் …


இட்லி நமது பாரம்பரிய உணவு … உலகம் முழுதும் இருக்கும் உணவு விரும்பிகளின் பட்டியலில் நிச்சயம் இட்லி இருக்கும். இந்திய வரைபடமே சிலருக்கு ஒரு பெரிய இட்லியாகத் தெரியக்கூடும்.
நம் எல்லோரின் வாழ்விலும் இட்லிகள் உண்டு. சிலருக்கு இட்லி ஆத்திகத்தைப் போல சிறு வயதில் விரும்பியோ விரும்பாமலோ அதுவே ஊட்டப்படும், வளர்ந்து விட்ட பின்பு அதன் மீது ஒரு வெறுப்பு வந்துவிடும், முதுமை நெருங்க நெருங்க நமது உடல்நலத்தின் மீது சந்தேகம் வரத்துவங்கியதும் அது நமது தவிர்க்க முடியாத துணையாகிவிடும்…

இட்லி தென்னிந்தியாவின் , தமிழகத்தின் உணவு என்று இப்போது நம்பப்பட்டாலும் அது இந்தோனேஷியாவில் இருந்து வந்த உணவு என்று சில வரலாற்றுத் தகவல்களும் உண்டு. இட்லியின் பெயர்க்காரணம் இட்டளி என்றும் இட்டரி என்றும் இட்டவித்து அளி என்று இருந்து இட்லியாக மருவியதாக கிடைக்கப்படுகின்றன.


தினமும் இட்லிகள் மலிவாகக் கிடைக்கிற இந்தக் காலம் போலல்லாமல் அந்தக் காலம் இட்லிகள் அபூர்வமான காலம். சிறுவயதில் தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களின் காலை உணவாகத்தான் இட்லி செய்வார்கள். ஆகவே இட்லி செய்கிற நாட்களே திருவிழாவாக இருக்கும் என நம்பலாம். அல்லது உறவினர்கள் வருகை என்றால் , மூலக்கடை அண்ணாச்சியிடம் சரக்குகள் கடன் வாங்கியாவது அடுப்பில் ஆவி பறக்க இட்லிகள் அவிக்கப்படும். அப்போதெல்லாம் ரேசன் அரிசியில் மாவரைத்து, ரேசன் வேட்டியை வெட்டி பாத்திரத்தில் பரப்பிச் செய்வதால் அது ரேசன் இட்லியாகத்தான் பார்க்கப்பட்டது எங்களுக்கு.
மதுரை இட்லி, செட்டிநாடு இட்லி, கர்நாடகா இட்லி,ராம்சேரி இட்லி என்று ஒவ்வொரு ஊரிலும் தனிச்சிறப்பு மிக்க இட்லிகள் தயாரானாலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இட்லி என்றதும் குஷ்பு இட்லி என்ற நினைவு வரும்படி அபத்த வரலாற்றையும் தமிழன் எழுதி வைத்தது தான் வேடிக்கையாகிவிட்டது.
இட்லி நமது உணவு அடையாளமாக மாறிப்போன பின் , அவற்றுக்குக் கூடுதல் மதிப்பு கிடைத்துவிட்டது. உலகெங்கும் தமிழர்கள் வியாபித்தும் வியாபாரித்தும் இருக்கும் காரணத்தினால் உலகின் அநேகப் பகுதிகளிலும் இப்போது இட்லிகள் அவிக்கப்படுகின்றன, ருசிக்கப்படுகின்றன , சிலாகிக்கப் படுகின்றன

இட்லியை அரசியல் குறியீடாக்கி நன்கு வேகவைத்து சுடச் சுடப் பரிமாறப்பட்ட ஒரு அற்புதமான கவிதை தோழர் செ.இளங்கோவன் அவர்களது கவிதை..
இட்லிகளின்  நிகழ்காலம்

இட்லிகள் மலிவானவை
உலக அளவில் விரைவாக அழிந்துவரும்
உணவு வரிசையில் இட்லிகள் உள்ளன
அவற்றுக்குத் தாம் இட்லிகள்
அறிந்துணர்வு எப்போதும் இருந்ததில்லை

அடுத்தவன் வயிற்றில் அடித்துப்
பிழைக்க அவற்றுக்குத் தெரியாது
ரொட்டி, சப்பாத்தி , கோங்குரா சட்னி, 
தேங்காய் புட்டு,
எல்லாவற்றுக்கும் இட்லிகளைக் கண்டால் 
இளக்காரம்.
அது குறித்து இட்லிகளுக்கும் கவலையில்லை.

பசித்த வயிறுகள் தேடி
தவ ஓட்டம் ஓடிச் செல்வதே 
இட்லிகளின் வரலாறு

அண்டார்டிகா தவிர 
அனைத்துக் கண்டங்களிலும்
இப்போது இட்லிகள் கிடைக்கின்றன

தற்காலிகப் பானைகளில் உருவாகி
தமைச் செரிக்கும் நொதிப்பைகள் தேடிச் சென்று
அடைக்கலமாகி உள்ளாற்றலழிந்து
தன்னை விழுங்குபவனுக்கே
உயிராற்றல் வழங்கி
மலமாய் மிஞ்சுதலே அவற்றின் வாழ்வு.

இட்லிகள் வெதுவெதுப்பானவை
என்று கவிஞர் நா.முத்துக்குமார் 
சொன்னது பொய்.
இட்லிகள் பனிப்பாறைகளைப் போன்றவை
இட்லிகள் ஆழிசூழ் உலகனைய ஆற்றல்
நிரம்பியவை
ஒரே குறை
கோடிக்கணக்கில் வெந்துகொண்டிருக்கும்
இட்லிகளுக்கு ஒரு தேசமில்லை

இந்தக் கவிதை அவரது ஆறெழுத்து மந்திரம் எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்று பலராலும் வெகுவாக ரசிக்கப்பட்ட கவிதை..

இட்லியைப் பற்றிய இன்னுமொரு பேராச்சர்யம் எனக்கு என்னவெனில், சிறுவயது முதல் இன்று வரை இட்லியை உப்புமாவின் இன்னொரு முகம் போல எண்ணி வெறுக்கும் ஒருவனை இட்லியைப் பற்றியே எழுதச் செயத இட்லியை நினைத்துத்தான் ….

டாட்





வியாழன், 29 மார்ச், 2018

நூல் விமர்சனங்களுக்காக ஒரு இணைய தளம்

கொலுசு குழுமத்திலிருந்து நூல் விமர்சனங்களுக்காகவே பிரத்யேகமான தளமாக விமர்சி என்ற தளத்தில் ஒவ்வொரு மாதமும் சில நூல் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறோம் ..

புதிதாக நிறைய நூல்கள் வெளிவருகின்றன, அவற்றையெல்லாம் வாசகர்களிடம் அறிமுகம் செய்யவும், படைப்பாளர்களுக்கு தங்களது நூல்களைப் பற்றிய ஒரு மதிப்புரையை வழங்கிடவும் இந்த தளம் துவங்கப்பட்டது ..

இந்த மாதம் விமர்சியில் மூன்று நூல்களுக்கான மதிப்புரைகள் இடம்பெற்றுள்ளன 

கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமார் அவர்கள் எழுதிய " தூரிகையின் பிஞ்சுப் பாதங்கள் " கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க


http://www.vimarsi.com/vimarsi/z_download.php?id=25


கவிஞர் சாமி கிரிஷ் அவர்கள் எழுதிய " துருவேறிய தூரிகைகள் " கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க


http://vimarsi.com/vimarsi/z_download.php?id=26


கவிஞர் முருகன் சுந்தரபாண்டியன் அவர்கள் எழுதிய " இலைக்கு உதிரும் நிலம் " கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க

http://vimarsi.com/vimarsi/z_download.php?id=24


விமர்சிக்கு நூல்கள் அனுப்ப :




திங்கள், 26 மார்ச், 2018

படைப்பாளர்களுக்குப் பாராட்டு விழா

பொள்ளாச்சியில் 25.03.18 ஞாயிறு அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது.

நிகழ்வில் பொள்ளாச்சியில் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு நூல் வெளியிட்ட படைப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பொள்ளாச்சியில் 22 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த நூல்கள் குறித்த ஆய்வுரையை எழுத்தாளர் சூர்யா அவர்கள் பேசினார்.

எழுத்தாளர் கரீம், கவிஞர் க.அம்சப்ரியா, திரு.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக நூல்கள் வெளியிட்ட படைப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

நான் நினைவுப்பரிசைப் பெற்ற போது ...



பொள்ளாச்சி த.மு.எ.க.ச வின் தலைவராக எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களும் , செயலாளராக சூர்யபிரகாஷ் அவர்களும், பொருளாளராக கவிஞர் கீதாப்ரகாஷ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்....

ஒவ்வொரு ஊருக்கும், கிராமங்களுக்கும் , நகரங்களுக்கும் இலக்கிய அமைப்புகளின் தேவை அதிக அளவில் இருக்கிறது... தொடர்ந்து அவை செயல்படுவதன் மூலமாக, வாசிப்பையும் எழுத்தையும் பேச்சையும் இவற்றினூடாக அறத்தையும் மனித மனங்களில் வேரூன்றச் செய்யலாம்...


செவ்வாய், 20 மார்ச், 2018

ஒரு ஊர்ல ஒரு கதை இருந்துச்சாம்



ஒரு கதை சொல்லு என்று கேட்கவும்
ஒரு கதை சொல்லவா என்று சொல்லவும்
ஆட்களற்ற நகரமொன்றில்
சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது
ஒரு குட்டிக் கதை.
குட்டிக் கதையென்றால் மிகக் குட்டி அது.
முன்பெல்லாம் அந்தக் கதையைக் கேட்க
நிறையக் காதுகள் இருந்தன
வயல்வெளிகளும், மரம் செடிகளும்
மெல்ல அழிக்கப்பட்டு 
நகரமாகிவிட்டபின்பு 
அது தனித்துவிடப்பட்டது
அந்தக் கதையின் விலங்குகள் காணாமல் போய்விட்டன
அந்தக் கதையின் பறவைகள் எங்கோ பறந்து போய்விட்டன
கணினியும் தொலைக்காட்சியும் அலைபேசிகளும்
நிறைந்து விட்ட குழந்தைகளின் வாழ்க்கைக்குள்
இப்போதெல்லாம் அந்தக் கதை
நுழைய முடிவதேயில்லை.
அந்தக் கதையை வாரியணைக்க நெருங்கும்
குழந்தைகள் மிரட்டப் படுகிறார்கள்
அந்தக் கதையைச் சொல்ல முயலும்
கிழவிகள் பரிகசிக்கப் படுகிறார்கள்

நகரத்தின் நெரிசல்களிடம்
சிக்கித் தவித்து
யாருமேயில்லாத
ஒரு அலைபேசி கோபுரத்தின்
உச்சியில் அமர்ந்துகொண்ட அந்தக் கதை
இப்போது யாருக்குமில்லாமல்
தனது கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது

" ஒரே ஒரு ஊர்ல ...."

# மார்ச் 20 - சர்வதேச கதை சொல்லல் நாள்

வியாழன், 8 மார்ச், 2018

சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்





ஒரு பாதி நிலம்
ஒரு பாதி நீர்
ஒரு பாதி ஆகாயம்
ஒரு பாதி காற்று 
ஒரு பாதி நெருப்பு  என
நம்மின் பஞ்ச பூதங்களிலும்
சரி பாதி அவள்

அவளின் இயக்குதலில் 
அவளைப் பற்றிச் சுழன்றபடியிருக்கிறது நம் பூமி

எப்போதாவது அவளுக்கு ஒரு துணை தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு விரல் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு தோள் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு சொல் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு 

அப்போது மட்டும் அவளுக்கான நம்மைக் கொடுப்போம்
மற்றபடி அவள்
தனியள்

மகளிர் தின வாழ்த்துகள்






திங்கள், 5 மார்ச், 2018

அப்பாவின் நினைவுக்கு ஆண்டு ஒன்று

காடு மேடுகளிலெல்லாம்
தோளிலும் முதுகிலும் 
தூக்கிச் சுமந்த
அப்பாவை
நினைவுகளில் மட்டுமே
சுமந்தலையும் படி
விதி செய்து
ஆண்டொன்றும் ஆகிப்போனது


___________________

அம்மாவின் கருவறையிலிருந்து
வெளியேறிய கணம் முதல்
கோர்த்துக் கொண்டு உடனழைத்து வந்த
விரல்களை திடுதிப்பென்று
விடுவித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் அப்பா.

பணமதிப்பிழப்பு வரிவிதிப்பு
எரிபொருள் பேருந்து கட்டணம் ஏற்றம்
என என் பொடனியில் அடித்தபடியிருக்கிறது அரசு.
சகல சூழல்களிலும் உடனிருப்பேன் உடனிருப்பேன்
என்றவள்
என்றாவதொருநாள் தான் உண்மையில் இருக்கிறாள்
முதுகில் தடவிக்கொடுத்தபடியே இருந்த
கைகள்
இத்தனை காலம் வளர்த்துக்கொண்ட
நகங்களால் ஆழக்கீறி குருதிபார்க்கின்றன
ஏன் கவிதை எழுதவில்லை
எனக் கேட்டபடியிருக்கும் குரல்களுக்கான
பதிலை
எப்போதும் உச்ச வெப்பநிலையில் கொதிகொதித்தபடியே இருக்கும்
மனதின் அடியாழத்துக்குக் கடத்திவிடுகிறேன்
எல்லாவற்றிலிருந்தும் கவிதைகளின் வழியே
தப்பியோடிக் கொண்டிருந்தவன்
எல்லாவற்றிடமும் கவிதைகளின் வழியே
சிக்கிக் கொள்கிறேன்
இப்போதெல்லாம்

____________________

அப்பாவுக்கு மனிதர்களைத் தெரிந்திருந்தது யாரை விடவும்.
எங்களின் கற்பிதங்களைக் கலைத்து
யார் யார் என்னென்ன முகமூடிகளுடன் வருகிறார்கள் என்பதைத் தெளிவாக்குவார்.
அப்பாவுக்கு கடவுள்களைப் பற்றியும்
தெரிந்திருந்தது.
எந்தெந்தக் கோவிலில் எதெதற்குப் பரிகாரம்
எந்தக் கடவுளுக்கு என்ன சிறப்பு என அடுக்குவார்.
விலங்கினங்களையும் அறிந்தவர்
ஆடு எந்த நாளின் எந்நேரத்தில் குட்டி ஈனும்
மாட்டின் ஈனக் குரல் எதன் பொருட்டு
சுவர்ப்பல்லி ஏன் கத்துகிறது
காகம் ஏன் கரைகிறது என்பதாக.
மரம் செடி கொடிகளையும் இப்படித்தான்
தெரிந்து வைத்திருந்தார்.
எங்களையும் முழு முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார்
எல்லாரையும் போலவே
எல்லாம் தெரிந்த அப்பாவுக்கு
எல்லாரையும் போலவே
தனது மரணம் தெரிந்திருக்கவில்லை
ஆகவே தான் அந்தக் கருப்பு இரவிலும்
கேட்டபடியிருந்தார்
" ஏம்பா, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கள்ல ?"