செவ்வாய், 20 மார்ச், 2018

ஒரு ஊர்ல ஒரு கதை இருந்துச்சாம்



ஒரு கதை சொல்லு என்று கேட்கவும்
ஒரு கதை சொல்லவா என்று சொல்லவும்
ஆட்களற்ற நகரமொன்றில்
சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது
ஒரு குட்டிக் கதை.
குட்டிக் கதையென்றால் மிகக் குட்டி அது.
முன்பெல்லாம் அந்தக் கதையைக் கேட்க
நிறையக் காதுகள் இருந்தன
வயல்வெளிகளும், மரம் செடிகளும்
மெல்ல அழிக்கப்பட்டு 
நகரமாகிவிட்டபின்பு 
அது தனித்துவிடப்பட்டது
அந்தக் கதையின் விலங்குகள் காணாமல் போய்விட்டன
அந்தக் கதையின் பறவைகள் எங்கோ பறந்து போய்விட்டன
கணினியும் தொலைக்காட்சியும் அலைபேசிகளும்
நிறைந்து விட்ட குழந்தைகளின் வாழ்க்கைக்குள்
இப்போதெல்லாம் அந்தக் கதை
நுழைய முடிவதேயில்லை.
அந்தக் கதையை வாரியணைக்க நெருங்கும்
குழந்தைகள் மிரட்டப் படுகிறார்கள்
அந்தக் கதையைச் சொல்ல முயலும்
கிழவிகள் பரிகசிக்கப் படுகிறார்கள்

நகரத்தின் நெரிசல்களிடம்
சிக்கித் தவித்து
யாருமேயில்லாத
ஒரு அலைபேசி கோபுரத்தின்
உச்சியில் அமர்ந்துகொண்ட அந்தக் கதை
இப்போது யாருக்குமில்லாமல்
தனது கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது

" ஒரே ஒரு ஊர்ல ...."

# மார்ச் 20 - சர்வதேச கதை சொல்லல் நாள்

2 கருத்துகள்: