புதன், 21 ஆகஸ்ட், 2019

வண்ணதாசனை வந்தடைதல்

வண்ணதாசனை வந்தடைதல்




கவிதை மீது மயக்கமாகி நிறைய எழுதியும் கிடைத்ததை மட்டும் எப்போதாவது வாசித்துக் கொண்டும் இருந்த பால்யத்தில் வாசிக்கக் கிடைத்த கவிதைகளில் வண்ணதாசன் இருந்திருக்கவில்லை.
கவியரங்கக் கவிதைகள், காதல் கவிதைகள், வார இதழின் நான்கு வரிக் கவிதைகள் என எங்கெங்கோ சுற்றித் திரிந்து கொஞ்சம் நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு கொண்டு வாசிக்கத் துவங்கும் போது தான் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கும் வசதியும் வந்தது.

அப்போதும் கவிதைகளை அடையாளம் காட்டுபவர்கள் யாரும் இல்லாத போதும் மிகத் தாமதமாக கல்யாண்ஜி என்ற பெயரை இந்தக் கவிதையில் கண்டு கொண்டேன்

சைக்கிளில் வந்த
தக்காளிக்கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளில்
பழங்கள்.
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்.
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை.

இந்தக் கவிதைக்கு முன்னும் பின்னும் நீண்டு கிடக்கும் கல்யாண்ஜியின் கவிதைகளைத் தேடி வாசித்த பின்பு இது ஒரு அற்புத மரம் எனப் புலப்பட்டது. அன்பின் மலர்களை பற்பல வண்ணங்களில் முகிழ்த்துக் கொண்டேயிருக்கும் இந்த மரத்தின் நிழல் எல்லோருக்குமானது...

கல்யாண்ஜியையே இத்துணை தாமதமாக வந்தடைந்தவன் அதனினும் தாமதமாகவே வந்து சேர்ந்தேன் வண்ணதாசனிடம் .. வண்ணதாசனின் கவிதைகளை, கல்யாண்ஜியின் கதைகளை வாசிக்குமளவுக்கு இப்போது இருவரின் சொற்களுக்கும் நெருக்கமாகிவிட்டேன்.

சிறுவயதில் கதைகளை வாசிக்கும் போது மனதுக்குள் அப்பத்தாவின் குரலிலேயே அந்தக் கதைகள் ஒலிக்கும்...

அவரது கவிதைகளின் நெகிழ்வை வாசிக்க வாய்த்த தனிமைத் தருணங்களில் அவருக்கு ஒரு குரலை நான் வரைந்து கொண்டேன். அந்தக் குரலில் தான் அவரது கவிதைகள் என் மனதுக்குள் வாசிக்கப்படும் ...
இதுவே பழக்கமாகிப் பின்பு ...
நல்ல கவிதைகளை வாசிக்கும் கணமெல்லாம் வண்ணதாசனின் குரலில் அவை ஒலித்துக் கொண்டிருக்கின்றன இப்போதெல்லாம்.

அவர் பிறந்த இந்த நாளில் அவரது கரங்களைப் பற்றிக்கொள்கிறேன்.. அவரது கவிதைகளைப் பற்றிக் கொள்கிறேன்... அவரது குரலையும்..

நெடுவாழ்வு வாழ ப்ரார்த்தனைகள் ஐயா...

வேறு ஒன்றும் செய்ய
வேண்டாம்.
காம்பை விரல்களால்
கவ்வி
எதாவது ஒரு பூவை
ஏந்திக் கொண்டிருங்கள்
போதும்

- கல்யாண்ஜி

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா சார் ?

மாலை நேரத்து வானம் மேகங்களைத் திரட்டி குவித்து வைத்திருந்தது. வழக்கத்துக்கு முன்பாகவே இருட்டி விட்டது பொழுது. எப்போது வேண்டுமானாலும் வானம் பொத்துக்கொண்டு ஊற்ற  ஆரம்பிக்காலாம். வேலை முடிந்து வேகமாக ஓடிவந்து பேருந்து  ஏறினேன். சில இருக்கைகள் காலியாக இருக்க ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அருகில் ஏற்கனவே அமர்ந்து இருந்தவருக்கு என்னை விடவும் இரண்டு வயது குறைச்சலாக இருக்கலாம். கிராமத்து இளைஞனைப் போன்ற வெள்ளந்தியான தோற்றம் ( ஆம், அதை விவரிக்கத் தேவையில்லை, இந்த ஒரு வார்த்தையில் நீங்கள் யூகித்துக் கொள்ளலாம் ). நடத்துனரிடம் ரெண்டு டிக்கட் என்று கேட்டார் அருகில் இருந்தவர், கேட்டுவிட்டு உடனே இல்லை ஒன்னு குடுங்க என்று ஒரு டிக்கட் மட்டும் வாங்கிக் கொண்டார். அலைபேசியைப் பார்ப்பதும் வெளியில் பார்ப்பதுமாக ஒரு மாதிரி அவசரகதியிலேயே இருந்தார். நடத்துனர் வந்து போன பிறகு நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கியிருந்தேன். மழைக்கு முன்பான பரபரப்பில் சாலையும் மனிதர்களும் வாகனங்களும் வேகம் காட்டிக் கொண்டிருந்தனர்.
அலைபேசி ஒலிக்க எடுத்து ஏதோ மெதுவாகக் கொஞ்ச நேரம் பேசியவர்; சுற்றிலும் ஆட்கள் இருப்பதை, அது பேருந்து என்பதை எல்லாம் மறந்துவிட்டு  சற்றைக்கெல்லாம் சத்தமாகப் பேசத் தொடங்கிவிட்டார் " மச்சான், ஒன்னும் இல்லை. நான் பொள்ளாச்சி போயிட்டு இருக்கேன். பஸ் ஏறிட்டேன். காலைல முதல் பஸ்ஸ புடிச்சு வந்துடுவேன் . பாத்துக்க டா " என்று சொல்லும் போதே உடைந்தவர் தேம்பி அழ ஆரம்பித்தார். மறுமுனையில் இருப்பவர் ஏதோ சமாதானம் சொல்லியிருக்கக் கூடும். “ சரிடா, சரிடா பஸ்ல இருக்கேன். நான் பாத்துக்கறேன். நீ பாத்து இரு " என்று அலைபேசியைத் துண்டித்துவிட்டு அதன் தொடு திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் நீர் இன்னும் கோர்த்து திரண்டிருந்தது.
என்ன என்று கேட்கலாமா வேண்டாமா என்று அவ்வளவு யோசனையும் தயக்கமுமாக இருந்தது. வெளியூர்க்காரர் மாதிரித் தெரிந்தார். நாமே கேட்காமல் விட்டால் யார் தான் அவருக்கு ஆதரவாகக் கேட்பது என்று தோன்றியது. அவரது தோளைத் தொட்டழைத்தேன் " சார், என்ன ஆச்சு. ஏன் அழுதீங்க " என்று நேரடியாகக் கேட்டுவிட்டேன். அவர் அதை எதிர்பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்கள் அவர் மட்டுமே பேசினார் " சார் ஃபிரெண்டுக்கு உடம்பு சரியில்ல சார்,  வேலை செய்ய செய்ய அப்படியே மயங்கி விழுந்துட்டான் சார். அவன் எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட் சார், அவனுக்கும் அப்பா இல்லை சார். ஆஸ்பத்திரில சேர்த்ததும் டாக்டர் குறைந்த ரத்த அழுத்தம் , ராத்திரி ஐ.சி.யூ ல இருக்கட்டும் னு சொல்லிட்டாங்க சார். ரொம்ப பாவம் சார் , அதான் தாங்கல " என்றார்.
 எனக்கும் கண்கள் கலங்கி விட்டன, உடன் பணிபுரியும் நண்பனுக்காக இவ்வளவு துடிக்கிற நண்பன் உண்மையில் வரம் தானே. மேலும் பேசியதிலிருந்து அவர் ஒரு தனியார் குறுந்தொழில் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிகிறார் என்று தெரிந்தது. “ சார், இதுக்கு ஏன் அழறீங்க. லோ பி.பி எல்லாம் சாதாரணம் ஒன்னும் ஆகாது. கவலை படாதீங்க. செலவுக்கு பணம் எதும் வேணுமா " என்று கேட்டேன்.
 இல்ல சார், நேத்து ஓனரே பணம் கட்டிட்டாரு ஆஸ்பத்திரிக்கு. மேல் செலவுக்கு பணம் வேணும், பொள்ளாச்சி ல சித்தப்பா வீடு அருக்கு அங்க பணம் குடுத்து வச்சிருக்கேன். அதை வாங்க தான் போயிட்டு இருக்கேன் ; ஒன்னும் பிரச்சினை இல்லை. பணம் எல்லாம் வேண்டாம் சார் " என்றார்."நேத்து அவன் கண்ணெல்லாம் சொருகி விழுந்துட்டான் சார் அதான் கொஞ்சம் பதட்டமாயிடுச்சு.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா சார் ? “ என்றார்.
அப்போது இருந்த மனநிலையில் தொண்டை வரை வெளியில் வரப்பார்த்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு “ இருக்குங்க சார், சொல்லுங்க" என்றேன் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று யூகித்தபடி.. “ கடவுள் நம்பிக்கை இருந்தா, முடிஞ்சா அவனுக்காக வேண்டிக்கோங்க சார், நாளைக்கு நல்லாகி வந்துடனும் " என்றார். “ கண்டிப்பா வேண்டிக்கிறேன். நல்லாயிடுவார் தைரியமா இருங்க " என்று சொல்லிவிட்டு ஜன்னலைப் பார்க்கத் துவங்கியிருந்தேன். மழை லேசாகத் தூற ஆரம்பித்தது. எனக்கு முன்னாலேயே பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவர். கீழே இறங்கியதும் திரும்பி நான் இறங்கும் வரைக்கும்  காத்திருந்து கையசைத்து போய் வருகிறேன் சார் என்று சொல்லிவிட்டு சென்றார். ஒரே ஊருக்கு இரண்டு பேரும் வேறு வேறு பேருந்தில் ஏறிக் கிளம்பிவிட்டோம்.



x

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

தீராத விளையாட்டுப் பிள்ளை

மகள் பாரதியின் இந்தி சிறப்பு வகுப்பு ஆசிரியை ஆயிஷா புதிதாக மழலையர் விளையாட்டுப் பள்ளி ஆரம்பித்துள்ளார். பள்ளியின் அறிமுகத்துக்காக குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் பாரதியை பரதநாட்டியம் ஆட முடியுமா என்று கேட்டிருந்தார். பாரதி மாமா மகள் தமிழியும் உடன் ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தங்களது நடன ஆசிரியை கவிஞர் கீதா ப்ரகாஷ் அவர்களின் பயிற்சியோடு சிறப்பாக நடனமாடினர் கடந்த ஞாயிறு நடைபெற்றது நிகழ்வு.. இது முன் தகவல்




முதல் நிகழ்வாகவே ஒரு வந்தனம் மற்றும் பாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளை பாடல் என இவர்களது நடனம் சிறப்பாக முடிந்தது ஆனால் முழு நிகழ்வையும் இருந்து பார்த்தோம்.

குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த எதை வேண்டுமானாலும் மேடையில் செய்யலாம். அவர்கள் அனைவருக்கும் பரிசு என்கிற சுதந்திரம் எனக்குப் பிடித்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்துக்கு சுமார் 20 மழலைகள் மேடையேறினர்.

ஒரு குழந்தை திருக்குறள் சொன்னது, ஒரு குழந்தை ஜானி ஜானி எஸ் பாப்பா சொன்னது, ஒரு குழந்தை வழக்கம் போல தனது அம்மாவுடன் ரெய்ன் ரெய்ன் கோ எவே சொன்னது…

ஒரு குழந்தை வந்தது.. எல்லோருக்கும் வணக்கம் என்றது எல்லோருக்கும் வணக்கம் என்றது மீண்டும் எல்லோருக்கும் வணக்கம் என்றது பிறகு மீண்டும் எல்லோருக்கும் வணக்கம் என்றது.. அதற்குப் பிறகு என்ன சொல்வது என்று மறந்து விட்டது போலும் , மேடைக்குக் கீழே இருந்து அம்மா ஏதேதோ சைகையில் காட்டினார்.. ம்ஹூம் மறந்தே போச். சிரித்துக் கொண்டே இறங்கிக் கொண்டது மேடையிலிருந்து.

ஒரு குழந்தை தனது அப்பா சொல்லச் சொல்ல திருப்பிச் சொன்னது. ஒரு குழந்தை தனது அம்மா சொன்னதற்கெல்லாம் மலங்க மலங்க விழித்துக் கொண்டே நின்று விட்டு இறங்கிவிட்டது. ஒரு குழந்தைக்கு அழகாக அலங்கரித்து அட்டையில் கேக் போன்ற உருவத்தைச் செய்து அனுப்பி இருந்தார்கள், அது வந்து அதை வெட்டுவது போல பாவித்து விட்டு ஹேப்பி பர்த்டே டூ யூ என்று பாடிவிட்டுச் சென்றது. கிருஷ்ணர் வேடம் போட்ட ஒரு குழந்தை பானையுடன் வந்தது பானையில் ஐஸ்கிரீம் போட்டு அனுப்பி இருப்பார்கள் போல, வந்து மேடையில் அமர்ந்து அழகாக வாயெல்லாம் ஆக்கிக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு சென்றது ; கேட்பவர்களுக்கெல்லாம் சிறு கை அழாவிய கூழென ஒரு பிடி கூழ்மத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றது. ஒரே கை தட்டல் குழந்தைக்கு…





மிகப் பெரிய நிகழ்வென்றோ, முழு நிறைவாக குறைபாடுகளற்ற ஒரு நிகழ்வென்றோ கண்கள் ஆராயவில்லை.. ஆனால் உற்சாகத்துக்குக் குறைவில்லை… குழந்தைகள் எது செய்தாலும் அழகு.. எதுவுமே செய்யாமலிருந்தாலும் அழகு ..

மனம் என்ன நிலையில் இருந்தாலும் , அத்துணை இறுக்கங்களின் முடிச்சுகளையும் அவிழ்த்துவிட்டு இலகுவாக்கிட வேறு எதையும் விட ஒரு குழந்தை போதுமானதாக இருக்கிறது…

குழந்தைகளைப் பார்த்து ரசித்தபடிக் கழிந்த அந்தப் பொழுதில் மிகச் சாதாரணமான நகைச்சுவைக்கும் மிக மகிழ்வாகச் சிரித்தேன், மிகச் சின்ன அசைவுக்கும் பெரு உற்சாகத்தோடு கை தட்டினேன்,

குழந்தைகள் கலை இலக்கியக் கொண்டாட்டம் என பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் துவங்கிய முன்னெடுப்பு எவ்வளவு முக்கியம் என்று புரிந்தது. குழந்தைகளின் உலகத்துக்குள் பெரிய மனிதர்களால் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடிவதில்லை. அவர்களின் மகிழ்ச்சியை அவர்களின் கொண்டாட்டத்தை அவர்களின் குழந்தைமையைத் தக்க வைக்க குழந்தைகள் கலைக் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அமைப்பும் செய்து தான் ஆக வேண்டும்..

கதைகளின் வழியாக, பாடலின் வழியாக நாம் புத்தகக் கல்வியைக் காட்டிலும் அதிகம் சொல்லித் தந்துவிட முடியும் என நம்புகிறேன்..