வெள்ளி, 11 செப்டம்பர், 2015

குடி யாவற்றையும் கெடுக்கும்

கொஞ்சநாளாக . மதுவை ஒழிப்போம், பூரண மதுவிலக்கு என்ற பேச்சையெல்லாம் நம் ஊரில் கேட்க முடிகிறது. கேட்பதற்கே சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சசி பெருமாள் அய்யாவின் மரணத்துக்குப் பின் நிறையப் போராட்டங்கள், எதிர்க்குரல்கள். ஆனால் அரசு இது எதுக்குமே செவிமடுக்கவில்லை. முதல் அமைச்சர் ஒரு சிறு அறிக்கை கூட ஆறுதலுக்காகக் கூட வெளியிடவில்லை. என்றால், இந்த அரசும் அதிகாரிகளும் மக்களை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் மக்களின் மேல் நலன் கொண்டவர்களைத்தான் நாம் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கிறோமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதல்லவா. இந்தக் கட்சியை விட்டால் அந்தக் கட்சி. பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. நமக்கு விதிக்கப்பட்டது இவ்வளவுதானா. பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்பப்பட்ட விஜயகாந்த் நம்பிக்கையிழக்கும்படியாகவே நடந்து கொள்கிறார். ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதி மாதிரி பேச வேண்டியதில்லை, ஒரு பக்குவப்பட்ட மனிதனாக, அனுபவசாலியாகவாவது பேசலாம். ப்ச்...

மது ஒரு உற்சாக பானம், அது சமுதாயத்தில் அத்தனை பெரிய இழப்புகளையும் மாற்றங்களையும் கொண்டு வந்து விடுமா என்று கேட்பவர்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணிடம் கேட்டுப் பார்க்கலாம். மதுவால் அழிந்த ஒரு மிகப்பெரிய வரலாறு தமிழ்நாடு முழுக்க இருக்கும்.

நான் வயதிலும், அனுபவத்திலும் மிகச் சிறியவன். மதுவுடன் எனக்கு நேரடி அனுபவம் இல்லை. ஆனால், நான் நேரில் கண்டு, கேட்டு, உணர்ந்த இழப்புகளே ஏராளம் ஏராளம்.

அரசு வேலையில் இருந்தும் தினமும் மது குடித்து, ஊரெல்லாம் கடன்பட்டு, வேலை பறி போய், பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளை வசதி குறைவான அரசுப் பள்ளிக்கு இடையில் மாற்றி கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் ஒரு தூரத்து அண்ணன் இருக்கிறார் எனக்கு, வீட்டு வாடகையைக் கூட ஒழுங்காகக் கொடுக்க முடியாமல் வீடில்லாமல் இப்போது எங்களது பூர்விக வீட்டில் தான் குடியிருக்கிறார்.

தினமும் 900 ரூபாய் சம்பளம் எனக்குத் தெரிந்த கொத்தனார் ஒருவருக்கு, அதுவும் 3 வருடங்களுக்கு முன்பே நான் பார்த்தது. அதில், 200 ரூபாய்க்கு சரக்கு வாங்குவதாகச் சொல்வார், சரக்குக்கு தினமும் கோழி, மீன் என்று எதையாவது வாங்குவார் மொத்தச் செலவு 500 ஆகிவிடும். மிச்சமிருக்கும் பணத்தை அவ்வப்போது ஊரிலிருக்கும் மனைவி பிள்ளைகளுக்குக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வருவார். நான் நினைத்துக் கொள்வேன் இவருக்கு குடிப்பழக்கம் மட்டும் இல்லையென்றால் எப்போதோ இவர் லட்சாதிபதியாகியிருக்கலாம் என்று. இந்த மாதிரி உழைப்பாளர்களின் உழைத்த காசெல்லாம் தான் டாஸ்மாக்கில் மணக்கிறது.


என்னுடன் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு படித்த நண்பன் அவன். ரொம்ப நாள் போராடி ஒரு நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல மனைவி என எல்லாமே அமைத்துக் கொண்டான். குடிப்பழக்கத்தை மட்டும் விடவில்லை. நண்பர்களெல்லாம் ஒரு விநாயகர் சதுர்த்தி நன்னாளில் குடித்துவிட்டு சிலை கரைக்கப் போன ஊர்வலத்தில், டாடா சுமோவில் நண்பர்களுடன் போனவன் , ஓட்டியவனும் குடித்திருந்ததால் பெரிய விபத்தில் மாட்டி உடல் சிதைந்து செத்துப்போனான். அவனது மனைவியும் சிறு பிள்ளைகளும் அனாதையாக இருக்கிறார்கள்.

தோழி ஒருத்தி சிறு வயதிலேயே கவிதை, நடனம், நாடகம், பாட்டு என அனைத்துக் கலைகளிலும் தேர்ந்தவர். பெரிய ஆளாக வருவார் என ஊரே எதிர்பார்க்க, ஒரு குடிகார இளைஞனை தெரியாமல் காதலித்து, அவன் கல்லீரல் வெந்து செத்துப்போன பின், ஆறு வயது பெண்பிள்ளையுடன், அவள் அம்மாவுடன் ஒரு மருத்துவமனையில் சொற்ப சம்பளத்துக்கு விழுந்து விழுந்து பெருக்கிக் கொண்டிருக்கிறார்.

தெரிந்தவர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டுவது இப்போது தான். அவர் படிக்கும் போது அவரது லட்சியம் மருத்துவராவது என்று சொல்லித் திரிந்தார். பத்தாம் வகுப்பிலேயே பழகிக் கொண்ட குடிப் பழக்கம் மற்றும் வேறு போதைகளால் பெற்றவர்கள், சொத்து யாவற்றையும் இழந்து ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார் அதுவும் வாடகைக்கு. இன்றும் வரும் வாடகையில் சரி பாதி குடிக்கு.

மிக நெருங்கிய சொந்தம் அவன். மிக நல்லவன். குடி மட்டும் தான் அவன் பழகிய கெட்ட பழக்கம். நண்பர்களுடன் குடித்துக் குடித்து எப்படியோ பத்தாயிரம் கடன் ஆகிவிட்டது. வட்டி கட்ட முடியாமல் அது சில மாதங்களிலேயே பதினைந்தாயிரமாக வளர்ந்துவிட, வீட்டுக்குத் தெரியாமல் இருபதாயிரமாக வேறு பக்கம் கடன் வாங்கி பதினைந்தாயிரத்தைக் கடன் கட்டிவிட்டு மிச்சத்துக்கும் நண்பர்களுடன் குடித்தழித்துவிட்டான். இப்படியாக குடிக்கடன் வளர்ந்து வட்டி குட்டி போட்டு பெரிய சிக்கலில் இருந்தான்.
அங்கங்கு வாங்கிய கடனெல்லாம் மொத்தமாகக் கண்டுபிடித்தோம் ஒரு சுப நாளில். மொத்தக் கடன் தொகை ஒன்றரை லட்சம் ஆகிவிட்டது. யாருக்கும் தெரியாமல், வண்டி, வீட்டுப்பத்திரம், மோதிரம் என பலவற்றை அடமானம் வைத்திருப்பதையும் பிறகுதான் கண்டுபிடித்தோம். அவ்வளவு பணத்தைப் புரட்ட முடியாத குடும்பம். மனைவியின் தாலி, நகைகள் , கடன் என நிறையக் கஷ்டப்பட்டு கந்து வட்டிக்கு வாங்கிய பணத்தை அடைத்தோம். இப்போது எங்களது தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார். இன்னும்கொஞ்சம்காலம் கவனிக்காமல் விட்டிருந்தால் எங்கு போய் முடிந்திருக்கும் என நினைக்கவே கலக்கமாக இருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு பொள்ளாச்சியிலிருந்து வந்து கொண்டிருந்தேன். வேலியோரமாய் ஒருவர் ஆட்டம் போட்டபடிப் போய்க் கொண்டிருந்தார். திடீரென ஆடி ஆடி நடுரோட்டுக்கு வந்து என் வண்டிக்குக் குறுக்கால் விழுந்துவிட்டார். சற்றும் எதிர்பாராமல் நிலை குலைந்து விட்டேன். 100 அடிக்கு வண்டி இழுத்துக் கொண்டு போனதில் உடம்பெல்லாம் காயம். அவருக்கும் ரத்தம் வழிகிறது. ஆனால் எழுந்து தள்ளாடியபடியே நடந்து போய்விட்டார். மருத்துவச் செலவு வண்டிக்கு செலவு பத்தாயிரம் ஆனது.

சாலை விபத்துகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிகிறார்கள். இது தெரிந்த செய்தி தான். ஆராய்ந்து பார்த்தால் அதில் தொள்ளாயிரக் கணக்கானோரின் சாவுக்கு குடி தான் காரணமாயிருக்கும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, குடித்துவிட்டு பாதையில் குறுக்கில் வந்து விடுவது என எத்தனை கேள்விப்படுகிறோம். உடல் பாதிப்படைந்து, விபத்துகளால், நேரடியாக இந்த மது எத்தனை பேரைக் கொல்கிறது..? அது மட்டுமா எத்தனை குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது, எத்தனை குடும்பங்களை தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறது. பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை, போன்ற பல சமூகப் பிரச்சினைகளுக்கும் பின்னணியில் மதுவும் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இப்படியொரு கொடுமையான மதுவை விற்று வரும் வருமானத்தில் தான் மக்களுக்கு நலத்திட்டங்களும் இலவசங்களும் வழங்கப்படுகின்றனவாம். எனில், நாம் இலவசமாக வாங்கி வைத்திருக்கும் பொருட்களிலெல்லாம் எத்தனை பேரின் உயிரும், மானமும் இருக்கிறது பாருங்கள்.

இப்போதெல்லாம் மிக அதிர்ச்சியான செய்திகள் நிறையக் கேள்விப்படுகிறோம். ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் குடித்துவிட்டு வருகிறான். குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான். தனியார் பள்ளி மாணவி குடித்துவிட்டு நடு ரோட்டில் தகராறு செய்கிறாள். குழந்தைக்கெல்லாம் மதுவை ஊற்றிக் கொடுத்து ரகளை செய்கிறார்கள். இப்படி தமிழனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் நீக்கமற்று நிறைந்துவிட்டது குடி.


பூரண மது விலக்கு என்பது சாத்தியம் தானா.? சாத்தியமில்லை என்று நினைத்தால் நாம் குடித்துக் குடித்தே நமது இனத்தை, வரலாறை, வாழ்க்கையை அனைத்தையும் அழித்துவிட வேண்டியதுதான். பூரண மது விலக்கை ஒரே இரவிலெல்லாம் கொண்டு வரச் சொல்லவில்லை. படிப்படியாகச் செயல்படுத்த ஒரு தொலை நோக்குத் திட்டத்தை வகுக்கத்தான் கேட்கிறோம். மதுவால் கிடைப்பது அபரிமிதமான வருமானம் என்றாலும், பல்லாயிரக்கணக்கான உயிர்களை, உணர்வுகளை, குடும்பங்களை அழித்து அப்படி ஒரு வருவாயை எந்த நல்ல அரசும் ஈட்ட நினைக்காது.

மாற்று வழிகளைச் சிந்தித்து செயல்பட நம்வசம் அறிஞர் பெருமக்கள், அனுபவஸ்தர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் இருக்கின்றனர். முதல் படியை மட்டும் எடுத்து வைத்தால் போதும் வெற்றிதான். மது வாழ்வில் அங்கமாகவே இருந்த, கள் விற்பனை சர்வ சாதாரணமாக இருந்த கேரள அரசே முன்மாதிரித் திட்டங்களைச் செயல்படுத்தி படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தி வருவதையும் கண்களால் பார்க்கிறோம்.

சிங்கப்பூர் இளைஞர் ஒருவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், மது விலக்கு நிதி என்ற புது நிதியைத் திரட்டலாம் என ஆலோசனை சொல்கிறார். அவர்களே வெளிநாடு வாழ் தமிழர்களிடம் பல குழுக்களாக இணைந்து நிதி வசூலித்துத் தருவதாகவும் சொல்கிறார்.
என்னைக் கேட்டால், மதுக்கடைகளை மூடி விட்டு, முக்குக்கு முக்கு இருக்கும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தலாம். வருமானத்துக்கு வருமானம், கட்டணக் கொள்ளையிலிருந்து மக்களைக் காப்பாற்றி , தரமான கல்வியைத் தருவதோடு கல்விச் சேவையும் செய்த மாதிரி ஆகும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மாநாடெல்லாம் போட்டு வருவாயைப் பெருக்கும் யுத்தியும் நன்றாகவே உள்ளது.

மதுக்கடைகளை மூடிவிட்டால், கள்ளச் சாராயம் பெருகும் என்று உதார் விடுவார்கள். அதையும் அரசு தானே கண்காணித்து தடுக்க வேண்டும். மது விதிக்கு வீதி எளிதில் கிடைப்பதால் தானே இப்படிச் சீரழிந்து கிடக்கிறோம். முதலில் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பின் குடிப்பதைத் தடுக்க முனையலாம். கள்ளச்சாராயம் வீதி வீதிக்குக் காய்ச்சி விடுவார்களா என்ன..? அப்படித்தான் திருட்டுத்தனமாகக் காய்ச்சி திருட்டுத்தனமாகக் குடிப்பேன் என்று போகிறவர்கள் மிகக் குறைந்த விழுக்காடாகத்தான் இருப்பார்கள் எனவே அதைத் தடுப்பது மிகச் சுலபம் தான் அரசுக்கு. டாஸ்மாக் கடைகளை மக்கள் சூறையாடுகிறாரகள் என்று ஒவ்வொரு கடைக்கும் போலீஸ் பந்தோபஸ்து போட்டு குடிக்க வைக்கும் அரசு, கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஊருக்கு ரெண்டு காவல்காரர்களை நியமித்தாலும் நல்லது தான்.





2 கருத்துகள்:

  1. மிகவும் தேவையான பதிவு. நிச்சயம் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

    பதிலளிநீக்கு
  2. மிக யதார்த்தமான நிலைமைகளை ஒவ்வொரு சாமானியனின் குரலாகவும் பதிவு செய்து இருக்கிறீர்கள் தோழர்.பூபாலன். !
    ஒரு தலைமுறையின் வாழ்வையே சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த அரசு,எப்போதுதான் இதனைப் பற்றி யோசிக்குமோ..? பார்ப்போம்..வரும் தேர்தலில் ஒருவேளை நம்மை திடுக்கிடச் செய்யும் அறிவிப்பாக அல்லது வாக்குறுதியாக மதுவிலக்கு இருந்தாலும் இருக்கும் என்று நம்புவோம்..!

    "அரசிடமிருந்து
    இலவசமாய் வாங்கிய
    மிக்சியும் கிரைண்டரும்
    சுவிட்ச் போடாமலேயே
    ஆடிக் கொண்டிருக்கிறது..
    டாஸ்மாக் வருமானம்..!"

    -அன்புடன்
    பொள்ளாச்சி அபி

    பதிலளிநீக்கு