திங்கள், 24 ஆகஸ்ட், 2015

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் இருபத்தி எட்டாவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி எட்டாவது இலக்கிய சந்திப்பு 16.08.2015 அன்று பாலக்காடு சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

காலையில் வழக்கத்தினும் நேரமாகக் கிளம்பி வழக்கத்தினும் வழக்கமான நேரத்துக்கு அரங்கம் வந்து இருக்கைகளைச் சுத்தம் செய்து தயாராகும் போது இன்றைய நிகழ்ச்சிகளின் திட்ட வடிவமைப்பு மனக்கண்ணில் ஓடியது.
மூன்று கவிதைத் தொகுப்புகள் அறிமுகம். செந்தில்பாலாவும், இராகுலனும், நறுமுகை ஜெரா மூவரும் நள்ளிரவிலேயே வந்து விட்டார்கள். சோலைமாயவன் அவர்களை அறையில் தங்க வைத்து விட்டார். காலையில் தயாராகி வந்துவிட்டார்கள்.

நிகழ்ச்சிக்காக தேனியிலிருந்து அறிவழகன், அகமது, விஜயராஜ் காந்தி வழக்கம்போல வந்துவிட்டார்கள். கோவை பேரூருக்கு பக்கமிருந்து ஹரிதா, ஈரோட்டிலிருந்து கார்த்திகா, இரவுப் பணியையும் முடித்துவிட்டு இலக்கியன் விவேக் என அத்தனை பேரும் தூரத்திலிருந்தெல்லாம் வந்திருந்தது மனதை நெகிழச் செய்தது.

பத்து மணி ஆனதும் படித்ததில் பிடித்தது ஆரம்பமானது. நல்ல கவிதைகளை, கதைகளை வாசகர்கள் பகிர்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் கனல்மதியும் வந்து விட நிகழ்ச்சி துவங்கியது.

கவிஞர் இரா.பூபாலன் வரவேற்றுப் பேசினார். கவிஞர் இரா.இராகுலன் எழுதிய கடவுளின் கடவுள் எனும் கவிதை நூலை கவிஞர் அம்சப்ரியா அறிமுகம் செய்து பேசினார்.










இராகுலனின் தொகுப்பு முதல் தொகுப்பைப் போல அல்லாமல் செறிவான கவிதைகளுடன் சிறப்பாக வந்துள்ளன. தமிழ்க் கவிதைச் சூழலில் இராகுலனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று சொன்னார்.
எட்டாம் வகுப்பு மாணவி கனல்மதி எழுதி வெளியிட்ட இப்படிக்கு மழை எனும் கவிதைத் தொகுப்பை நான் அறிமுகம் செய்து பேசினேன்.

கவிதைகளின் மீதான நமது ஈர்ப்பு எப்போது வருகிறது என்றால், நாம் குழந்தையாக இருக்கும் போதே துவங்கி விடுகிறது . அம்மாவின் தாலாட்டு அற்புதமான கவிதையல்லவா. அதனால் தானே தூங்குகிறோம், அதில் தானே மயங்கி உண்கிறோம். தாலாட்டில் தொடங்கும் நமது கவிதை ஸ்பரிசம் ஒப்பாரியில் முடியும் வரை கவிதை நம்மோடு பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது வாழ்க்கை முழுவதும்.
நாம் தான் பல நேரங்களில் பல சூழல்களில் கவிதைகளை விட்டு வெகு தூரம் விலகி வந்து விடுகிறோம். பள்ளி நாட்களிலேயே பலருக்கு கவிதைகளின் பால் ஈர்ப்பு வருவது இயல்பு. காரணம் நமது செய்யுள் பகுதிகளும், பாரதியும், பாரதிதாசனும் நம்முள் ஏற்படுத்தும் பாதிப்பினால் வருவது. பள்ளி , கல்லூரி நாட்களில் கவிதை மற்றும் இலக்கிய ஈடுபாடுகளில் தீவிரமாக இருப்பவர்களுக்கு வேறு எந்த போதையும் ஏற்பட்டுவிடாது என்னும் நல்ல விசயத்தையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆகவே தான் வாசிப்புப் பழக்கத்தையும், இலக்கியப்பரிச்சயமும் சிறு வயதிலிருந்தே கொண்டு வர வேண்டும் என்கிறோம். பள்ளி நாட்களிலேயே கவிதை எழுதுவதும் பிற்பாடு அதை முறைப்படுத்தத் தெரியாமல், நெறிப்படுத்த ஆளில்லாமல் விட்டுவிடுவதும் நம்மில் பலருக்கு வாய்த்ததுதான்.

அப்படி இல்லாமல், எட்டாம் வகுப்பு மாணவி ஒருத்தி, அற்புதமான கவிதைகளை எழுதுவதும் அவளது பெற்றோர் அவளின் கவி நெருப்பை அணைத்திடாது ஊதி வளர்ப்பதும், எட்டாம் வகுப்பிலேயே முதல் தொகுப்பை வெளியிடச் செய்வதும் ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தைத் தருகிறது. ஆம் , கனல்மதி இப்போது ஒன்பதாம் வகுப்பில் இருக்கிறார், இவர் வெளியிட்ட இந்தத் தொகுப்பு சென்ற வருடம் இவர் எட்டாம் வகுப்பு மாணவியாக இருக்கும் போதே வெளியிடப்பட்டது. இது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. கவிஞர் கனல் மதியை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறேன்.
சிறுகை அழாவிய கூழ் எத்தனை தித்திப்பாக அமிழ்தமாக இருக்கும் என வள்ளுவன் சொல்லியிருக்கிறார். இச்சிறுகை அழாவித்தந்தது உண்மையிலேயே அமிழ்தம்தான். சின்னச்சின்ன கிறுக்கல்களல்லாமல், கவிதைக்கான அத்துனை அடிப்படைக் கூறுகளையும் கொண்டு எழுதப்பட்ட இந்தக்கவிதைகளை நாம் மனமார வரவேற்கலாம் என்று சொன்னேன்.

கவிஞர் கனல்மதியின் ஏற்புரையில் தான் சிறு வயதிலிருந்தே கவிதைகளில் ஈடுபாடு வந்து எழுத ஆரம்பிக்கையில் தனது பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான் தன்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தனர் என்றார். தான் சிறப்பாக கவிதை எழுதுவதற்கும் எழுதிய கவிதைகளை வெளிப்படுத்தவும் இரண்டு முக்கியமான காரணிகள் உண்டு அவை தமது பெற்றோரும், தான் அரசுப்பள்ளியில் படிப்பதுமே காரணம் என்றார். தனியார் பள்ளிகள் மாணவர்களை மதிப்பெண் எந்திரங்களாகத்தான் உருவாக்குகின்றன. அரசுப்பள்ளிகள் தான் மாணவர்களின் திறமைகளுக்கான சுதந்திரத்தையும் வெளியையும் உருவாக்கித் தருகின்றன எனப் பேசினார். சின்ன உருவத்துக்குள் இத்தனை பக்குவமான பார்வையா என அனைவரும் வியந்தே போனோம்.

கவிஞர் செந்தில்பாலா எழுதிய மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன் கவிதைத் தொகுப்பை கவிஞர் அகிலா அறிமுகம் செய்து பேசினார். அகிலா அவர்கள் செந்தில்பாலாவின் கவிதைகளோடு கோட்டோவியங்களையும் அறிமுகப்படுத்தி பேசினார்.




இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்னும் தலைப்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் நினைவேந்தல் உரையை புன்னகை ஜெயக்குமார் வழங்கினார்.

நிகழ்வில் கொலுசு என்ற இணைய இதழ் கவிஞர் அறவொளி அவர்களால் வெளியிடப்பட்டது.
நறுமுகை ஜெ.ராதாகிருஷ்ணன் அவரது சிறப்புரையில் .. நவீன கவிதை முகங்களையும், பதிப்பகங்களின் முகங்களையும் குறிப்பிட்டுப் பேசினார்.
வாசகர்கள் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது 20 கவிஞர்கள் கவிதைகளை வாசித்தனர்.
கவிஞர் அம்சப்ரியா அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிது முடிந்தது


செய்தி மடல் வெளியிடப்பட்டது. உங்கள் பார்வைக்கு

https://www.dropbox.com/s/8cv9g6ey5ex8kjt/PIV%20Seythimadal%2019.pdf?dl=0  

1 கருத்து:

  1. கூட்டத்தை நேரில் பார்த்த உணர்வு...குட்டிக்கவிஞர் கனல்மதிக்கு வாழ்த்துகள்........புதுகை வலைப்பதிவர் விழாக்குழுவினர் சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நன்றி

    பதிலளிநீக்கு