புதன், 30 செப்டம்பர், 2015

மனசாட்சியின் கதறல்

ஓயாது பெருங்குரலெடுத்து
ஓலமிட்டுக் கொண்டே
அலையும் இந்த
மனசாட்சியை
அடக்கவோ, திசை திருப்பவோ
எடுத்த பிரயத்தனங்கள்
பொய்த்துப்போக,

அணுகுண்டைப் போல
எப்போது வேண்டுமானாலும்
வெடித்து விடக்கூடிய
அபாயம் நிறைந்த
மனசாட்சியை ஒரு
காலி மதுக்குடுவையிலடைத்து
கடலில் வீசியெறிந்தேன்
முன்பொரு நாள்.

சில காலம் கழித்து
அந்தக் குடுவையை
கரையோரம் கண்டெடுத்தவர்கள்
அதிர்ச்சியுடன்
திருப்பித் தந்தார்கள்

குருதிக்கறை தோய்ந்த அது
கதறிக் கொண்டேயிருக்கிறது இன்னும்

_________

இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகைமை : புதுக்கவிதை ; எண் : 4

1 கருத்து: