புதன், 30 செப்டம்பர், 2015

வலசைக்கு வந்த பறவையின் பெயர் தெரியுமா ..?


பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் பேசும் போது சூழலியல் ஆர்வலர் முகமது அலி அவர்களின் ஒரு பதிவு விவாதப் பொருளானது. அதைப்பற்றி எழுத வேண்டும் என நினைத்தேன்.

சூழலியல் ஆர்வலர் முகமது அலி அவர்கள் பேசும் போது, சூழலியல் குறித்த பிரக்ஞை இலக்கியவாதிகளுக்கு இல்லை. நீங்கள் கவிதைகள் படைக்கிறீர்கள், இலக்கியம் படைக்கிறீர்கள் ஆனால் அறிவியல் அறிந்து கொள்வதில்லை. உங்கள் ஊர் குளத்துக்கே சைபீரியாவிலிருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருகின்றனவே நீங்கள் போய்ப் பார்த்திருக்கிறீர்களா அவற்றின் பேர் தெரியுமா. நாங்கள் எங்கிருந்தோ இங்கு வந்து பார்க்கிறோம். நீங்கள் பார்க்கிறீர்களா என்றெல்லாம் பேசினார்.

ஒரு விதத்தில் அவருடன் உடன் படுகிறேன். சூழலியல் குறித்த பிரக்ஞை, அறிவு, விழிப்புணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியம். அதிலும் இலக்கியவாதிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிக அத்தியாவசியம். மாறிவரும் தட்பவெப்பத்தில் பூமிப்பந்து சூடாகிக் கொண்டே போகிறது. வெப்பமயமாதலின் காரணத்தால் வர இருக்கும் அழிவிலிருந்து பூமியைக் காக்க மனித இனத்தால் தான் முடியும் , ஏனென்றால் இதற்கெல்லாம் காரணமே மனித இனமும் இந்த இனத்தின் அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியும் தானே. எனவே சூழலியல் விழிப்புணர்வு என்பது மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வேண்டும். அந்த விழிப்புணர்வை எழுத்தின் வழியாக, பேச்சின் வழியாக, காட்சிகளின் வழியாக என பரப்புவதற்கு இலக்கியவாதிகள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் தாமாக முன்வந்து செயலாற்ற வேண்டும். இது ஒரு நாளில் ஆகக் கூடிய செயலல்ல அல்லது சில பல நாட்களில் முடிந்துவிடக்கூடிய கடமையல்ல. இது காலத்துக்கும் தொடர வேண்டும். மனித இனம் வாழும் மட்டும் விழிப்புணர்வுடன் இயற்கையை, சுற்றுப்புறத்தைப் பயன்படுத்த மனிதனுக்குப் பழக வேண்டும். அப்போது தான் மனித இனம் இன்னும் கொஞ்ச காலம் பூமியில் வாழ முடியும்.

ஆனால், அவரது கருத்தில் ஒரு முரண்பாடும் இருக்கிறது. சைபீரியாவிலிருந்து வலசை வரும் பறவைகளின் பெயர்களை ஒரு கவிஞன் அவசியம் தெரிந்து தான் ஆக வேண்டுமா . ஆண்டு முழுவதும் நமது தேசத்துக்கு பல்வேறு தேசங்களிலிருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்துக்காகவும் சூழ்நிலைக்காகவும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இங்கிருந்தும் வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதன் பூமியில் தோன்றிய காலத்திற்கு முன்பிருந்தே கூட இது நடைமுறையில் இருந்திருக்கலாம். அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்கிற வரைக்கும் போதும். அவற்றின் பெயரையெல்லாம் கவிஞர்கள் தெரிந்து கொண்டு தான் கவிதை எழுத வேண்டும் என்பதில் ஒப்பில்லை. அப்படிப்பார்த்தால், பறவைகள் மட்டுமா தேசம் விட்டு தேசம் பறக்கின்றன. தங்கள் வாழ்வாதாரத்துக்காக அகதிகளாக , கைவிடப்பட்டவர்களாக எத்தனை எத்தனை மனிதக் கூட்டம் தேசம் விட்டு தேசம், மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் தினம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் துன்பம் அறிவோமா .? அவர்கள் ஒவ்வொருவரின் பெயரும் நமக்குத் தெரியுமா.? பறவைகளின் பெயரை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து சொல்ல மெத்தப்படித்த அறிஞர்களும், சூழலியல் ஆர்வலர்களும் இருக்கிறார்கள் அல்லவா. அவர்கள் கடமையை அவர்கள் செய்தால் போதும். அவர்களிடம் போய் நீங்கள் ஏன் கவிதைகள் , கட்டுரைகள் எழுதுவதில்லை மொழிக்கு எதுவும் செய்வதில்லை என்று கேட்க முடியுமா.?

விவாதங்களுக்கு அப்பாற்பட்டு,
சூழலியல் பிரச்சினைகளுக்கு வருவோம். உண்மையில் காடழிப்பு, வாகனப்பெருக்கம், காற்று மாசுபடல், நீர்வளம் குறைந்து கொண்டே போதல், புவி வெப்பமயமாதல், உயிரினங்களின் அழிவு, என சுற்றுச் சூழல் பிரச்சினைகள் பெருகிவிட்டன. ஒவ்வொரு சிக்கலுக்கும் துறை சார்ந்த விஸ்தாரமான ஆய்வுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீர்வுகளும் அவசியமாகின்றன.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் களைய அரசும், அறிவியல் நிறுவனங்களும் தொடர்ந்து பல முன்னெடுப்புகளைச் செய்து கொண்டிருக்க, எந்த மாற்றங்களையும் போல இந்த மாற்றமும் ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே முக்கியம். ஒவ்வொருவரும் தத்தமது பங்குக்கு சூழல் மாசுபாட்டுக் காரணிகளை அறிந்து நடந்தால் போதும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
முதல் பிரச்சினையாக நெகிழிப்பைகள், நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளைக் குறைத்து மாற்றுப் பொருட்களைப் புகுத்துதல் அவசியம். மக்கவே மக்காத நெகிழிப் பைகளால் பூமிப்பந்து மூச்சுவிடவே சிரமப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
நீர்வளத்தைப் பெருக்குதல் அடுத்தது. தற்போதுள்ள நிலைப்படி , நிலத்தடி நீர் இன்னும் வெகு சில நூற்றாண்டுகளுக்குத்தான் தாங்கும். பிறகு குடிக்கக் கூட நீரில்லாத சூழல் உண்டாகும். இதற்கான மாற்று யோசனைகளாக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உட்பட நிறைய இருப்பினும் நாம் , மழை நீரைச் சேமித்தல், விரயமாகும் உபரி நீரைச் சேமித்தல் போன்ற முன்னெடுப்புகளால் வரும் காலத்துக்குக் கொஞ்சம் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

நம்மிடம் இருக்கும் பெரிய குறை, குப்பை மேலாண்மை ( Waste Management ) இல்லாததும் தான். அந்த அறிவும், உணர்வும் இல்லாததால் தான் சாக்கடைக் கழிவுகளையும், தொழிற்சாலைக் கழிவுகளையும் ஆறு,குளங்களில் கலந்து இருக்கும் கொஞ்சம் நீரையும் பாழ்படுத்தி விடுகிறோம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்றெல்லாம் இன்னும் தரம் பிரித்து அவற்றைப் பக்குவமாகக் கையாளத் தெரியாமல் பூமியை குப்பை மேடாக்கிக் கொண்டிருக்கிறோம். தற்போதுதான் குப்பை மேலாண்மை பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சாயக்கழிவுகளை ஆற்றில் கலப்பது, கோழி இறைச்சிக் கழிவுகளை பக்கத்து மாநிலத்தில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போவது, வெளிநாட்டுக்காரர்களின் மின்னணு ( Electronic Waste ) மற்றும் மருத்துவக் கழிவுகளை கப்பல்களில் கன்டெய்னர் கன்டெய்னராகக் கொண்டு வந்து கொட்டுவது போன்ற குற்றச் செயல்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாலொழிய தடுக்கவே முடியாது.

நமது குளங்கிலெல்லாம் பரவிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகள், சீமைக் கருவேல மரங்கள் எல்லாம் நமது சொத்துகளா ..? வெளிநாட்டிலிருந்து இங்கு திட்டமிட்டோ அல்லது அஜாக்கிரதையாகவோ கொண்டு வந்து சேர்க்கப்பட்ட நமக்கான தீரா நோய்கள் தானே. இவற்றைக் களைய நாம் என்ன முன்னெடுப்புகளை எடுக்கிறோம். சீமைக் கருவேல மரம் ஒழிப்பு இயக்கம், சிறுதுளி, ஓசை என் சூழலியல் அமைப்புகள் கோவையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றன.
மரங்களின் அத்தியாவசியமும் மரக்கன்றுகளை நடுவடும் இப்போது நம் மக்களிடையே விழிப்புணர்வாக வந்திருப்பதும் ஆறுதலாக உள்ள விஷயங்கள்.

சூழலியல் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பலர் போராடி வருகிறார்கள். அவையெல்லாம் மொத்தமாக பெரிய அளவில் நடக்கும் சீர்கேடுகளுக்காக. தனிமனித பாதிப்புகள் சிறு சிறு துளிகளாக இருக்கின்றன. ஆனால் அவை ஒன்றாக சேர்ந்து தான் மிகப்பெரிய மாசு உருவாகிறது. எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் கைகளைக் கோர்த்து இணைந்து செயல்பட்டால் மட்டுமே சூழல் மாசுபாட்டைக் குறைத்து இன்னும் கொஞ்ச நாட்கள் நம் சந்ததியினர் இந்தப் பூமியில் நிம்மதியாக வாழ முடியும்.

எதிர்கால அறிவியலால,செவ்வாய் கிரகத்தில் இடம்பார்த்துக் குடியேறலாம் தான் ஆனால் இத்தனை அழகான செழிப்பான நம் பூமியைப்போல இன்னொரு கிரகம் கிடைக்குமா. யோசிக்கலாம்...


_____________



இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகைமை : சுற்றுச்சூழல் கட்டுரை ; எண் : 2

1 கருத்து: