திங்கள், 22 செப்டம்பர், 2014

அன்பு சூழ வாழ்கிறோம் ...

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செய்தி மடல்களை பிரதி எடுக்க கோவையில் நகலகத்துக்குச் சென்றிருந்தேன் வெள்ளிக்கிழமை. 70 பிரதிகள் வேண்டுமெனச் சொல்லிவிட்டுக் காத்திருக்கையில் வந்தான் நக்கல் பிடித்த நண்பனொருவன். "என்ன ணா இலக்கியமா" என்று அருகில் அமர்ந்தவன் மொக்கையைத் துவங்கினான். செய்திமடல் கைக்கு வந்ததும் அதைப் பார்த்துவிட்டு எல்லாமே "சம்பளப் பணமா ணா" என்று கேட்டான். "ஆமாம்" என்றேன். "ஏன் ணா இப்படி..?” என்றவனின் பாக்கெட்டிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து" இந்த மாதிரியெல்லாம் நான் நாசமாப் போற செலவு பண்றதில்லை" என்று சொன்னேன். சிரித்தான்.

நண்பர் பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதை தினமணியில் பரிசு பெற்றது. மேலும் ராமகிருஷ்ண விஜயத்திலும் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றார். தினமணி கதை சூழலியல் பற்றியது. மிகவும் பிடித்த்து எனவே நண்பர்கள் அனைவருக்கும் அந்தக் கதையைத் தர விரும்பி அதை ஐம்பது பிரதிகள் எடுக்க கடைக்காரப் பெண்ணிடம் தரும் போதே இவன் ஆரம்பித்தான், “ ணா, உங்க கதையா ணா “ “ இல்லை டா, நண்பருடையது “என்றேன் கடுப்பாக.

ஏன் ணா உன் கதைய எடுத்து எல்லாருக்கும் தந்தா ஒத்துக்கறேன் நீ உருப்படியாத் தான் செலவு பண்ற னு; வேற ஒருத்தர் கதைய எதுக்குணா இத்தனை எடுத்து இப்படித் தர “

அடேய்.. கம்முன்னு கிளம்பு. கதை நல்லா இருக்கு. அதான் எல்லாருக்கும் பரிசா தர விரும்பி எடுக்கிறேன் னு “ சொன்னேன்.

ஓ… ஊரான் புள்ளைய ஊட்டி வளர்த்தா உன் பிள்ளை தானே வளரும் னு நினைப்பா “ னு கேட்டான். இங்க எதுக்கு இந்தப் பழமொழி. இருந்தும் கொஞ்சம் காட்டமாக பதிலளித்தேன்

ஊரான் பிள்ளைனு ஏதோ ஒரு பிள்ளைய கூட நான் சொல்ல மாட்டேன், இருந்தாலும் உன் பேச்சுப்படி உன் அண்ணனோட பிள்ளைய ஊரான் பிள்ளை னு சொல்லுவியா ? நான் இந்தக் கதையை என் அண்ணனின் கதையாகவே எண்ணுகிறேன், அப்படி இல்லாத போதும் இந்தக் கதை ரொம்பப் பிடித்துவிட்டது என்பதாலும் நம் நண்பர் என்ற காரணத்தாலும் இதைச் செய்கிறேன் “ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். "ணா சும்மா தான், வாங்க டீ சாப்பிடலாம் "என்றான். "ஏற்கெனவே எரியுது கிளம்பு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டேன். இதே போலத்தான் கனகராஜன் அண்ணனின் புத்தகத்தை நிறையப் பேருக்கு வாங்கிப் பரிசளித்த போதும், இளஞ்சேரல் அவர்களின் சிறுகதையொன்றைப் பிரதியெடுத்த போதும் கேள்விகளை எதிர் கொண்டேன்….. ஒரு நல்ல வாசகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் பிடித்த, நெருக்கமான படைப்புகளை மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பதில், பரிசளிப்பதில் மகிழ்ச்சி தான். இந்தப் பழக்கமும் இலக்கிய வட்டம் தொடங்கிய போது தான் ஆரம்பமானது. இப்போது யாழியின் கவிதைத் தொகுப்பை வாங்கித் தர ஆரம்பித்திருக்கிறேன்.

சொன்னது போலவே, இலக்கிய வட்ட நண்பர்கள் அனைவரும் ஒரு வகையில் குடும்ப உறுப்பினர்களைப் போலவே நெருங்கி விட்டோம்…
அதில் முக்கியமானவர் சித்ராதேவி அம்மா. இவரது மகன் மதன்ரா௺ஜ் அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். மேலும் குறும்படங்களை நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் தனியாக இங்கு வசிக்கிறார். வாசிப்பு தான் துணை. எங்களோடு தொடர்ந்து இலக்கிய வட்டத்தில் இணைந்திருக்கிறார். நிறைய முறை பொருளாகவும்,அன்பாகவும், உழைப்பாகவும் இலக்கிய வட்டத்துக்கு உதவிகள் செய்து கொண்டே இருக்கும் ஒரு ஆத்மா.

சென்ற கூட்டங்களின் போதே சொல்லிக் கொண்டே இருப்பார், ஏன் சிறப்பு விருந்தினர்களுடன் ஓட்டலில் சாப்பிடுகிறீர்கள் பணம் விரயம், பக்கத்தில் தானே வீடு வாருங்கள் என்று. எங்களுக்குத் தயக்கமாகவும், அவரைத் தொந்தரவு செய்து விடக் கூடாது என்பதாலும் போவதே இல்லை.
இந்த மாத அழைப்பிதழை அவரிடம் கொடுத்த போது அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் யோசிக்க வைத்தது. ஒன்று ஹோட்டலுக்குச் சென்றால் சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பியாக வேண்டும் வீடு என்றால் அப்படி இல்லை ஆற அமர உட்கார்ந்து பேசலாம் என்றார்.

உண்மைதான், சிறப்பு விருந்தினர்கள் தூரத்திலிருந்து அடித்துப் பிடித்து நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு முன்னால் அவர்களுடன் பேச வாய்ப்பு அமைவதில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு எங்கு அமர்ந்து பேசுவது? எனவே விரைந்து கிளம்பிவிடுவோம். வீடாக இருந்தால் இந்தக் குறை தெரியாது என்ற அம்மாவின் கருத்து சரியெனவே பட்டது.

இன்னொரு விஷயம் அவர் சொன்னது, நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன் நீங்கள் வந்தால் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தால் ஆறுதலாக இருக்கும் என்று சொன்னார். இதுவும் கொஞ்சம் யோசிக்க வைத்தது. முன்பு சில முறை அவர் வீட்டுக்குப் போகின்ற போதெல்லாம் தன் தனிமையைப் பற்றிச் சொல்லிக் கண் கலங்குவார். இதற்காகவே அவருக்கு மட்டும் நேரில் போய் அழைப்பிதழ் தந்து விட்டுக் கொஞ்ச நேரம் பேசி விட்டு வருவோம்.

ஆக, இந்த இரண்டு விஷயங்களையும் யோசித்து இந்த முறை மதிய உணவுக்கு வருவதாகக் கூறியிருந்தோம். அவரும் நிகழ்ச்சி முடிவதற்கு கொஞ்ச நேரம் முன்னால் கிளம்பிப் போய் சாப்பாடு வைத்து விடுகிறேன் என்று சொல்லி இருந்தார். காலையில் நிகழ்ச்சிக்கு வரவில்லை. காரணம் கேட்டால் அவரது அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்றார். சங்கடமாகப் போய்விட்டது. அம்மா நீங்கள் பாருங்கள் ஹோட்டலுக்குப் போகிறோம் என்றோம். ஆனால் சாப்பாடு செய்தாகி விட்டது என்று சொல்லி வரச்சொல்லி வற்புறுத்தினார். அவரது அம்மா தனது தங்கை வீட்டுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்.

ஒரு வழியாக மதிய உணவுக்குஅவரது வீட்டுக்குப் போய் சுவையாகவும் மனம் நிறையவும் சாப்பிட்டு விட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவருடன், நான்,அம்சப்ரியா, நிலாரசிகன்,சு.வேணுகோபால் மற்றும் நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தோம்.

ரொம்ப மன நிறைவாக இருந்தது. பேச்சில் அம்மா தனது தந்தையாரைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியதும் அனைவரும் வாய்பிளந்து அதிர்ச்சியாகி விட்டார்கள்.
அவரது தந்தையின் பெயர் முல்லை தங்கராசன். சித்திரக்கதை உலகின் மன்னனாகத் திகழ்ந்தவர் பக்திக்கதைகள் முதல் இரும்புக்கை மாயாவி வரை இவரது படைப்புகளைப் பற்றிச் சொன்னவர் மும்பைக்கு இயக்குனர் ராண்டார்கை அவரை ஒரு திரைப்பட விஷயமாகச் சந்தித்துப் பேசப் போனபோது தவறி விட்டதாகச் சொல்லி வேதனைப்பட்டார். மேலும், ஜெயகாந்தன், கண்ணதாசனுடன் அவருக்கு இருந்த உறவு, புகைப்படங்கள் அனைத்தையும் காட்டிப் பேசினார். நேரம் போனதே தெரியவில்லை. நம்மவர்கள் மிகுந்த ஆச்சர்யத்திலும், ஆனந்தத்திலும் இருந்தார்கள். கிளம்பும் போது வயிறும் மனமும் நிறைந்து கிடந்தது. அன்பைத் தவிர வேறொன்றும் தெரியாத சித்ராதேவி அம்மாவைப் போன்ற அற்புதர்களால் இந்த வாழ்வு இன்னும் இனிமையானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகிறது.



இன்னும் இருக்கிறார்கள் த.வாசுதேவன் அய்யா, கார்த்தி, ஆனந்தகுமார், இன்பரசு, செந்தில்குமார் .. ஒவ்வொருவரையும் பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போது பதிய வேண்டும்... 

2 கருத்துகள்:

  1. தொடருட்டும் தங்கள் சீரிய இலக்கியப் பணி . வாழ்த்துக்கள் . - சுப்ரா .

    பதிலளிநீக்கு