திங்கள், 1 செப்டம்பர், 2014

கடவுளுக்கு லிப்ட் ....


                சூரியன் சுட்டெரிக்கும்
கோடை நாளொன்றின்
நண்பகலில் என்
இரு சக்கர வாகனத்தில்
விரைந்து கொண்டிருந்தேன்.

காலாண்டுத் தேர்வை
முடித்துவிட்டு
புத்தகப்பையுடன்
வேக வேகமாக
நடந்து கொண்டிருந்த
கடவுளின் அருகில்
நிறுத்தி அவரை
ஏற்றிக்கொண்டேன்

கடவுளின் ஊர்
ஐந்து கிலோ மீட்டருக்கு
அப்பாலெனத் தெரிந்ததும்
இரண்டு கிலோ மீட்டரில்
இருக்கும் எனது
ஊரைக் கடந்து
கடவுளின் ஊரிலேயே
அவரை இறக்கி விடுவதெனத்
தீர்மானித்தேன்.

ஒரு கதையோ பாடலோ
சொல்லும் படிக் கேட்டதும்
பாடல் வடிவிலேயே ஒரு
கதை சொன்னார்
கடவுள்.

ஏற்ற இறக்கமான
குரலில் கதை நீள
சாலையின் இரு பக்கங்களிலும்
ஓங்கி வளர்ந்தன
பசுமையான மரங்கள்
வழியெங்கும்
நிழலினை நிறைத்து.

கடவுளின் ஊர் வந்ததும்
லாவகமாக வண்டியிலிருந்து
குதித்த கடவுள் என்னைக்
குனியச் சொல்லி
நெற்றிப்பொட்டில்
முத்தமொன்றை இட்டு
நன்றி என்று
சொல்லிக் கையசைத்தார்

வரமே தந்துவிட்ட
பிறகு
நன்றியெதற்கென
கேட்க நினைத்தவன்

கேட்க மறந்து விட்டேன்

கடவுளின் பெயரை…………


# லிப்ட் கொடுக்கும் அனுபவத்தில் முன்பொருநாள் எழுதிய கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக