செவ்வாய், 21 மார்ச், 2023

செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா ? - பகத்சிங்


 


செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா ?


- மாவீரன் பகத்சிங் தனது இறுதிக்கடிதத்தில்


ஞாயிற்றுக்கிழமை  பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 105ஆவது சந்திப்பில் படித்ததில் பிடித்தது நிகழ்வில் பேசிய வாசகர்கள் அனைவருக்கும் பகத்சிங் துர்காபாபிக்கு எழுதிய கடிதம் எனும் சிறு நூலைப் பரிசாக வழங்கினோம். கவிஞர் சோலைமாயவன் இந்நூலின் ஐம்பது பிரதிகளை வாங்கி அனைவருக்கும் வழங்கினார். இந்நூல் கவிஞர் நாணற்காடன் அவர்களின் சிறப்பான மொழிபெயர்ப்பில் கீற்று வெளியீடாக வந்துள்ளது. மிக முக்கியமான நூல்... 

இலக்கிய வட்டம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பாரதியிடம் அந்நூலைக் கொடுத்துவிட்டு அம்மாவை ஊரில் விட நாங்கள் கிளம்பிவிட்டோம். பாரதி நாங்கள் இரவு திரும்ப வரும் போது கேட்டாள் ஏன் என்னை அழ வைத்துவிட்டுப் போனீர்கள் என்று. சட்டென எனக்கு நினைவில் வரவில்லை.. ஏன் அழுதாய் என்று கேட்டபோது.. தனியாக இந்நூலைப் படித்து வெகுநேரம் அழுதேன் என்றாள்...

இன்றைய நாளான 22 மார்ச் 1931 ல் பகத்சிங் எழுதிய கடிதம் இது.. மார்ச் 23 தூக்கிலிடப்பட்டார்..
நானும் வாசித்தேன்.. நீங்களும் வாசிக்க வேண்டும்மொழிபெயர்ப்பாளர் நாணற்காடன் அவர்கள் இந்தச் சிறுநூலுக்கு எழுதிய முன்னுரை இங்கு..

23 வயதில் நாட்டு விடுதலைக்காக, மக்களின் மாண்புக்காக சீரிய சிந்தனையும், சிறந்த செயல்களும் செய்து தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத்சிங், எனது இளமை உணர்வுகளில் மின்னலாகத் தங்கிவிட்ட வரலாற்று நாயகன். அன்றைய பகத்சிங், ராஜ்குரு, சந்திரசேகர ஆசாத், சுக்தேவ் இவர்களின் போராட்ட வரலாற்றுக்குள் துர்கா பாபியின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது.

தனது இறுதி நொடிகளில் துர்கா பாபி க்கு பகத்சிங் எழுதிய இந்தக் கடிதம் ஏற்கனவே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஹிந்தியில் இந்தக் கடிதத்தை வாசித்து முடிக்கும்போது யாரோ சிறைக்கம்பிகளைத் தட்டும் ஓசை எனக்கும் கேட்கத் தொடங்கியது. அந்த ஓசை அனைத்துச் செவிகளுக்கும் கேட்கட்டும்.

செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா? என பகத்சிங் துர்கா பாபிக்கு எழுதிய சொற்கள் எல்லோருக்குமானவை தாமே.

அவர்கள் சோசலிச நாட்டைக் கட்டமைக்கும்போது எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள். அப்போது அனைவருக்கும் உணவு கிடைக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமைகள் இருக்காது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமாக பார்க்கப்படுவர்.- பகத்சிங்

பேரன்புடன்

நாணற்காடன்


நூலிலிருந்து சில வரிகள் :

அரசாங்கம் எனது உடலை வேண்டுமானால் அழிக்கலாம். ஆனால், எனது சிந்தனைகளை ஒருபோதும் கொல்ல முடியாது.

அநியாயத்தையும், கொடுமைகளையும் செவிட்டு அரசாங்கத்தின் காதுகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டி இருந்தது. செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா ?

அநியாயமும் அடக்குமுறையும் தாம் வன்முறை. அதற்கெதிராக தமது வலிமையை வெளிப்படுத்திக்காட்டுவது வன்முறை ஆகாது.

மதம் குறுகிய மனப்பான்மையை வளர்க்கிறது. மேலுமது, புரட்சியின் பாதையில் பல தடைகளை உண்டாக்குகிறது.

நமது புரட்சியின் லட்சியமே சோசலிச அரசை அமைப்பது தான். மனிதனை மனிதன் உறிஞ்சுவதையும், ஒரு நாடு இன்னொரு நாட்டைச் சுரண்டுவதையும் அதன் மூலம் தான் முடிவுக்குக் கொணர முடியும்.


கடைசி நேரம் நெருங்கிவிட்டது. இப்போது நான் கடவுளை நினைத்துக்கொண்டால், பகத்சிங் ஒரு கோழை என்று அனைவரும் சொல்வார்கள். வாழும்வரை எப்படி இருந்தேனோ, அப்படியே மரணத்தையும் தழுவி இந்த உலகை விட்டு நீங்க விரும்புகிறேன். மரணத்தை எதிரில் கண்டதும் அவனது கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன என்று யாரும் சொல்லிவிடக் கூடாது.

எனது தாய்நாட்டின்
இந்த மண்ணிலிருந்து
வரும் நறுமணம்
இறந்தாலும் என் இதயத்திலிருந்து வெளியேறாது
விடைபெறுகிறேன்

- பகத்சிங்


நூல் விலை ரூ 10/-
தொடர்புக்கு : 9942714307 




திங்கள், 13 மார்ச், 2023

வாழ்வென்பது வேறொன்றுமல்ல - கவிதை ரசனை 10

வாழ்வென்பது வேறொன்றுமல்ல


கலையின் மகத்தான பணிகளில் ஒன்று தனிமனிதனின் தனிமைக்குத் துணையாக, ஆறுதலாக எப்போதும் உடன் வருவது. தனிமனிதனின் அகத்தேடல் தான் கலையாக புறத்தில் வெளிப்பட்டது. புறத்தே கலை நிகழ்த்தும் பணி அளப்பரியது. சமூகத்தின் சிறு துளைகளுக்குள்ளும் காற்றெனெ நுழைந்து இசையின் கொண்டாட்டத்தினைக் கொணர்வதும், ஊசியென நுழைந்து கிழிசல்களைத் தைப்பதுமாக கலை அளப்பரிய பணியைச் செய்கிறது என்பது உண்மைதான். அகத்தே கலை நிகழ்த்தும் பணியோ அற்புதமானது. ஒவ்வொரு மனிதனும் நவீன வாழ்வில் தனித்துவமாக இருக்கிறான், தனக்குள் தனியனாக இருக்கிறான். அவனுக்கு யாரையும் விட தான் எனும் ஒருவன் தேவைப்படுகிறான். தன்னையே இழந்து நிற்பவனைக் காலமும் கை விட்டுவிடும். எதை இழப்பினும், எவரை இழப்பினும் தன்னை இழக்காத வரைக்கும் ஒருவனுக்கு எதுவும் பெரிய இழப்பன்று. யாவும் மீளக் கூடியவை தான். தன்னை இழக்காது அதாவது சுயத்தை எப்போதும் பாதுகாத்து வைக்க கலை ஒருவனுக்குத் துணை நிற்கிறது. 

நமது குரலைக் கேட்டுக்கொள்ளும் செவிகள் நமக்குத் தேவையாயிருக்கின்றன சமயங்களில். மறு பேச்சு, ஆதரவுக் குரல், பதில்கள் என எதுவும் தேவைப்படும் முன், நமக்குத் தேவையாயிருப்பது வெறுமனே நமது பேச்சை அல்லது புலம்பல்களைச் செவிமடுத்துக் கேட்டுக்கொள்வது தான். அதற்கான யாரும் இல்லாத போது தான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறோம்.  செடிகள், மரங்கள், ஏன் கற்கள், சிலைகள் என அஃறிணைகளோடு பேசுபவர்களையும் தனித்து காற்றோடு வெறுமையாய்ப் பேசுபவர்களையும் நாம் பார்க்கிறோம். அவர்களின் தேடல்களெல்லாம் கேட்டுக்கொள்வதற்கான செவிகள்… செவிகள் மட்டுமே.

அவ்வாறான செவிகளை யாசிக்கும் அல்லது அவ்வாறான செவிகள் அருளப்பெற்ற கவிதை ஒன்று… 


என் பேச்சைப்  பொறுமையாகக்

கேட்டுக்கொண்டிருக்கின்றன

இந்தக் கட்டிடங்கள்

இனி வாழ்வின் மேல்

எனக்கு ஒரு குறையுமில்லை


             - கார்த்திகா முகுந்த்  

- “ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான்”  எழுத்து பிரசுரம் வெளியீடு , 

செவிகள் யாவர்க்கும் தேவையெனினும் இந்திய சமூகத்தில் பெண்களின் குரல்களைப் பெரும்பாலும் யாரும் செவிமடுப்பதேயில்லை நூற்றாண்டு காலமாக. அவர்களது சொற்கள் புறம் தள்ளப்படுகின்றன, அவர்களது புலம்பல்களும் கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. இச்சூழலில், வீடுகளில் தனித்திருக்கும் அவர்களது மொழிகளைக் கேட்க ஏதாவதொன்றைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. செல்லப் பிராணிகளை, விருப்பக் கடவுளரின் சிலைகளை, தொட்டிச் செடிகளை பெண்கள் அதிகம் நேசிப்பதன் பின்பான உளவியில் இதுவாகவும் இருக்கலாம்.

“என் பேச்சைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றன இந்தக் கட்டிடங்கள்” எனும் முதல் பகுதியில் இந்தக் கவிதையின் குரலில் ஒரு வலி தென்படுகிறது. அது பெண்வலி என்பது சட்டெனப் புரிந்தும் விடுகிறது. அந்தக் குரலில் நம் அம்மாக்கள், அக்காக்கள் தென்படுகிறார்கள். அவர்களது முந்தைய நாட்களின் நினைவுகளை நமக்கு இந்தக் கவிதை காட்சிப்படுத்துகிறது. “ இனி வாழ்வின் மேல் எனக்கு ஒரு குறையுமில்லை “ என்கிற இந்தக் கவிதையின் பின்பகுதியில் ஒலிப்பது விரக்தியின் குரல். அது விரக்தியோடும், சலிப்போடும், ஒருவித எள்ளலோடும் மாறி மாறி ஒலிக்கிறது நம் காதுகளில்.  யாருக்கும் நாம் தனிமையை வலிந்து பரிசளித்திடக் கூடாது எனப் புரியவைக்கிறது கவிதை.

கட்டிடங்களெனும் அஃறிணைகளாவது இல்லாத செவிகளைத் திறந்து எனது சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன எனும் ஆதங்கத்தின் வரைதல் தான் இந்தக் கவிதையாகியிருக்கிறது.

கேட்கும் செவிகளற்று இருப்பவர்களின் பக்கமும் கலை நகர்ந்து நிற்கும். கவிதை இறங்கி வந்து பார்க்கும். அப்படியான ஒரு கவிதை …


யாரும் எடுத்துக்கொள்ளாத ஏதாவதொன்று...


எல்லாப் பேருந்திலும் யாரும் அமராத

பக்கத்து இருக்கையுடன் 

திருநங்கை ஒருவர்

எனக்காகக் காத்திருக்கிறார்...

ஒவ்வொரு பிரார்த்தனைவேளையிலும் 

என் முன் வரிசையில் ஒரு குழந்தை 

என்னைப்பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வகுப்பறையிலும் 

எனக்கென்று முகிழாது காத்திருப்பான் 

ஒரு மெல்லக்கற்பவன்...

எனக்குப் பரிசாகத் தாம் படிக்காத 

அல்லது தமக்குப் பரிசாகக் கிடைத்த 

புத்தகங்களை அளித்து  

தம் செலவை 

மிச்சம்பிடித்துக்கொள்கிறார்கள் நண்பர்கள்...

விழாக் கூட்டத்தில்

மேடை சரியாகத் தெரியாத மூலையில்

எப்பொழுதும் எனக்கென்று 

ஒரு நாற்காலி கிடைத்துவிடும்...

அதனருகில் ஒரு தொட்டிசெடியும்

சில பூக்களும் இருந்துவிடும்....

யாரும் எடுத்துக்கொள்ளாத

ஏதாவதொன்று

தினமும் எனக்குக் கிடைத்துவிடுகிறது...

அதுவே எனக்குப் பிடித்தும் இருக்கிறது!


- ப்ரிம்யா கிராஸ்வின் 

“ தப்பரும்பு” , வாசகசாலை வெளியீடு, 9942633833


யாரும் எடுத்துக்கொள்ளாது தனித்துவிடப்பட்ட ஒன்றை இந்தக் கவிதை ஆதரவாக அணைத்துக்கொள்கிறது. யாரும் இல்லையென்று யாருமில்லை என ஆறுதலாகிறது. 

திருநங்கைக்கு அருகில் விகல்பமின்றி அமர்ந்து கொள்கிறது, மெல்லக் கற்பவனின் மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறது மேலும் மேடை தெரியாத போதும் அருகிலிருக்கும் சிறு செடியை ரசித்தபடி அமைதியாகிறது இந்தக் கவிதை.  கவிதையின் ஆதாரமாக இருக்கும் அன்பு எப்போதும் ஏங்கிச் செத்தபடியிருக்கும் ஒவ்வோர் உயிருக்கும் துணையாவது மட்டுமே அதன் அடிப்படை குணமாக இருக்கும்.

யாரும் இல்லாத ஒருவளாக ஒலிக்கும் கவிஞர் கார்த்திகா முகுந்தின் கவிதைக்கும், யாரும் இல்லாதவர்களுக்காக உடன் நிற்பதாக ஒலிக்கும் கவிஞர் ப்ரிம்யா கிராஸ்வினின் கவிதைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இவற்றின் அடியாழத்தில் ஒலிப்பது அன்பின் குரல். மனிதத்தின் கிளர்ந்தெழும் நறுமணம். கூப்பிடு தொலைவில் இருக்கக் கூடிய வாழ்வின் சிறு பரிணாமம்.

வாழ்வென்பது வேறொன்றுமல்ல, யாருக்காவது அன்பைத் தேக்கிவைத்தல், யாரிடமாவது அன்பாயிருத்தல், யார் பொருட்டாவது அன்பைச் சுமந்து கொண்டே அலைதல்.




ஞாயிறு, 1 ஜனவரி, 2023

கவிதை ரசனை 9


கவிதைகள்   எல்லாக் காலத்துக்குமானவை, எல்லா உணர்வுக்குமானவை. கவிதைகளில் துயரை இறக்கி வைத்துவிட முடியும்.  அவை ஆறுதலாகின்றனவா, தேற்றுகின்றனவா என்பதெல்லாம் பிறகு, நம் துயரை இறக்கிவைக்க ஓர் இடம் இருக்கிறது என்பதே மிகப்பெரிய ஆசுவாசம் அல்லவா. கவிதைகளில் தான் அனுபவித்த துயரை, தான் கண்டு, கேட்டுணர்ந்த துயரை இறக்கிவைக்கும் போது மனம் இலகுவாகிறது. அதன் காரணமாகவே நிறைய துயரக் கவிதைகள் எழுதப்படுகின்றன. கவிதையில் இறக்கிவைக்கப்பட்ட துயர் வாசகனின் மனதுக்குள் கொஞ்சம் அழகூட்டிக்கொண்டு செல்கிறது. அது மொழியின் அழகு. கலையில், துயர் என்றும் கொண்டாடப்பட்டே வந்திருக்கிறது. சரித்திரத்தில் வெற்றியைக் காட்டிலும் துயரம் காவியமாகியிருக்கிறது. துயரம் அமரத்துவமாகி விடுகிறது படைப்பாகும் போது. நமது கலை வடிவங்கள் பலவற்றிலும் சரி, படைப்புகளிலும் சரி துயரம் என்றைக்கும் நிலைத்து நிற்கும் படி ஆகிவிடுகின்றன.

 

 கவிதைகள் முழுக்க முழுக்க உணர்வுகளின் கூப்பாடு. அது சங்ககாலம் தொட்டு நிகழ்காலம் வரைக்கும்  ஒரு கண்ணியில் இணைந்திருப்பவை. இன்றைக்கு எழுதப்படும் கவிதைகளிலும் மரபின் தொடர்ச்சி ஏதாவதொரு வகையில் இருந்துகொண்டே தான் இருக்கிறது. மூதாதைகளின் குரலைத்தான் இன்றும் நாம் ஒலித்துக்கொண்டிருக்கிறோம். வடிவமும், அளவும், மாறியிருக்கக் கூடும். ஆனாலும் உணர்வு ஒன்று தான். இன்றும் பல காதல் கவிதைகளின் ஆதிப்புள்ளி ஏதேனும் ஒரு சங்கப்பாடலில் அகத்திணையில் சொல்லப்பட்டிருக்கும். மனிதனும் மனித உணர்வுகளும் பொதுவானவை எனும் போது, அவன் படைக்கின்ற கலைகளில், இலக்கியத்தின் அந்தப் பொதுத்தன்மை வந்துவிடுவது இயற்கை...

 

 குழந்தை பிறந்தவுடன் வேலைக்குச் செல்ல நிர்பந்தமாகும் இளம் தாய்மார்களின் வலியை கவிஞர் விக்ரமாதித்யனின் ஒரு கவிதை பேசி இருக்கும். எப்போதும் நினைவில் இருக்கும் கவிதை அது. பெண் வாழ்வை, பெண் வலியை பெண்ணை விடவும் யாராலும் சிறப்பாக எழுதி விட முடியாது என்று நாம் பேசிக்கொண்டிருந்தாலும் , படைப்புலகில் விதிவிலக்குகளாக சில படைப்புகள், படைப்பாளர்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.  ஓர் ஆணாக இருந்தும் பெண்ணின் வலியை உணர்ந்து அந்தக் கவிதையை எழுதி இருப்பார் கவிஞர் விக்ரமாதித்யன். அவரது பிரபலமான கவிதை இது

 

 

வேலைக்குப் போவாள்

பெற்றவள்

வீட்டில் இருக்கும் கைக்குழந்தை

 

கட்டிய தாய்ப்பாலை

சுவரில் பீய்ச்சிச் சிந்தவிடும்

விதி

 

-         விக்ரமாதித்யன்  

 

பெண்கள் வேலைக்குச் செல்ல , அதுவும் அலுவலகம் செல்ல ஆரம்பித்த நவீன யுகத்தில் தொடங்கியது இந்த வலி. முன்னர், பணியிடத்துக்குக் குழந்தைகளையும் தூக்கிச் செல்வது வழக்கம். காடு, வயல்களில் மரங்களில் தூளியிட்டும், மற்ற வேலைகளின் போதும் கூட  முதுகில் முந்தானைத் தூளியிட்டும் குழந்தைகளைச் சுமந்தபடி வேலை செய்ய அனுமதி இருந்தது.  தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் பணி புரியும் பெண்களின் சித்திரங்களை நாம் பார்த்திருப்பது நினைவில் வரக்கூடும்நவீன முதலாளிகள் அவ்வனுமதியை மறுத்தனர். பணியிடத்து குழந்தைகளை அனுமதிப்பதால் கவனச் சிதறலாகி வேலை பாதிக்கப்படும் எனக் கணக்கிட்டுப் பார்த்தனர். அதன் விளைவாக அந்தச் சித்திரங்கள் தற்காலத்தின் வணிகச்சூழலில் அழிக்கப்பட்டுவிட்டன.  இந்த ஒரு கவிதை மார்பு கனக்கும் பெண்ணின் வலியோடு, பெண் வரலாற்றையும் சிந்திக்க வைத்துவிடுகிறது.

 

அதே வலியை, அதே உணர்வை சமீபத்தில் வாசித்த கவிஞர் சாய் வைஷ்ணவியின் வலசை போகும் விமானங்கள் எனும் முதல் தொகுப்பிலும் வாசிக்க நேர்ந்தது. எங்கோ நினைவின் அடுக்கில் இருந்த விக்ரமாதித்யனின் கவிதையை இந்தக் கவிதை மீள் வாசிப்புக்கு அழைத்துச் சென்றது.

 

 

ஒஞ்சி உப்பி

 

சிறுகோட்டு வாயையும்

பெரும்பழ வயிற்றையும்

வீட்டில் விட்டு வந்தவளின்

ஒஞ்சி உப்பி

தானாகப் பீய்ச்சும்

வெண்பாலை

நீள்வயிறு ருசிக்க

நிறைத்துக்கொள்கிறது

அலுவலகக் கழிப்பறையின்

கட்டாந்தரைக் குழந்தை

 

-         சாய் வைஷ்ணவி

வலசை போகும் விமானங்கள் தொகுப்பு, கடல் பதிப்பகம் , 8680844408

 

 

குழந்தையை சிறுகோட்டு வாயையும், பெரும்பழ வயிற்றையும் உருவகமாக்கிக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒஞ்சி என்றால் முலை என்று பொருள்.. முலை கனத்து , தானாக வழியும் தாய்ப்பால் அலுவலகக் கழிப்பறையில் வீணாவதை , தன் குழந்தைக்கான பாலை கழிப்பறையின் தரையெனும் குழந்தைக்குப் பீய்ச்சுவதாக உருவகப்படுத்தி எழுதியிருக்கிறார். 

 

ஒரே உணர்வு தான், ஒரே துயரம் தான் கவிதையில் இரு வேறு காலகட்டத்தில் பதிவாகியிருக்கிறது. ஒரே உணர்வை எழுதும் போது இவ்வாறான ஒற்றுமைகள் படைப்புகளில் நேர்வது இயற்கைதான் எனினும் இளம் படைப்பாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய இடமும் இதுவாகவே இருக்கிறது.

 

 கவிதைகளில்  நிறைந்திருக்கும் துயரம் என்பது வாசகனின் மனதுக்குள் படிமமாகி விடக்கூடியது, இந்தக் கவிதைகள் தரும் வலிகளும் அவ்வாறு தான். நினைவுகளின் இடுக்குகளில் அமர்ந்து கொண்டு, அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஏதாவது நிகழ்வைக் கடக்கும் போது இந்தக் கவிதைகள் முன் வந்து நின்று தங்களை அடையாளப்படுத்தும்.

 

ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்

வியாழன், 27 அக்டோபர், 2022

கவிதை ரசனை 8

 

கவிதைகள் உயிருள்ள பிராணிகள். அதுவும் மனிதரிடமிருந்து பிறப்பதனாலோ என்னவோ அவற்றுக்கு மனித குணம், மனித மனம், மனித சிந்தனை தாம். அவை தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் மனிதர்களைப் போன்றே ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. சொல்ல வந்ததைப் பட்டென்று போட்டு உடைத்துவிடுவர் சிலர். தயங்கித் தயங்கி சொல்லவந்ததைச் சொல்லியும் சொல்லாமலும் மருகி நிற்பர் சிலர். சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் குறிப்புணர்த்தும்படி வேறெதோ ஒன்றைச் சொல்லி அதன் வழி நாம் அவர் சொல்ல வந்ததை உணரச் செய்வர் சிலர். கவிதைகளுக்கும் இதே குணமுண்டு. சில கவிதைகள் வெளிப்படையாகப் பேசி விடுகின்றன. சில கவிதைகள் சொற்களை வாசலாக்கி பொருளை உட்பக்கமாக ஒளித்து வைத்திருக்கின்றன. தாழிடப்பட்டிருக்கும் சொற்களை ஒவ்வொன்றாகத் திறந்து கவிதையின் பொருளைக் கண்டடையும் படி இருக்கின்றன. நவீன கவிதைகள் நேரடியாக பெரும்பாலும் பேசுவதில்லை. அவை சொல்ல வந்த பொருளை சொற்களுக்குள் ஒளித்து வைத்திருக்கின்றன. கவிதையின் சொற்களே தாழ்களாயிருக்கின்றன அவையே சாவியுமாக இருக்கின்றன. வாசகன் சொற்களைக் கொண்டே சொற்களைத் திறந்து பொருளை அடைய வேண்டியிருக்கும். இது ஒரு மகத்தான அனுபவமாக இருக்கும். ஆகவே தான் நவீன கவிதைகள் கொண்டாடப்படுகின்றன. பொருளும் கூட ஒன்றாயிராது. வாசகரைப் பொறுத்து, வாசிக்கும் மனநிலையைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலையிலும் புதிய புதிய வாசல்களை நவீன கவிதைகள் திறந்து காட்டியபடி இருக்கின்றன.

கவிதைகளின் வாசல்களுக்குள் பயணிப்பது என்பது அலாதியானது. ஒரு இருட்குகைக்குள் பயணிக்கும் சாகச உணர்வோடும் ஒரு வெட்டவெளியின் சுதந்திரத்தோடும் நாம் அவற்றுக்குள் பயணிக்க முடியும். கவிதைக்குள் கவிஞனுக்கான இடமென்ற ஒன்றுண்டு. அவனுக்கான சிம்மாசனம் அது. வாசகன் கவிதையின் ஒவ்வொரு சொல்லாகத் திறந்து திறந்து அதை அடைய வேண்டும். சமயங்களில் அவன் அடைவது அதனினும் உயர்வான ஒன்றாயிருக்கக் கூடும். அந்தச் சுதந்திரத்தைத் தான் நவீன கவிதைகள் தருகின்றன. ஒரு நிலைக்கண்ணாடியைப் போலல்லாமல் ஒரு மாயக் கண்ணாடி போல நாம் நினைத்ததையெல்லாம் காட்டும் வல்லமை படைத்தவை கவிதைகள். 

கவிதைகள் நிகழ்விலிருந்து விலகி நின்று எதிர்க்கோணத்தில் அதை தரிசிக்க வல்லவை. அவ்வாறே நமக்கும் புலப்படுத்துபவை. பெரு.விஷ்ணுகுமாரின் இந்தக் கவிதை அதற்குச் சான்று


சிரசாசனம்


முதல்முறையாக நான் சிரசாசனம் பழகுகையில் 

வானத்தின்மீது சம்மணமிட்டு நிமிர்ந்து நின்றேன் 

அடுத்த கணம் உச்சந்தலையில் நிலம் முட்டியது 

நம்ப முடியவில்லை

ஆகாயத்திலிருந்து பூமி தொடும் தூரம்தானா...

விடையிலிருந்து எம்பும்போது மட்டும் ஏனோ

கேள்வியின் கிளை எளிதாகச் சிக்கிவிடுகிறது

தற்சமயம் 

நான்தான் என் வீட்டைப்போல 

இவ்வுலகு மொத்தத்தையும் சுமந்துகொண்டிருக்கிறேன்

உதவிக்கு ஒருவர்கூட இல்லாதபோதும் 

நான் மட்டுமே செய்வதற்குச் சற்றுச் சிரமமான காரியம்தான் 

என்றாலும்

மறுநாள் வீதியில் நடந்துசெல்கையில்

அனைவருக்கும் நான் யாரெனத் தெரிந்திருந்தது


- பெரு.விஷ்ணுகுமார் 

“ அசகவதாளம்” தொகுப்பிலிருந்து , காலச்சுவடு வெளியீடு, தொடர்புக்கு 04652278525



தலைகீழாய் நடக்கும் போது நமக்கு உலகமே தலைகீழாய் இருப்பதான ஒரு மயக்கத்தைத் தருவது போதை தான். இந்த போதையை ஒரு போதை வஸ்து தான் தரவேண்டுமென்பதில்லை. கவிதை தரும்.  இந்தக் கவிதையை தலைகீழாய் இருக்கும் ஒருவனின் தலைகீழ்ப் பார்வை என நேரடியாக ரசிக்கலாம் தான்; ஆனாலும் இந்தத் தலைகீழ்த் தனத்தை வேறெதுவோடாவது பொருத்திப் பார்த்துக்கொள்ளக் கூடிய இடத்தையும், சுதந்திரத்தையும் இக்கவிதை தருகிறது. தான் தான் இந்த வீட்டைப் போல இவ்வுலகு மொத்தத்தையும் சுமந்து கொண்டிருக்கிறேன் என்பதான நினைப்பு தான் ஒருவனின் இருப்பை பதற்றமாக்குகிறது. அந்நினைப்பு தான் இக்கவிதைக்கான பொறி. சிரசாசனம் என்கிற தலைப்பே பொருத்தமாயிருக்கிறது. அது தானொருவன் மட்டும் தலைகீழாய் நிற்பதன் குறியீடாக இருக்கிறது. தலைகீழாய் நிற்பது என்பதே இயல்பிலிருந்து பிறழ்ந்த ஏதோ ஒன்றின் குறியீடாக இருக்கிறது. ஏதோ ஒன்று என்பது இங்கு ஒரு கோடிட்ட இடம். நிரப்பிக்கொள்தல் சூழல் தரும் வாய்ப்பு. மறுநாள் வீதியில் நடந்து செல்கையில் அனைவருக்கும் நான் யாரெனத் தெரிந்திருந்தது என்கிற கடைசி வரிகள் ஒருமுறை வாசிப்பில் இறுமாப்பின் உணர்வைத் தருகிறது. மறுமுறை வாசிப்பில் பகடியாகத் தெரிகிறது. நவீன கவிதையை எந்தக் கோணத்திலும் அணுகிவிட முடியும் என்பதையும் உணர்த்துகிறது இந்தக் கவிதை.  



கவிஞர் இசையின் கவிதைகள் நல்லுணர்வைத் தருவன. நல்ல வாசிப்பனுபவத்தைத் தருவன.  எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டத்துக்கும் பிரம்மாண்டமளிப்பது ஒரு சின்னஞ்சிறியது என்பதை தத்துவ மொழிதலைப் போலல்லாமல் கவித்துமாக மொழிதல் ஆசுவாசமானது. ஒரு சின்னஞ்சிறியது குறித்த கவிதை



சின்னஞ்சிறியது


நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்று 

ஏலத்திற்கு வந்தது.

பிரம்மாண்ட அரண்மனையின் விண்முட்டும் கோபுரம் 

அதன் உச்சியில் ஒரு சிறுபுறா.

வாங்கி வந்து

வரவேற்பறையில் மாட்டிவைத்தேன்.

ஒவ்வொரு நாளும்

அந்தப் புறா இருக்கிறதாவெனத்

தவறாமல் பார்த்துக்கொள்வேன்

எனக்குத் தெரியும்

அது எழுந்து பறந்துவிட்டால்

அவ்வளவு பெரிய பிரம்மாண்டம் 

சடசடவெனச் சரிந்துவிடும்.


- இசை

“உடைந்து எழும் நறுமணம்” தொகுப்பிலிருந்து, காலச்சுவடு வெளியீடு, தொடர்புக்கு 04652278525


அவ்வளவு பெரிய மாளிகை ஓவியத்தையும் பிரம்மாண்டமாகக் காட்டுவது அதில் உயிர்ப்போடு வரையப்பட்டிருக்கும் ஒரு சிறு புறா என நினைப்பது கவிதை மனது. ஒரு பிரம்மாண்டத்தைக்  காட்சிப்படுத்த ஒரு சின்னஞ்சிறியது தேவைப்படுகிறது. ஒரு கோட்டை பெரிய கோடெனக் காட்ட அருகில் சின்னக் கோடு வரைவது போலான எளிய அறிவியலும் இந்தக் கவிதைக்குள் இருக்கிறது. ஒரு புறா தான் அவ்வோவியத்தின் பிரம்மாண்டம் என்கிற அழகியலும், ஒரு சிறு உயிர்ப்பு தான் அந்தக் கட்டிடத்தின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றுகிற ஒன்று என்கிற அறிவியலுமாக இந்தக் கவிதை காட்சிப்படுத்தப்படுகிறது. பழங்கதைகளில் மந்திரவாதியின் உயிர் ஒரு சிறுகிளியிடம் இருப்பதைப் போல இந்த ஓவியத்தின் பிரம்மாண்டம் இந்தச் சிறு புறாவிடம் இருக்கிறது. 


-


ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்


சனி, 24 செப்டம்பர், 2022

கவிதை ரசனை - 7

கவிதை ரசனை 



கவிதைகள் ஒரு குளத்தில் பூக்கும் பல்வேறு நிறமும் மணமும் கொண்ட பூக்கள். அழகியல், அறிவியல், அனுபவம், சமூகத்தின் மீதான குறுக்குவிசாரணை, ரெளத்திரம், என பல குணங்களையும் கொண்டவை. மிடுக்கும் சிடுக்குமாக எப்போதும் அலையும் ஓர் இராணுவ அதிகாரி வீடு வந்ததும் தன் ஆடைகள் தளர்த்தி, உடைக்கு உள்ளேயிருக்கும் மிடுக்கைக் கொஞ்சம் தளர்த்தி தன் குழந்தையிடம் குழைவாரே அப்படி கவிதைகளும் குழந்தைகளிடம் குழைகின்றன. குழந்தைகளுடன் நடை பயின்று விளையாடுகின்றன. கவிதை குழந்தைமையைக் கொண்டாடுகிறது. குழந்தைகளுக்கென தயாராகும் எல்லாப் பொருட்களிலும் கலைநயம் மிளிரும்; குழந்தைகளைக் கவரும் வண்ணங்கள் நிறைந்திருக்கும். குழந்தைகளைப் பற்றிய கவிதைகளிலும் அப்படியான வண்ணங்கள் வந்து நிறைந்துவிடுகின்றன. 


இயல்பாகவே குழந்தையின் குறும்புகளை ரசிக்கும் நாம் கவிதையென்று வரும் போது அதைக் கொண்டாடுகிறோம். குழந்தைமையைக் கவிதையில் கொண்டாடிய கவிதைகள் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முகுந்த் நாகராஜனின் கவிதைகள் தாம். நீர் தெளித்து விளையாடுதல், குழந்தைக்கு பந்து வீசுதல், ஜன்னல் சீட் போன்ற பல கவிதைகள் என்றென்றைக்கும் நினைவில் இருக்கும்படியான படைப்புகள். அவரது மொழியும், சின்னச் சின்ன சம்பவங்களையும் அழகிய கவிதைகளாக்கிவிடும் அவரது சொல்நேர்த்தியும், அவரைத் தனித்துவமான கவிஞராக அடையாளம் காட்டுகின்றன. அவரது கவிதை ஒன்று...


                        பூப்பறித்தல்


வழியில் அழுது அடம் பிடிக்கும் 

குழந்தையை மிரட்ட

இருப்பதிலேயே சின்னக் கிளையை

சாலையோர மரத்தில்

தேடுகிறாள் அம்மா.

அழுகையை நிறுத்திய குழந்தை 

அதே மரத்தின்

பூ வேண்டும் என்கிறது.


முகுந்த் நாகராஜன்

கிருஷ்ணன் நிழல் தொகுப்பிலிருந்து 


குழந்தையை மிரட்டும் சின்ன சம்பவம் தான் கவிதை. இந்தக் கவிதையில் சில சொற்களை எவ்வளவு லாவகமாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது இந்தச் சின்ன சம்பவத்தின் மீது அழகுப் பூச்சுகளைப் பூசி மெருகேற்றியிருக்கிறது. இருப்பதிலேயே சின்னக் கிளை என்கிற வரி அம்மாவின் மனதைக் காட்டுகிற வரி. குழந்தையை மிரட்டவும் வேண்டும், வலிக்காமலும் அடிக்க வேண்டும் என்பதான அம்மாவின் மனதினை இந்த ஒரு வரி காட்டிவிடுகிறது. அதே மரத்தின் பூ வேண்டுமெனக் கேட்கும் குழந்தையின் மனம் தான் இந்தக் கவிதை. அழுகையை நிறுத்தியவுடனே அழுகையிலிருந்து மீண்டுவிடும் சக்தி குழந்தைகளுக்குத் தான் வாய்க்கின்றன. அடித்தாலும் கொன்றாலும் மீண்டும் அம்மாவின் காலைக் கட்டிக்கொள்ளும் குழந்தையை இந்தக் கவிதை அழகுற நம் முன் வடித்துத் தந்திருக்கிறது. பூப்பறித்தல் எனும் கவிதையிலில்லாத கவிதையின் தலைப்பு இந்தக் கவிதையில் நிகழும் நிகழ்வாக மட்டுமன்றி வாசிக்கும் மனங்களில் நிகழும் விளைவாகவும் இருக்கிறது. 


குழந்தைகள் எதுவரை குழந்தைகளாக இருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. நம் நவீன வாழ்வு தந்த பேரழுத்தங்களில் ஒன்று இந்தக் கேள்வி. நம் குழந்தைகள் நம் குழந்தைகளாக இருப்பதில்லை, குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பதுமில்லை. மூன்று வயதுக்கும் முன்னரே பள்ளிகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் தம் பால்யங்களைத் தொலைத்துவிடுகிறார்கள். தங்கள் குழந்தைமையைத் தொலைத்துவிடுகிறார்கள். இவ்வுலகை அழகிய கண்களால் தரிசித்து மகிழ வேண்டிய வயதில் அவர்கள் மீது கணக்கும் அறிவியலும் திணிக்கப்படுகிறது. உலக அறிவையெல்லாம் மூன்று வயதிலேயே அடைந்துவிட வேண்டுமென்கிற பெற்றோர்களின் நிர்பந்தம், போட்டி நிறைந்த உலகிற்குள் அவர்களை இழுத்துவந்து விடுகிறது. ந.பெரியசாமியின் இந்தக் கவிதை, குழந்தைகள் என்று தம் குழந்தைமையைத் தொலைத்தார்கள் என்று பேசுகிறது. 



பள்ளிக்கூடம்


அடிக்கடி நீரிலிட்டு

புதிது புதிதாக சோப்பு வாங்க 

பூனை மீது பழி போடுவாள்


விருந்தினரின் செருப்புகளை ஒளித்து 

புறப்படுகையில் பரபரப்பூட்டி 

நாயின் மீது சாட்டிடுவாள்


தேவைகளை வாங்கிக் கொள்ள 

உறுதியளித்த பின் தந்திடுவாள் 

தலையணை கிழித்து மறைத்த ரிமோட், வண்டி சாவிகளை


கொஞ்ச நாட்களாக குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்


மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது 

அவளை பள்ளிக்கு அனுப்பி.


- ந.பெரியசாமி

குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீல வானம் தொகுப்பிலிருந்து


இது இயல்பாக நாம் எதிர்கொள்ளும் சிக்கல் தான். பள்ளிக்குச் செல்லும் வரை இருந்த குழந்தை தனியார் பள்ளிகள் தரும் மன அழுத்தத்திலும் வீட்டுப்பாடச் சுமைகளிலும் கசக்கப்பட்டு தன் குழந்தைத் தன்மையை இழந்து விடுகிறது. அதுநாள் வரைக்குமான குறும்புகள் குறைந்து குழந்தைகள் வளர்ந்துவிடுகிறார்கள் வெகு வேகமாக. முந்தைய தலைமுறைக் குழந்தைகள் அனுபவித்த பல அற்புதங்களை இழந்து நம் காலத்துக் குழந்தைகள் நவீன வாழ்வின் சாட்சியாக வளர்கிறார்கள். கல்விமுறையிலும் பெற்றோர் மனங்களிலும் தற்போது ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு இன்னும் அதிகமாகி புதிய கற்பித்தல் முறைகளாலும், வாழ்வியல் கல்வி முறைகளாலும் நாம் வேறொரு திசையை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலம் இது. இப்படியான காலத்தின் சாட்சி தான் ந.பெரியசாமியின் கவிதை.






-


ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்