செவ்வாய், 21 மார்ச், 2023

செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா ? - பகத்சிங்


 


செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா ?


- மாவீரன் பகத்சிங் தனது இறுதிக்கடிதத்தில்


ஞாயிற்றுக்கிழமை  பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 105ஆவது சந்திப்பில் படித்ததில் பிடித்தது நிகழ்வில் பேசிய வாசகர்கள் அனைவருக்கும் பகத்சிங் துர்காபாபிக்கு எழுதிய கடிதம் எனும் சிறு நூலைப் பரிசாக வழங்கினோம். கவிஞர் சோலைமாயவன் இந்நூலின் ஐம்பது பிரதிகளை வாங்கி அனைவருக்கும் வழங்கினார். இந்நூல் கவிஞர் நாணற்காடன் அவர்களின் சிறப்பான மொழிபெயர்ப்பில் கீற்று வெளியீடாக வந்துள்ளது. மிக முக்கியமான நூல்... 

இலக்கிய வட்டம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பாரதியிடம் அந்நூலைக் கொடுத்துவிட்டு அம்மாவை ஊரில் விட நாங்கள் கிளம்பிவிட்டோம். பாரதி நாங்கள் இரவு திரும்ப வரும் போது கேட்டாள் ஏன் என்னை அழ வைத்துவிட்டுப் போனீர்கள் என்று. சட்டென எனக்கு நினைவில் வரவில்லை.. ஏன் அழுதாய் என்று கேட்டபோது.. தனியாக இந்நூலைப் படித்து வெகுநேரம் அழுதேன் என்றாள்...

இன்றைய நாளான 22 மார்ச் 1931 ல் பகத்சிங் எழுதிய கடிதம் இது.. மார்ச் 23 தூக்கிலிடப்பட்டார்..
நானும் வாசித்தேன்.. நீங்களும் வாசிக்க வேண்டும்மொழிபெயர்ப்பாளர் நாணற்காடன் அவர்கள் இந்தச் சிறுநூலுக்கு எழுதிய முன்னுரை இங்கு..

23 வயதில் நாட்டு விடுதலைக்காக, மக்களின் மாண்புக்காக சீரிய சிந்தனையும், சிறந்த செயல்களும் செய்து தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத்சிங், எனது இளமை உணர்வுகளில் மின்னலாகத் தங்கிவிட்ட வரலாற்று நாயகன். அன்றைய பகத்சிங், ராஜ்குரு, சந்திரசேகர ஆசாத், சுக்தேவ் இவர்களின் போராட்ட வரலாற்றுக்குள் துர்கா பாபியின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது.

தனது இறுதி நொடிகளில் துர்கா பாபி க்கு பகத்சிங் எழுதிய இந்தக் கடிதம் ஏற்கனவே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஹிந்தியில் இந்தக் கடிதத்தை வாசித்து முடிக்கும்போது யாரோ சிறைக்கம்பிகளைத் தட்டும் ஓசை எனக்கும் கேட்கத் தொடங்கியது. அந்த ஓசை அனைத்துச் செவிகளுக்கும் கேட்கட்டும்.

செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா? என பகத்சிங் துர்கா பாபிக்கு எழுதிய சொற்கள் எல்லோருக்குமானவை தாமே.

அவர்கள் சோசலிச நாட்டைக் கட்டமைக்கும்போது எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள். அப்போது அனைவருக்கும் உணவு கிடைக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமைகள் இருக்காது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமாக பார்க்கப்படுவர்.- பகத்சிங்

பேரன்புடன்

நாணற்காடன்


நூலிலிருந்து சில வரிகள் :

அரசாங்கம் எனது உடலை வேண்டுமானால் அழிக்கலாம். ஆனால், எனது சிந்தனைகளை ஒருபோதும் கொல்ல முடியாது.

அநியாயத்தையும், கொடுமைகளையும் செவிட்டு அரசாங்கத்தின் காதுகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டி இருந்தது. செவிடர்கள் காதில் விழ வைக்க பெரிய சத்தத்தை எழுப்ப வேண்டுமல்லவா ?

அநியாயமும் அடக்குமுறையும் தாம் வன்முறை. அதற்கெதிராக தமது வலிமையை வெளிப்படுத்திக்காட்டுவது வன்முறை ஆகாது.

மதம் குறுகிய மனப்பான்மையை வளர்க்கிறது. மேலுமது, புரட்சியின் பாதையில் பல தடைகளை உண்டாக்குகிறது.

நமது புரட்சியின் லட்சியமே சோசலிச அரசை அமைப்பது தான். மனிதனை மனிதன் உறிஞ்சுவதையும், ஒரு நாடு இன்னொரு நாட்டைச் சுரண்டுவதையும் அதன் மூலம் தான் முடிவுக்குக் கொணர முடியும்.


கடைசி நேரம் நெருங்கிவிட்டது. இப்போது நான் கடவுளை நினைத்துக்கொண்டால், பகத்சிங் ஒரு கோழை என்று அனைவரும் சொல்வார்கள். வாழும்வரை எப்படி இருந்தேனோ, அப்படியே மரணத்தையும் தழுவி இந்த உலகை விட்டு நீங்க விரும்புகிறேன். மரணத்தை எதிரில் கண்டதும் அவனது கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன என்று யாரும் சொல்லிவிடக் கூடாது.

எனது தாய்நாட்டின்
இந்த மண்ணிலிருந்து
வரும் நறுமணம்
இறந்தாலும் என் இதயத்திலிருந்து வெளியேறாது
விடைபெறுகிறேன்

- பகத்சிங்


நூல் விலை ரூ 10/-
தொடர்புக்கு : 9942714307 




1 கருத்து:

  1. அருமை. பகத்சிங்கின் வீரம் அவனை வாசிப்பவர்களிடமும் பற்றி எரியவல்லது

    பதிலளிநீக்கு