கவிதை ரசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை ரசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மகிழ்ச்சியிலும் துயரத்திலும் துளிர்க்கும் துளிக்கண்ணீர் - கவிதை ரசனை 11

 மகிழ்ச்சியிலும் துயரத்திலும் துளிர்க்கும் துளிக்கண்ணீர்

 

விதை நம் மனதை எப்போதும் தொட்டுக்கொண்டிருக்கும் தென்றல். எப்போதாவது அலைக்கழிக்கும் புயல். தென்றலும் புயலுமாக மாறி மாறி கவிதை காட்டும் முகம் என்பது வாசகனுக்கு உண்மையில் பேரனுபவத்தைத் தரக் கூடியது தான். ஒரு கவிதையை வாசித்துவிட்டு துள்ளிக்குதித்துக் கொண்டாடும் மகிழ்ச்சியையும், ஒரு கவிதையை வாசித்தவுடன் எதுவுமற்று நிர்மலமான மனதுடன் உறைந்து போய் அமர்ந்துவிடக் கூடிய துயரத்தையும் நல்ல வாசக மனம் விரும்பியே அனுபவிக்கும்.  

 மகிழ்ச்சியும் துயரமும் படைப்பூக்கத்தின் பிரதான கிரியா ஊக்கிகள். படைப்பு போதையைப் போல, கண்ணீரைப் போலவும் தான்... மகிழ்ச்சியிலும் ஒருவன் போதையாயிருப்பான் , போதையைத் தேடுவான், துயரத்திலும் அப்படியே. துயரத்தில் கண்ணீர் வருவதைப் போலவே பெருஞ்சிரிப்பில் முட்டிக்கொண்டு வந்து விழும் ஒரு துளிக்கண்ணீர்.

 கவிதையில் ஆடும் தூளிகள் :

 கவிதைகளில் இரண்டு தூளிகளை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ஒன்று நெகிழ்ச்சியில் என்னை ஆழ்த்தி அசைந்தது. இன்னொன்று அதிர்ச்சியில் அசையாமல் அப்படியே நிற்க வைத்துத. இரண்டும் மிகவும் பாதித்தவை.


முதல் கவிதை கவிஞர் ஜே.மஞ்சுளாதேவியினுடையது. இயல்பான, அன்றாடங்களின் அழகு ததும்பும் கவிதைகள் இவருடையன. கிராமங்களில், சாலைகளில், நடைப்பயணங்களில், பணியிடங்களில் , வீட்டில் என இவர் செல்லும் இடங்களிலெல்லாம் ஒரு கவிதை இருகைகளை நீட்டி குழந்தையென இவரை அழைக்கும்.. இவரும் வாரியணைத்து இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு வந்துவிடுவார். பின்னர் அக்குழந்தைக்கு பொட்டிட்டுப் பூவைத்து சிங்காரித்து நம் முன் நிறுத்துவார். குழந்தையை யாருக்குத்தான் பிடிக்காது ?

 தொட்டில் மரம் எனும் கவிதையில் ஆடும் தூளி கிராமத்து வயல்வெளிகள் ஈரம் நிறைந்த அப்பத்தாக்களின் மனதையும், கைக்குழந்தையுடனும் களையெடுக்க வந்துவிடும் வேலையாளின் வலியையும் சேர்த்தே காட்சிப்படுத்துகிறது.

 தொட்டில்மரம்

 

வயல் ஓரத்தில்

இருக்கும் அந்தமரம்

அப்பத்தா போலவே

வயதானது

 எப்போதும் தொட்டில் குழந்தையுடன் இருக்கும்

 களை எடுப்பவளின்

முன் பக்கம் கொஞ்சம் நனையத் தொடங்கும்போதே

அப்பத்தாவுக்குத் தெரிந்துவிடும்

 போ கண்ணு புள்ளையப் பார்த்துட்டு வா

என்று அப்பத்தா அனுப்பியதும்

வா என்று

மரம்

கிளையை ஆட்டும்

 

-         ஜே.மஞ்சுளாதேவி

ரயில் கோமாளிகள்  தொகுப்பிலிருந்து, படைப்பு பதிப்பகம் – 73388 97788

 இந்தக் கவிதையில் வரும் பெண்கள் என் அம்மாவின் காலத்தின் காலடியில் என்னைக் குழந்தையெனக் கிடத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். நான் அந்தக் காலத்தின் நான்கோ அல்லது ஐந்து வயதுச் சிறுவனாக செம்மண் புழுதியில் கால்களுதைத்து விளையாடிக்கொண்டிருக்கிறேன். அம்மாவோ கடலைக் காட்டில் கடலை பறித்துக் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது அம்மாவின் மடியில் இருக்கும் நிலக்கடலைகளைக் கொஞ்சமாக வாங்கி செம்மண் உதறி, ஓடுடைத்து உள்ளிருக்கு நிலக்கடலை முத்துகளின் சுவையில் கோடையை விரட்டியபடியிருக்கிறேன். எப்போதேனும் அபூர்வமாகக் கிடைக்கும் மூன்று முத்துகள் இருக்கும் நிலக்கடலை, கடலைக் காட்டில் எந்த அக்காவுக்குக் கிடைத்தாலும் எனக்கு அருளப்படுகிறது. வரப்போர வேப்பமரத்தில் தூளியிலாடும் அக்காக்களின் குழந்தைகளின் சிணுங்கலுக்குத் தாலாட்டுப்பாட காற்சட்டை செம்மண்ணை உதறியபடி ஓடோடிப் போகிறேன். கவிதை இப்படியாக என் பழைய காலங்களுக்கு என்னை விரட்டுகிறது... அது கவிதை.. அப்படித்தான் விரட்டும்..

 

இன்னொரு கவிதையான சூ.சிவராமனின் ஒரு கிலுகிலுப்பையின் தனிமையோ திக்கற்று அமரச் செய்துவிட்டது...

  

ஒரு கிலுகிலுப்பையின் தனிமை

 

உரத்துப் பெய்யும் மழை

ஓயாத அழுகை

தூளி நடுவே

காற்றில் ஆடும் கிலுகிலுப்பை

சவப்பெட்டியோ

மிகச் சிறியது

 

-         சூ.சிவராமன்

சற்றே பெரிய நிலக்கரித்துண்டு” – தொகுப்பிலிருந்து , கொம்பு  வெளியீடு 9094005600

 

 

கடைசி இரண்டு வரிகளின் சின்ன சவப்பெட்டி மனமெங்கும் கனக்கிறது. அதைச் சுமக்க முடியாமல் தள்ளாடுகிறேன். நகர முடியவேயில்லை... அத்தனை கனம். வெறும் காட்சி தான்... ஆனால் வாழ்நாளில் பார்த்துவிடக் கூடாத காட்சி. நினைத்தும் விடக்கூடாத காட்சி. ஒரு குழந்தையின் மரணத்தை என்றுமே நேரில் சந்தித்துவிடாத வரமொன்றைத் தா என் வாழ்க்கையே என இந்தக் கவிதையிடம் கேட்டுக்கொள்கிறேன்.

 முதல் கவிதை தந்த நெகிழ்ச்சியும் இரண்டாம் கவிதை தந்த அதிர்ச்சியும் ஓர் இரவைக் களவாடிவிடக் கூடியவை. உறக்கத்தைக் காவுவாங்கிவிடக் கூடியவை. கவிதையின் அரும்பணிகளில் ஒன்று தான் இது... கவிதைகளின் பெரும் திருவிளையாடல்களுள் ஒன்று தான் இது...

 

 இந்தக் கவிதைகள் மனதுக்குள் எப்போதோ வாசித்த ஒரு தூளியின் அசைவை அசை போட வைத்தது... அது என் நினைவுகளின் சேகரிப்பில் எப்போதும் இருக்கக் கூடிய கவிதை .. கவிஞர் ஸ்ரீ நேசனுடையது.. இந்தக் கடவுளின் தூசி அசைகின்ற போதெல்லாம் நான் மானசீகமாக ஒருமுறை கவிதையைத் தொழுதுகொள்வேன்... ஒரே ஒருமுறை ஸ்ரீநேசன் ஆட்டிவைத்துவிட்ட இந்தத் தூளியோ ஓயாது ஆடிக்கொண்டே இருக்கப் போகிறது ...

  

கடவுளின் தூளி

                  -ஸ்ரீநேசன்

 அம்மாவும் அப்பாவும்

குழந்தையுமான ஒரு குடும்பத்தை

விபத்து நடத்திக் கொன்றாள் கடவுள்

அம்மா நல்லவளாகையால்

வலப்புறமிருந்த

சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தாள்

அப்பா கெட்டவன் எனச் சொல்லி

இடப்புற

நரகத்தில் தள்ளி விட்டாள்

நல்லதா கெட்டதா எனத் தெரியாமல்

குழந்தையைத் தன்னுடனே வைத்துக்

கொண்டாள்

தாய் தந்தையில்லாத ஏக்கத்தில்

அழத் தொடங்கிய குழந்தை

நிறுத்தவே இல்லை

முகிலைத் துகிலாக்கி மின்னலைக்

கயிறாக்கிப் பிணைத்து

வெட்ட வெளியில் தூளி ஒன்றைக்

கட்டிய கடவுள்

குழந்தையை அதிலிட்டுத் தாலாட்டத்

தொடங்கினாள்

சொர்க்கத்துக்கும்

நரகத்துக்குமிடையே அசைந்தது

தூளி

வலப்புறம் அம்மாவையும்

இடப்புறம் அப்பாவையும்

காணத் தொடங்கிய குழந்தை

அழுகையை நிறுத்திக் கொண்டது

அப்பாடா என ஓய்ந்தாள் கடவுள்

குழந்தையோ மீண்டும் வீறிடத்

தொடங்கியது

பாவம் கடவுள் குழந்தையை

நல்லதாக்குவதா

கெட்டதாக்குவதா

என்பதையே மறந்துவிட்டுத்

தூளியை ஆட்டத் தொடங்கி ஆட்டிக்

கொண்டே இருக்கிறாள்.

திங்கள், 13 மார்ச், 2023

வாழ்வென்பது வேறொன்றுமல்ல - கவிதை ரசனை 10

வாழ்வென்பது வேறொன்றுமல்ல


கலையின் மகத்தான பணிகளில் ஒன்று தனிமனிதனின் தனிமைக்குத் துணையாக, ஆறுதலாக எப்போதும் உடன் வருவது. தனிமனிதனின் அகத்தேடல் தான் கலையாக புறத்தில் வெளிப்பட்டது. புறத்தே கலை நிகழ்த்தும் பணி அளப்பரியது. சமூகத்தின் சிறு துளைகளுக்குள்ளும் காற்றெனெ நுழைந்து இசையின் கொண்டாட்டத்தினைக் கொணர்வதும், ஊசியென நுழைந்து கிழிசல்களைத் தைப்பதுமாக கலை அளப்பரிய பணியைச் செய்கிறது என்பது உண்மைதான். அகத்தே கலை நிகழ்த்தும் பணியோ அற்புதமானது. ஒவ்வொரு மனிதனும் நவீன வாழ்வில் தனித்துவமாக இருக்கிறான், தனக்குள் தனியனாக இருக்கிறான். அவனுக்கு யாரையும் விட தான் எனும் ஒருவன் தேவைப்படுகிறான். தன்னையே இழந்து நிற்பவனைக் காலமும் கை விட்டுவிடும். எதை இழப்பினும், எவரை இழப்பினும் தன்னை இழக்காத வரைக்கும் ஒருவனுக்கு எதுவும் பெரிய இழப்பன்று. யாவும் மீளக் கூடியவை தான். தன்னை இழக்காது அதாவது சுயத்தை எப்போதும் பாதுகாத்து வைக்க கலை ஒருவனுக்குத் துணை நிற்கிறது. 

நமது குரலைக் கேட்டுக்கொள்ளும் செவிகள் நமக்குத் தேவையாயிருக்கின்றன சமயங்களில். மறு பேச்சு, ஆதரவுக் குரல், பதில்கள் என எதுவும் தேவைப்படும் முன், நமக்குத் தேவையாயிருப்பது வெறுமனே நமது பேச்சை அல்லது புலம்பல்களைச் செவிமடுத்துக் கேட்டுக்கொள்வது தான். அதற்கான யாரும் இல்லாத போது தான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறோம்.  செடிகள், மரங்கள், ஏன் கற்கள், சிலைகள் என அஃறிணைகளோடு பேசுபவர்களையும் தனித்து காற்றோடு வெறுமையாய்ப் பேசுபவர்களையும் நாம் பார்க்கிறோம். அவர்களின் தேடல்களெல்லாம் கேட்டுக்கொள்வதற்கான செவிகள்… செவிகள் மட்டுமே.

அவ்வாறான செவிகளை யாசிக்கும் அல்லது அவ்வாறான செவிகள் அருளப்பெற்ற கவிதை ஒன்று… 


என் பேச்சைப்  பொறுமையாகக்

கேட்டுக்கொண்டிருக்கின்றன

இந்தக் கட்டிடங்கள்

இனி வாழ்வின் மேல்

எனக்கு ஒரு குறையுமில்லை


             - கார்த்திகா முகுந்த்  

- “ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான்”  எழுத்து பிரசுரம் வெளியீடு , 

செவிகள் யாவர்க்கும் தேவையெனினும் இந்திய சமூகத்தில் பெண்களின் குரல்களைப் பெரும்பாலும் யாரும் செவிமடுப்பதேயில்லை நூற்றாண்டு காலமாக. அவர்களது சொற்கள் புறம் தள்ளப்படுகின்றன, அவர்களது புலம்பல்களும் கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. இச்சூழலில், வீடுகளில் தனித்திருக்கும் அவர்களது மொழிகளைக் கேட்க ஏதாவதொன்றைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. செல்லப் பிராணிகளை, விருப்பக் கடவுளரின் சிலைகளை, தொட்டிச் செடிகளை பெண்கள் அதிகம் நேசிப்பதன் பின்பான உளவியில் இதுவாகவும் இருக்கலாம்.

“என் பேச்சைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றன இந்தக் கட்டிடங்கள்” எனும் முதல் பகுதியில் இந்தக் கவிதையின் குரலில் ஒரு வலி தென்படுகிறது. அது பெண்வலி என்பது சட்டெனப் புரிந்தும் விடுகிறது. அந்தக் குரலில் நம் அம்மாக்கள், அக்காக்கள் தென்படுகிறார்கள். அவர்களது முந்தைய நாட்களின் நினைவுகளை நமக்கு இந்தக் கவிதை காட்சிப்படுத்துகிறது. “ இனி வாழ்வின் மேல் எனக்கு ஒரு குறையுமில்லை “ என்கிற இந்தக் கவிதையின் பின்பகுதியில் ஒலிப்பது விரக்தியின் குரல். அது விரக்தியோடும், சலிப்போடும், ஒருவித எள்ளலோடும் மாறி மாறி ஒலிக்கிறது நம் காதுகளில்.  யாருக்கும் நாம் தனிமையை வலிந்து பரிசளித்திடக் கூடாது எனப் புரியவைக்கிறது கவிதை.

கட்டிடங்களெனும் அஃறிணைகளாவது இல்லாத செவிகளைத் திறந்து எனது சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன எனும் ஆதங்கத்தின் வரைதல் தான் இந்தக் கவிதையாகியிருக்கிறது.

கேட்கும் செவிகளற்று இருப்பவர்களின் பக்கமும் கலை நகர்ந்து நிற்கும். கவிதை இறங்கி வந்து பார்க்கும். அப்படியான ஒரு கவிதை …


யாரும் எடுத்துக்கொள்ளாத ஏதாவதொன்று...


எல்லாப் பேருந்திலும் யாரும் அமராத

பக்கத்து இருக்கையுடன் 

திருநங்கை ஒருவர்

எனக்காகக் காத்திருக்கிறார்...

ஒவ்வொரு பிரார்த்தனைவேளையிலும் 

என் முன் வரிசையில் ஒரு குழந்தை 

என்னைப்பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வகுப்பறையிலும் 

எனக்கென்று முகிழாது காத்திருப்பான் 

ஒரு மெல்லக்கற்பவன்...

எனக்குப் பரிசாகத் தாம் படிக்காத 

அல்லது தமக்குப் பரிசாகக் கிடைத்த 

புத்தகங்களை அளித்து  

தம் செலவை 

மிச்சம்பிடித்துக்கொள்கிறார்கள் நண்பர்கள்...

விழாக் கூட்டத்தில்

மேடை சரியாகத் தெரியாத மூலையில்

எப்பொழுதும் எனக்கென்று 

ஒரு நாற்காலி கிடைத்துவிடும்...

அதனருகில் ஒரு தொட்டிசெடியும்

சில பூக்களும் இருந்துவிடும்....

யாரும் எடுத்துக்கொள்ளாத

ஏதாவதொன்று

தினமும் எனக்குக் கிடைத்துவிடுகிறது...

அதுவே எனக்குப் பிடித்தும் இருக்கிறது!


- ப்ரிம்யா கிராஸ்வின் 

“ தப்பரும்பு” , வாசகசாலை வெளியீடு, 9942633833


யாரும் எடுத்துக்கொள்ளாது தனித்துவிடப்பட்ட ஒன்றை இந்தக் கவிதை ஆதரவாக அணைத்துக்கொள்கிறது. யாரும் இல்லையென்று யாருமில்லை என ஆறுதலாகிறது. 

திருநங்கைக்கு அருகில் விகல்பமின்றி அமர்ந்து கொள்கிறது, மெல்லக் கற்பவனின் மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறது மேலும் மேடை தெரியாத போதும் அருகிலிருக்கும் சிறு செடியை ரசித்தபடி அமைதியாகிறது இந்தக் கவிதை.  கவிதையின் ஆதாரமாக இருக்கும் அன்பு எப்போதும் ஏங்கிச் செத்தபடியிருக்கும் ஒவ்வோர் உயிருக்கும் துணையாவது மட்டுமே அதன் அடிப்படை குணமாக இருக்கும்.

யாரும் இல்லாத ஒருவளாக ஒலிக்கும் கவிஞர் கார்த்திகா முகுந்தின் கவிதைக்கும், யாரும் இல்லாதவர்களுக்காக உடன் நிற்பதாக ஒலிக்கும் கவிஞர் ப்ரிம்யா கிராஸ்வினின் கவிதைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இவற்றின் அடியாழத்தில் ஒலிப்பது அன்பின் குரல். மனிதத்தின் கிளர்ந்தெழும் நறுமணம். கூப்பிடு தொலைவில் இருக்கக் கூடிய வாழ்வின் சிறு பரிணாமம்.

வாழ்வென்பது வேறொன்றுமல்ல, யாருக்காவது அன்பைத் தேக்கிவைத்தல், யாரிடமாவது அன்பாயிருத்தல், யார் பொருட்டாவது அன்பைச் சுமந்து கொண்டே அலைதல்.




வியாழன், 27 அக்டோபர், 2022

கவிதை ரசனை 8

 

கவிதைகள் உயிருள்ள பிராணிகள். அதுவும் மனிதரிடமிருந்து பிறப்பதனாலோ என்னவோ அவற்றுக்கு மனித குணம், மனித மனம், மனித சிந்தனை தாம். அவை தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் மனிதர்களைப் போன்றே ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. சொல்ல வந்ததைப் பட்டென்று போட்டு உடைத்துவிடுவர் சிலர். தயங்கித் தயங்கி சொல்லவந்ததைச் சொல்லியும் சொல்லாமலும் மருகி நிற்பர் சிலர். சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் குறிப்புணர்த்தும்படி வேறெதோ ஒன்றைச் சொல்லி அதன் வழி நாம் அவர் சொல்ல வந்ததை உணரச் செய்வர் சிலர். கவிதைகளுக்கும் இதே குணமுண்டு. சில கவிதைகள் வெளிப்படையாகப் பேசி விடுகின்றன. சில கவிதைகள் சொற்களை வாசலாக்கி பொருளை உட்பக்கமாக ஒளித்து வைத்திருக்கின்றன. தாழிடப்பட்டிருக்கும் சொற்களை ஒவ்வொன்றாகத் திறந்து கவிதையின் பொருளைக் கண்டடையும் படி இருக்கின்றன. நவீன கவிதைகள் நேரடியாக பெரும்பாலும் பேசுவதில்லை. அவை சொல்ல வந்த பொருளை சொற்களுக்குள் ஒளித்து வைத்திருக்கின்றன. கவிதையின் சொற்களே தாழ்களாயிருக்கின்றன அவையே சாவியுமாக இருக்கின்றன. வாசகன் சொற்களைக் கொண்டே சொற்களைத் திறந்து பொருளை அடைய வேண்டியிருக்கும். இது ஒரு மகத்தான அனுபவமாக இருக்கும். ஆகவே தான் நவீன கவிதைகள் கொண்டாடப்படுகின்றன. பொருளும் கூட ஒன்றாயிராது. வாசகரைப் பொறுத்து, வாசிக்கும் மனநிலையைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலையிலும் புதிய புதிய வாசல்களை நவீன கவிதைகள் திறந்து காட்டியபடி இருக்கின்றன.

கவிதைகளின் வாசல்களுக்குள் பயணிப்பது என்பது அலாதியானது. ஒரு இருட்குகைக்குள் பயணிக்கும் சாகச உணர்வோடும் ஒரு வெட்டவெளியின் சுதந்திரத்தோடும் நாம் அவற்றுக்குள் பயணிக்க முடியும். கவிதைக்குள் கவிஞனுக்கான இடமென்ற ஒன்றுண்டு. அவனுக்கான சிம்மாசனம் அது. வாசகன் கவிதையின் ஒவ்வொரு சொல்லாகத் திறந்து திறந்து அதை அடைய வேண்டும். சமயங்களில் அவன் அடைவது அதனினும் உயர்வான ஒன்றாயிருக்கக் கூடும். அந்தச் சுதந்திரத்தைத் தான் நவீன கவிதைகள் தருகின்றன. ஒரு நிலைக்கண்ணாடியைப் போலல்லாமல் ஒரு மாயக் கண்ணாடி போல நாம் நினைத்ததையெல்லாம் காட்டும் வல்லமை படைத்தவை கவிதைகள். 

கவிதைகள் நிகழ்விலிருந்து விலகி நின்று எதிர்க்கோணத்தில் அதை தரிசிக்க வல்லவை. அவ்வாறே நமக்கும் புலப்படுத்துபவை. பெரு.விஷ்ணுகுமாரின் இந்தக் கவிதை அதற்குச் சான்று


சிரசாசனம்


முதல்முறையாக நான் சிரசாசனம் பழகுகையில் 

வானத்தின்மீது சம்மணமிட்டு நிமிர்ந்து நின்றேன் 

அடுத்த கணம் உச்சந்தலையில் நிலம் முட்டியது 

நம்ப முடியவில்லை

ஆகாயத்திலிருந்து பூமி தொடும் தூரம்தானா...

விடையிலிருந்து எம்பும்போது மட்டும் ஏனோ

கேள்வியின் கிளை எளிதாகச் சிக்கிவிடுகிறது

தற்சமயம் 

நான்தான் என் வீட்டைப்போல 

இவ்வுலகு மொத்தத்தையும் சுமந்துகொண்டிருக்கிறேன்

உதவிக்கு ஒருவர்கூட இல்லாதபோதும் 

நான் மட்டுமே செய்வதற்குச் சற்றுச் சிரமமான காரியம்தான் 

என்றாலும்

மறுநாள் வீதியில் நடந்துசெல்கையில்

அனைவருக்கும் நான் யாரெனத் தெரிந்திருந்தது


- பெரு.விஷ்ணுகுமார் 

“ அசகவதாளம்” தொகுப்பிலிருந்து , காலச்சுவடு வெளியீடு, தொடர்புக்கு 04652278525



தலைகீழாய் நடக்கும் போது நமக்கு உலகமே தலைகீழாய் இருப்பதான ஒரு மயக்கத்தைத் தருவது போதை தான். இந்த போதையை ஒரு போதை வஸ்து தான் தரவேண்டுமென்பதில்லை. கவிதை தரும்.  இந்தக் கவிதையை தலைகீழாய் இருக்கும் ஒருவனின் தலைகீழ்ப் பார்வை என நேரடியாக ரசிக்கலாம் தான்; ஆனாலும் இந்தத் தலைகீழ்த் தனத்தை வேறெதுவோடாவது பொருத்திப் பார்த்துக்கொள்ளக் கூடிய இடத்தையும், சுதந்திரத்தையும் இக்கவிதை தருகிறது. தான் தான் இந்த வீட்டைப் போல இவ்வுலகு மொத்தத்தையும் சுமந்து கொண்டிருக்கிறேன் என்பதான நினைப்பு தான் ஒருவனின் இருப்பை பதற்றமாக்குகிறது. அந்நினைப்பு தான் இக்கவிதைக்கான பொறி. சிரசாசனம் என்கிற தலைப்பே பொருத்தமாயிருக்கிறது. அது தானொருவன் மட்டும் தலைகீழாய் நிற்பதன் குறியீடாக இருக்கிறது. தலைகீழாய் நிற்பது என்பதே இயல்பிலிருந்து பிறழ்ந்த ஏதோ ஒன்றின் குறியீடாக இருக்கிறது. ஏதோ ஒன்று என்பது இங்கு ஒரு கோடிட்ட இடம். நிரப்பிக்கொள்தல் சூழல் தரும் வாய்ப்பு. மறுநாள் வீதியில் நடந்து செல்கையில் அனைவருக்கும் நான் யாரெனத் தெரிந்திருந்தது என்கிற கடைசி வரிகள் ஒருமுறை வாசிப்பில் இறுமாப்பின் உணர்வைத் தருகிறது. மறுமுறை வாசிப்பில் பகடியாகத் தெரிகிறது. நவீன கவிதையை எந்தக் கோணத்திலும் அணுகிவிட முடியும் என்பதையும் உணர்த்துகிறது இந்தக் கவிதை.  



கவிஞர் இசையின் கவிதைகள் நல்லுணர்வைத் தருவன. நல்ல வாசிப்பனுபவத்தைத் தருவன.  எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டத்துக்கும் பிரம்மாண்டமளிப்பது ஒரு சின்னஞ்சிறியது என்பதை தத்துவ மொழிதலைப் போலல்லாமல் கவித்துமாக மொழிதல் ஆசுவாசமானது. ஒரு சின்னஞ்சிறியது குறித்த கவிதை



சின்னஞ்சிறியது


நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்று 

ஏலத்திற்கு வந்தது.

பிரம்மாண்ட அரண்மனையின் விண்முட்டும் கோபுரம் 

அதன் உச்சியில் ஒரு சிறுபுறா.

வாங்கி வந்து

வரவேற்பறையில் மாட்டிவைத்தேன்.

ஒவ்வொரு நாளும்

அந்தப் புறா இருக்கிறதாவெனத்

தவறாமல் பார்த்துக்கொள்வேன்

எனக்குத் தெரியும்

அது எழுந்து பறந்துவிட்டால்

அவ்வளவு பெரிய பிரம்மாண்டம் 

சடசடவெனச் சரிந்துவிடும்.


- இசை

“உடைந்து எழும் நறுமணம்” தொகுப்பிலிருந்து, காலச்சுவடு வெளியீடு, தொடர்புக்கு 04652278525


அவ்வளவு பெரிய மாளிகை ஓவியத்தையும் பிரம்மாண்டமாகக் காட்டுவது அதில் உயிர்ப்போடு வரையப்பட்டிருக்கும் ஒரு சிறு புறா என நினைப்பது கவிதை மனது. ஒரு பிரம்மாண்டத்தைக்  காட்சிப்படுத்த ஒரு சின்னஞ்சிறியது தேவைப்படுகிறது. ஒரு கோட்டை பெரிய கோடெனக் காட்ட அருகில் சின்னக் கோடு வரைவது போலான எளிய அறிவியலும் இந்தக் கவிதைக்குள் இருக்கிறது. ஒரு புறா தான் அவ்வோவியத்தின் பிரம்மாண்டம் என்கிற அழகியலும், ஒரு சிறு உயிர்ப்பு தான் அந்தக் கட்டிடத்தின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றுகிற ஒன்று என்கிற அறிவியலுமாக இந்தக் கவிதை காட்சிப்படுத்தப்படுகிறது. பழங்கதைகளில் மந்திரவாதியின் உயிர் ஒரு சிறுகிளியிடம் இருப்பதைப் போல இந்த ஓவியத்தின் பிரம்மாண்டம் இந்தச் சிறு புறாவிடம் இருக்கிறது. 


-


ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்


ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

கவிதை ரசனை - 3

கொலுசு இதழில் நான் எழுதும் கவிதை ரசனை தொடரில் இந்த மாதம் இரண்டு கடல்களைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன்...

ஒன்று கவிஞர் தாமரை பாரதி எழுதிய உவர்மணல் சிறுநெருஞ்சியில் இருக்கும் கடல்.. மற்றொன்று கவிஞர் அதீதன் சுரேன் எழுதிய மேதகு அதிகாரி தொகுப்பிலிருக்கும் கடல்... உங்கள் வாசிப்புக்கு இங்கே..

                                        கவிதை ரசனை - இரா.பூபாலன் கவிதை என்பது காணாதன காணுதல் ... கண்கள் கண்டதையே வேறொன்றாக மனக் கண்ணால் காணுதல்.. இன்னொன்றாக, இன்னும் பலவாக வாசகனைக் காணச் செய்தல்.. கவிதை நதியைப் போல எங்கோ உற்பத்தியாகி செல்லும் வழிகளிலெல்லாம் பசுமையை விதைத்து விட்டுப் பாய்ந்தபடி இருக்கிறது. சமயங்களில் அது வில்லிலிருந்து புறப்பட்ட மாய அம்பைப் போல ஒன்றெனக் கிளம்பி பலவென உருவெடுத்து இலக்கான இதயங்களைத் துளைத்து வெளியேறும் வல்லமை கொண்டது. ஒரு கவிதை தரும் கண நேர சிலிர்ப்பையும், நெடு நேர அதிர்ச்சியையும் , பலநாட்கள் தொந்தரவு செய்யும் நினைவின் ஊடாடுதல்களையும் வேறெதுவும் தந்துவிடக் கூடுமா தெரியவில்லை. ஆனால் கவிதை மொழியின் உச்சத்தில் இருந்து கொண்டு அவற்றை நிகழ்த்திக் காட்டுகிறது. இரண்டு கடல் கவிதைகளை வாசிக்க நேர்ந்தது சமீபத்தில். ஒன்று கடலைப் பேரெழில் கண்களால் பார்த்து ரசித்து கடைசி வரியில் கடல் நம்மைப் பார்ப்பதாக கணநேர சிலிர்ப்பைத் தரும் கவிதை...
கவிஞர் தாமரை பாரதியின் சமீபத்திய தொகுப்பான உவர்மணல் சிறுநெருஞ்சியில் இருக்கும் அந்தக் கவிதை இதோ...
                        கடல் பார்த்தல்
நீராலான கடலாய் விரிந்திருக்கிறாள்
பிரபஞ்சத்தின் முதல் உயிரியைப் பிரசவித்த பெருந்தாய்
உலகின் பெரிய விலங்கு முதல் சிறிய உயிரி வரை
அனைத்தையும்
தனக்குள் பொதிந்து வைத்திருக்கும்
கடலை
இரு கண்களால் பார்த்துக்கொண்டிருப்பவனை
பல்லாயிரம் கோடிக் கண்களால் கடல் பார்த்துக்கொண்டிருக்கிறது.
- தாமரை பாரதி
" உவர்மணல் சிறுநெருஞ்சி " வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் தொடர்புக்கு : 9940446650 இந்தக் கவிதையின் கடைசிப்பத்தி தான் கவிதை... அதிலும் கடைசி இரு வரிகள் தரும் சிலிர்ப்பு அற்புதம். தேவதச்சனின் இல்லாத குருவிகளின் சப்தம், இசையின் இல்லாத கால்களை ஆட்டுதி அமுதே தரும் இனிமை, ஷங்கர் ராம சுப்ரமணியனின் இலையெல்லாம் இல்லாத கிளிகளாகும் மாயம் என பல நல்ல கவிதைகள் தந்த சிலிர்ப்புகளின் இன்னுமொரு துளி... உவர்மணல் சிறுநெருஞ்சி நல்ல வாசிப்பனுபவத்தையும், மொழிநுட்பத்தின் தேர்ந்த சொற்களின் நிறைவையும் தரும் தொகுப்பு.. இன்னொரு கடல் கவிதை கவிஞர் அதீதனின் மேதகு அதிகாரி தொகுப்பில் வாசித்தது. இந்தக் கடல் நிஜக் கடலைப் போல பேரமைதியாகத் துவங்கி, பேரலையென மேலெழும்பி உள்ளுக்குள் சுழற்றி இழுத்துக் கொண்டது. இந்தக் கவிதை மனதுக்குள் ஓயாமல் அலையெழுப்பிக் கொண்டிருக்கிறது.. அதுவும் வெவ்வேறு அலைகளை... அந்தக் கவிதை...
                இருளில் தொலைந்திடும் கடல்
எவ்வழியே வெளியேறுவதெனும் தெளிவற்றுத்
தவிக்கிறது இச்சிறு மீன்
அதன் உலகம் இனி இக்கண்ணாடிச் செவ்வகத்திற்குள்தான்.
என்கிற உண்மையை ஏற்க மனமின்றி
அங்குமிங்கும் அலைபாய்ந்துகொண்டிருக்குமதைத் தன் கைகளில் எடுக்குமவளுக்குப் புறவளர்ச்சி பதினாறாயினும்
உள்ளுக்குள் இன்னமும் குழந்தைதான்
சினைக்கால முட்டையிலிருந்து வெளிவருகையில்
பருத்து வெளித்தெரியத் தொடங்கின மார்புகள்
உப்பை விரலால் தொட்டுச் சுவைக்கும் வாய்க்குள்
பெருகும் அலைகளில் துள்ளியாடி கடலைச் செதில்களால் அளக்குமதன் கண்களுக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறாள் ஏதுமறியாதவள்
புதிதாய் வந்துசேர்ந்திருக்கும் இடத்தின்
அந்நியத்தன்மையை கிரகிக்க முடியாமல் .
நாற்சுவர்களிலும் மோதிக்குலைந்து போயிருக்கும்
இருவுயிர்களும் வேறெவருக்கும் கேட்காதவாறு
பேசிக்கொள்கின்றன
வெளிச்சமற்ற அறைக்குள் பயந்திருப்பவளின் மேலங்கிக்குள் முகமறியா ஒருவனின் கைகள் நுழையும் கணத்தில் விழுந்துடைகிறது மீன்தொட்டி.
- அதீதன்
"மேதகு அதிகாரி" வெளியீடு : கடல் பதிப்பகம் தொடர்புக்கு 8680844408 இந்தக் கவிதை ஒரு தொட்டி மீனையும், மனவளர்ச்சியற்ற ஒரு பதினாறு வயதுப் பெண்ணையும் ஒரு சேர ஒரு செவ்வக அறைக்குள் சுழல விடுகிறது. ஒரு குறும்படத்தைப் போல காட்சிகளாகக் கதை சொல்லிக்கொண்டே வந்து இறுதிக் காட்சியில் பட்டென்று செவ்வகத்தை உடைத்துப் பேரதிர்ச்சியைத் தெளிக்கிறது நம் மீது.. அந்த இரண்டு மீன் குஞ்சுகளுமோ துள்ளத் துடிக்க நம் நினைவுகளைச் சலனப் படுத்தியபடியே இருக்கிறார்கள்... சலனப்படுத்தவும், சிலிர்ப்பைத் தரவும், சிரிக்க அழ வைக்கவுமான கவிதைகள் நம்மிடையே உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன. நாம் தேடிக் கண்டடைந்து விட்டால் போதும்.... ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகரகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்