வியாழன், 19 மே, 2016

மழை போலான கவிதைகள்...


நண்பர் ஃபிரோஸ்கான் ஜமால்தீன் இலங்கையில் வசிக்கிறார். சிறு வயது முதல் தீவிர இலக்கிய ஈடுபாட்டாளர். பல்வேறு விருதுகளுக்கும், தொகுப்புகளுக்கும் சொந்தக்காரர். தனது கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதித் தரக் கேட்டிருந்தார். எழுதி அனுப்பியிருந்தேன். நூல் வெளிவந்துவிட்டது. அசத்தலான வடிவமைப்பு, நல்ல கவிதைகள் என மெனக்கெட்டு கொண்டுவந்திருக்கிறார்கள். வாழ்த்துகள் நண்பரே.
அவரது கவிதைத் தொகுப்பான என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்திக்கு நான் எழுதிய அணிந்துரை இங்கு ...


மழை போலான கவிதைகள்...

அநாதரவாக மழை பெய்யுமா. மழை யாருக்காவது அநாதரவாயிருக்குமா அல்லது மழைக்கு யாராவது அநாதரவாக இருந்துவிட முடியுமா.? மழையுடன் முரண்பட்டுவிட்டு பிறகென்ன வாழ்வு. மழை அனைத்து உயிர்களுக்கும் ஆதரவாகத்தான் பெய்கிறது. மழை போலத்தான் கவிதைகளும். எல்லா நேரங்களிலும் மனிதத்துக்கு ஆதரவாகவே, உயிர்களுக்கு ஆதரவாகவே மழையைப் போலவே பெய்கின்றன கவிதைகள். கவிதைகளுக்கு ஒருவன் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டால் போதும்; கவிதை இறுக அணைத்துக் கொள்ளும் , வலிகளுக்கு மருந்தாகும், போராட்டக் குரலாகும், சறுக்கல்களில் தாங்கிக் கொள்ளும், அழும் வேளைகளில் அணைத்துக் கொண்டு தேற்றும்.

கவிதைகள் செய்ய வேண்டியவையல்ல, மலர வேண்டியவை அல்லது பிறக்க வேண்டியவை. வற்புறுத்தலின் பொருட்டோ, வேண்டுகோள்களின் பொருட்டோ கவிதை செய்ய முடியாது செய்தாலும் அது கவிதையாக இராது. சூழல்களுக்கு ஏற்ப அனிச்சையாக அவை கவிஞனிலிருந்து மலரும். அத்தருணம் கவிஞனும் முன் அறிந்திலன். அத்தருணத்தைத் தடுத்துவிடவும் கருவியில்லை.

ஃபிரோஸ்கான் ஜமால்தீனிடம் நிறைய சொற்கள் இருக்கின்றன. அவை கவிதைகளாக வடிவம் பெறுகின்றன இவரது தன் முனைப்பில். எப்போதும் கவிதைக்கான சொற்களுக்கு நாம் அலைய வேண்டிய அவசியம் இல்லை. நம்மைச் சுற்றிலும் நிறைந்து கிடக்கின்றன கவிதைகள். கண்டெடுக்கத்தான் கலைக்கண் தேவையிருக்கிறது நமக்கு. இவரது இந்தக் கவிதை, இயல்பான தாய்மையின் பதிவு தான். கவிதைக் கண்கள் திறந்து கொண்டதால் ஒரு தாய்மையின் சக உயிர்களின் மீதான அரவணைப்பு கவிதையாகியிருக்கிறது.

தாய்க்குணம்

கரப்பான் பூச்சி
மயிர்க்கொட்டிப் புழு
பல்லி - எனப் பார்த்து
அம்மா பயந்து கொள்ளும் பட்டியலில்
பூனையும் உண்டு
நேற்றிரவு பக்கத்து வீட்டுப் பூனையின்
பிரசவத்தின் போது
அம்மா கூடவே இருந்தாள்.
எங்க வீட்டு நாயின் பசி வேட்டைக்கு
பூனைக்குட்டிகள் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காய்

தாய்மையின் ஸ்பரிசத்தைத் தந்து போகின்ற எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான். நவீனச் சொற்களும், அடர்த்தியான உட்கட்டமைப்பும் அவசியமற்றது தான் அந்த ஸ்பரிசத்தின் முன். அப்படியான கவிதை தான் இது.

பொய்களால் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது மனித வாழ்வு. அன்றாட நிகழ்வுகளிலும் , நமது வாக்குகளிலும் உண்மையைப் புறந்தள்ளிவிட்டு பொய் நம்மைச் சூறையாடி பல காலம் ஆகிவிட்டதல்லவா. உண்மையை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவன் எனச் சொல்லிக்கொள்வதில் தான் ஆச்சர்யம் அடங்கியிருக்கிறது. பொய் அத்தியாவசியமாகிவிட்டது.


நமது பொய்களை நம்பும் படி ஆக்குவதும் அவற்றை உண்மையாக்குவதும் தான் நமது வெற்றிக்கான, இருத்தலுக்கான செயல்முறை என்றாகிவிட்டது. என்றாலும், பொய்யின் கோரமுகத்துக்குப் பின் எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையின் பயந்த முகம் சொல்லும் ஒரே ஒருவனையாவது உறுத்திக் கொல்லும்.

பச்சைப்பொய்

தீராப்பசி கொண்டலையும் நாக்குக்குப்
பொய்களைப் புசிப்பதென்றால்
அலாதிப் பிரியம்
அதுவும்
பச்சை பச்சையாகப் புசித்துவிடுவதில்
அபாரம்
புசித்தலுக்குப் பின்
தன் உதடுகளால் சொட்டும் குருதியில்
சில நேரம் காணக்கிடைக்கலாம்
பொய்களின் உண்மை முகம்

உலகின் ஆதி உயிர் எதிர்கொண்ட முதல் பெரும் சரிவு துரோகத்தில் தான் தொடங்கியிருக்கும்.
துரோகத்தின் கரங்கள் எப்போதும் நமது குரல்வளையை நெறிக்க நெருங்கியபடியே தான் இருக்கின்றன. மதியுள்ளவன் தப்பிக் கொள்கிறான். ஏமாந்தவன் இழந்து விடுகிறான். சக மனிதனின் சறுக்குதல்களுக்கும், வஞ்சிக்கபட்டவனின் தேற்றுதல்களுக்கும் நீளும் முதல் கரம் கவிதைக் கரமாக இருப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது. கவிதையின் வேலையும் கவிஞனின் வேலையும் அதுதானே. இங்கு கவிஞன் அக்குணத்தை அழகாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.
நீட்டும் கை

ஒரு துரோகத்தின் ஆர்ப்பரிப்புக்குள்
மறைந்திருக்கிறேன்
அவற்றைத்தாண்டி
என்னை மீட்ட
யார் தான் வருவார்
அகந்தையின் ஆரவாரத்துக்கடியில்
வஞ்சகத்தின் பதுங்குகுழியினுள்
கோபத்தின் திமிறலில்
அடர்ந்த வனத்தினுள் அறியப்படாத
வண்ணத்துப்பூச்சியின் முட்டை போல
ஒளிந்திருக்கிறது அவனது ஆன்மா
பிடிவாதத்தை விட்டு வரச்சொல்லி
அடம்பிடிக்கும் தனிமையை உடைத்தெறிந்து
அவனை மீட்க
நீட்டும் கைகள் என்னுடையது.

துரோகத்துக்கு உள்ளானவனுக்கு ஆதரவாகவும், எளியோர்க்கான ஊன்றுகோலாகவும் நீளும் கவிஞனின் கைகளுக்கு பிரியமாகக் கைகுலுக்குகிறேன்.

ஃபிரோஸ்கான் ஜமால்தீனின் தொகுப்பில் நிறைய நல்ல கவிதைகள் காணக் கிடைக்கின்றன. அதை விடவும் மகிழ்ச்சியளிப்பது நல்ல கவிஞன் காணக் கிடைப்பது. கவிதைகளின் கட்டமைப்பிலும், பொருள் தேர்தலிலும், சொற்களிலும் நம்பிக்கைக்குரிய கவிஞன் தென்படுகிறான். இவை யாவற்றையும் விட பெருமகிழ்ச்சியளிப்பது இந்தக் கவிதைகளில் தெரியும் மனிதமும் அன்பும். அவை இந்தக் கவிதைகளுக்குக் கூடுதல் உயிர்ப்பைத் தருகின்றன. நல்ல கவிதைகளை இன்னு கூடுதலாக அணி செய்கின்றன.

ஃபிரோஸ்கான் ஜமால்தீன் தன்னைக் கவிதைகளின் வசம் ஒப்படைத்திருக்கிறார். கவிதைகள் இவரைக் காப்பாற்றும். நல்ல கவிதைகளின் வரம் அது.

மனமார்ந்த நல்வாழ்த்துகள் கவியே ...

செவ்வாய், 10 மே, 2016

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான " தேநீர் இடைவேளை" இம்மாதக் கட்டுரை

ஆறிலும் சாவு நூறிலும் சாவு


கவிஞர் வைகறை அவர்கள் கடந்த இருபத்தியொன்றாம் தேதி அகால மரணமடைந்து விட்டார் ( இந்த வார்த்தையைத் தட்டச்சும்போதே விரல்கள் நடுங்குகின்றன. அவர் மரணமடைந்துவிட்டார் என்பதையே ஏற்க முடியவில்லை ). வெறும் 37 வயது தான் அவருக்கு. நல்ல கவிஞர், பண்பான மனிதர்,சிறந்த ஆசிரியர், ஜெய்குட்டி எனும் 4 வயதுப் பையனுக்கு மிகச்சிறந்த அப்பா இப்படி எல்லாக் கோணங்களிலும் அழகான ஒரு மனிதன் திடீரென மறைந்து விட்டார் என்பது பேரதிர்ச்சியாக உள்ளது. நன்றாக இருந்தவர் தான். அவரது மரணத்துக்குக் காரணம் கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பு. கணையம் சாதாரணமாகவெல்லாம் பாதிப்புக்குள்ளாகாது, மேலும் ஒரே நாளிலெல்லாம் மரணம் வரை திடும்மென செயலிழக்காது. பிறகெப்படி இந்த இழப்பு ..?

வைகறைக்கு அடிக்கடி வயிறு வலி வந்திருக்கிறது. வாயுக்கோளாறு, அமில எரிச்சல் என்று எதையாவது நினைத்துக் கொண்டு மருத்துவரிடம் செல்லாமல் இவரே மருந்துக்கடையில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்.இது எவ்வளவு தவறான செயல். என்ன வியாதி, எங்கு பாதிப்பு என ஆராயாமல், நாமாக ஒரு முடிவு எடுத்துக்கொண்டு மருந்துக்கடையில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவது மிகப்பெரிய முட்டாள் தனமல்லவா ? இப்போது அவரை இழந்து அவர் குடும்பம் வாடிக் கொண்டிருக்கிறது. படித்தவர்கள் படிக்காதவர்கள் என நாம் அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறு இது.

முன்பெல்லாம் 100 வயது 90 வயது வரை ஆரோக்கியமான மனிதர்கள் இருந்தார்கள். அப்போதைய உணவுப் பழக்கவழக்கங்களும், சுற்றுச்சூழலும் அவர்களை வாழவைத்தது. இப்போது அப்படியா..? ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்னும் பழைய பழமொழி இப்போது தான் சரியாகப் பொருந்துகிறது.
மருந்து மாத்திரைகளில் தான் உயிர் வாழ்கிறோம். காரணம் உணவே மருந்து என்னும் நமது பழைய கோட்பாட்டைப் புறந்தள்ளிவிட்டதால். எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகள் தான் இப்போதெல்லாம். எனக்குத் தெரிந்த நிறையப் பெண்கள் தங்களது கைப்பையிலேயே தலைவலி மாத்திரைகள் ஒரு அட்டை வைத்திருக்கிறார்கள். சாரிடான் போட்டால் தான் தலைவலி நிற்கும் என்பார்கள். தினம் ஒன்று கூட சாப்பிடுவார்கள் என நினைக்கிறேன். இதன் பக்க விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார்களா அவர்கள் .?
லேசாக சளி, காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி என்று எது வந்தாலும் உடனடியாகக் கைவசம் வைத்திருக்கும் ஆங்கில மருந்துகளைப் போட்டுக் கொள்வது நமக்கு வழக்கமாகிவிட்டது. முன்பெல்லாம் இந்த சிறு சிறு வியாதிகளுக்கு பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என்ற பெயரில் நமது சமையலறை அஞ்சறைப்பெட்டிகளிலேயே மருந்துப் பொருட்களைக் கண்டு வைத்திருந்தோம். மஞ்சள் , குருமிளகு,வெற்றிலை,சுக்கு இப்படி.. ஆனால் இப்போது பெட்டி நிறைய கலர் கலராக மாத்திரைகளைக் குவித்து வைத்திருக்கிறோம்.


வீட்டில் எப்போதும் அப்பா விக்ஸ் ஆக்ஸன் 500 மாத்திரை ஒரு அட்டை நிறைய வைத்திருப்பார். தனக்கும்,யாருக்கும் லேசாக காய்ச்சல், உடல் வலி என்றால் போதும் அதைத்தான் போடுவார், கொடுப்பார். இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் அந்த மாத்திரை தடை செய்யப்பட்டது என்ற செய்தி வெளியானது. அப்போதே நான் அவரிடம் சொல்லி அந்த மாத்திரை வாங்குவதை நிறுத்தினேன். ஆனால், இத்தனை நாட்கள் கழித்து நமது அரசு இப்போதுதான் அந்த மாத்திரையைத் தடை செய்திருக்கிறது. அப்படியென்றால் இத்தனை நாட்களும் அந்த மாத்திரையை அனுமதித்து மக்களின் உயிரோடு விளையாடியிருக்கிறது இந்த அரசாங்கம். அப்படித்தானே.?

விசயத்துக்கு வருவோம், நண்பர் வைகறை கொஞ்சம் முன்னர் சுதாரித்து ஒரு மருத்துவமனைக்குச் சென்று தகுந்த பரிசோதனைகளைச் செய்திருந்தால் எளிய வைத்தியங்களிலேயே இந்த நோயைக் கண்டறிந்து சரி செய்திருக்கக் கூடும். அலட்சியம் ஆபத்தாகிவிட்டது.

எங்கள் நிறுவனத்தில் ஒரு நண்பர் இருந்தார். நல்ல வசதியான மனிதர். வயது 35 தான் இருக்கும். நன்றாக இருந்தவர் திடீரென சில காலங்கள் நோயாளியாகி விட்டார். பணியில் அமர்ந்திருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்தவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற போது கல்லீரல் பாதிப்பு என்று சொல்லியிருக்கிறார்கள். நோய் முற்றிய நிலையில் சென்னை, கேரளா என்று பல இடங்களில் காட்டியும் சரியாகவில்லை. ஒரு நாள் இறந்துவிட்டார். அவருக்கும் ஐந்து வயதேயான ஒரு குழந்தை இருக்கிறது. இளம் வயதிலேயே இப்போதெல்லாம் நிறைய வியாதிகள் வந்து விடுகின்றன.

பற்றாக்குறைக்கு போலி மருத்துவர்களின் கூட்டமும் உள்ளது. எங்கள் கிராமத்தில் ஒரு டாக்டர் இருந்தார். டாக்டரென்றால் டாக்டரில்லை. பொள்ளாச்சியில் ஒரு டாக்டரிடம் செவிலியராகப் பணியிலிருந்தார். அவர் தான் எங்கள் கிராமத்துக்கு டாக்டர். அவர் வீட்டின் ஒரு அறை தான் அவரது கிளினிக். தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை அவரிடம் சிறு வியாதிகளுக்கு ஊசி போட்டுக்கொள்ளலாம். நன்றாகத்தான் பார்க்கிறார் காய்ச்சல், வலிகளெல்லாம் ஒரே ஊசியில் சரியாகிவிடுகிறது என்று சொன்னார்கள். ஒரு நாள் ஒரு பெரியவரின் காய்ச்சலுக்கு ஊசி போட்டு ஏதோ பிரச்சினையாகி அவருக்கு வலதுபக்க உடல் முழுவதும் செயலிழந்து விட்டது.அப்புறம் பெரிய கலவரமாகி, போலீஸ் கேஸ் என அலைந்தார்.

பெரியவர்கள் இந்தத் தவறை தாங்கள் செய்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாது குழந்தைகள் விசயத்திலும் இப்படி அஜாக்கிரதையாக இருப்பவர்களை நினைத்தால் கடுப்பாக இருக்கிறது. குழந்தைக்குத் தடுப்பூசி போட பொள்ளாச்சி மருத்துவமனையில் காத்திருந்த போது அவசரமாக ஒருவர் தனது குழந்தையைக் கையில் தூக்கியபடி மருத்துவமனைக்குள் ஓடினார். என்ன ஏது என்று பார்க்கப் போனால், மருத்துவர் அவரைக் கண்டபடித் திட்டிக் கொண்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் குழந்தையைச் சேர்த்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன ஏது என்று அருகில் விசாரித்தால், குழந்தைக்கு காய்ச்சலாம் அதற்கு வீட்டில் இருந்த எதோ மாத்திரையில் பாதியைக் கொடுத்திருக்கிறார்கள். குழந்தையின் அப்பா தான் இது பாராசிட்டமால் தான் 200 மில்லி கிராம் தான். என்றெல்லாம் அறிவுப்பூர்மாக யோசித்துக் கொடுத்திருக்கிறார். விளைவு குழந்தையின் உடலெங்கும் தடித்து சிவந்து, அடிக்கடி வாந்தி வேறு எடுத்திருக்கிறது. பிறகு தூக்கிக் கொண்டு ஓடி வந்திருக்கிறார். இவர்களையெல்லாம் என்ன சொல்ல.

ஏதாவது நமக்கு வியாதி என்று பக்கத்தில் யாரிடமாவது சொல்லிப் பாருங்கள். ஆளாளுக்கு மருத்துவர் ஆகிவிடுவார்கள். ஆளுக்கொரு மருந்து ஆளுக்கொரு வைத்தியம் சொல்வார்கள். கல்லூரியில் படிக்கும் போது வெயிலில் அலைந்து அடிக்கடி சூடு பிடித்துக் கொள்ளும், என் நண்பனுக்கும் அப்படி ஆகிறதாகவும் அதற்கு ஒரு மருந்து இருக்கிறது என்றும் சொல்லி ஒரு மருந்தைக் கொடுத்தான். அதைக்குடித்த இரவு கடுமையான வயிற்று வலி. பயந்து போய் காலையில் மருத்துவரிடம் போனால், எல்லோருக்கும் வருவது ஒரே வியாதிதான் என்றாலும் எல்லோருக்கும் ஒரே மருந்தைக் கொடுக்க முடியாது. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து, மருந்தும் மருத்துவமும் மாறும் என்று சொல்லி வேறொரு மருந்தைக் கொடுத்தார். உண்மைதான்.

மருந்து சாப்பிடுவது எவ்வளவு அபத்தமானதோ அவ்வளவு அபத்தமானது தொட்டதுக்கெல்லாம் மருத்துவமனைக்கு ஓடுவது. குழந்தைகள் மருத்துவமனையில் காத்திருந்த போது ஒரு மருத்துவர் சொன்னது, முதலில் கூட்டுக்குடும்பமாக இருந்தபோது பாட்டி, தாத்தாக்கள் குழந்தைகளுக்கு வரும் சிறு சிறு நோய்களுக்கு கை வைத்தியத்தில் சரி செய்து விடுவர். ஆனால் இப்போது யாருமற்று தனிக்குடும்பமாக , கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவராக இருக்கும் தாய் தந்தைகள் சிறு பிரச்சினைக்கும் மருத்துவமனைக்கு வந்து விடுகின்றனர் என்று சொன்னார். ஒரு அரை நாள் மருத்துவமனையிலேயே இருந்து பார்த்தேன். டாக்டர் குழந்தை ரெண்டு நாளா மோசன் போகல என்று ஒருவர், அஜீரண வாந்தியெடுத்ததுக்கு டாக்டர் குழந்தை ரெண்டு முறை வாந்தியெடுத்துடுச்சு என்று ஒருவர், டாக்டர் குழந்தை சாயங்காலம் படுத்தது காலைல 9 மணிக்கு தான் எழுந்தாள் 14 மணி நேரம் தூங்கினா எதாவது பிரச்சினையா என்று ஒருவர் என இப்படி அறியாமையாலும் பயத்தாலும் மருத்துவமனைக்கு நிறையப் பேர் வந்த படியே இருந்தனர். மருத்துவரும் சிரித்தபடியே, இதெல்லாம் சகஜம் என்று சொல்லி அனுப்பிக்கொண்டும், அப்படியும் சமாதானமாகாதவர்களுக்கு சத்து டானிக் எழுதிக் கொடுத்தும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

மருந்து மாத்திரைகளைக் காரணமின்றியும், மருத்துவரின் ஆலோசனைகளின்றியும் வாங்கி உண்ண வேண்டாம். இந்த உடல், இந்த உயிர், இந்த வாழ்வு அனைத்தும் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு. ஒரே வரம். சிதைத்துவிட வேண்டாம்.


தேநீர் இடைவேளைகளில் நாம் பேசுவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கின்றன.... பேசலாம் ….

கொலுசு மின்னிதழில் வாசிக்க 

http://www.kolusu.in/kolusu/kolusu_may_16/index.html#p=17 

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

குழந்தைகள் கலைக்கொண்டாட்டம்

வணக்கம்,

ஒவ்வொரு வருடமும் மே மாதம் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் குழந்தைகள் கலைக்கொண்டாட்டம் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. இந்த முறை சுமார் 300 குழந்தைகளுக்கு கதை,பொம்மலாட்டம்,ஓவியம்,நாடகம் என பல்வேறு நிகழ்வுகளுடன் முழு நாள் நிகழ்ச்சி ஒன்றைத் திட்டமிட்டுள்ளோம்.

குழந்தைகளுக்கு மதிய உணவு,இனிப்பு,தின்பண்டங்கள், எழுது பொருட்கள்,புத்தகங்கள் என அனைத்தையும் வழங்கிவிடுவோம்.
இந்த நிகழ்வில் நீங்களும் குழந்தைகளும் அவசியம் கலந்துகொள்ளுங்கள் என அன்புடன் அழைக்கிறோம். மேலும், உங்கள் ஆதரவையும் உதவியையும் செய்யுங்கள் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.


புதன், 27 ஏப்ரல், 2016

ஜெய்க்குட்டி அப்பா (எ) வைகறை (எ) ஜோசப் பென்சிஹர் க்கு...


நான் இதை எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன். அந்தச் செய்தி ஒரு பெரிய இடிச்சத்தமாக என் காதுகளில் விழுந்த கணத்திலிருந்தே பேச்சற்றிருந்தேன். இப்போது வரைக்கும் அதை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ மனம் தயங்கிக்கொண்டே இருக்கிறது.அப்போது தொடங்கி சில நாட்கள் வரைக்கும் முகநூல் பக்கம் வரவேயில்லை. வந்த சில கணங்களில் நான் பார்த்ததெல்லாம் வைகறையின் முகம் தான். அனைவரும் அவர் இறந்து விட்டதாக அவரது புகைப்படத்தைப்போட்டு இரங்கல் செய்தி எழுதிக் கொண்டிருந்தனர். அதைப் பார்க்கவே சக்தியில்லை. ஆகவே, ஒரு இரங்கல் குறிப்போ அல்லது ஒரு தகவலுக்கான நிலைத்தகவலோ கூடப் போட என்னால் முடியவில்லை. சாக வேண்டிய வயதா இது..? காலமா இது..?
இப்போதுவரைக்கும் அதைப்பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. கடந்த சில நாட்களாக நான் எனக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறேன். வைகறையுடனே பேசிக்கொண்டிருக்கிறேன். நான் இப்படி இருப்பது கூடாது.
எதையாவது எழுதியாவது நான் இதிலிருந்து ஒரு பகுதியேனும் வெளிவந்துவிட நினைக்கிறேன். ஆகவே இதை எழுதுகிறேன் 
..
ஜெய்க்குட்டி அப்பா () வைகறை () ஜோசப் பென்சிஹர் க்கு...

இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இப்படியான ஒரு அடுக்கில் தான் மனதில் நீங்கள் இருந்தீர்கள் வைகறை. நாம் அறிமுகமானது இப்படி அல்ல. வைகறையைத் தெரியும் முதலில்; பிறகு அவர் ஜெய்க்குட்டியின் அப்பா என்பது தெரியும்; மிகக் கடைசியாகத் தான், அதுவும் பெயருக்குத்தான் தெரியும் அவரது பெயர் ஜோசப் பென்சிஹர் என்பது.

வைகறையை முதன் முதலில் எப்போது பார்த்தேன் என்பது வழக்கம்போலவே எனக்கு நினைவில் இல்லை. இதைச் சொல்லியே ஒரு முறை அவரிடம் கேட்டபோது அவர் சொன்னதுதான் என் நினைவுகளுக்குள் இருக்கிறது. 2010ல் வெளியான எனது முதல் தொகுப்பான பொம்மைகளின் மொழி தொகுப்பைப் பார்த்துவிட்டு 2011ன் ஆரம்ப நாட்களில் என்னை அழைத்து அரை மணி நேரம் உரையாடினார் அதுதான் எங்களது முதல் பேச்சு. பின்பு பல மாதங்கள் கழித்து அவரை கோவை இலக்கிய சந்திப்பில் முதன் முதலாகச் சந்தித்தேன். யாழி அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு பெரும் புன்னகையுடன் தோளை அணைத்துக் கொண்டு பேசிய முதல் சந்திப்பிலேயே நெருக்கமாகிவிட்டார்.


அதன் பின்னர் ஒவ்வொரு சந்திப்பிலும், ஒவ்வொரு அழைப்பிலும் நெருக்கமாகி நெருக்கமாகி இறுக்கமாகிவிட்டார். எப்போது அழைத்தாலும் வணக்கம் நண்பரே என்று ஆரம்பிப்பார். முடிக்கும் போது நல்லது, நல்லது, நல்லது என்பார். இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டால் அதை ஒரு பெரிய ம்ம்ம் என்று போட்டு நிரப்புவார். வழக்கமாகப் பேசுவதற்கு எதுவுமே இல்லையென்று நான் நினைத்த தருணங்களிலும் எதையாவது பேசிக்கொண்டிருப்பார். பேருந்தில் பார்த்த காட்சிகள், பள்ளியில் நடந்தது, ஜெய்குட்டியின் சேட்டை, கவிதை என எதையாவது பேசுவார். எப்போது அவர் பேசி முடித்து வைத்த போதும் மனம் கொஞ்சம் லேசாகியிருப்பதை உணர முடியும்.

தர்மபுரியில் பணியில் இருந்த போது ஒவ்வொரு மாதமும் தவறாமல் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வந்து விடுவார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைப் பற்றி பல இடங்களில் பல மேடைகளில் குறிப்பிட்டுப் பேசியும் இருக்கிறார். வரும் போதெல்லாம் அவர் வந்து சேர்வது நள்ளிரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணியாக இருக்கும். அழைக்க மாட்டார். பேருந்து நிலையத்திலேயே அமர்ந்திருந்துவிட்டு காலையில் தான் அழைப்பார். நீங்கள் நன்றாகத் தூங்கும் நேரம் ஏன் தொந்தரவு செய்யனும்னு அழைக்கலை என்பார். பலமுறை திட்டியுள்ளேன். ஒரு முறை நானாக இரவு ஒரு மணிக்கு அழைத்து வந்து விட்டார் எனத் தெரிந்த பின்பு போய் வீட்டுக்கு அழைத்து வந்தேன். இன்னொரு முறை காலை 4 மணிக்கு அழைத்து வந்தேன். பின்னர் நகருக்குள் நண்பர் சோலைமாயவன் அறையெடுத்துவிட்டதால் எப்போது வந்தாலும் அவரது அறைக்குச் சென்று விடுவார்.
சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு எங்களது தொகுப்பைக் கொண்டு வரலாம் என்று முடிவானவுடன் வைகறையும் இணைந்தார். கவிதைத் தொகுப்பின் ஆரம்ப வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்ள, இறுதிக்கட்ட வடிவமைப்பில் இரவு முழுதும் எங்கள் கூடவே இருந்தார். அவரது ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு எழுத்திலும் நாங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். சென்னையில் புத்தகங்கள் அச்சடிக்க கூடவே வந்தார். நான் , நிலாரசிகன் மற்றும் வைகறை மூவரும் மணி ஆப்செட் சென்றது புத்தகங்களை அச்சுக்குத் தந்துவிட்டு ஒரு சிறிய கடையில் வியர்க்க வியர்க்க பிரியாணி சாப்பிட்டது எல்லாம் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
வெளியீட்டு விழாவுக்கு நூல்கள் வெளியிட்ட க.அம்சப்ரியா,நான்,நிலா ரசிகன்,புன்னகை ஜெயக்குமார், சோலை மாயவன் ஆகியோருடன் சேர்ந்து பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார்.
புதுக்கோட்டைக்கு மாற்றலாகிப் போகும் போது அழைத்தார். தர்மபுரியில் இருக்கும் வரை மாதா மாதம் வர முடிந்தது. இனி அது முடியுமா எனத் தெரியவில்லை என வருந்தினார். பரவாயில்லை நீங்கள் அங்கு தனியாக இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணையுங்கள் நாங்கள் வருகிறோம். அங்கும் நிறையக் கூட்டங்கள் நடக்கும் அவர்களுடன் இணைந்து செயல்படுங்கள் என்றோம். அங்கு போன பின்பும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கொருமுறை வந்து விடுவார். அங்கு சென்றதுமே கவிதைகளால் பேசுவோம் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். 24-செப்டம்பர்-2014ல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.யாழி,பிராங்க்ளின்
நந்தன்ஸ்ரீதரன்கனிமொழிஜி.கீதா,அனாமிகா,சோழநிலா,நாணற்காடன்,தமிழ்வரதன் என நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததும் பேசியதுமாக மனதில் நிற்கும் நிகழ்வாக அமைந்தது.

தொடர்ந்து, வலைப்பதிவர் திருவிழா, வீதி இலக்கியக் கூட்டம் என புதுகைக்குச் செல்ல நேர்ந்த சமயங்களிலெல்லாம் வைகறை மிகுந்த அன்புடன் கவனித்துக்கொள்வார். அண்டனூர் சுரா அவர்களின் நூல் அறிமுகம் பொள்ளாச்சியில் வைத்திருந்தோம். அவர் எனது நூல் அறிமுகத்தை கந்தர்வக்கோட்டையில் வைத்தார். இந்தச் செய்தியை வைகறையிடம் சொன்ன போதே, சிறப்பு நண்பரே முதல் நாளே வாங்க, வீட்டில் தங்கிவிட்டு இருவரும் கந்தர்வக்கோட்டை செல்லலாம் என்றார். சனிக்கிழமை காலையில் அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டு, மாலை கந்தர்வக்கோட்டை சென்று இரவு வீடு திரும்பி அடுத்தநாள் காலை கிளம்பி திண்டுக்கல் சென்றுவிட்டு ஞாயிறு மாலை விடு திரும்பினேன். சனிக்கிழமை ரோஸ்லின் சகோதரி செய்த மீன்குழம்பைப் பற்றி ஒரு பதிவே எழுதினேன். அன்றே நான் வந்ததை கீதா அம்மா, ஜெயா அம்மாவிடம் சொல்ல அவர்களும் என்னைப் பார்க்க புத்தகப்பரிசுடன் வந்துவிட்டார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.எல்லாமே இப்போது நடந்தது போல இருக்கிறது.

எப்போதும் வாரம் ஒருமுறை அல்லது இருமுறையாவது பேசிவிடுவோம், ஆனால் இந்த மாதம் மட்டும் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கொருமுறை அழைத்து விடுவார் அல்லது அழைத்து விடுவேன்.
எனது அடுத்த கவிதைத்தொகுப்பு தயாராகிறது நீங்கள் இணைய விரும்புகிறீர்களா எனக் கேட்டேன். இல்லை நண்பரே கொஞ்சம் பொருளாதாரத்தைத் தயார் செய்து விட்டுச் செய்யலாம் என்றார். பொருளாதாரம் எப்போதும் நமக்குப் பிரச்சினை தான் சொல்லுங்கள் தயார் செய்கிறேன் என்றேன். வேண்டவே வேண்டாம் என்று சொன்னார். ஆனால் ஒரு தொகுப்புக்குக் கவிதைகள் தயார் என்றார் அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இன்னொரு தொகுப்பும் தயார் அதை மின்னூலாக்கலாமா என்றார். நான் இதை அவரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன் எனது ஒரு கவிதைத் தொகுப்பு, கட்டுரைகள் மற்றும் அம்சப்ரியா அவர்களது கட்டுரைகள் ஆகியவற்றை மின்னூலாக்கி பதியலாம் என்று. இப்போது அவரும் தனது கவிதைகளைத் தயார் செய்திருந்தார். எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அதன் தலைப்பு " மரணத்தின் இசைக்குறிப்புகள்". அப்போது அது உறுத்தவில்லை. இப்போது உயிர்வரை உறுத்துகிறது. இன்னும் மின்னூல் வடிவில் என்னிடம் உள்ளது. ஜூன் அல்லது அதன் பின்னர் வெளியிடலாம் என்று சொல்லியிருந்தேன்.

எனது முந்தைய கவிதைத் தொகுப்பில் நன்றி பகுதியில் வைகறையின் பெயரை விட்டுவிட்டேன். உரிமையாய்க் கேட்டார் என்னாய்யா நியாயம் இது ..? என்று. அது தான் வைகறை. மனதில் எதுவும் வைத்துக்கொள்ளத் தெரியாதவர். அடுத்த கவிதைத் தொகுப்பு தயாராகிறது இதில் உங்க பேர் இருக்கு வைகறை னு எப்படி சொல்றது.
கவிதைத் தொகுப்பு தயாரானதும் அனுப்புங்க என்றார். மின்னஞ்சலில் அனுப்பியதும் நான்கு நாட்கள் கழித்து அழைத்தவர் இரண்டு மணி நேரம் பேசினார். நிறையக் கவிதைகளை சிலாகித்தவர். சில கவிதைகளின் வரிகளை முன்னுக்குப் பின் மாற்றினால் நன்றாக இருக்கும் என்றார். ஒரு ஆச்சர்யமும் நடந்தது. ஒரு கவிதையின் கடைசி வரியை நான் எழுதிவிட்டு பின் மாற்றிவிட்டேன். அவர் அழைத்த போது இது இந்தக் கவிதைக்கு அழுத்தம் தரல என்று சொல்லி நான் முதலில் எழுதியிருந்த முடிவையே அச்சு பிசகாமல் சொன்னார். நான் அதைத்தான் முதலில் எழுதி வைத்திருந்தேன் என்று சொன்னதும் அதானே, பூபாலன் அப்படித்தான் யோசிச்சிருக்க முடியும் என்றார். கவிதைகளின் மீது , ஹைக்கூக்களின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் , புரிதலும் , பேரன்பும் கொண்ட மனிதர். அடுத்த மாதம் எனது கவிதைத் தொகுப்பை வெளியிடப் போகிறேன். இப்போது வைகறை இல்லை. ஆனால் என் கவிதைகளில் நிச்சயம் இருப்பார்.

நிறையக் கனவுகள் வைத்திருந்தவர் என்பதுதான் பதைபதைப்புக்குள்ளாக்குகிறது. கொஞ்ச நாட்களாக நிறையப் பேசினோம். நிறையத் திட்டங்கள் போட்டோம். நந்தலாலா இணைய இதழை மீண்டும் சிறப்பாகத் துவங்கி நடத்துவது, நூல்கள் அறிமுகம் செய்ய, நூல் விமர்சனங்களுக்கென்றே தனியாக ஒரு இணைய தளம் துவங்கலாம் என்று ஒரு நாள் சொன்னார். சில தினங்களில் துவங்கியும் விட்டார். தொடர்ந்து இதையும் செய்யலாம் என்றார். முடிந்தால் அந்த இணையத்தைப் பாருங்கள் www.noolvaasal.com

உயிர்மையின் பத்து நூல்கள் வெளியீட்டுவிழாவுக்கு நான்,அனாமிகா,வைகறை அனைவரும் போக வேண்டும் நண்பர்களை உற்சாகப் படுத்த வேண்டும் என நிறையப் பேசி வைத்திருந்தோம். என்னால் வர முடியாததால், அவர் மட்டும் சென்று வந்தார். வந்ததும், அந்த பத்து நூல்களையும் புதுக்கோட்டையில் சிறப்பாக அறிமுகம் செய்ய வேண்டும் என்றார். கொஞ்ச நாளில் அதன் நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்தவர் முதலில் அண்ணன் ( யாழி),பிராங்க்ளின் சார், கனிமொழி மேடம் புத்தகத்தை மட்டும் நல்லா அறிமுகம் செய்யலாம் என்று தனது கடைசி நாட்களுக்கு முன்னர் கூடச் சொல்லியபடி இருந்தார். நானும் நிச்சயம் வந்து ஒரு நூலைப் பற்றிப் பேசுவதாகச் சொன்னேன். இன்னும் சிலரிடம் கூட இதைப்பற்றிப் பேசி அவர்களிடம் சொல்லி வைத்திருந்தார் என்பதும் எனக்குத் தெரியும்.

கடைசி சில நாட்களில் பல்வேறு மன அழுத்தத்தில் இருந்தார். அதிகம் புலம்பாவிட்டாலும் சில விசயங்களைச் சொல்லி வருந்துவார். இதெல்லாம் சொந்த வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் சாதாரணம் நிச்சயம் எல்லாம் மாறும் இதிலிருந்து வெளியே வாருங்கள் என்றேன். கண்டிப்பாக பூபாலன், இதிலிருந்து வெளியே வந்து விடுவேன் என்றார். தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் நிச்சயம் ஒருநாள் தனது அன்பையும் புரிந்து கொள்வார்கள் என்று நம்பினார். கடைசி வரை வெளியே வரவேயில்லை.
யார் மீதும் புகார்களற்றவர். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை, என்னைத் தவறாக நினைத்து விட்டார், சூழ்நிலையும் அப்படி அமைஞ்சுது அவ்வளவுதான். மாறும். என்றுதான் சொல்வார்.
கவிதைகளின் மீது அளவில்லாத காதல் கொண்டவர், ஹைக்கூக்களின் மீதும் மிகுந்த ரசனையும் ஈடுபாடும் கொண்டவர். ஹைக்கூ எழுதுவதற்கென்றே தனியே ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்திருந்தார். ஒரு நல்ல கவிதையைப் படித்துவிட்டால் பொறுக்க மாட்டார். படைப்பாளிக்கே அழைத்தோ அல்லது செய்தியிலோ பேசிவிடுவார் அல்லது நண்பர்களுக்கு அழைத்து அதைச் சிலாகிப்பார். அப்படி என்னிடம் நிறையப்பேரைப் பற்றி நிறைய முறை பேசியுள்ளார்.

அவரது மறைவுக்கு ஒருநாள் முன்பு பேசும் போது அவரது குரலில் கொஞ்சம் வலி தெரிந்தது. என்ன ஆச்சு வைகறை என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை நண்பரே கோடையிலும் கொஞ்சம் சளி பிடிச்சிருக்கு என்று சமாளித்துவிட்டார். அந்த நாட்களில் வயிற்று வலி இருந்ததாகவும் அதை அல்சர் என்று தவறாக நினைத்து மருந்துக்கடையில் மாத்திரை மட்டும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அலட்சியமாக இருந்துவிட்டதாக நண்பர்கள் சொல்வதைக் கேட்க மனம் துடிக்கிறது. கொஞ்சமாவது யாரிடமாவது சொல்லியிருந்தால் எத்தனை பேர் ஓடி வந்திருப்போம் அவருக்கு உதவ.. என்ன சொல்லி அழ எனத் தெரியவில்லை.

அவரது உடல் கிடத்தப்பட்ட அறைக்குள் நுழைகிறேன். கனிமொழி ஜி சொன்னதுபோல உறங்குவது போலவே படுத்திருக்கிறார். அடக்க முடியவில்லை.ரோஸ்லின் சகோதரி இதுக்குத்தானா அண்ணா அவசர அவசரமா எல்லோரையும் அழைத்து கடைசியா விருந்து வச்சாரா எனக் கேட்டு அழுத போது முற்றிலும் உடைந்து விட்டேன். வெளியில் எதுவும் அறியாது அமர்ந்திருந்த ஜெய்குட்டியின் தலையைத் தடவிக் கொடுக்கிறேன்.இவனுக்கு விவரம் தெரியும் போது ஒரு கதாநாயகனைப் போல வாழ்ந்த தனது தந்தையை எவ்வளவு இழப்பான் என நினைத்தால் வலி கூடுதலாகிறது.

கண்முன்னால் நிறையக் காரியங்கள் இருக்கின்றன. வைகறையின் மலை போன்ற இழப்பால் வாடும் அவரது குடும்பத்துக்கு சிறு கல்லளவாவது நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்.
கடைசியாக , வைகறையின் புதுக்கோட்டை வீட்டின் அவரது அறைக்கு நான் ஒரு முறை சென்று பார்க்க வேண்டும் போலுள்ளது. எப்படியும் அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்துவிடுவார்கள். எனக்குத் தெரியும் அங்கு வைகறை எப்படி அமர்வார், எங்கு எழுதுவார், புத்தகங்களை எப்படி வைத்திருப்பார் என்று.... அது ஒரு தவம் போலானது என்பதை நான் அறிவேன்.மேலும், வைகறையின் கனவான கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு வரவேண்டும்.

எல்லாவற்றையும் மீறி , உங்களைக் குளிப்பாட்டி சவப்பெட்டியில் இறக்கிவைத்த அந்தக் கடைசிக் கணத்தில் வழக்கத்திற்கு மாறான உங்கள் புன்னகையற்ற முகத்தை நான் பார்க்காமல் இருந்திருக்க வேண்டும் வைகறை. அதற்கும் முன்பே அந்த இடத்தை விட்டுக் கிளம்பியிருக்க வேண்டும்.

புதன், 13 ஏப்ரல், 2016

கடவுளின் பிள்ளை

இன்று மாலை பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில் ஏறினான் ஒரு மாணவன். பேருந்தின் முன்பக்கத்தில் ஏறியவன் ஓவெனக் கத்தியபடியே கடைசி இருக்கைக்கு ஓடினான். பேருந்தே அவனைத் திரும்பிப் பார்த்தது. நடத்துனரும் அவனைப் பார்த்து சிரித்தபடி எதுவும் சொல்லாமல் முன்னால் யாருடனோ கத்திக்கொண்டிருந்தார். கடைசி இருக்கைக்கு ஓடிவந்தவன் படிக்கட்டுக்குப் பின்னால் இருக்கும் நீள் இருக்கையில் இருந்த பெரியவரிடம் "ணா ஜன்னலோரம் நா உக்காந்துக்கறேன்" என்று உரிமையாய்க் கேட்டான். அவரும் வழிவிட்டு அமர்ந்து கொண்டார். அந்த இருக்கையே காலியாகத்தான் இருந்தது.

பார்த்ததுமே தெரிந்தது அவன் ஒரு சிறப்புக் குழந்தை என்று. ஆம், மன வளர்ச்சி குன்றியவன்.

அடுத்த ஒரு நிறுத்தத்தில் இன்னொரு பெரியவர் அவன் அருகில் ஏறி அமர்ந்தார்.
அவன் பாட்டுக்கு பாடிக்கொண்டும் பேசிக் கொண்டும் வந்தான். அருகில் அமர்ந்த பெரியவர் பத்து ரூபாயை நீட்டி பயணச்சீட்டு வாங்கினார். நடத்துனர் அவரிடம் சத்தமாகக் கத்தினார். "மூணு ரூபாய்க்கி எல்லாரும் பத்து ரூபா குடுத்தா சில்லறைக்கு நான் எங்க போறது? எங்கயாவது கொள்ளையடிச்சுட்டுத்தான் வரணும். சில்லறை இருந்தா குடுங்க. இல்லனா இறங்கிக்கங்க " என்று. பெரியவர் பாவமாக அவர் முகத்தைப் பார்த்தபடி இருக்க, அந்தப்பையன் மூணு ரூபாயை எடுத்து நடத்துனரிடம் நீட்டினான். நடத்துனர் " நீ ஏண்டா குடுக்கற ?” எனக் கேட்க, உடனே ஒரு மனப்பாடச் செய்யுளைச் சொல்வதைப் போல சொன்னானே பார்க்கலாம்.
“ நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவி " என்று ஒப்பித்துவிட்டு நடத்துனரிடம் மூன்று ரூபாயைத் தந்து பயணச்சீட்டை வாங்கிப் பெரியவரிடம் கொடுக்கும் போது ஒரு புன்னகை செய்தானே.. சொக்கி விட்டேன். பதிலுக்கு பெரியவர் பத்து ரூபாய்த் தாளை அவனுக்கே தந்து விட , மறுப்பேதும் சொல்லாமல் அதே புன்னகையுடன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான்.
நான், படியில் சென்று நின்று கொண்டேன். அவனிடம் பேச வேண்டும் போலத் தோன்றியது.

 "தம்பி உன் பேர் என்ன ..?”
"அக்கீம் ( ஹக்கிம் ) ணா. உங்க பேரு என்ன ணா ?”
"“பூபாலன். எத்தனாவது படிக்கிற"
"ணா. நான் ஹேண்டிகேப் ( Handicapped) ஸ்கூல்ல படிக்கிறேன்.”
"அது எனக்கே தெரியும் டா. எத்தனாவது படிக்கிற னு கேட்டேன்.”
"ணா, சொல்றத முழுசா கேளுங்க. அங்க எத்தனாவதுனு எல்லாம் இல்ல ணா. பதினெட்டு வயசு வரைக்கும் படிக்கலாம். எல்லாமே சொல்லிக் குடுப்பாங்க. அப்புறம் வேலைக்குப் போலாம்.”
" நீ அப்ப ஒன்னு சொன்னயே உதவி செய்யனும் னு. அதைச் சொல்லு "
“ நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவி "
இவன் கடவுளின் பிள்ளை. அவனுக்குக் கை கொடுத்தேன். "ரொம்ப நல்லது நல்லா இரு" என்று சொல்லிவிட்டு சட்டைப்பையில் இருந்த மிட்டாய் ஒன்றை அவனுக்குத் தந்து விட்டு இறங்கினேன்.
இந்த நடு நிசியில் என்னைத் தூங்க விடாமல் செய்கிறது அவன் முகமும், குரலும். ஆகவே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அவனது பெற்றோர்களை வணங்குகிறேன்.

“ நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவி " 

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவனா ..?

சென்ற வாரம், ஒரு வாட்சப் குழுவில் சிறு பிரச்சினை. தோழர் ஒருவர், குழுவில் உள்ள தோழிக்கு இரண்டு மூன்று முறை அழைத்துத் தொந்தரவு செய்துள்ளார். நள்ளிரவும் ஒரு முறை அழைத்துள்ளார்.  தோழி என்னிடம் முறையிட்டதும், அவரை அழைத்துப் பேசி இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள் என்று எச்சரித்தேன். அவர் தெரியாமல் நடந்துவிட்டது நள்ளிரவில் தானாக அழைப்பு சென்றுவிட்டது என்று சொன்னார்.
பிரச்சினை அதுவல்ல ..

அவரிடம் இது குறித்துப் பேசும்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை        " தோழர், என்னை என்ன அந்த மாதிரி ஆள்னு நினைச்சுட்டிங்களா ? நானெல்லாம் அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவன். அப்படியெல்லாம் தப்பா நடக்க மாட்டேன் " என்றார்.

இதுதான் ஒரு வாரமாக மண்டைக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதே சிந்தனையாகவே இருக்கிறது. யாராவது எதாவது பெண்களிடம் தவறாக நடக்கும்போது பொதுவாக நாம் திட்டுவது நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கலயா என்றுதான். இந்தப் பொதுப்படையான கருத்தில் இச்சமூகம் என்ன நம்புகிறது.? அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவன் பெண் பிள்ளைகளின் கஷ்டம் அறிந்து அவர்களை மரியாதையாக நடத்துவான் என்றா.? அல்லது அனைத்துப் பிள்ளைகளையும் தனது அக்கா, தங்கச்சி போலத்தான் எண்ணுவான் என்றா ?

அப்படியானால், அக்கா தங்கச்சி  கூடப் பிறக்காமல் தன்னந்தனியனாகவோ அல்லது ஆண்களுடன் பிறந்தவர்களுக்கோ பெண்களின் மீதான பார்வை தவறாக இருக்கும் என்றா எடுத்துக் கொள்வது?

ஒரு நாளைக்கு எத்தனை பாலியல் வன்கொடுமைகள், பெண் சித்திரவதைகள், கொலைகள், பெண்கள் மீதான அவதூறுகள், மோசடிகள், பித்தலாட்டங்கள் என பெண்கள் மீது எத்தனை லட்சம் ஆண்கள் பாய்கிறார்கள். அவர்களெல்லாம் அக்கா தங்கச்சி கூடப் பிறக்காதவர்கள் மட்டும் தானா.

எங்காவது புள்ளி விவரங்கள் கிடைக்குமா எனத் தேடிப்பார்த்தேன். பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. பொறுமையும் இல்லாததால் விட்டுவிட்டேன்.
சமீபமாக நான் கண்ட , கேட்ட , படித்த செய்திகளை மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தேன்.

அக்கா, தங்கச்சி, அம்மா என பெண்களுடன் வாழ்ந்தவர்கள் தான் அனேகம் பேர் பிறழ்ந்துள்ளார்கள். ஏன் ? தந்தையே மகளுக்கு, அண்ணன் தங்கைக்கு, தம்பி அக்காவுக்கு, தாத்தா பேத்திக்கு என அனைத்து வகை ஆண் உறவுகளும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாலியல் தொந்தரவு தாண்டியும், திராவகம் வீச்சு, திருமண மோசடி, கொலைகள் என எல்லாப் புள்ளி விவரங்களிலும் அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவன் பல்லிளிக்கிறான்.

அக்கா தங்கச்சி கூடப் பிறந்தால் மட்டும் போதுமா ..? பெண்களின் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து விடுமா .? அல்லது அக்கா தங்கச்சி கூடப் பிறக்காத ஒருவனால் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாதா ..?

அக்கா, தங்கச்சி என யாருடனும் பிறக்காத தனியன் தான் நான். அதனாலேயே சிறு வயது முதல் பெண்குழந்தைகள் மீது தனி ஈர்ப்பு. பக்கத்து வீட்டுத் தோழர்கள் , தோழிகள் எப்போதும் என்னுடனே விளையாடி என் வீட்டிலேயே இருப்பார்கள். என் சக வயது தோழன்களை நான் வாடா போடா என்று அதட்டும் போது எதுவும் கண்டுகொள்ளாத அம்மா. என் சக வயது வகுப்புத் தோழியோ அல்லது என்னை விடவும் இளைய பிள்ளையையோ வாடி போடி என்று சொன்னாள் ஒப்புக் கொள்ள மாட்டார்.
“ அதென்ன , பொட்டப்புள்ளைய வாடி, போடினு மரியாதை இல்லாம கூப்பிடற, பேர் சொல்லியாச்சும் கூப்பிடு " என அதட்டுவார். அந்த விதையாகக் கூட இருக்கலாம். பெண்கள் மீது ஒரு மரியாதையுடனும், கொஞ்சம் எட்ட நின்றும் பழகுவதற்கு என்னைப் பக்குவப் படுத்தியது.

சிறு வயது முதலே தனியாயிருத்தல் கொஞ்சம் கொடுமையாகவும் கொஞ்சம் இனிமையாகவும் இருந்தது. சுகன்யா, சியாமளா என்ற பக்கத்து வீட்டு தனா அக்காவின் குழந்தைகள் எப்போதும் என்னுடனே இருப்பார்கள். சாப்பிட மட்டுமே அவர்கள் வீட்டுக்குப் போவார்கள். அதன்பின்னர், சித்தி மகள் நித்யாவை கைக்குழந்தையிலிருந்து ஐந்து வயதுவரை, சாப்பிட வைப்பது குளிக்க வைப்பது முதல் அனைத்தையும் நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் காலத்திலேயே செய்து அவளை வளர்த்தியிருக்கிறேன். இப்படியான அனுபவங்களும் எப்போதும் பெண் குழந்தைகளின் மீது ஒரு பிரியம் வரக் காரணமாயிருக்கலாம்.

அப்படி ஒரு குழந்தைதான் காயத்ரி. எப்போதும் எங்கள் வீட்டில் என்னோடும் ஆத்தாவோடும் தாயம் விளையாடிக் கொண்டும், பல்லாங்குழி விளையாடிக் கொண்டும் இருப்பாள் விடுமுறை நாட்களில். அவளுக்கு ஏழு வயது இருக்கும் அப்போது. எப்போதும் தனது தம்பி கார்த்தியை கூடவே கூட்டிக் கொண்டு திரிவாள். எங்களோடு தாயம் விளையாடும் போது கூட கார்த்தியைத் தன் மடியில் படுக்க வைத்து உறங்க வைத்துக் கொண்டே விளையாடுவாள். அவன் உறக்கத்திலேயே சிறு நீர் கழித்துவிடுவான் அவள் ஓடிப் போய் அவள் வீட்டில் மாற்று உடை எடுத்து வந்து இவனையும், தரையையும் சுத்தம் செய்து உடை மாற்றிவிடுவாள். தம்பி மீது அவ்வளவு பாசம். கார்த்தியும் அவளைப் பிரிந்து இருக்கவே மாட்டான். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காயத்ரிக்குத் திருமணம் ஆனது. எங்களால் போக முடியவில்லை. அம்மா மட்டும் போய் வந்தார். போன மாதம் கார்த்தி ஊர் முழுதும் பிரபலமாகிவிட்டான். ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணைக் காதலித்து அவளுடன் ஏற்பட்ட தகராறில் அவளைக் கொன்று விட்டானாம். கேட்டதும் பயங்கர அதிர்ச்சி. அதற்கும் முன்னரே சில பெண்களுடன் தொடர்பிருந்திருக்கிறது எனவும் பேசிக் கொள்கிறார்கள். அவன் பாசக்கார , நேர்மையான அக்காவுடன் பிறந்து அவளது கண்காணிப்பிலேயே வளர்ந்தவன் தான். இப்படி பல கதைகள் நம்மிடம் உள்ளன.

பெண் பிள்ளைகள் உள்ள வீட்டுக்கு எப்போதும் தனி அழகு கூடும். அவள் ஒரு ஆணை நிச்சயம் பக்குவமானவனாக வளர்ப்பதில் தனிக் கவனத்தோடு இருப்பாள் தான். ஆனால், ஒருவன் பக்குவமானவனாக வளர அது மட்டும் போதுமா?

அக்கா தங்கச்சி கூடப் பிறப்பது மட்டும் ஒரு ஆண் நல்ல ஆணாக வளர்வதற்கான சாத்தியங்களைத் தந்துவிடுமா என்ன ..?

நன்றி : கொலுசு மின்னிதழ்
http://www.kolusu.in/kolusu/kolusu_apr_16/index.html#p=44