புதன், 27 ஏப்ரல், 2016

ஜெய்க்குட்டி அப்பா (எ) வைகறை (எ) ஜோசப் பென்சிஹர் க்கு...


நான் இதை எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன். அந்தச் செய்தி ஒரு பெரிய இடிச்சத்தமாக என் காதுகளில் விழுந்த கணத்திலிருந்தே பேச்சற்றிருந்தேன். இப்போது வரைக்கும் அதை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ மனம் தயங்கிக்கொண்டே இருக்கிறது.அப்போது தொடங்கி சில நாட்கள் வரைக்கும் முகநூல் பக்கம் வரவேயில்லை. வந்த சில கணங்களில் நான் பார்த்ததெல்லாம் வைகறையின் முகம் தான். அனைவரும் அவர் இறந்து விட்டதாக அவரது புகைப்படத்தைப்போட்டு இரங்கல் செய்தி எழுதிக் கொண்டிருந்தனர். அதைப் பார்க்கவே சக்தியில்லை. ஆகவே, ஒரு இரங்கல் குறிப்போ அல்லது ஒரு தகவலுக்கான நிலைத்தகவலோ கூடப் போட என்னால் முடியவில்லை. சாக வேண்டிய வயதா இது..? காலமா இது..?
இப்போதுவரைக்கும் அதைப்பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. கடந்த சில நாட்களாக நான் எனக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறேன். வைகறையுடனே பேசிக்கொண்டிருக்கிறேன். நான் இப்படி இருப்பது கூடாது.
எதையாவது எழுதியாவது நான் இதிலிருந்து ஒரு பகுதியேனும் வெளிவந்துவிட நினைக்கிறேன். ஆகவே இதை எழுதுகிறேன் 
..
ஜெய்க்குட்டி அப்பா () வைகறை () ஜோசப் பென்சிஹர் க்கு...

இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இப்படியான ஒரு அடுக்கில் தான் மனதில் நீங்கள் இருந்தீர்கள் வைகறை. நாம் அறிமுகமானது இப்படி அல்ல. வைகறையைத் தெரியும் முதலில்; பிறகு அவர் ஜெய்க்குட்டியின் அப்பா என்பது தெரியும்; மிகக் கடைசியாகத் தான், அதுவும் பெயருக்குத்தான் தெரியும் அவரது பெயர் ஜோசப் பென்சிஹர் என்பது.

வைகறையை முதன் முதலில் எப்போது பார்த்தேன் என்பது வழக்கம்போலவே எனக்கு நினைவில் இல்லை. இதைச் சொல்லியே ஒரு முறை அவரிடம் கேட்டபோது அவர் சொன்னதுதான் என் நினைவுகளுக்குள் இருக்கிறது. 2010ல் வெளியான எனது முதல் தொகுப்பான பொம்மைகளின் மொழி தொகுப்பைப் பார்த்துவிட்டு 2011ன் ஆரம்ப நாட்களில் என்னை அழைத்து அரை மணி நேரம் உரையாடினார் அதுதான் எங்களது முதல் பேச்சு. பின்பு பல மாதங்கள் கழித்து அவரை கோவை இலக்கிய சந்திப்பில் முதன் முதலாகச் சந்தித்தேன். யாழி அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு பெரும் புன்னகையுடன் தோளை அணைத்துக் கொண்டு பேசிய முதல் சந்திப்பிலேயே நெருக்கமாகிவிட்டார்.


அதன் பின்னர் ஒவ்வொரு சந்திப்பிலும், ஒவ்வொரு அழைப்பிலும் நெருக்கமாகி நெருக்கமாகி இறுக்கமாகிவிட்டார். எப்போது அழைத்தாலும் வணக்கம் நண்பரே என்று ஆரம்பிப்பார். முடிக்கும் போது நல்லது, நல்லது, நல்லது என்பார். இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டால் அதை ஒரு பெரிய ம்ம்ம் என்று போட்டு நிரப்புவார். வழக்கமாகப் பேசுவதற்கு எதுவுமே இல்லையென்று நான் நினைத்த தருணங்களிலும் எதையாவது பேசிக்கொண்டிருப்பார். பேருந்தில் பார்த்த காட்சிகள், பள்ளியில் நடந்தது, ஜெய்குட்டியின் சேட்டை, கவிதை என எதையாவது பேசுவார். எப்போது அவர் பேசி முடித்து வைத்த போதும் மனம் கொஞ்சம் லேசாகியிருப்பதை உணர முடியும்.

தர்மபுரியில் பணியில் இருந்த போது ஒவ்வொரு மாதமும் தவறாமல் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கு வந்து விடுவார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைப் பற்றி பல இடங்களில் பல மேடைகளில் குறிப்பிட்டுப் பேசியும் இருக்கிறார். வரும் போதெல்லாம் அவர் வந்து சேர்வது நள்ளிரவு பன்னிரண்டு அல்லது ஒரு மணியாக இருக்கும். அழைக்க மாட்டார். பேருந்து நிலையத்திலேயே அமர்ந்திருந்துவிட்டு காலையில் தான் அழைப்பார். நீங்கள் நன்றாகத் தூங்கும் நேரம் ஏன் தொந்தரவு செய்யனும்னு அழைக்கலை என்பார். பலமுறை திட்டியுள்ளேன். ஒரு முறை நானாக இரவு ஒரு மணிக்கு அழைத்து வந்து விட்டார் எனத் தெரிந்த பின்பு போய் வீட்டுக்கு அழைத்து வந்தேன். இன்னொரு முறை காலை 4 மணிக்கு அழைத்து வந்தேன். பின்னர் நகருக்குள் நண்பர் சோலைமாயவன் அறையெடுத்துவிட்டதால் எப்போது வந்தாலும் அவரது அறைக்குச் சென்று விடுவார்.
சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு எங்களது தொகுப்பைக் கொண்டு வரலாம் என்று முடிவானவுடன் வைகறையும் இணைந்தார். கவிதைத் தொகுப்பின் ஆரம்ப வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்ள, இறுதிக்கட்ட வடிவமைப்பில் இரவு முழுதும் எங்கள் கூடவே இருந்தார். அவரது ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு எழுத்திலும் நாங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். சென்னையில் புத்தகங்கள் அச்சடிக்க கூடவே வந்தார். நான் , நிலாரசிகன் மற்றும் வைகறை மூவரும் மணி ஆப்செட் சென்றது புத்தகங்களை அச்சுக்குத் தந்துவிட்டு ஒரு சிறிய கடையில் வியர்க்க வியர்க்க பிரியாணி சாப்பிட்டது எல்லாம் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
வெளியீட்டு விழாவுக்கு நூல்கள் வெளியிட்ட க.அம்சப்ரியா,நான்,நிலா ரசிகன்,புன்னகை ஜெயக்குமார், சோலை மாயவன் ஆகியோருடன் சேர்ந்து பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார்.
புதுக்கோட்டைக்கு மாற்றலாகிப் போகும் போது அழைத்தார். தர்மபுரியில் இருக்கும் வரை மாதா மாதம் வர முடிந்தது. இனி அது முடியுமா எனத் தெரியவில்லை என வருந்தினார். பரவாயில்லை நீங்கள் அங்கு தனியாக இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணையுங்கள் நாங்கள் வருகிறோம். அங்கும் நிறையக் கூட்டங்கள் நடக்கும் அவர்களுடன் இணைந்து செயல்படுங்கள் என்றோம். அங்கு போன பின்பும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கொருமுறை வந்து விடுவார். அங்கு சென்றதுமே கவிதைகளால் பேசுவோம் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். 24-செப்டம்பர்-2014ல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.யாழி,பிராங்க்ளின்
நந்தன்ஸ்ரீதரன்கனிமொழிஜி.கீதா,அனாமிகா,சோழநிலா,நாணற்காடன்,தமிழ்வரதன் என நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததும் பேசியதுமாக மனதில் நிற்கும் நிகழ்வாக அமைந்தது.

தொடர்ந்து, வலைப்பதிவர் திருவிழா, வீதி இலக்கியக் கூட்டம் என புதுகைக்குச் செல்ல நேர்ந்த சமயங்களிலெல்லாம் வைகறை மிகுந்த அன்புடன் கவனித்துக்கொள்வார். அண்டனூர் சுரா அவர்களின் நூல் அறிமுகம் பொள்ளாச்சியில் வைத்திருந்தோம். அவர் எனது நூல் அறிமுகத்தை கந்தர்வக்கோட்டையில் வைத்தார். இந்தச் செய்தியை வைகறையிடம் சொன்ன போதே, சிறப்பு நண்பரே முதல் நாளே வாங்க, வீட்டில் தங்கிவிட்டு இருவரும் கந்தர்வக்கோட்டை செல்லலாம் என்றார். சனிக்கிழமை காலையில் அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டு, மாலை கந்தர்வக்கோட்டை சென்று இரவு வீடு திரும்பி அடுத்தநாள் காலை கிளம்பி திண்டுக்கல் சென்றுவிட்டு ஞாயிறு மாலை விடு திரும்பினேன். சனிக்கிழமை ரோஸ்லின் சகோதரி செய்த மீன்குழம்பைப் பற்றி ஒரு பதிவே எழுதினேன். அன்றே நான் வந்ததை கீதா அம்மா, ஜெயா அம்மாவிடம் சொல்ல அவர்களும் என்னைப் பார்க்க புத்தகப்பரிசுடன் வந்துவிட்டார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.எல்லாமே இப்போது நடந்தது போல இருக்கிறது.

எப்போதும் வாரம் ஒருமுறை அல்லது இருமுறையாவது பேசிவிடுவோம், ஆனால் இந்த மாதம் மட்டும் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கொருமுறை அழைத்து விடுவார் அல்லது அழைத்து விடுவேன்.
எனது அடுத்த கவிதைத்தொகுப்பு தயாராகிறது நீங்கள் இணைய விரும்புகிறீர்களா எனக் கேட்டேன். இல்லை நண்பரே கொஞ்சம் பொருளாதாரத்தைத் தயார் செய்து விட்டுச் செய்யலாம் என்றார். பொருளாதாரம் எப்போதும் நமக்குப் பிரச்சினை தான் சொல்லுங்கள் தயார் செய்கிறேன் என்றேன். வேண்டவே வேண்டாம் என்று சொன்னார். ஆனால் ஒரு தொகுப்புக்குக் கவிதைகள் தயார் என்றார் அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இன்னொரு தொகுப்பும் தயார் அதை மின்னூலாக்கலாமா என்றார். நான் இதை அவரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன் எனது ஒரு கவிதைத் தொகுப்பு, கட்டுரைகள் மற்றும் அம்சப்ரியா அவர்களது கட்டுரைகள் ஆகியவற்றை மின்னூலாக்கி பதியலாம் என்று. இப்போது அவரும் தனது கவிதைகளைத் தயார் செய்திருந்தார். எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அதன் தலைப்பு " மரணத்தின் இசைக்குறிப்புகள்". அப்போது அது உறுத்தவில்லை. இப்போது உயிர்வரை உறுத்துகிறது. இன்னும் மின்னூல் வடிவில் என்னிடம் உள்ளது. ஜூன் அல்லது அதன் பின்னர் வெளியிடலாம் என்று சொல்லியிருந்தேன்.

எனது முந்தைய கவிதைத் தொகுப்பில் நன்றி பகுதியில் வைகறையின் பெயரை விட்டுவிட்டேன். உரிமையாய்க் கேட்டார் என்னாய்யா நியாயம் இது ..? என்று. அது தான் வைகறை. மனதில் எதுவும் வைத்துக்கொள்ளத் தெரியாதவர். அடுத்த கவிதைத் தொகுப்பு தயாராகிறது இதில் உங்க பேர் இருக்கு வைகறை னு எப்படி சொல்றது.
கவிதைத் தொகுப்பு தயாரானதும் அனுப்புங்க என்றார். மின்னஞ்சலில் அனுப்பியதும் நான்கு நாட்கள் கழித்து அழைத்தவர் இரண்டு மணி நேரம் பேசினார். நிறையக் கவிதைகளை சிலாகித்தவர். சில கவிதைகளின் வரிகளை முன்னுக்குப் பின் மாற்றினால் நன்றாக இருக்கும் என்றார். ஒரு ஆச்சர்யமும் நடந்தது. ஒரு கவிதையின் கடைசி வரியை நான் எழுதிவிட்டு பின் மாற்றிவிட்டேன். அவர் அழைத்த போது இது இந்தக் கவிதைக்கு அழுத்தம் தரல என்று சொல்லி நான் முதலில் எழுதியிருந்த முடிவையே அச்சு பிசகாமல் சொன்னார். நான் அதைத்தான் முதலில் எழுதி வைத்திருந்தேன் என்று சொன்னதும் அதானே, பூபாலன் அப்படித்தான் யோசிச்சிருக்க முடியும் என்றார். கவிதைகளின் மீது , ஹைக்கூக்களின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் , புரிதலும் , பேரன்பும் கொண்ட மனிதர். அடுத்த மாதம் எனது கவிதைத் தொகுப்பை வெளியிடப் போகிறேன். இப்போது வைகறை இல்லை. ஆனால் என் கவிதைகளில் நிச்சயம் இருப்பார்.

நிறையக் கனவுகள் வைத்திருந்தவர் என்பதுதான் பதைபதைப்புக்குள்ளாக்குகிறது. கொஞ்ச நாட்களாக நிறையப் பேசினோம். நிறையத் திட்டங்கள் போட்டோம். நந்தலாலா இணைய இதழை மீண்டும் சிறப்பாகத் துவங்கி நடத்துவது, நூல்கள் அறிமுகம் செய்ய, நூல் விமர்சனங்களுக்கென்றே தனியாக ஒரு இணைய தளம் துவங்கலாம் என்று ஒரு நாள் சொன்னார். சில தினங்களில் துவங்கியும் விட்டார். தொடர்ந்து இதையும் செய்யலாம் என்றார். முடிந்தால் அந்த இணையத்தைப் பாருங்கள் www.noolvaasal.com

உயிர்மையின் பத்து நூல்கள் வெளியீட்டுவிழாவுக்கு நான்,அனாமிகா,வைகறை அனைவரும் போக வேண்டும் நண்பர்களை உற்சாகப் படுத்த வேண்டும் என நிறையப் பேசி வைத்திருந்தோம். என்னால் வர முடியாததால், அவர் மட்டும் சென்று வந்தார். வந்ததும், அந்த பத்து நூல்களையும் புதுக்கோட்டையில் சிறப்பாக அறிமுகம் செய்ய வேண்டும் என்றார். கொஞ்ச நாளில் அதன் நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்தவர் முதலில் அண்ணன் ( யாழி),பிராங்க்ளின் சார், கனிமொழி மேடம் புத்தகத்தை மட்டும் நல்லா அறிமுகம் செய்யலாம் என்று தனது கடைசி நாட்களுக்கு முன்னர் கூடச் சொல்லியபடி இருந்தார். நானும் நிச்சயம் வந்து ஒரு நூலைப் பற்றிப் பேசுவதாகச் சொன்னேன். இன்னும் சிலரிடம் கூட இதைப்பற்றிப் பேசி அவர்களிடம் சொல்லி வைத்திருந்தார் என்பதும் எனக்குத் தெரியும்.

கடைசி சில நாட்களில் பல்வேறு மன அழுத்தத்தில் இருந்தார். அதிகம் புலம்பாவிட்டாலும் சில விசயங்களைச் சொல்லி வருந்துவார். இதெல்லாம் சொந்த வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் சாதாரணம் நிச்சயம் எல்லாம் மாறும் இதிலிருந்து வெளியே வாருங்கள் என்றேன். கண்டிப்பாக பூபாலன், இதிலிருந்து வெளியே வந்து விடுவேன் என்றார். தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் நிச்சயம் ஒருநாள் தனது அன்பையும் புரிந்து கொள்வார்கள் என்று நம்பினார். கடைசி வரை வெளியே வரவேயில்லை.
யார் மீதும் புகார்களற்றவர். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை, என்னைத் தவறாக நினைத்து விட்டார், சூழ்நிலையும் அப்படி அமைஞ்சுது அவ்வளவுதான். மாறும். என்றுதான் சொல்வார்.
கவிதைகளின் மீது அளவில்லாத காதல் கொண்டவர், ஹைக்கூக்களின் மீதும் மிகுந்த ரசனையும் ஈடுபாடும் கொண்டவர். ஹைக்கூ எழுதுவதற்கென்றே தனியே ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்திருந்தார். ஒரு நல்ல கவிதையைப் படித்துவிட்டால் பொறுக்க மாட்டார். படைப்பாளிக்கே அழைத்தோ அல்லது செய்தியிலோ பேசிவிடுவார் அல்லது நண்பர்களுக்கு அழைத்து அதைச் சிலாகிப்பார். அப்படி என்னிடம் நிறையப்பேரைப் பற்றி நிறைய முறை பேசியுள்ளார்.

அவரது மறைவுக்கு ஒருநாள் முன்பு பேசும் போது அவரது குரலில் கொஞ்சம் வலி தெரிந்தது. என்ன ஆச்சு வைகறை என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை நண்பரே கோடையிலும் கொஞ்சம் சளி பிடிச்சிருக்கு என்று சமாளித்துவிட்டார். அந்த நாட்களில் வயிற்று வலி இருந்ததாகவும் அதை அல்சர் என்று தவறாக நினைத்து மருந்துக்கடையில் மாத்திரை மட்டும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அலட்சியமாக இருந்துவிட்டதாக நண்பர்கள் சொல்வதைக் கேட்க மனம் துடிக்கிறது. கொஞ்சமாவது யாரிடமாவது சொல்லியிருந்தால் எத்தனை பேர் ஓடி வந்திருப்போம் அவருக்கு உதவ.. என்ன சொல்லி அழ எனத் தெரியவில்லை.

அவரது உடல் கிடத்தப்பட்ட அறைக்குள் நுழைகிறேன். கனிமொழி ஜி சொன்னதுபோல உறங்குவது போலவே படுத்திருக்கிறார். அடக்க முடியவில்லை.ரோஸ்லின் சகோதரி இதுக்குத்தானா அண்ணா அவசர அவசரமா எல்லோரையும் அழைத்து கடைசியா விருந்து வச்சாரா எனக் கேட்டு அழுத போது முற்றிலும் உடைந்து விட்டேன். வெளியில் எதுவும் அறியாது அமர்ந்திருந்த ஜெய்குட்டியின் தலையைத் தடவிக் கொடுக்கிறேன்.இவனுக்கு விவரம் தெரியும் போது ஒரு கதாநாயகனைப் போல வாழ்ந்த தனது தந்தையை எவ்வளவு இழப்பான் என நினைத்தால் வலி கூடுதலாகிறது.

கண்முன்னால் நிறையக் காரியங்கள் இருக்கின்றன. வைகறையின் மலை போன்ற இழப்பால் வாடும் அவரது குடும்பத்துக்கு சிறு கல்லளவாவது நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்.
கடைசியாக , வைகறையின் புதுக்கோட்டை வீட்டின் அவரது அறைக்கு நான் ஒரு முறை சென்று பார்க்க வேண்டும் போலுள்ளது. எப்படியும் அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்துவிடுவார்கள். எனக்குத் தெரியும் அங்கு வைகறை எப்படி அமர்வார், எங்கு எழுதுவார், புத்தகங்களை எப்படி வைத்திருப்பார் என்று.... அது ஒரு தவம் போலானது என்பதை நான் அறிவேன்.மேலும், வைகறையின் கனவான கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு வரவேண்டும்.

எல்லாவற்றையும் மீறி , உங்களைக் குளிப்பாட்டி சவப்பெட்டியில் இறக்கிவைத்த அந்தக் கடைசிக் கணத்தில் வழக்கத்திற்கு மாறான உங்கள் புன்னகையற்ற முகத்தை நான் பார்க்காமல் இருந்திருக்க வேண்டும் வைகறை. அதற்கும் முன்பே அந்த இடத்தை விட்டுக் கிளம்பியிருக்க வேண்டும்.

11 கருத்துகள்:

  1. வைகறை யிடம் நான் பேசியதில்லை. உயிர்மை நிகழ்வில் அவரை சந்தித்தேன் பேசிக்கொள்ளும் சூழல் இல்லை. இப்போது வைகறை சாரிடம் பேச வேண்டும் போலிருக்கிறது./ ஜெய்குட்டி க்காகதான் அழுதுக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. உள்ளம் உருகி விட்டது பூபாலன்..மரணத்தின் இசைக்குறிப்புகள் என்ற தலைப்பு தற்செயலா...நம்மை மீறி ஒன்று பேச வைக்கிறது..மூன்று முறை பேசிய நானே அதிர்கிறேன்..நூறு முறை பேசிய நீங்கள்..?

    பதிலளிநீக்கு
  3. வைகறை நம் உள்ளங்களை கரைத்துவிட்டார் மண்ணில் கரைந்து! ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
  4. மனதைத் தொட்டு விட்ட பதிவு. ஜெய்குட்டி – தனது அப்பா இல்லாத இந்த உலகை எப்படி பார்க்கப் போகிறான்? கவிஞர் வைகறை தனது உடல்நலன் பற்றிய விஷயத்தில் எப்படி, எங்கே கோட்டை விட்டார் என்றே இது நாள் வரை யோசிக்கிறேன். விடை கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  5. இதில் கொடுமை என்னவெனில் அவர் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனை அருகில்தான் நான் இருந்துள்ளேன்.சுமார் 100அடிக்குள்தான்.என்னசெய்ய? எனக்கு தகவல் தெரியாமல் போய்விட்டதே நண்பரே! பிறகுதான் மறுநாள் காலை அடைக்கலபுரம் வந்தேன்.அங்கு வைகறையை இறுதியாக பார்த்த அந்த ஒருசில வினாடிகள் நானும் இறந்து மீண்டுவந்ததை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
  6. மனம் கனக்கிறது, பூபாலன். நான் ஒரேயொருமுறை (அவர் தருமபுரியில் இருந்த போது) போனில் பேசியிருக்கிறேன். எத்தனை வாஞ்சையான குரலுக்குச் சொந்தக்காரன். தகவலறிந்து வாடிப்போனேன்.

    பதிலளிநீக்கு
  7. கவிதைக் காதலன் மட்டுமல்ல... மனிதநேயன். முதல் சந்திப்பிலேயே எவர் மனதுள்ளும் நுழைந்துவிடும் இன்முகப் பண்பாளர். அவரோடு இணைந்து வலைப்பதிவர் திருவிழாவிலும், வீதி கலைஇலக்கியக்களக் கூட்டங்கள் வெள்ளித்திங்கள் விழா ஆகியவற்றில் பணியாற்றிய தருணங்கள் உயிருள்ளவரை மறக்கலாகாதவை.

    பதிலளிநீக்கு
  8. இப்படி ஒரு பதிவை எழுத வைத்த வைகறை...காலம் முழுதும் கண்ணீரை வரவழைத்து சென்றது ஏன் பூபாலன்...வெளியே வாருங்கள்...அவர் மகனுக்கு நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கு..பா

    பதிலளிநீக்கு
  9. ஈடு செய்ய முடியாத இழப்பு...

    பதிலளிநீக்கு