திங்கள், 20 ஜூலை, 2015

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி ஏழாவது சந்திப்பு


எப்போதும் இலக்கிய வட்டத்துக்கு முந்தைய நாள் மதியத்திலிருந்து அடுத்த நாளுக்கான பணி ஆரம்பமாகிவிடும். இந்த முறையும் அப்படித்தான். சனிக்கிழமை மதியமே நான், கார்த்தி, சோலை மாயவன் மூவரும் அப்புறம் மழையும் பொள்ளாச்சியில் சந்தித்துக் கொண்டோம். அரங்கத்தைத் தயார் செய்வது, ஃப்ளெக்ஸ் வாங்குவது அதை ஒட்டுவது என்று பரபரப்பாக இருந்தோம். வேலை முடிய இரவு 8 மணியாகிவிட்டது. மாமா செந்தில்குமாரும் வந்து விட்டார். திரைப்படத்துக்குப் போகலாம் இரண்டாவாது ஆட்டம் என்றார்கள். நான் திரையரங்கம் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டிருக்க தயங்கிப் பின் சம்மதித்தேன். பாபநாசம் திரைப்படம். இரவு பத்துமணிக்காட்சி. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காத்திருக்க அம்சப்ரியாவும் வந்துவிட ஐந்துபேரும் படம் பார்த்தோம். இந்தப் படத்தைப்பற்றி நிறைய எழுத வேண்டும் ஆனால் அதுக்கும் மேலயும் நிறையப்பேர் வலிக்க வலிக்க எழுதிவிட்டதால் அந்த வேலையைக் கை விடுகிறேன். இரவு வீட்டுக்குப் போய் தூங்கும்போது மணி 2. நாளை காலை இலக்கிய வட்டம், எழுந்து விடுவோமா என்று மூன்று அலாரம் வைத்துவிட்டுப் படுத்தேன். எப்படியோ விடிந்தே விட்டது...

:-)

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி ஏழாவது இலக்கிய சந்திப்பு 19.07.2015 அன்று பாலக்காடு சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

வழக்கமாக கோவையிலிருந்து நண்பர்கள் குறைந்தது ஐந்து பேர் வந்து விடுவார்கள் இந்த முறை அத்தனை பேரும் விடுப்புக் கடிதம் தந்துவிட்டார்கள் யாழி,அனாமிகா, விவேக்,ரதிபாலா ம்ஹூம் யாரும் வரவில்லை. அதுவே கொஞ்சம் கலக்கமாக இருந்தது. இவர்கள் வரவில்லை என்றால் இவர்களது ரசிகர்கள் வேறு நச்சுவார்களே என்று. இருப்பினும் எப்படியாவது கூட்டம் வந்து விடும் என்று மட்டும் நம்பினேன்.

மெல்ல மெல்ல அனைவரும் வரத்துவங்கினர். கவிஞர் ச. மணி காவல் தலைமை ஆணையர், அவர் காவலர் புடை சூழ நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஆனால் அவரது பேச்சிலும் பழகும் விதத்திலும் அத்தனை கனிவு. இந்தக் கனிவு கவிதையாகியிருக்கிறதா அல்லது கவிதை இந்தக் கனிவைத் தந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. கவிஞர் அமிர்தம் சூர்யா, மு.ஆனந்தன் அனைவரும் வந்துவிட வழக்கம் போலவே அரங்கம் நிறைந்து அமர இடமில்லாமல் சிலர் வெளியில் நின்று கொண்டிருக்க , அவர்களுக்கும் அமர ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது முகம் மலர்ந்தது.
இனி நிகழ்ச்சிகள் துவக்கம் …

வழக்கம்போல படித்ததில் பிடித்தது. செந்தில்குமார்,மலையப்பன்,அபிநயா,வாசுதேவன் இன்னும் சிலர் தாங்கள் படித்ததில் தங்களைக் கவர்ந்த கதை, கவிதைகளை சிலாகித்துப் பேசினர்.

அடுத்து கவிஞர் இரா.பூபாலன் ( நாந்தான் , நானேதான் சொல்லிக்கறேன் ) வரவேற்புரையாற்றினார் . கவிஞர் சிவமணி எழுதிய சிற்பி கவிதைகளில் மனித உறவுகள் எனும் ஆய்வு நூலை கவிஞர் அம்சப்ரியா அறிமுகம் செய்து பேசினார்.  சிற்பியின் கவிதைகளில் மனிதமும் மனித உறவுகளும் எவ்வாறு கையாளப் பட்டிருக்கிறது என்பதை உதாரண கவிதைகளுடன் எடுத்துரைத்தார். கவிஞர் சிவமணி தனது ஆய்வுக்காக சிற்பியின் கவிதைகளை வாசிக்கத் தொடங்கி அந்தக் கவிதைகளில் தன மனதைப் பறிகொடுத்ததை தனது ஏற்புரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

கவிஞர் ச.மணி அவர்களது கவிதை நூலான வெயிலில் நனைந்த மழை நூலை கவிஞர் ஜனனன் பிரபு அவர்கள் அறிமுகம் செய்து பேசினார்
காவல் துறையின் அயராத பணிகளுக்கு இடையிலும் கவிதை எழுதும் மனது
கவிஞர் ச.மணியின் மனது என்றும் முற்றிலும் மழையைப் பற்றிய கவிதைகளை அவர் எழுதியிருப்பது அற்புதமான கவிதை அனுபவம் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

கவிஞர் ச.மணி அவர்கள் தனது ஏற்புரையில் எந்தக் காலகட்டத்திலும் வாசிப்பு மற்றும் எழுத்துப் பழக்கத்தை நாம் விட்டுவிடக் கூடாது என்றும் பணிச்சுமை எல்லாம் வாசிப்புப் பழக்கத்தை பாதிக்கக்கூடாது என்றும் கூறினார் தான் ஒரு காவல்துறை உயரதிகாரியாக மிகுந்த வேலைப்பளு இருப்பினும் வாசிப்பதையோ, குடும்பத்துடன் நேரம் செலவு செய்வதையோ, குழந்தைகளுடன் விளையாடுவதையோ விட்டுவிடுவதில்லை. கிடைக்கும் நேரங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறேன் என்று பேசியது பலருக்கு வியப்பு.


நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் தமிழின் சிறந்த  ஐம்பது கவிதைகளை அச்சிட்டு வழங்கியிருந்தோம். வாசகர்கள் அதைப் படித்துவிட்டு உரையாடலாம். வழக்குரைஞர் மு.ஆனந்தன் வாசகர்கள் மற்றும் கவிஞர்களுடன் நவீன கவிதைகளின் தற்காலப் போக்கு குறித்தும் எது நல்ல கவிதை என்பது பற்றியும் கலந்துரையாடினார்.

அந்தக் கவிதைகள் உங்கள் பார்வைக்கு,

https://www.dropbox.com/s/zpe2xxrnxlw82mv/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88.pdf?dl=0

நாங்கள் படித்தவற்றில் தேர்ந்தெடுத்த கவிதைகள், அவசரத்துக்குக் கிடைத்த கவிதைகள் என இவற்றை வடிவமைத்தோம். இன்னும் சிறப்பான பல கவிதைகள் இருக்கின்றன என்பதனையும் வாசகர்களுக்கு தெளிவாகச் சொல்லிவிட்டோம்.


ஒவ்வொரு மாதமும் செய்திமடல் வெளியிடுவோம். சென்ற மாத நிகழ்வின் புகைப்படங்கள் , வாசித்த கவிதைகள் அனைத்தையும் பதிவாக்கிவிடுவோம். இம்முறை செய்திமடலை கவிஞர் அமிர்தம் சூர்யா வெளியிட, வேள்வி இதழாசிரியர் கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டார்.

செய்தி மடல் உங்கள் பார்வைக்கு...

https://www.dropbox.com/s/ee7my2gdjbr92c9/Seythimadal%2018.pdf?dl=0



கவிஞர் அமிர்தம் சூர்யா அவர்களது சிறப்புரையில் ஒரு எழுத்தாளனுக்கு சொல் மிக முக்கியம். பல்லாயிரக்கான சொற்கள் நிறைந்த நம் தமிழ் மொழியில் ஒரு எழுத்தாளன் மிக நுட்பமான , செறிவான சொற்களைத் தேர்ந்தெடுத்து தனது படைப்புகளில் பயன்படுத்துகிறான் . சொல் என்பது வெறும் சொல்லல்ல ஒரு சொல்லுக்குப் பின் ஒரு கலாசாரம் இருக்கிறது ஒரு வாழ்வு  இருக்கிறது ஒரு வரலாறு இருக்கிறது. ஆகவே படைப்பாளி தனது படைப்புக்கான சொற்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும் என்றார். நவீன கவிதை புரிவதில்லை என்ற குற்றச்சாட்டு இங்கு பரவலாக  உள்ளது. யாரும் புரியாத மொழியில் எழுதுவதில்லை. தொடர்ந்து வாசிப்பதும்
நவீன கவிதையை வெறும் வார்த்தைகளாகப் பார்க்காமல் அனுபவமாக உள்வாங்கிக் கொள்வதும் தான் நவீன கவிதையை அணுகுவதற்கான சரியான வழி என்றும் பேசினார். அவரது கவிதை உதரணங்களும், கதைகளுமான பேச்சும் அனைவரையும் மதியநேரப் பசியை மறக்கடித்து உற்சாகமாக்கியது.
அடுத்ததாக அரவாணி ரேவதி எழுதிய வெள்ளை மொழி என்ற சுய வரலாறு நூலை கவிஞர் உமாபாரதி அறிமுகப் படுத்திப் பேசினார். நேரமாகிவிட்ட படியால் தனது உரையை சுருக்கி சுருக்கி சுருக்கிக் கொண்டார்.
வாசகர்கள் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது 17 கவிஞர்கள் தமது கவிதைகளை வாசித்தனர். கவிதைகளை விமர்சனமும் செய்து பேசினர்.

கவிஞர் அம்சப்ரியா அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிது முடிந்தது
பிறகு அனைவரும் உணவருந்திவிட்டு செய்திகளை நாளிதழ் அலுவலகங்களுக்குத் தந்து விட்டு 6 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பினால் , வீட்டிலிருந்து அழைப்பு நேத்து நீங்க பாபநாசம் போனீங்க தான இன்னிக்கு நாங்க எல்லோரும் போறோம் என்று . முன்னிரவு செய்யின் பின்னிரவு தாமே விளையும் என்று பழமொழியை திருப்பிப் போட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பினோம்.

அடுத்த மாத நிகழ்வு ஆகஸ்ட் 16 .. இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும்


2 கருத்துகள்:

  1. நல்ல அனுபவப்பகிர்வு.. ஒற்றை நெருடலுடன்.

    பெரும்பாலும் நாம் 'அரவாணி’ என்கிற சொல்லாடல்களைத்தவிர்த்து ’திருநங்கை’காளக அவர்களை அழைத்து அங்கீகரிப்போம்...
    மகிழ்ச்சி
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி. நான் எனது பதிவுகளில் திருநங்கை என்றே குறிப்பிடுவேன். வெள்ளை மொழி நூலின் தலைப்பிலேயே அரவாணியின் தன்வரலாறு என இருந்ததால் அப்படிக் குறிப்பிட்டேன். குறிப்பிட்டமைக்கு நன்றி.

      நீக்கு