செவ்வாய், 25 ஜனவரி, 2022

எங்கள் தாய்ப்பறவை சிற்பி ஐயாவுக்கு பத்மஸ்ரீ விருது

பொள்ளாச்சி மண்ணின் இலக்கிய அடையாளம்...

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது ...


எனது வாழ்வின் பெரும் மகிழ்ச்சியான நாளென்று இந்த நாளையும் சொல்லிக்கொள்வேன்... வேறென்ன சொல்ல?

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பொள்ளாச்சியில் அமர்ந்து எழுதி, தனது கவிதைகளின் மூலம் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் ...
வாழ்க இன்னும் பல்லாண்டு.. வளர்க தங்களது தமிழ்ப்பணி...

அருகில் இருந்து பார்க்கிறேன் அவரது ஆளுமையை.. விஸ்வரூப தரிசனமாகத் தெரிகிறது...

ஓய்வின்றி உழைக்கும் எழுத்தாளர்...
சலிக்காத வாசிப்பு
ஞானம்
அன்பு
தீர்க்கம்

என வியந்து போற்ற எத்துணை குணங்கள்?

சிற்பி ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்..

கவிஞர் சிற்பி அவர்களின் கவிதையை மீண்டும் ஒருமுறை பகிர்கிறேன்..

என் மொழிக்கில்லாமல்  எனக்கு மட்டும் சுதந்தரமா ?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து
மொழியாம் என் மொழி
பள்ளிக் கூட வாசலில் கூடக். 
காலடி வைக்க முடியாதாம்
கிழித்தெறி புறப்பொருள் வெண்பா மாலையை-
எனக்கு மட்டும் எதற்குச் சுதந்தரம் ?
உயிரியல்  படிக்க வக்கில்லாததாம்
எடுத்தெறி அந்தக் குறுந்தொகை நெடுந்தொகை-
எனக்கு மட்டும் எதற்குச்  சுதந்தரம் ? 
பொறியியல்  படிக்கப் பொருத்தமில்லாத தாம்
போடு குப்பையில் புறநானூற்றை
எனக்கு மட்டும் எதற்குச் சுதந்தரம் ?
மேற்கோள் சொல்லத் தான் திருக்குறளாம்
பிறகென்ன நாக்கு வழிக்கவா முப்பால் சுவடி ?
எனக்கு மட்டும் எதற்குச் சுதந்தரம் ?
இந்தி தெரிந்தால் தான் இந்தியரென்றால்
இந்தியனாகி என்ன செய்யப் போகிறேன்?
கழிசடைத் தமிழனாகவேனும் 
காலம் கழிக்கிறேன் அதுவே போதும் !

கவிஞர் சிற்பி அவர்களின் மொழிபெயர்ப்பு :

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் .
--------
கே.சச்சிதானந்தன்
(தமிழில் :சிற்பி)
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
அவளைக் கல்லினுள்ளிருந்து
உயிர்ப்பிப்பது என்று பொருள்.
அடிமுதல் முடிவரை காதலால் நீவி
சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில்
கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்.
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
கரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை
சொர்க்கத்து மகரந்தம் சுவாசிக்கின்ற
வானம்பாடியாக மாற்றுவது,
இரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு ஓய்வு தர
தோள் குனிந்து கொடுக்கும்
தளிர் அடர் மரமாக மாறுவதாகும்.
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
காற்றும் மழையும் நிறைந்த கடலில்
மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி
காலம் செலுத்துதல் என்று பொருள்.
நமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்
முளைத்த ஒரு மலர்ச்செடியை
யாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில்
கொண்டுபோய் நட்டுவளர்த்தல் என்று பொருள்.
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
தன் தசைநார்களின் ஆற்றல் முழுவதையும்
ஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்
கைமாற்றம் செய்து கொள்வதாகும்.
மணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து
மற்றொரு வானம் கடந்து
மற்றொரு வீட்டிலுள்ள
காற்றிற்கும், மற்றொரு நீருக்கும்
தன் தசையை விட்டுக்கொடுப்பதாகும்.
ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்,
அவளுடைய பழமையான காயங்களிலிருந்து
சூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க
அவளுக்கு உதவுவதாகும்.
பின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை
அக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்.
நான் ஒரு பெண்ணையும் காதலித்ததில்லை.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக