செவ்வாய், 20 அக்டோபர், 2015

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இலவச அரசுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்

அன்புடையீர் ,

வணக்கம்.

பொள்ளாச்சி இலக்கியவட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இலக்கிய சந்திப்பை நடத்தி வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்கியப்பணிகள் மட்டுமல்லாது பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறது. அதன் மிக முக்கியமான அங்கமாக, பொள்ளாச்சியில் ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசுப்பணித் தேர்வுகளுக்கு ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கி இலவசமாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்பெடுக்கவும் அவர்களுக்கு எல்லா வகையிலும் வழிகாட்டிடவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள், அரசுத் தேர்வுக்குத் தயாராக விரும்பும் இளைஞர்கள் அனைவரும் பயன்பெறுவார்கள்.

இது ஒரு கூட்டுமுயற்சியாக தங்கள் அனைவரின் ஒத்துழைப்போடுதான் சாத்தியமாகும். ஆகவே இம்முயற்சியின் முதல் கட்டமாக, இந்தச் செயல்பாட்டுக்குத் தங்களின் மேலான ஆலோசனைகள் உடனடியாக வரவேற்கப்படுகின்றன. கல்விமுறை,இடம்,பாடத்திட்டங்கள், தகவல்கள் என எல்லாத் தரப்பு ஆலோசனைகளையும் எங்களுக்கு அனுப்பலாம். மின்னஞ்சலில் அனுப்ப : ilakkiyavattampollachi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அலைபேசியிலும், அஞ்சல் வழியிலும் தங்களது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், இந்த முயற்சியில் எங்களோடு கரம் கோர்க்க விரும்பும் ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி உபகரணங்கள் வழங்குவோர் ஆகியோரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

தங்கள் மேலான ஆதரவை வேண்டி ..

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பில்சின்னாம்பாளையம்,
சமத்தூர் அஞ்சல்
பொள்ளாச்சி - 642123


பேச : 90955 07547 , 98422 75662

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

குழந்தைமை ததும்பும் கவித்துவம்

குழந்தைமை ததும்பும் கவித்துவம் 



கவிதைகளின் தேவைகளும் தேடல்களும் நமது வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்கவிதைகள் தமது புஷ்பக விமானத்தில் ஏற்றி நம்மை பிரபஞ்ச உலா அழைத்துச் செல்லக் கூடியவைஅதே சமயம்பெரும் பிரளயங்களை நம் மனதுக்குள் கிளர்த்தி நம்மை நாம் அறியாமலே சுக்கு நூறாக உடைத்து உருக்குலைத்து விடக் கூடையவையும் கூடபல சமயங்களில் புன்னகைகளைத் தருகின்ற இந்தக் கவிதைகள் தான் விழியோரம் சலனமற்று வழியும் ஒற்றைத் துளிக் கண்ணீரையும் நமக்குப் பரிசளிக்கின்றன.

ஏன் கவிதைஎதற்குக் கவிதைஎப்படிக் கவிதை என கவிதைகளைக் கேள்விகளாலும் கேலிகளாலும் எதிர்கொள்பவர்களுக்குச் சொல்ல என்னிடம் தத்துவங்கள் இல்லைஆனால் இந்தச் சின்னஞ்சிறிய மனிதனிடம் சில அனுபவங்கள் உள்ளனகவிதைகளால் ஆன அனுபவம்.அவற்றின் வழியே தான் இவன் இந்தக் கவிதைகளைப் பார்க்கிறான்இந்த உலகைப் பார்க்கிறான்.இந்தக் கவிதைகளால் ஆன உலகை நேசித்து வாழ்கிறான்கவிதைகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இந்த வாழ்வு அத்தனை ஆதூரமாய் இருக்காது என்பதை ஆணித்தரமாக நம்புகிறான்.

ஒரு அணுகுண்டு என்பது எந்த வடிவத்தில் இருந்தால் வெடித்துச் சிதறி தன்னோடு சேரும் அத்தனையையும் சாம்பலாக்கும் என்று கணக்குள்ளதா.?  போலவேகவிதை எந்த வடிவத்தில் இருந்தாலும் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்பட்சத்தில் அதைக் கொண்டாட எங்கோ யாரோ இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்மரபுக்கவிதைபுதுக்கவிதை,நவீன கவிதைஹைக்கூ,சென்ரியு என பெயர்கள் வேறு வேறாக இருக்கலாம் வகைமைக்காகஆனால் கவிதை ஒன்று தான்அளவில் சிறியது என கவிதைகளைக் கவனிக்காமல் இருக்க முடியாதுஇரண்டடித் திருக்குறளும் ஒரே அடி ஆத்திச்சூடியும் உலகின் ஒட்டு மொத்தக் கவித்துவத்தையும் தமக்குள் கொண்டவைதாம்.

கவிதைக்கான கருப்பொருள்களில் மிக நெருக்கமானவையாக கவிஞனுக்கும் வாசகனுக்கும் ஒரே சமயத்தில் பொருந்திப்போவது வெகு சில மட்டுமேஅவ்வாறானவற்றில் கூடுதல் கவனிப்புக்குள்ளாவது குழந்தைமைஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் ஏன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது என்பது தான் பிரதானமான காரணமாகிறது இதற்கு.என்றாலும்கவிஞனுக்குள் அந்தக் குழந்தை மனம் சற்று தூக்கலாகவே இருக்கிறது குதூகலம் கொப்பளிக்கும் பால்யத்துடன்.

குழந்தைமை மிதக்கும் கவிதைகளில் ஒரு மென்னுலாப் போவது வாழ்நாள் வரமென்பதை விரும்பி அனுபவிக்கிறேன்கவிதைகள் உண்மையில் குழந்தைகளின் பிஞ்சு விரல்களில் நம்மை இறுகப் பற்றி அழைத்துப் போகின்றன சுகந்தம் வீசும் பூக்காட்டுக்குள்திரும்பி வருதல் சாத்தியமற்று இக்கவிதைகளில் தொலைந்து போதல் சாத்தியமானால் மனம் விரும்பித் தொலைந்து போவேன்.

கவிஞர் ஜான் சுந்தர்  சொந்த ரயில்காரி எனும் தனது முதல் தொகுப்பின் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் தனது குழந்தைகளை அல்லது தனது கவிதைகளை ஒரு மெல்லிசையில் நடனமாட வைத்திருக்கிறார்மனதை மயக்கும் இசையில் லயித்திருக்கையில் திடும்மென உயரும் உச்சஸ்தாயி ஸ்வரத்தில் ஒருகணம் அதிரச் செய்து மீண்டும் தாலாட்டுகிறார்.
இவரது கவிதைகளெங்கும் பரவிக் கடக்கும் படிமங்களிலும் நுணுக்கமான அன்பினாலும் நாம் நம்மை இழந்து விடுகிறோம் ஒரு கணம்.


        உயிர்க்கொல்லி

பாப்பாவின் கனவில்
அடிக்கடி வருகிறதொரு
கரடி பொம்மை
பாப்பாவை விடவும் உயரமான
பொம்மையொன்றைப் பரிசளிப்பதாக
அப்பாவுக்கும் உண்டு ஒரு கனவு

கடைக்காரர் சொன்ன விலை தடுக்கி
கனவிலிருந்து கீழே விழுந்தார் அப்பா.

சிங்கம் புலி விளையாட்டின் போது
குழந்தையின் நினைவடுக்குகளில் இருந்து
எதிர்பாராவிதமாக வெளிப்படுகிறது கரடி
மூர்ச்சையாகிறார் அப்பா

கரடி வரும்போதெல்லாம்
இப்படி சமயோசிதமாக
மூச்சை அடக்கிக் கொண்டு
செத்தது போல் நடிக்கிறார்
அல்லது செத்து செத்துப் பிழைக்கிறார்.


புருவம் உயர்த்த வைக்கிறது கவிதைஒரு சிறுகதையின் பாங்கைஅதன் அழுத்தத்தைத் தந்து விடுகிறது இந்தக் கவிதைமகள் விரும்புமொரு கரடி பொம்மையை வாங்க இயலாத அப்பாவின் பாத்திரம் செத்துச் செத்துப் பிழைப்பது நம்மையும் அழுத்தி மரண வலியை உணர வைக்கிறது.இப்படி வலிகளையும் இயலாமைகளையும் எள்ளல் தொனியில் ஒரு கொண்டாட்டத்தைப் போல வார்த்தைகளாக்கிவிடுகின்ற கவிதை மனம் அபூர்வமானதல்லவாகரடி பொம்மையைக் குறியீடாக்கிக் கொண்டால் குழந்தையும்தந்தையும் தாமாகக் குறியீடாகிக் கொள்ள இது வாழ்வுக்கான ஒரு தத்துவக் கவிதையாகவும் பரிமாணம் கொள்கிறது.

குழந்தை மணம் கமழும் கவிதைகளை மனம் அசை போடும் போதெல்லாம் ஒரு கவிஞனின் பெயர் மனதுக்குள் தானாக வந்தமர்ந்து கொள்ளும்அவர் முகுந்த் நாகராஜன்தனது வசீகர கவிதை வரிகளால் தனக்கென ஒரு பிரத்யேக கவிதை சொல்லலில் தனிப்பட்டு நிற்பவர்அவரது ஒரு கவிதை

நீர் தெளித்து விளையாடுதல்

முன் பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டு விட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும்போது
காரணம் தெரிந்து விட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்து விட்டேன்.

-    முகுந்த் நாகராஜன்


இங்கு கவிதை வரிகளில் குழந்தை இல்லைஇல்லாத குழந்தைதான் கவிதையாகியிருக்கிறது.யாருமற்ற ஒரு இடத்தில் அது குழந்தைகளுக்கான இடம் என்ற கணத்திலேயே அங்கு ஒரு குழந்தையை உருவகம் செய்து கூட விளையாடச் செய்வது அற்புதமான கவிமனத்தின் நிலையே.

குழந்தைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மனிதர்கள்தாம் வன்புணர்ந்து,தூக்கிலிட்டு,குரல்வளை நெறித்து,குப்பைத் தொட்டியில்வீசி என குழந்தைகள் மீதான வன்முறைகளையும் நிராகரிப்புகளையும்குரூரமாக நிகழ்த்திவருகின்றனர் என்பது மறுக்கவும் மறைக்கவும் இயலா உண்மைகுழந்தைகளின் மீதான வன்முறைகளைக் காலத்தின் குரலில் பதிவு செய்ய வேண்டியதும் ஒரு கவிஞனின் கடமைநரன் அதைச் செய்திருக்கிறார் இந்தக் கவிதையில்.

சிறிய தோட்டா

கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை அவளுக்கு
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல்
ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென

-    நரன்

குழந்தைகளுக்கான தயாரிப்புகளைப் போலவே தான் கவனமாகப் பார்த்துப் பார்த்துச் செய்யப்படுகின்றனவா அவர்களுக்கான ஆயுதங்களும் எனக் கவிஞன் கேட்கும் கேள்வி நம் நெஞ்சைப் பதறச் செய்கிறதுபாலச்சந்திரன் உட்பட ஈழக் குழந்தைகளையும்சிரியாஆப்கன் என அனைத்து உலகக் குழந்தைகளின் உருவங்களும் நம் கண்களின் முன் ஒரு நீர்த்திரையாகத் தொங்கவிடச் செய்யும் உணர்வுகளைத் தூண்டிவிடச் செய்யும் வரிகள் தாம் நரன் எழுதியிருப்பது.

குழந்தைகளையும் குடும்பத்தையும் பொருளீட்டலின் பொருட்டுப் பிரிந்து தூர தேசத்தில் இருக்கும் நண்பர்கள் நமக்கு இருப்பார்கள்அவர்களின் வலிகளை நிறையக் கவிதைகள் பேசியிருக்கின்றனஅதில் ஒன்றுதான் ஸ்டாலின் எழுதிய விகிதங்கள் என்ற கவிதை.

      விகிதங்கள்

பொருள் வயின்
பிரிந்து சென்ற தகப்பனிடம்
அரையாண்டுத் தேர்வு
மதிப்பெண்களை
அலைபேசியில் சொல்கிறாள்
ஐந்து வயது சிறுமி
தமிழில் 48க்கு 50
ஆங்கிலத்தில் 98க்கு 100

.. .. .. …
கடல் கடந்து சென்றவனுக்கு
கண்களில் கசிகிறது
நிரப்பவியலாப் பிரியத்தின்
தலைகீழ் விகிதங்கள்

-    கே.ஸ்டாலின்

தமது குழந்தைகளையேஅலைபேசியின் வழி மட்டுமே அறிமுகமாகியிருக்கிற அப்பாக்கள் இருக்கிறார்கள்பத்துக்குப் பத்து அறையொன்றில் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கான அரண்மனைகளைக் கட்டிக்கொண்டிருகிறார்கள்அவர்களது மனோநிலையையைப் பதிவு செய்யும் கவிதையாக இருக்கிறது இது.

குழந்தைகளின் குதூகலமான உணர்வுகளைக் கவிதைவரிகளில் பதிவு செய்யும் ப்ராங்க்ளின் குமாரின் கவிதையொன்று ..
    ஞாபகம்

மனனம் செய்த
மளிகைப் பொருட்களை
ஜெட் புகையில்
தவற விட்டு
வீட்டுக்கே திரும்புகிறது
குழந்தை

-    பிராங்க்ளின் குமார்

ப்ராங்க்ளின் அற்புதமான புகைப்படக் கலைஞன் அதைவிடவும் கூடுதல் சிறப்புமிக்க கவிஞன்.அவரது கவிதைகளில் காட்சிப் படிமங்கள் செறிந்து கிடக்கும்அவரது புகைப்படக் காட்சிகளிலோ கவித்துவாம் நிறைந்திருக்கும்அவரது ஞாபகம்  கவிதை நமது பால்ய நினைவுகளைக் கிளறிவிடும் செயலைச் செய்கிறதுவீட்டிலிருந்து அம்மா சொல்லியனுப்பிய மளிகைப் பொருட்களை மந்திர உச்சாடனம் போலச் சொல்லிக் கொண்டே போன டவுசர் கால ஞாபகங்கள் நம்மைப் புன்னகைக்க வைக்கின்றன இவரது வரிகளில்சமீபத்தில் வெளியான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விளம்பரக் காணொலியிலும் இப்படி ஒரு காட்சி இருக்கும்நமது மென் ரசனைகளைத் தூண்டும் இப்படியான கவிதைகள் நமது ஆழ்மனதின் குழந்தைத் தனத்தை மட்டுமல்லாது கவித்துவத்தையும் சற்றே கிளறிவிட்டுவிடுகின்றன.

கவிஞர் வைகறையின் தனிச்சிறப்பான கவிதைகளும் குழந்தைக் கவிதைகளேகுழந்தைகளைக் கொண்டாடும் ஜன்னலைத் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்என்ற ஒரு கவிதைத் தொகுப்பையே அளித்தவர்அந்தத் தொகுப்பிலுள்ள அழகான ஒரு கவிதை இதோ

   துவட்டிவிடும் முன்

முழுவதும் நனைந்தவனாய்
வீட்டிற்குள் வந்த ஜெய்குட்டியைத்
துவட்டி விடும்முன்
முத்தமிடுகிறாள் அம்மா,
இன்று ஜெய்குட்டி
மழைக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறான்
ஒரு அம்மாவின் முத்தத்தை

- வைகறை

குழந்தைகளைக் கவிதையாக்கி மழையைக் கவிதையாக்கிமழைக்கு ஒரு கவிதை முத்தம் தரச் செய்து என இந்தக் கவிதை ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் மனதுக்கு நெருக்கமான கவிதை.

கவிதைகளில் நிறைந்து கிடக்கின்ற குழந்தைமை நமதாகநம்மை பிரதிபலிப்பதாக இருப்பதாலேயே இந்தக் கவிதைகள் நமக்குக் கூடுதல் நெருக்கமாகின்றனகுழந்தைக் கவிதைகளில் இருக்கும் அழகியல் சாதாரண வாசகரிலிருந்து தீவிர இலக்கிய வாசகர் வரைக்கும் ஒரு புன்னகையை உள்மனச் சிலிர்ப்பை வரவழைக்கும் திறனைக் கொண்டுள்ளன.
கவிதைகளின் பால் ஆர்வமற்றுவாசிப்புப் பழக்கமற்று இருக்கும் யாவர்க்கும் கூட புரியும் எளிய கவிதைகள் இவைஇதன் காரணத்தினாலேயே கொண்டாடப்பட்டும்பரவலாகக் கவனிக்கப்பட்டும்,வெகுஜன ஊடகங்களிலும் அதிக அளவில் பிரசுரிக்கப் பட்டும் இந்தக் கவிதைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன.

ஒரு நல்ல கவிதை எதையாவது செய்ய வேண்டும் எனச் சொல்வோம்எதையும் செய்ய வேண்டிய நிர்பந்தம் இல்லையெனவும் வாதிடுவோம்இருப்பினும் நல்ல மனநிலையில் ஒரு குழந்தையின் புன்னகையை யாரால் நிராகரிக்க முடியும்.? அவ்வாறாகவே இக்கவிதைகளின் அழகியலையும் அது தரும் நெருக்கமான உணர்வையும் நம்மால் நிராகரிக்கவே முடியாது.

கடைசியாக எனது ஒரு கவிதை

குழந்தைகளின் மொழி
அம்மாக்களுக்கு மட்டுமே
புரிவது போலவே
பொம்மைகளின் மொழி
குழந்தைகளுக்கு மட்டுமே புரிகின்றது..

இரா.பூபாலன்

ஆம்பொம்மைகளின் மொழியைப் புரிந்து கொள்ள நாம் நமது கிரீடங்களைக் கழற்றி வைத்துவிட்டுநமது முகமூடிகளை அவிழ்த்து விசிறிவிட்டுஒரு குழந்தையாகிவிடுவது அவசியம்.


அப்போதுதான் கவிதைகள் இனிக்கும் ..

குறிப்பு :
நந்தலாலா இணைய இதழ்-20ல் வெளியான கட்டுரை

http://www.nanthalaalaa.com/2015/10/12.html 

நன்றி : கவிஞர் வைகறை

புதன், 30 செப்டம்பர், 2015

முகநூல் தமிழ்



கற்காலம் தொட்டு கணினிக் காலம் வரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றாற்போல தன்னைப் புதுப்பித்துக் கொண்டு என்றும் மாறா இளமையுடன் இருக்கும் மொழி நம் தாய்த் தமிழ் தான். மற்ற மொழிகளுக்கெல்லாம் நூற்றாண்டு வரலாறு தான். நமது மொழிக்குத்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாறு. அதுவும் இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை; தோண்டத் தோண்ட பத்தாயிரம் ஆண்டுகளின் வரலாற்றை இந்த நிலமெங்கிலும் நிறைத்துப் புதைந்து கிடக்கிறது இன்னும். ஓலைச் சுவடிகளில் எழுதிய விரல்கள் இப்போது தொடு திரையிலும் தமிழிலியே எழுதுவது வியக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கிறது.

கணினியும் இணையமும் மிகப்பெரிய கடலெனப் பரவிக்கிடக்கிறது. இதில் தமிழின் பயன்பாடு பற்றியும் உள்ளீடுகளைப் பற்றியும் பேச விஸ்தாரமான அறிவு வேண்டும். நான் இங்கு சொல்ல விரும்புவது நாம் அன்றாடம் மூழ்கிக் கிடக்கும் முகநூலில் தமிழின் பயன்பாடுகள் பற்றி.

ஃபேஸ்புக் என்பது பெயர்ச்சொல் , மார்க் ஜூகர்பர்க் என்ற வெள்ளைக்காரன் கண்டுபிடித்தது அதை முகநூல் என்று தமிழ்ப்படுத்துவது தவறு என்ற ஐயத்திலேயே இருந்தேன். அப்படிப்பார்த்து நாம் தயங்கி இருந்தால், தொலைக்காட்சி, தொலைபேசி, அலைபேசி, மின்னஞ்சல் போன்ற வார்த்தைகளே நமக்குக் கிடைத்திருக்காது.

இதுபோன்ற அத்தியாவசியமான மற்றும் கலைச் சொற்களை நாம் உருவாக்கிக் கொள்ளத்தான் வேண்டும். தொழில்நுட்பம் வளர வளர ஒரு மொழி தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். மொழியை வளப்படுத்தவும் வாழவைக்கவும் இது ஒரு அடிப்படைத் தேவையாகவே இருக்கிறது.

முகநூல் தமிழ் :

முகநூலில் தமிழ் பயன்பாடு எவ்வாறு இருக்கிறது அதன் சாதக பாதகங்களைப் பார்க்கலாம்.

முகநூலில் எனக்கு மிகக் குறைந்த நண்பர்களே இருக்கிறார்கள் அவர்களில் தமிழில் தொடர்ந்து எழுதுபவர்களைப் பற்றியும் , தமிழ் மொழியை புதிய தொழில்நுட்பத்திலும் சிறப்பாகக் கையாளுபவர்களையும் பற்றி சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன்.

அதிகம் கவிதைகளின் பால் நேசம் கொண்டவனென்பதால் என் முகநூல் நண்பர்கள் அனைவரும் கவிஞர்களாகவே இருக்கிறார்கள். அதுவும் கவிதை மொழியின் உச்சத்தில் உலவுபவர்கள் என் நட்புவட்டத்தில் இருப்பது எனக்குக் கூடுதல் பெருமையானதாக இருக்கிறது. அவர்களில் கவிதைகளைத் தாண்டியும் மொழிக்கான தங்களது பங்களிப்புகளை பதிவுகளாகச் செய்யும் ஓரிருவரையும் அவரது பதிவையும் சொல்ல விழைகிறேன்.


கவிஞர் மகுடேஸ்வரன் :

முதலில் எனது நட்பு வட்டத்தில் இருக்கும் கவிஞர் மகுடேஸ்வரனைப் பற்றிப் பேச வேண்டும். இவர் திருப்பூர்க் காரர். திருப்பூர் மக்களின் பிரதானத் தொழிலான பின்னலாடைத் தொழில் நிறுவனத்தில் உயர்பதவியிலிருப்பவர்.
அதுவல்ல அவர் சிறப்பு. அவர் ஒரு அற்புதமான கவிஞர்.

பலமுறை எழுத்தாளர் சுஜாதா உட்பட பல ஆளுமைகளால் பாராட்டப்பட்ட பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர். அவரது முகநூல் தளத்துக்கு சென்று பாருங்கள். கவிதைகள், தனது அனுபவங்கள் தாண்டி முகநூலில் மிக முக்கியப் பணியை அவர் செய்து கொண்டிருக்கிறார். அது தமிழைக் கற்றுத்தருவது.

பல தமிழ் வார்த்தைகளைப் புரிய வைத்தல், காலம் காலமாக நாம் தப்பும் தவறுமாக எழுதி வரும் வழக்கைத் தவறென தெளிய வைத்தல், பல வேற்று மொழி வார்த்தைகளுக்கு சரியான தமிழ் கலைச் சொற்களை அறிமுகப்படுத்துதல் என முகநூலை, தமிழ் வளர்க்கும் கருவியாக அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.


அவருடைய ஒரு பதிவு :

எந்தன் உந்தன் என்றெழுதக் கூடாது.
என்றன் உன்றன் என்றுதான் எழுதவேண்டும்.
என்+தன் = என்றன்
உன்+தன் = உன்றன்
பலரும் ‘எந்தன், உந்தன்’ என்றே எழுதுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் திரைப்பாட்டு எழுதியவர்கள் இசையில் உட்கார வேண்டும் என்று கருதி ‘எந்தன், உந்தன்’ என்றெழுதிவிட்டார்கள். பேச்சு வழக்கில்கூட கொச்சையாக ‘எந்தன் உந்தன்’ என்பதில்லை நாம். வியப்பாக இருக்கிறதா ? பேச்சு வழக்கில் மக்கள் என்றன் உன்றனைப் பயன்படுத்துகிறார்களா ? ஆம். பயன்படுத்துகிறார்கள். கோவைத் தமிழை நினைவுகூட்டிப் பாருங்கள்.
என்ற பேச்சக் கேட்பியா மாட்டயா ?’
உன்ற அழும்புக்கு அளவேயில்ல போ’
என்ற பொழப்பு இப்படியாகிப் போச்சே...’
உன்ற காட்டுல நல்ல விளைச்சல்தான்...’
இதில் உள்ள என்ற உன்ற - என்றன் உன்றன் தான் ! மக்கள்கூட என்றன் உன்றன் என்னும்போது, எழுதுகிறவர்கள் அறியாமல் தவறாக எழுதுகிறார்கள்.
பேச்சுத் தமிழில் இவ்வாறு ஏராளமான அருஞ்சொற்களும் தூய வழக்குச் சொற்களும் நாமறியாதபடி கலந்திருக்கின்றன.


புல் பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசும்புல்.
கிளி பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசுங்கிளி.
நெற்கதிர் முற்றாமல் பச்சையாக இருந்தால் பசுங்கதிர்.
பச்சைப்புற்கள் மூடிய தரை பசுந்தரை.
உருக்கிக் கலக்காத தூய்மையான பத்தரை மாற்றுத் தங்கம் பசும்பொன்.
ஆனால், பசு தரும் பாலை எப்படிச் சொல்கிறோம் ? பசும்பால்.
இது தவறு. காய்ச்சப்படாத பச்சைப் பாலைத்தான் பசும்பால் என்று சொல்லவேண்டும். சற்றுமுன் கறந்த தூய்மையான பால் என்ற பொருளிலும் பசும்பால் என்று சொல்லலாம், பசும்பொன் என்பதைப்போல. ஆனால், பசும்பால் என்பது பசுவின் பால் என்ற பொருளைத் தராது.
பசுவிடம் கறந்த பால் என்பதைச் சொல்ல பசுப்பால் எனல் வேண்டும். பசுவின்கண் கறந்த பால் - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை !
ஆக, பசும்பால் வேறு ! பசுப்பால் வேறு !

இப்படியான நுணுக்கமான தமிழ் சொற்களையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துகிறார். இப்படியொரு தமிழ் ஆசான் நாம் கண்ணால் பார்க்காமலேயே , கட்டணம் இல்லாமலேயே கற்றுத் தருபவர் கிடைப்பாரா.?

தமிழில் அறிவியல் தகவல்களும், தமிழிலேயே தொழில்நுட்பங்களை எழுதுபவர்களும் மிகக் குறைவு. அதில் நான் பின் தொடரும் ஒரு பக்கம் அறிவுடோஸ் :


நாம் அழுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலான காரணங்கள் வெற்றி கிடைத்த மகிழ்ச்சி, வலி, பிறர் பிரிந்து செல்லுதல், வலுவிழந்த தன்மை போன்றவை தான். வேர்வை மற்றும் உமிழ்நீர் சுரப்பிகள் போல கண்ணீருக்கும் அழுகை சுரப்பிகள் என நமது கண்களில் உண்டு. உணர்ச்சியால் அழும்போதும், வலியால் அழும்போதும் இந்த சுரப்பிகள் ஒரே மாதிரிதான் செயல்படும்.

மற்ற சுரப்பிகள் போலவே இவையும் நமது இரத்த ஓட்டத்துடன் இணைந்துள்ளன. நமது கண்ணீரில் உள்ள ஒரு சில பொருட்கள் இரத்தத்திலிருந்து வருகின்றன. இந்த இரத்தத்தில் இருந்து பொருட்கள் கண்ணீரில் கலக்கும் விகிதம் சில ஹார்மோன்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாடுதான் நாம் வலியினை உணரும் போதும், உணர்ச்சியில் அழும்போதும் என வெவ்வேறாக இருக்கிறது. எனவே நாம் அழும் நிலைகள் வெவ்வேறானது தான்.

30 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமெரிக்க ஆராய்ச்சியாளர் உணர்ச்சிமிக்க அழுகை மற்றும் சாதாரண வெங்காயத்தினால் ஏற்படும் அழுகை என இரண்டு அழுகைகளிலும் கிடைத்த கண்ணீரை ஆராய்ந்தார். இதில் உணர்ச்சிமிக்க அழுகையில் கிடைத்த கண்ணீரில் புரதங்கள் அதிகம் என்பது கண்டறியப்பட்டது.

பாதகங்களையும் பார்த்துவிடலாம் :

எந்தத் தொழில் நுட்பமும் அது கண்டறியப்படும் நோக்கத்தைக் கடந்து தவறான நோக்கங்களுக்கும் பயனாகிப்போவது விதி. இதற்கு முகநூலும் விதிவிலக்கல்ல. மொழியை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கும் முகநூல்தான் மொழியைச் சிதைக்கும் பணியையும் செய்துகொண்டிருக்கிறது. முகநூலை, நூல்பிடிப்பதற்கும், ஆள் பிடிப்பதற்கும் அரசியல் செய்வதற்கும் பயன்படுத்துவோரும் இருப்பதால் இது நடந்தே விடுகிறது.

மிகச் சிலரே தமிழில் பிழையின்றி எழுதுகிறார்கள். தப்பும் தவறுமாக தமிழில் எழுதுவது முகநூலில் அதிகம். அதைப் பார்க்கும் போதெல்லாம் சுட்டிக் காட்டுங்கள்.

என்ன தான் முகநூலில் தமிழில் எழுதினாலும் முகநூல் வெளிநாட்டுத் தயாரிப்பு என்பதால் அதன் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களும் தமிழில் இல்லை. எதிர்காலத்தில் வரும் என நம்பலாம்.

எந்தக் கருவியாயிருந்தாலும் அதை ஆக்கவோ, அழிக்கவோ பயன்படுத்துவது நம் கைகளில் தான் உள்ளது.

முகநூல் மட்டுமல்லாது இணையத்தை மொத்தமாக நமது அறிவு வளர்ச்சிக்கும், மொழி வளர்ச்சிக்கும் பயன்படுத்துவோமாக.

______________


இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகை : 1