திங்கள், 25 ஆகஸ்ட், 2014

கவிதைகளால் இணைவோம் நிகழ்வு - 24.08.2014

கவிதைகளால் இணைவோம் நிகழ்வு - 24.08.2014


புதுக்கோட்டையில் வைகறை ஒருங்கிணைத்திருந்த கவிதைகளால் இணைவோம் நிகழ்ச்சிக்குப் புதுக்கோட்டை போயிருந்தோம் நேற்று.
சனிக்கிழமை இரவு பத்தரைக்கு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வந்தேன் யாழி, அனாமிகா, சோழநிலா, யோகா அனைவரும் எனக்கு முன்பாக வந்து காத்திருந்தனர். பேருந்தேறிக் கிளம்பியவுடன் ஆரம்பித்த பேச்சு விடிய விடிய பேசிக்கொண்டேயும், அங்கங்கு பேருந்து நின்ற இடங்களில் தேநீர் அருந்திவிட்டும் அந்த இரவைக் கொண்டாடினோம்.

காலை ஐந்தரைக்குப் புதுக்கோட்டை. வைகறை வண்டியில் இரண்டு முறையாக எங்களை அழைத்துச் சென்று அவர் வீட்டில் தங்க வைத்தார் மணிக்கு. விடிய விடியத் தூங்கவில்லை எனவே 9 மணிவரை நன்றாகத் தூங்க வேண்டும்  என நானும் யாழியும் சொல்லிவிட்டுப் படுத்தோம். தூக்கம் வருவதற்குள் தனது மஞ்சள் நிற ஸ்மைலி பந்துடன் வந்து விட்டார் ஜெய்குட்டி.எங்கே தூங்குவது. அவருடன் விளையாட்டு பின்பு அவசரமாகக் குளித்து, ரோஸ்லின் சகோதரியின் சுவையான காலை உணவுடன் திருப்தியாகக் கிளம்பி அரங்கம் வந்தோம்.

பத்து மணியிலிருந்து ஒவ்வொருவராக வரத் துவங்கினர். நண்பர்கள் பிராங்க்ளின் குமார், நந்தன் ஸ்ரீதரன், நாணற்காடன், சுரேஷ் மான்யா,அனைவரையும் பார்க்கிறேன். நந்தன் பிராங்க்ளினின் காமிராவுக்கு செமத்தியாக வேலை வைத்தார். நிறைய புகைப்படங்கள் அதில் பிரேம் செட்செய்வது முதல் நிறைய சொல்லிச் சொல்லி தன்னையும் நண்பர்களையும் புகைப்படமெடுக்கச் செய்தார்.

நிகழ்வைத் துவங்கிவிடலாம் என வைகறை சொல்ல, கூட்டம் வந்துவிட்டதைக் கவனித்து விட்ட நாங்கள் எங்கள் இருக்கைகளிலமர்ந்து கொள்ள, வைகறை நிகழ்ச்சி பற்றி அறிமுக உரையோடு வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து கவிதை வாசிக்கும் நிகழ்வை என்னை ஒருங்கிணைக்கச் சொன்னார். நான் ஒருங்கிணைக்க, முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் என்னுடையதும் சேர்த்து வாசிக்கப்பட்டன.

கனிமொழி ஜி, கந்தகப்பூக்கள் பூபதி, செ.சுவாதி, அருணா சுந்தரராசன்,சிமிழி அடங்காதவன், நாகரீகக் கோமாளி, தேவதா தமிழ்,முகேஷ், தமிழ்வரதன் அனைவரையும் முதன் முறையாகப் பார்க்கிறேன். அவர்களின் கவிதை வாசிப்பையும்.

இது ஒரு அற்புத அனுபவமாகவே பட்டது.

ஒவ்வொரு கவிதைக்கும் சிலர் விமர்சனம் சொன்னார்கள், பெரும்பாலும் அவை வழமையான வார்த்தைகளாக இருக்க. ஒரு குறிப்பிட்ட கவிதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தோடு கவிதை முடிந்து விட்டது என்று நுணுக்கமாக கவனித்துச் சொன்ன நந்தன் மகிழ்ச்சியுறச் செய்தார். நான் கவிதை வாசிக்கும் போது மட்டும் அவர் புகைக்கவோ, ஜெய்குட்டியுடன் விளையாடவோ வெளியில் போகாமல் இருந்திருக்கலாம். கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ஒவ்வொரு கவிதைக்கும் கருத்துச் சொன்னது அவரது கூட்டங்களில் அவரது அனுபவத்தைக் காட்டியது.

சுமன் என்றொரு பாடகர், தனக்கு பேச வராது என்று திக்கித் திக்கிப் பேசினார் ஆனால் ஒரு பாடலை அவர் பாடியபோது எங்குமே பிசிர் தட்டவோ திக்கவோ இல்லாமல் அழகான நீரோட்டமாக அமைந்தது பேராச்சர்யம். அவர் குரல் மயக்கி விட்டது அனைவரையும். இந்தக் குரலுக்குச் சற்று முன்புதான் நாணற்காடனைக் கவிதை வாசிக்க அழைத்த போது, கவிதைக்கு பதிலாக உருகி உருகி ஒரு பாடலைப் பாடி ஆச்சர்யமளித்தவர், சுமனின் பாடலைக் கேட்டுவிட்டு நீங்கள் எனக்கு முன் பாடியிருந்தால் நான் பாடியே இருக்க மாட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார்.

இலக்கியக் கூட்டங்களின் நடைமுறைச் சிக்கல்களும் நாமறிந்ததே. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் இதில் உள்ள சாத்தியங்களையும், சங்கடங்களையும் ஓரளவு புரிந்து வைத்திருக்கிறேன்.


முகநூலில் நிறைய நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்கள் ஊரிலோ அல்லது பக்கத்திலோ நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு ஒருமுறை கூடப் போவதில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஒருமாதம் வேலை அல்லது சூழ்நிலை காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு முறையுமா?

நிகழ்வின் பதிவுகளைப்பார்த்து விட்டு அடடா நேற்று நிகழ்ச்சி நடந்ததா. பக்கத்திலேயே இருக்கிறேன் தகவலில்லையா என்று பதறுபவர்களும், வரணும் வரணும் னு நினைப்பேன் ஆனா வர முடியல என வருந்துபவர்களும், எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே அலைபேசியில் அழைத்து பக்கத்து வீட்டில் கறிவிருந்து வர முடியவில்லை என்பவர்கள், நிகழ்சியின் நடுவில் வந்து அவசர அவசரமாக நோட்டில் வருகைப் பதிவைப் பதிந்து விட்டு உடனே கிளம்பிவிடுகிற பெருவியாதிக்காரர்கள், நிகழ்ச்சிக்கே வராமல் நிகழ்ச்சியைப் பற்றியும் நிகழ்ச்சியில் பேசியதைப் பற்றியும் விமர்சிப்பவர்கள், ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவாமல் குறை கண்டுபிடித்துச் சொல்பவர்கள், என்ன உதவினாலும் கேளுங்க என்று சொல்லிவிட்டு காணாமலே போய்விடுபவர்கள், மைக் கையில் கிடைத்தவுடன் சுற்றம் , சூழல் அனைத்தையும் மறந்து விட்டு, மைக்கோடு சேர்த்து நேர நிர்வாகத்தைத் தின்று விடும் படியாகப் பேசிக் கொண்டே இருப்பவர்கள்...இப்படி எத்தனை விதங்களில் மனிதர்கள் இலக்கியக் கூட்டங்களில். யாரையும் குறை சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு அனுபவம்.


உள்ளூர்க் கவிஞர்கள் நிறையப் பேரை எதிர்பார்த்திருந்த வைகறை சற்று சோர்வாகவே இருந்தார். கவிதைகள் குறித்து ரத்தினச் சுருக்கமாக நந்தன் பேசிய பேச்சை அனைவரும் ரசித்தனர். நன்றியுரை சோலச்சி சொல்ல நிகழ்வு முடிந்தது. பின்பு கிளிக் கிளிக் சப்தங்கள் முடிய மேலும் அரை மணி நேரம் ஆனது.

பழனியப்பா மெஸ்ஸில் நல்ல மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம். வீடு வரும் போது நள்ளிரவு 12 நல்லவேளை திருச்சி வரை கனிமொழி ஜி தனது காரில் டிராப் செய்தார்கள். இல்லை எனில் விடிந்திருக்கும்...


நேற்றைய நாளை அர்த்தமாக்கிய வைகறை, யாழி, நந்தன், கனிமொழி ஜி, சோ.ரவீந்திரன் உட்பட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....


புதன், 20 ஆகஸ்ட், 2014

அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது - கவிதைத் தொகுப்பு வாசிப்பனுபவம்

அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது -  கவிதைத் தொகுப்பை முன்வைத்து.... -இரா.பூபாலன்
               

கவிதைகளின் ஊற்றுக்கண்ணை அடைத்து விட இதுவரையிலும் எந்த சக்திக்கும் திறன் இருந்திருக்கவில்லைநல்ல கவிதைகள் காலம் கடந்தும் வாழும்கவிஞனின் காலம் கடந்தும்.

அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது " - கவித்துவமான இந்தத் தலைப்பைப் பார்த்ததும் நேரடியாக நான் கவிதைகளை வாசித்திருக்கலாம்அந்த முன்னுரையையை வாசித்தது கவிதைத் தொகுப்பை அணுகுவதற்கு ஏதுவாக அமையவில்லைஇந்த கவிதைகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் எழில் விபத்தொன்றில் பறிபோய்விட்டார் என்ற முன்னறிவிப்பை வாசித்து விட்டு கவிதைகளை வாசிக்கும்போது இழப்பின் வலிகள் தொண்டைக்குள் அமர்ந்து கொண்டு கவிதைகளை உட்செலுத்த மறுத்து விடுகின்றன.

முதல் இரன்டு நாட்கள் இப்படியே கழிய கொஞ்சம் இடைவெளிவிட்டு கவிதைப் பக்கங்களிலிருந்து வாசிக்கத்துவங்குகிறேன் மஞ்சள் வெயிலை.

எல்லா விதைகளையும் நாம் தெரிந்தே தான் விதைக்கிறோம்மகசூல் கொஞ்சம் அதிகம் என்றால் நாம் தயங்குவதே இல்லை பூச்செடிகளைக் களைந்துவிட்டு விருப்பமான காய்களையோ கீரையையோ பயிரிட.

நமது சுயலாப நோக்கத்தை நறுக்கெனக் கேட்கிறார் கவிஞர்
                                        …....................
ஆனால் அம்மா,
என்ன நிச்சயம்
மென்னுணர்வுகளை
நசுக்கியுருளும் காலச்சூழலில்
ஓர் நாள்
பூச்செடிகளைக் களைந்தெரிந்து
நீயும்
கீரைகளை விதையிட மாட்டாயென்பது ..?

சர்வ நிச்சயமாக இது காலச்சூழலின் மாற்றத்தில் மனிதம் இறுகிக் கொண்டிருக்கிற மக்களுக்கான ஒரு கவிஞனின் குரல் தான்இந்தக் குரல் தான் காலங்களனைத்திலும் மனிதர்களின் பிறழ்வுகளுக்குப் பின்னால் நின்று கூவிக் கொண்டேயிருக்கிறது.

காதலைக் கொண்டாடியிருக்கும் கவிதைகளிலும் அன்பு நிறைந்து கிடக்கின்றது.

உன் அன்பின் சிறகு
விரியாத வானத்தில்
நான் இறந்த நட்சத்திரமாகின்றேன்


இந்தக் கவிதை ஏதோவொன்றை அடிமனதில் கிளறிவிட்டு விட்டுப் போய்விடுகிறதுகண்சிமிட்ட இயலாமல் எரிபொருள் தீர்ந்த நட்சத்திரமாக ஆகிப்போனவனைக் கற்பனை செய்கிறேன்மீண்டும் அவ்வானத்தில் சிறகுகள் விரியுமா ?

நதியின் மீது தெரியும் நிலவின் பிம்பத்தை எல்லாக் கவிஞர்களுமே கவிதையாக்கிவிட்டிருக்கிறார்கள்தனது மொழியில் இவரது கவிதை அழகியலுடன் தன்னைத் தனித்து விருப்பக்கிறியிட வைக்கிறது

ஒருபோதும்
வரைந்து முடித்திடமுடியாத
உன் சித்திரத்தை
அலையும் நதியின் மீது
காலாதி காலமாய்
தீட்டிக் கொண்டிருக்கிறது நிலா.

நெளியும் நிலவின் பிம்பமெனக் காதலியின் பிம்பமும் கண்களுக்குள் சில விநாடிகள் கொண்டு வந்து சேர்க்கும் இந்தக் கவிதை காட்சிப் படிமமாக மனதினுள் நிறைகிறது.

சிலுவையின்
நெடுக்குச்சட்டம் நான்
குறுக்குச்சட்டம் நீ
கருணையின்
எந்தக் கரங்கள் அறைந்தன
இந்த வாழ்வை நம்மீது.

துன்பத்தில் உழலும் வாழ்வையும் ஆசுவாசமாக்கி விடுகிறது நமது இணைப்பின் கருணை என்பதான இந்தக் கவிதையும் சிலுவையும் புராதானத்து எச்சங்கள்.

ஒரு பறவை
நதியைக் கடப்பது போல
ஒரு நிலவு
இரவைக் கடப்பது போல
ஒரு மரம்
பருவங்களைக் கடப்பது போல
அல்லாமல்
ஒரு பள்ளிச் சிறுவன்
சாலையைக் கடப்பது போல்
இருக்கிறது
இவ்வாழ்வை
நாம் கடப்பது.

உண்மைதான்பறவையைப்போலநிலவைப்போலமரத்தைப்போல இயற்கையோடு இயல்பாக வாழப் பழகியிருக்கவில்லை இவ்வாழ்வை.ஆகவே இதைக் கடப்பது பயம் நிறைந்ததாகவும் யாருடைய கையையாவது பிடித்துக் கொண்டும் கடப்பதாக உள்ளது.

எழிலின் கவிதைகள் இயற்கையின் அழகைகாதலின் அழகை,வாழ்வின் அழகை அகத்தே கொண்டு வாசிப்பின் போது ஒரு புத்துணர்ச்சியைத் தருகின்றன.

இரை தேடி அலைந்த
பறவையின்
சோர்ந்த சிறகுகள் மீதமர்ந்து
கூடு திரும்புகிறது
மாலை நேரத்து வெயில்

இந்தக் கவிதை சிறு வயதில் வயல் வேலைக் களைப்புடன் மாலை வீடு வரும் அம்மாவின் சும்மாட்டுத்துணியில் இருந்த மஞ்சள் மாலை வெயிலை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

அருவி என்ற குழந்தையின் இழப்பை அக்டோபர் மாதத்தின் மழையிரவு கவிதையில் வலிமிகுந்த சொற்களால் எழுதியிருக்கும் இவர்,அருவியின் இழப்புக்குப் பின்னரான கவிதையொன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

உனது மொழிமட்டுமே தெரிந்த
இந்த பொம்மைகளிடம்
யார்
எப்படிச் சொல்லிப் புரியவைப்பது
என்றென்றைக்குமாய்
நீ
திரும்பப் போவதில்லை யென்பதை...


இந்தக் கவிதை வாசித்தவுடன் தனித்து நிராதரவாக விடப்பட்ட பொம்மையாக ஒரு கணம் சலனமற்றுக் கெட்டிப்பட்டு விடுகிறது மனது.


எழிலின் கவிதைகளில் கையாடப்பட்டிருக்கும் சொல்லாடல்களும் கவிதை நேர்த்தியும் நம்மை ஆச்சர்யமூட்டுகின்றனஇவரின் கவிதைகளின் பிரத்யேகத்தன்மை இவை எழுதப்பட்ட காலத்திலிருந்து பதினைந்து வருடங்களின் பின்பு படிக்கும் நமக்கும் இவை புதிய வாசிப்பனுபங்களைத் தருவதுதான்.

யார் யார்க்கோ
என்னென்னவோ நிகழ்ந்துவிட்ட
அதே சாலையில்தான் செல்கிறேன்
எப்போதும்
எனக்கேதும் நிகழ்ந்து விடாதென்ற
குருட்டுத்தனத்துடன்

இந்தக்கவிதையை வாசித்து முடித்த கணம் கனம் கூடிப்போகிறது மனதில்யார் யார்க்கோ என்னென்னவோ ஆகிப்போன சாலைப்பயணத்தில் தான் அந்த யார் யாரோவென்ற பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்ட கவிஞரின் புகைப்படத்தை முன்பக்கம் ஒருமுறை திருப்பிப் பார்த்துக் கொள்கிறேன்.

கவிஞர் எழில் எங்கும் போய்விடவில்லைஇந்தக் கவிதைகளாக,அதன் அன்பும் ஆழமுமான சொற்களாக நம்மிடையே தான் உலவிக்கொண்டிருக்கிறார்அவருடன் கைகுலுக்கி வாழ்த்திக் கொள்கிறேன் அரூபமாக இத்தொகுப்பை முன்னிறுத்திகவிஞர் எழில் அவர்களின் சகோதரர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் எழிலின் கவிதைகளைத் தொகுப்பாக்கி நம் கைகளில் தவழ விட்டமைக்காக.

நன்றி.

விலை உரூ 100/-

வெளியீடு வம்ஸி புக்ஸ்,
19 , டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை - 606 601
தொடர்புக்கு : +91 9444867023

ஆசிரியர் .எழில்

நன்றி :
நந்தலாலா இணைய இதழ்
http://www.nanthalaalaa.com/2014/08/17.html

நந்தலாலா இணைய இதழ் 19ல் எனது கவிதை

அந்த மழையில்...



அந்த மழைநாளில்
மிகப்பெரிய ஆச்சர்யமொன்று
நடந்தது.

மொட்டை மாடியில்
காய்ந்த துணிகளை
அவசர அவசரமாக
அள்ளியெடுக்க விரைந்தபோது
அவளைப் பார்க்க நேர்ந்தது.

எதிர் வீட்டின் மொட்டை
மாடியில் இரு கைகளையும்
அகல விரித்தபடி
வானம் பார்த்து 
நின்றிருந்தாள்.

அச்சிறுமியை இதற்கு
முன்னும் பார்த்திருக்கிறேன்
இன்றவள் புதிதாய்த் தெரிந்தாள்.

விரித்த இரு கைகளாலும்
ஏந்தி ஏந்தி எறிந்து
கொண்டிருந்தாள் மழைத்துளிகளை.

அவ்வப்போது ஒரு
அரை வட்டமடித்து
மழையின் அனைத்துத்
துளிகளையும்
மேனியெங்கும் வாங்கிக்
குதூகலித்தாள்.

இப்பெரு நகரத்தில்
இது பேராச்சர்யம் எனக்கு...

ஒரு கணம்
அவளாகியிருந்தேன் நான்.
என் பதினைந்து வருடங்களைப்
பின் தள்ளிவிட்டு.

மழை இரைந்துகொண்டே
இருந்தது.
குக்கர் விசில் சத்தம்
என்னைப் பதட்டப்படுத்த
அவசரமாகப் படியிறங்கினேன்.

அவளின் சிறு குழந்தைமையை
எக்கணத்திலும் நிராகரித்துவிடாத
புகுந்தவீடொன்று அமைய வேண்டுமென்ற
அவளுக்கான பிரார்த்தனைகளோடு...
- இரா.பூபாலன்,
சூலக்கல்.
98422 75662
இணைய இதழ் காண :

புதன், 9 ஏப்ரல், 2014

மகள்கள் வகுப்பெடுக்கிறார்கள் ...

ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம். இருப்பினும், எனது இரண்டு அனுபவங்களின் வாயிலாக அதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சம்பவம் # 1 :

சனிக்கிழமை மாலை மகளுக்கு சிறப்பு வகுப்பு. அழைத்துக் கொண்டு போய்விட்டு அவளுக்கு சாப்பிட வாங்கித்தர ATM சென்றேன். பணம் எடுத்துவிட்டு இரண்டு வழிச் சாலையின் அந்தப்புறம் செல்ல கொஞ்சதூரம் சென்று U வளைவு எடுத்துத் திரும்ப வேண்டும். அதற்குச் சோம்பேறித்தனப்பட்டு ஒரு வழிச் சாலையிலேயே எதிர்த்திசையில் மெதுவாக ஓட்டி வந்தேன். கொஞ்ச தூரம் தான். காந்தி சிலை வந்ததும் நேர் வழிக்குத் திரும்பிவிடலாம். அதற்கு விட்டாளா அவள்.? அப்பா, அப்பா.. ஏம்பா இப்படிப் போறீங்க.? சுத்திப் போனா லேட் ஆயிடும்டா அதான் என்றேன். போட்டாள் பொடணியிலேயே. எங்க மிஸ் சொல்லி இருக்காங்க சாலை விதிகளை நாம சரியா கடை பிடிக்கனும்னு. நாமளே கடை பிடிக்கலனா வேற யாருப்பா சரியா போவாங்க.? அதுவும் சரிதான். வண்டியைத்திருப்பிவிட்டேன். கொஞ்ச தூரம் தான். எப்போதும் தலைக்கவசம் அணிந்தே வண்டி ஓட்டுவேன். ரொம்ப வேர்த்து தலை நன்றாகவே ஈரமாகிவிட்டதால் அந்த மண்டையைக் கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு ஓட்டினேன். அதற்கும் பிடித்துவிட்டாள். அப்பா எங்க மிஸ் சொல்லி இருக்காங்க.... "ஹெல்மெட் ரொம்ப இம்பார்டன்ட்." " உப்புசம்டா.. கொஞ்ச நேரம்.." " ம்ஹூம்... போடுங்கப்பா.. கொஞ்ச தூரம் தானே வீட்டுக்குப் போய் கழற்றிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்..." வேறு வழியே இல்லை. சரியாகத்தானெ சொல்கிறாள். மண்டையை மீண்டும் மாட்டிக் கொண்டேன்.


சம்பவம் # 2 :

வழக்கத்துக்கு மாறாக நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தேன். மதிய வேளை. பாரதியுடன் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். ஒரு அகண்ட பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக் கழுவி மேலே கொண்டு போகும்போது எதற்கு எதற்கு என கேட்டபடியே இருந்தாள் கேள்வியின் நாயகி. பறவைகளுக்கு நீர் வைக்க என்று பதில் சொன்னேன். பறவைகளுக்கு நாம் எதற்கு நீர் வைக்கனும். வைத்தால் வந்து குடிக்குமா? என்றாள். கோடைக்காலமல்லவா பறவைகளுக்கு நீர் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது பாவம் பறந்து பறந்து தேடும். இந்த வழியா பறந்து போறப்ப பார்த்தால் வந்து மகிழ்ச்சியாகக் குடித்துக்கொள்ளும் என்று சொன்னேன். சந்தோஷத்தில் துள்ளியவள், வேகமாக கீழே வீட்டுக்குள் ஓடினாள். விளையாடப் போகிறாள் என்று நினைத்த நான் தண்ணீரை பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் இன்னொரு சின்னக் கிண்ணத்துடன் ஓடி வந்தாள். என்ன இது என்றதும்.. பறவைகளுக்கு தண்ணீர் வச்சுட்டீங்க. சாப்பாடு யார் வைப்பா.? என்று கேட்டபடி கிண்ணம் நிறைய அரிசியைக் கொண்டுவந்து வைத்தாள். மிக்க மகிழ்ச்சி. தண்ணீர் வைத்துவிட்டு கீழே வந்தபிறகு முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள் அதுவும் வழக்கத்தினும் அதிகமாக. ஏண்டா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே சொல்கிறாள் . உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப்பா என்று... அடடே....

ஞாயிற்றுக்கிழமை ஒரு பறவையும் வரவில்லை. சாயங்காலம் இரண்டு முறை போய்ப் போய்ப் பார்த்துவிட்டு சோர்ந்து திரும்பினோம். 

திங்கட்கிழமை அலுவலகம் முடிந்து இரவு வீட்டுக்குப் போனதும் வேகமாக ஓடி வந்து அப்பா வாங்க மேல போகலாம் என்று உடை மாற்றக் கூட விடாமல் கூட்டிக் கொண்டு படிகளில் தாவி ஏறினாள். 
இன்று பறவைகள் வந்திருந்தன ஆங்காங்கே தண்ணீர் தொட்டி மேலே பறவைகளின் எச்சங்கள். தண்ணீரிலும் எச்சங்கள். அரிசியும் பாதி கணவில்லை. ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக் கத்தினாள். மகிழ்ச்சியில் நானும் ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என அவளை உற்சாகப் படுத்திவிட்டு, பாத்திரத்தைக் கழுவி நீர் நிரப்பிவிட்டு வந்தோம். 

நீதி :

நண்பர்களே.... எந்த நல்ல காரியத்தையும் குழந்தைகளின் முன்னால், அவர்களை உடன் வைத்துக் கொண்டே செய்யுங்கள். அவர்களுக்க்கான செயல்முறைக் கல்வியாகவும் நல்ல அனுபவமாகவும் அது இருக்கும்.

சூழ்நிலையின் காரணமாக ஏதாவது பிசகிச் செய்ய வேண்டி வந்தால் அதை அவர்கள் முன் செய்ய வேண்டாம். ஆழப் பதிந்துவிடும்.

அவ்வளவுதான்....

திங்கள், 7 ஏப்ரல், 2014

இந்த வார ஆனந்தவிகடனில் எனது கவிதைகள்



--
நட்புடன்,
இரா.பூபாலன்
 
செல்பேசி :9842275662
 
 

திங்கள், 27 ஜனவரி, 2014

இயலாமை










எதுவுமே எழுத
இயலவில்லை இன்று.

வெற்றுக் காகிதம்
நகைக்கிறது.

திறந்து வைத்த பேனா
ஏங்கிக் கிடக்கிறது.

ஒரு கவிதை..?
ஒரு வார்த்தை..?

எதுவும் என்
வசமில்லை இன்று.

இந்தக் காகிதத்தில்
சிந்தும் என்
கண்ணீர்த் துளியை
வாசிக்கத் தெரியுமா

உனக்கு ..?

புதன், 22 ஜனவரி, 2014

நமது குடும்ப அமைப்பின் ஒரு சோறு ...

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் அழைப்பிதழைக் கொடுப்பதற்காகவும், தோழியின் புகைப்படம் ஒரு சிற்றிதழில் வெளிவந்திருப்பதைத் தருவதற்காகவும் முதன் முறையாக ஒரு தோழியின் வீட்டிற்குச் சென்றேன். தோழி கல்லூரி இரண்டாமாண்டு மாணவி. அவரும் தாயாரும் வரவேற்று உபசரித்தார்கள். தோழியைப் பற்றி எதுவும் தெரியாததால் பிறகு கேட்டபோது சொன்னார். அவர் தந்தை இவருக்கு ஐந்து வயது இருக்கும் போதே ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும் அவரின் முகத்தைக் கூடப் பார்த்ததில்லை எனவும் அம்மா தனி மனுஷியாகவே தன்னை வளர்த்ததாகவும் சொன்னார். மனம் கனத்தது. தோழிக்காக ஒரு கணம் வருந்தினாலும் அடுத்த கணம் என் நினைவில் வந்தது அந்தத் தாயின் முகம். கணவன் இறந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் அவர் ஒரு பெண்குழந்தையோடு எப்படி இப்பெருவாழ்வை எதிர் கொண்டிருப்பார்? என்னதான் கணவர் அரசுப்போக்குவரத்து ஊழியர் என்றாலும் அவருக்கு இழப்பீடும்,ஓய்வூதியமும் கிடைக்கிறது என்றாலும். அந்த அம்மா இழந்தது கணவனை மட்டுமா.? தன் இளமையை, தன் வாழ்வின் மிக முக்கியத்தருணங்களிலான சந்தோசங்களை அல்லவா..?

இதுதான் நமது குடும்ப அமைப்பின் மகத்துவம். குடும்பம் என்ற அமைப்பு நமது நாட்டில் வெறும் உறுப்பினர்களால் நிர்மாணிக்கப் பட்டதன்று. அன்பு,கருணை, தியாகம், சகிப்புத்தன்மை என்று இன்னும் பல கலவைகளால் ஆனது. அதைத்தான் இப்போது நாம் மோகித்துக் கிடக்கும் மேற்கத்தியக் கலாச்சாரம் சிதைக்கவும் சிதறுண்டு போகவும் வைக்கிறது.

அடிப்படையில் நாம் அன்பினால் கட்டமைக்கப்பட்டவர்கள். அதனாலேயே இப்படியான எத்தனையோ அம்மாக்கள், அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்காக தங்களின் சகலத்தையும் இழந்தும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்...

அவர்களால் தான் இன்னும் நம் கலாசாரத்தின் மீது அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கை இருக்கிறது.

குறிப்பு :

அந்த அம்மா வீட்டுக்கு அருகிலேயே ஒரு குடிசைத்தொழிலாக நகை வேலை செய்யுமிடத்துக்கு வேலைக்குச் செல்கிறார். அவருக்கு உதவியாக தோழியும் பத்து குழந்தைகளுக்கு மாலை வகுப்புகள் எடுக்கிறார் என்பதும் கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கிறது.

இனி எப்போது தோழியைப் பார்த்தாலும் அவர் முகத்தில் அவர் அம்மாவின் முகம் என் நினைவில் வந்து நிற்கும்...