வியாழன், 25 டிசம்பர், 2014

சட்டமும் நீதியும் எளிய மனிதர்களுக்கானது அல்ல

கிரிஜா அம்மா.

கிரிஜா அம்மாவைக் கடந்த நான்கு மாதங்களாகத் தெரியும். நான்குமாதங்களாகத் தொடர்ந்து கோவையிலிருந்து தனியாக பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்வுக்கு வந்து கலந்து கொள்பவர். ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர். ஒரு பேருந்துப் பயணத்தில் நாகப்பன் என்கிற அதே பள்ளியின் ஆசிரியர் பழக்கமாகி அவர் மூலமாக கிரிஜா அம்மா இலக்கிய வட்டத்துக்கு வரத் தொடங்கினார்

சென்ற ஞாயிறு நடந்த இலக்கியக் கூட்டத்துக்கு நாகப்பன், கிரிஜா அம்மா இருவரும் வரவில்லை. நாகப்பனிடம் கேட்கலாம் என்று அழைத்தேன். அவர் கிரிஜா அம்மாவுக்கு சிறு விபத்து, கையில் அடி. கங்கா மருத்துவமனையில் நான்கு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்தது என்றும் சொன்னார். பதறிவிட்டேன். வயதானவர், சர்க்கரை நோயாளி வேறு என்று. நேற்று மாலை அவரைப்பார்க்கலாமென மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.

கடந்தவாரம் பள்ளி வேலைகள் முடிந்து மாலை நேரமாகி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். சாலையோரத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது ஒருவன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து நிலை தடுமாறி மோதிவிட்டான். அவன் நிலையிலேயே இல்லை. கடும் போதையாம். இடித்துவிட்டு எழுந்து என்ன ஆச்சு என்று கேட்டானாம். இவருக்குக் கையில் பலத்த அடி கை எலும்பு துருத்திக் கொண்டு வெளியில் தெரியுமளவிற்கு பலத்த அடி. அப்படியே பக்கத்திலிருந்த காவல் நிலையத்தில் தான் முதலில் புகார் செய்திருக்கிறார். அதற்குள் இவருடன் பணிபுரியும் ஆசிரியர்களும் காவலர்களும் வந்து விட்டனர்.

கொஞ்ச நேரத்தில் காவல்நிலையத்தில் அழைத்து விசாரிப்புக்குப் பின் அவனை அனுப்ப முடிவு செய்து , நீங்க போங்க நாங்க பாத்துக்கறோம் என்று சொல்லிவிட்டார்களாம்.. காரணம் அவன் அமைச்சரின் உறவினன் என்றாம். அந்த அமைச்சர் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதை இருந்தது. ஒரு நண்பனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு எளிமையாக வந்திருந்தார். அப்போது நண்பன் என்னிடம் சொன்னபடி நிறைய எளிய மனிதர்களுக்கு உதவும் குணம் கொண்டவராம். இவன் அவரது பெயரைச் சொல்லித் தப்பிக்கிறான். இதைக்கேள்விப்பட்டதும் அங்கிருந்த ஆசிரியர்கள் கத்தி கூச்சலிட்டு FIR போட வைத்திருக்கிறார்கள். அப்படியே ஆனாலும், பெரிய அளவில் சேதமோ, உயிரிழப்போ இல்லாததால் அதிகபட்சம் கொஞ்சம் அதாவது 5000 ரூபாய்க்குள் அபராதம் கிடைக்கும் என்கிறார்கள்.

கிரிஜா அம்மாவை மருத்துவமனையில் பார்க்கும் போது கண் கலங்கினார். அவருக்கு சொந்தம் என்று யாருமே இல்லை, பத்தாம் வகுப்புப் படிக்கும் ஒரே மகன். அவனுக்குத் தேர்வு இப்போது. எனவே பக்கத்தில் நண்பர் வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

இதுவரை ஒரு லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இவரிடம் கொஞ்சம் கூட பணம் இல்லை. பள்ளி நிர்வாகம் தான் செலவு செய்து பார்க்கிறது என்றார். எப்படியானாலும் அந்தப் பணத்தை திரும்ப பணிக்கு வந்து கட்டியாக வேண்டும். இவருக்கு குணமாக, இன்னும் முன்று மாதங்கள் ஆகிவிடும். கையில் 6 போல்ட்டு மற்றும் நட் வைத்திருக்கிறார்கள். இருபது நாட்கள் படுக்கையிலேயே இருக்க வேண்டும். இவர் மருத்துவமனையிலிருந்த நாட்களில் கூட உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் தான் தினம் ஒருவராக இரவும் பகலும் உடன் தங்கி கவனித்துக் கொண்டுள்ளார்கள். இருபது நாட்களும் தூரத்து உறவு ஒருவர் வீட்டில் தங்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்த விபத்து இவரது வாழ்க்கையை அடியோடு மாற்றுகிறது எனக் கண்கலங்குகிறார்..

மிகவும் வேதனையாக இருக்கிறது. சட்டம் எத்தனை ஓட்டைகளைக் கொண்டுள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உள் நுழைந்து வெளி வரலாம் என்பது எத்தனை நகைப்புக்குரியது.

எளிய மனிதர்கள் வேறு எங்கு போவது நியாயம் வேண்டி.?

கிளம்பும் போது கிரிஜா அம்மா சொன்னார். இலக்கிய வட்டத்துக்கான உங்கள் குறுஞ்செய்தி வந்தபோது நாகப்பனிடம் சொன்னேன் " சே, கை நல்லா இருந்திருந்தா இந்நேரம் பொள்ளாச்சில இருந்திருப்போம்ல " என்று , மேலும் " அடுத்த மாதம் யாருங்க சிறப்பு விருந்தினர் ? கவலைப்படாதீர்கள் அடுத்த மாத இலக்கிய வட்டத்துக்கு வந்துடுவேன் " என்று. கண்கள் கலங்கின. அதற்குமேல் அங்கு இருக்க முடியவில்லை சீக்கிரம் குணமாகி வாங்கம்மா போதும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டேன்.

வாழ்க நமது சட்டமும், அதை தம் இஷ்டத்துக்கு வளைத்து ஒடிக்கும் அரசியல்வாதிகளும் பெரியமனிதர்களும்.

எளிய மனிதர்களே உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு ஓட்டு போட்டுவிட்டு நாம் அவர்களிடம் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். அந்த ஒரே ஒரு ஓட்டுக்கு அவர்கள் நம் காலடியில் கிடந்த நாடகத்தை கணக்கில் கொள்ளவும் வேண்டாம்.

அரசியல்வாதிகளின் அடிப்பொடிகள் கூட அவரது நிழலில் இருந்துகொண்டு இந்தச் சமூகத்தையே சித்ரவதை செய்துகொண்டிருக்கிறார்கள். யார் மாற்றுவது ..?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக