செவ்வாய், 11 ஏப்ரல், 2017

பாவம் நமது பாரதப்பிரதமர்





இந்தியத் தலைநகரில் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டம் உச்சமடைந்துள்ளது.

நிவாரணம் வழங்குதல், விவசாயக் கடனை தள்ளுபடி செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி தமிழ் விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக டெல்லியில் போராடி வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் அரசின் செவி சாயாததால் நேற்று தங்களது ஆடைகளைக் களைந்து முழு நிர்வாணப்போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.


பிரதமர் அலுவலகம் எதிரே ஆடையின்றி சாலையில் உருண்டு போராட்டம்


மொட்டை அடித்து, மீசை மழித்து, கண்களைக் கட்டிக்கொண்டு , உண்ணாவிரதமிருந்து, எலிக்கறி பாம்புக்கறி உண்டு, மண்டையோட்டை அணிந்து கொண்டு  என எத்தனையோ விதங்களில் கவன ஈர்ப்பை நிகழ்த்தப் போராடி இயலாமல் கடைசியில் வந்தடைந்தது தான் இந்த நிர்வாணப் போராட்டம்.


இந்தியா எனும் மிகப்பெரிய சனநாயக நாட்டின் தலைநகரில் அதுவும் பிரதம மந்திரியின் அலுவலகத்தின் முன்பு நிர்வாணமாக நின்று போராடினால் என்னென்ன பின்விளைவுகள் வரும் என்று அவர்கள் அறியாமலா இருப்பார்கள். நாடே பார்க்கும், வீடும் பார்க்கும் என்பதைப் புரியாமலா இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் ஆடை அவிழ்க்கத் துணிந்தது அவர்களும் அவர்கள் வீட்டினரும் சொகுசாக வாழ்ந்து விடவா. அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த அரசு கொட்டிக் கொடுக்கும் கோடிக்கணக்கான சலுகைகளில் சரி பாதி தங்களுக்கு வேண்டுமென்றா ?

அவர்களின் கோரிக்கை நியாயமானது. சில கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாமல் கூட இருக்கலாம். காது கொடுத்து ஒரு முறை கேட்கக் கூடவா முடியாது.?


நிதி அமைச்சர் சந்தித்தார், அலுவலர்கள் சந்தித்தனர் என்றெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அவர்களது கோரிக்கை பிரதமரைச் சந்திப்பது.  நமது பிரதமர் நமது விவசாயிகளுக்காக கடந்த ஒரு மாதமாக ஒரே ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கான நிலையிலா இருக்கிறார் ?

தொடர்ந்து இப்படியான புறக்கணிப்புகள் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களையும் அவர்களது தொழிலான விவசாயத்தையும் நாட்டுக்கே சோறிடும் விவசாயிகளையும் பெரும் அவமானத்துக்குள்ளாக்கும்.

நமது பிரதமரோ விமானத்தில் பறந்து , ஹெலிகாப்டரில் பறந்து சிலைகளைத் திறந்து வைக்கிறார், வெளிநாட்டு மந்திரிகள், அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார், அவர்களை ஆன்மீக தலங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்கிறார் அவர்களுடன் அழகாக செல்பி எடுத்துக்கொள்கிறார் , யாரோ ஒரு யுவதி இவரது துப்பட்டா அழகு என்று இணையத்தில் புகழ சிரத்தையெடுத்து இவர் அந்தப்பெண்ணுக்கு அதை அனுப்பி வைக்கிறார்.

நமது பிரதமர் நாட்டு மக்களுக்காக ஓயாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்... பாவம் அவருக்கு நேரமிருப்பதில்லை ..

பாருங்கள் , இதோ இப்போது கூட ஆஸ்திரேலிய பிரதமர் வந்து விட்டார் சுயமி எடுக்க வேண்டும், கோவில்கள், சுற்றுலா தலங்களைச் சுற்றிக்காட்ட வேண்டும், எத்தனை எத்தனை வேலைகள் உள்ளன. பாவம் அவரை விட்டுவிடுங்கள் ...









4 கருத்துகள்:

  1. பிரதமர் நல்ல தீர்வை எடுப்பார் ....... நம்பிக்கையுடன்!!??

    பதிலளிநீக்கு
  2. தமிழக விவசாயிகள் யாரிடம் சென்று முறையிட வேண்டும் தமிழக அரசு என்ன செய்கிறது

    பதிலளிநீக்கு
  3. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அழகான பதிவு

    பதிலளிநீக்கு