வியாழன், 14 மார்ச், 2024

இளங்கோ கிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், சக்திஜோதி, ஆன்மன் - பிறந்தநாள்

இன்று கவிஞர் இளங்கோகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் சக்திஜோதி, கவிஞர் ஆன்மன் ஆகியோருக்குப் பிறந்தநாள் ...

அன்பின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ரியத்துக்குரிய கவிகளே..




இந்த உலகிலேயே
திரும்புவதற்குக் கடினமான பாதை
மிகவும் நீளமான பாதை எது?" என்றாள்
இதோ
அவ்வளவு வெயில் தகிக்கும்
அவ்வளவு இருள் நிரம்பும்
உன் சொந்த இதயத்திற்குத்
திரும்பும் பாதைதான்

- மனுஷ்ய புத்திரன்



மூன்று குதிரைகள்
அன்னை மூன்று குதிரைகளைப் பிரசவித்தாள்
ஒரு குதிரை நெருப்பாலானது
நெருப்பைப் போல்
பூமியிலிருந்து வானுக்குச் செல்வது
காலுந்தி வானிலேயே திரிந்துகொண்டிருப்பது
இரை பொறுக்கவும் பூமிக்கு வராதது
தன் தகித்தலில் தன் மிதத்தலில் தனை உணர்வது
இன்னொரு குதிரை நீராலானது
வானிலிருந்து பூமிக்கு வருவது
தன் எடையால் எதையும் அசைப்பது
தன் நீர்மையால் எதையும் கதைப்பது
தன் பாரம் தாங்காமல் ஆழ ஆழ சென்று கொண்டிருப்பது
மற்றொரு குதிரை காற்றாலானது
தானாகத் தன்னை அறிவிக்காதது
சிறகற்ற சிறகில் வானுக்கும் பறப்பது
எடையற்ற எடையில் பூமிக்குள் அமிழ்வது
அன்னை அக்குதிரைகளுக்குப் பெயரிட்டாள்
சத்தியம் சிவம் சுந்தரம்
நெருப்பாய் பறக்கும் குதிரையை காற்றில் கட்ட முயன்றான் மனு
நீராய் அமிழும் குதிரையை காற்றில் கட்ட முயன்றான் புத்தன்
இப்படித்தான் இந்தக் கதை நிகழ்ந்தது
இப்படித்தான் இந்தக் கவிதை பிறந்தது

- இளங்கோ கிருஷ்ணன்



முதல் வார நாட்களுக்கும்
வரும் வார நாட்களுக்கும்
இணைப்பு தினமான இன்று
துவைப்பதும் சுத்தம் செய்வதும்
சமைப்பதும் ஒழுங்கு செய்வதும் என
நாள் முழுவதும் இயங்குகிறவள் அவள்.
ஞாயிற்றுக் கிழமைக்கு என்றே
பிரத்யேகக் கனவுகள் வாய்க்கப்பட்ட
தன் மகள்
உறங்குவதைக் காண்கிறாள்.
ஞாயிற்றுக் கிழமைக்கு என பிரத்யேக உறக்கம் வாய்க்கப்பட்ட தன் கணவன்
உறங்குவதைப் பார்க்கிறாள்
ஞாயிற்றுக் கிழமைக்கு என பிரத்யேக வேலைகள் இருப்பதை நினைக்கையிலேயே
அவளின் அதிகாலை துவங்குகிறது

- சக்திஜோதி



வருவதற்கும்
போவதற்குமான
காரணங்களை
மரங்களிடம்
ஒருபோதும் சொல்வதில்லை
பறவைகள்

- ஆன்மன் 

புதன், 13 மார்ச், 2024

ஹோ என்றொரு கவிதை - கவிதை நூல் அறிமுகம் - கவிஞர் ஜி.சிவக்குமார்

 ஹோ … என்றொரு கவிதை


                                                                                  
இரா.பூபாலன்
பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு
பக்கங்கள் 96
விலை ரூபாய் 130

தொடர்புக்கு 9842275662
தொகுப்பில் பிள்ளையார் சுழியாய் அமைந்திருக்கிறது அப்பாவின் கையெழுத்து கவிதை. வங்கியில், மதிப்பெண் அட்டையில் ராமசாமி என்று முயற்சித்து, சமயங்களில், ராமாமி என்று ஆகிவிடுகிறதென்றாலும்,தான் படிக்கா விட்டாலும் தன் மகனை பட்டதாரி ஆக்கிய அப்பாவின் கையெழுத்து அத்தனை அழகுதானே.
தடுக்கி விழும் போதெல்லாம் கடுமையான வார்த்தைகளால் கடுகடுக்கும் அப்பா, புகைப்படத்திலிருந்து வாழ்நாளில் கடைசி வரைக்கும் காட்டாத ஒரு புன்னகையைக்,கருணையைக் காட்டுகிறார்.
ஒரு கவளத்தை உருட்டி தட்டில் ஒதுக்கி கண்கள் மூடி வேண்டிக் கொண்டதும் உண்ணத் துவங்குகிற அப்பாவை,மூதாதையர் நிலத்தை கைகளில் ஏந்தியபடி கனவில் வருகிற அப்பாவை,வெள்ளை துணியால் சுற்றப்பட்ட மண் குடுவையில் அடைத்துச் சுமந்தபடி ஆறு நோக்கி நடக்கிறவனோடு சேர்ந்து வாசிக்கிற நம் கண்களிலும் குருதி வழிகிறது.
நான் இருக்கிறேன்
பயப்படாதே
குதி குதி என்ற அப்பா
அப்படியே ப்ளக் ப்ளக் என்று
அடங்கிப் போனார்.
இந்தத் துயரை வாசிக்கையில்,கொழுமம் அமராவதி ஆற்றில் ப்ளக்,ப்ளக் என்று அடங்கிப் போன அப்பாவின் நினைவுகளில்,அதிர்ந்து கொண்டிருந்தது மனம். வெகுநேரமான பின்புதான் அடுத்த கவிதையை வாசித்தேன்.
யாரோ அழைத்தபடியே இருக்கிறார்கள்
அந்த பெயரை
யாராவது நினைவூட்டியபடியே இருக்கிறார்கள்
விளம்பரப் பலகைகள்
பத்திரிகைகள்
புத்தகங்கள்
என
கண்களில் நிறைந்து கொண்டே இருக்கிறது
அந்தப் பெயர்
ஒரு பெயரை மறக்க நினைப்பது
எத்தனை அறிவீனம்
மனம் கழுவிப் போன காதலியின் பெயரா? மரணம் எனும் கரிய பறவை கவ்விச் சென்ற நெருங்கிய உறவொன்றின் பெயரா? நெருங்கி பழகி மனம் கசந்து பிரிந்த உறவின் பெயரா?எத்தனை எத்தனை சாத்தியங்கள்.ஆம்.மறக்க நினைப்பது அறிவீனம்தான்.
தெய்வங்கள் ஊருக்கு போய் விட்டன
என சொல்கின்ற நாட்களில்
என்ன செய்கின்றன குட்டி தெய்வங்கள்?
எதைக் கேட்டு அழுகின்றன?
குட்டி தெய்வங்களின்
விருப்பப் பொருள்கள் யாவை?
யாருடன் விளையாடிக் கழிப்பார்கள்?
எந்த பள்ளியில் படித்து
எந்த வீட்டுப் பாடத்துக்கு அடி வாங்குவார்கள்?
தெய்வங்கள் ஊருக்குர் போய் விட்டன
என்கிற ஒரு பொய்யைச் சொல்லி
சமாளிப்பவனாக மட்டும்
என்னை நிறுத்தி விடாதீர்கள்
குட்டி தெய்வங்களின் முன்.
அந்தகனான மரணம், குழந்தையின் பெற்றோர்களை கூர் நகங்கள் நிரம்பிய தன் கால்களால் கவ்விச் சென்று விட்ட கொடும் நிகழ்வுக்கு பின் தனித்து விடப்பட்டு, உறவினர்களின் அரவணைப்பில் வாழும் விவரம் தெரியாத சிறு குழந்தைகளின் பெருந் துயரைப் பேசுகிறது இந்தக் கவிதை.இது எல்லோருடைய வேண்டுகோளும்தானே?
சக மனிதர்களுடன் உரையாடல்கள் அல்ல, புன்னகைத்தல் கூட குறைந்து போய்விட்ட ஒரு இயந்திர வாழ்வின் எதிர்ப்படுகிற மனிதனின் ஒரு புன்னகை தன் கைவசம் இருக்கும் பொருளை இறுகப் பற்றிக்கொள்ள வைக்கிற இவ் வாழ்வின் எதார்த்தத்தை பேசுகிறது இந்த கவிதை
வங்கியில் பணம் எடுத்துவிட்டு
திரும்புகையில்
யாரோ ஒருவர் புன்னகைத்துச் செல்கிறார்
பையைத் தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டே
வீடு திரும்புகிறது மனது.
காத்திருக்கும் உடலை அருபமாகத் தடவித் தர ஒரு வளர்ப்பு மிருகம் என குழைகிற கைவிடப்பட்ட வீடு ஒரு அழகிய கற்பனை.
ரவிவர்மாவே உங்களை வரைந்து தரட்டுமே. அது,
ஒரு வட்டம் முகம்
இரு குட்டி வட்டங்கள் கண்கள்
நீள் வட்டம் வாய்
கோணல் கோடென மூக்கு
நேர்கோட்டில் மேலிரண்டு கிளைகள் கைகள்
கீழிரண்டு கிளைகள் கால்கள்
அதன் கீழே
அப்பா என் கதாநாயகன் என
ஓர் ஆசீர்வாதம்
இப்படி உங்கள் குழந்தை வரைந்த ஓவியத்திற்கு ஈடாகுமா?
நானும் ஒரு காலத்தில் முதியவர்களாக போகிறவர்கள்தானே? நாம் ஏன் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முதியவர்களை,தொங்கு சதைகளாகவே நினைக்கிறோம்? நினைவுகளில், ஏராளமான விஷயங்களை, வாழ்வைச் சுமந்திருக்கும் அவர்கள் அருகில் அமர்ந்து பேச ஏன் மறக்கிறோம்? ஏன் மறுக்கிறோம்? ஏன் அவர்களைக் கைவிடுகிறோம்? இப்படி,எத்தனையோ கேள்விகளை நமக்குள் எழுப்புகிற துயர் கதை இது. ஆம்.கவிதையல்ல, கதை.வாசித்துப் பாருங்கள்.
பாட்டியுடன் கோபித்துக் கொண்டு
வீட்டை விட்டு போய்விட்ட தாத்தாவை
தெருவெல்லாம் தேடித் திரிந்தோம்
யாரும் காணாதவாறு
மொட்டை மாடியில்
தண்ணீர் தொட்டி நிழல் மூலையில்
மணிக்கணக்கில் அமர்ந்திருந்தவர்
ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய் என்கிற
பாட்டியின் தேம்பல் கேள்விக்கு
இதற்கு மேல் பாதை இல்லை என்றார்.
கவிஞர் சிற்பி ஐயாவுடன் பொன்மாலைப் பொழுதுக்கும் கொள்ளுப் பேத்தி ஆதிரையின் குறும்புகளும் ஹோ.. என்ற ஒரு கவிதையாகிறது. செருப்புகள் மாட்டிய கைகளால் உந்தி உந்தித் தள்ளியபடி,சிக்னலில் புத்தகங்கள் விற்பவள், கவனியுங்கள்,யாசிப்பவளல்ல.குந்தி அமர்ந்து சாலையிடம் எங்கு செல்கிறாய், என்று கேட்பவன், தூமைப் பஞ்சின் பெயரை,கடைகளில் உரக்கச் சொல்லிக் கேட்பவன், தனக்குத் தானே உற்சாகமாக விளையாடும் சிறுவன், கவிதைக்குள் அத்துமீறி நுழைபவர்கள், அசந்தர்ப்பங்களில் குறுக்கே வந்து தொலைப்பவர்கள்,சிரமப்பட்டு அடுக்கிய பானைகள், நொறுங்கி விழ,குத்தாட்டம் போடுகிற கிழவன்,நினைவில் நெளியும் அரவங்கள், உடலெங்கும் கண்கள் முளைக்கிற புத்தன்
இப்படித் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களும், உறவுகளும்,உணர்வுகளுமான வாழ்வை அழகிய வரிகளில் பதிவு செய்திருக்கிற கவிதைகளின் தொகுப்பு.
அழகான அட்டைப்படத்திற்கும்,நேர்த்தியான வடிவமைப்பிற்கும் வாழ்த்துகள்

நூல் அறிமுக உரை : கவிஞர் ஜி.சிவக்குமார்




செவ்வாய், 12 மார்ச், 2024

ஹோ என்றொரு கவிதை - கவிதை நூல் அறிமுகம் - கவிஞர் கோவை ஆனந்தன்

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளரும் எங்களின் இனிய தோழருமான கவிஞர் இரா.பூபாலன் அவர்கள் எழுதிய “ஹோ… என்றொரு கவிதை” நூல் குறித்து எனது வாசிப்பனுபவம்…




இத்தொகுப்பானது கவிஞர் இரா.பூபாலன் அவர்களுக்கு ஏழாவது தொகுப்பாகும்,பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர்,
பத்மஸ்ரீ சிற்பி ஐயா அவர்களிடம் ஒரு மாலைப்பொழுதில் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் சிற்பி ஐயா அவர்களின் கொள்ளுப்பேத்தி உரையாடல்களின் குறுக்கே ஹோ என உச்சரித்த ஒலியினைக் கொண்டு இந்நூலுக்கு “ஹோ…என்றொரு கவிதை” யென தலைப்பாக வைத்துள்ளார். இந்நூலின் அட்டைப்படமே ஒரு சிறுமியின் புகைப்படத்தோடு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொருவரையும் இந்நூலும் நேசிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லையென நம்புகிறேன்.

எப்போதும் நண்பர்களை வாசிக்குமாறும் எழுதுமாறும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞர், பல்வேறு இளம் படைப்பாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.

தனது அறை அலமாரிகளை நூல்களால் நிறைத்த அன்பு மிகுந்த நல்ல மனிதர்,
இவர் கவிதைகளைத்தான் காதலித்தும்,காதலித்துக்கொண்டும் கவிதையாகவே வாழ்ந்து வருபவர். தனது வாழ்க்கையின் அழகிய தருணங்களாக கவிதை வாசிப்பதையும், கவிதை எழுதுவதையும் குறிப்பிட்டுள்ள கவிஞர்,
தனது கல்லூரி பருவத்தின் போதும், பணி நிமித்தமாகவும் தினமும் பேருந்தில் பயணித்த நாட்களில் சாலையிலும், சாலை ஓரங்களிலும் தான் கண்ட அழகிய நிகழ்வுகளை காட்சிபடுத்தியுள்ளார். எல்லாக் கவிதையிலும் அன்பையும் கருணையையும் நீரூற்றாய் ஓட விட்டிருக்கும் கவிஞர், இந்நூலையே கவிதைகளுக்காக சமர்ப்பணம் செய்திருப்பது கவிதைகளின் மீது அவருக்கு இருக்கும் தீரா பற்றை வெளிப்படுத்தியிருக்கிறது.

பொதுவாகவே அப்பா மீது அதிக பாசம் கொண்ட இவர், முதல் கவிதையிலேயே அப்பாவைப்பற்றி எழுதியிருக்கும் வரிகள் வாசிக்கும் போதே
பள்ளிப் பருவத்தில் அப்பாவுடன் நிகழ்ந்திருந்த நினைவுகள் அத்தனையையும்
கொண்டாடி மகிழும் அழகிய வரிகளாகும்.

அப்பாவின் கையெழுத்து என்ற தலைப்பில் தொடங்கும் இக்கவிதையில்
தான் படிக்கவில்லையென்றாலும் தனது பிள்ளை உயர்படிப்புகள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டுமென விரும்பும் அப்பா, கம்பீரமாய் மீசையை தடவிய நாட்களை நினைவுபடுத்துவதோடு பிள்ளைகள் மீது அப்பாக்களுக்கு இருக்கும் பாசத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவதாகவே உணர்கிறேன்.


“எழுதப்படிக்கத் தெரியாத
அப்பா
கைகள் நடுநடுங்க
ரா…ம…சா…மி என வங்கியிலோ
நான் நீட்டும் மதிப்பெண் அட்டையிலோ எப்போதாவது கையெழுத்துப் போட்டுப் பார்ப்பார்.
சமயங்களில் ராமாமி ஆகிவிடும் அது
எழுதி முடித்தவுடன் மீசையைத் தடவி விட்டபடி
பெருமிதமாகச் சிரிப்பார்
காடு மேடெல்லாம்
அலைந்து திரிந்தும்
தன் முதுகுத்தண்டை
அடமானத்துக்கு வைத்தும்
பிள்ளையின் பெயரின் பின்
வாங்கித் தந்த பட்டத்தால் என்ன சாதித்தாய் என்கிற
கேள்விக்கு அந்தச் சிரிப்பைத் தான் பதிலாக சொல்வேன்.”

என முடியும் முதல் கவிதை அப்பா மகனுக்கு இடையிலுள்ள உறவை உயிரோட்டத்துடன் உணர்வுப்பூர்வமாக காட்டுகிறது, என்ன சாதித்தாய் என கேட்கும் கேள்விக்கு தன்னை ஆளக்கியவர் முன் சிரிப்பைத்தான் பதிலாக சொன்னேன் எனக்கூறுவது மனத் தெளிவையும், முதிர்ந்த அறிவையும் வெளிப்படுத்துகிறது.

கூடுதலாக ஒளிரும் சிவப்பு கவிதையில் சக்கரப் பலகையோடு நடமாடும் மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை பேசுகிறது,இனாமாய் எதையும் வாங்க விருப்பமில்லாதவன் புத்தகங்களை கூவி விற்று பிழைப்பு நடத்துகிறான்,இந்நிலையில் தனது கொள்கைகளை தளர்த்திக்கொள்கிறான் பிஞ்சுக் குழந்தைக்காக…
இவ்வரிகளை வாசிக்கும்போது இவரைப் போன்றவர்களிடம்தான் இன்னும் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது.

மழை ஒதுக்கியவன் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் கவிதை அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குள் வாழ்பவர்களுக்கு துளிகள் ஒவ்வொன்றும் அந்நியப்பட்டதாகவும்,இவர்கள் தீண்டத்தகாதவனென மழைத்துளிகள் வாசலோடு திரும்பிப் போவதாகவும் உண்மை நிலையைத்தான் பேசுகிறது.

நான்முனைச் சித்திரம்
எனும் கவிதையில்

நான்கு முனைச் சந்திப்பொன்றில் வாகன ஓட்டிகளின் அன்றாட பிரச்சினைகள் சிலருக்கு துன்பமாக அமைந்தாலும்,அதே நேரத்தில் சிலருக்கு இன்பத்தையும் தருகின்றன என்பதை இவ்வரிகளால் அறிய முடிகிறது

“யுத்தக்களத்தின் நடுவே ஒருத்திக்கு
நான்கு முழம் பூ போணியானது
ஒரு பரட்டைக் கிழவனின்
தட்டில் சில சில்லறைகள் கூடுதலாகின்றன”

பதற்றம் எனும் கவிதை
எல்லோருக்குமே ஒருநாள் பதற்றமாகி விடுகிறதென்றால் அது வங்கியிலிருந்து பணப்பையோடு திரும்பும் நாட்களாகத்தானே இருக்கும்,
ஏனென்றால் எதிரில் வருபவர்களிலிருந்து நம்மைக் கடந்து செல்பவர் வரை ஒவ்வொருவரும் நம்மைத்தான் பின்தொடர்கின்றனர் என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறது, இதற்கு இன்னொரு காரணமும் உண்டு, வழி கேட்பது போலவும் உதவிசெய்வது போலவும் தானாக வந்து ஏமாற்றி பணத்தை பறித்துச்செல்லும் காட்சிகள்தானே திரும்பிய பக்கமெல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, இதோ அந்த பதற்றமான வரிகள்….

“வங்கியில்
பணம் எடுத்துவிட்டுத்
திரும்புகையில்
யாரோ ஒருவர்
புன்னகைத்துச் செல்கிறார்
பையைத் தொட்டுத் தொட்டுப்
பார்த்துக்கொண்டே
வீடு திரும்புகிறது மனது.”

ஹோ… என்றொரு கவிதையில் குழந்தையின் குறும்புத் தனத்தையும் அழகிய சொற்களையும் உன்னிப்பாக கவனித்ததன் வரிகள்தான் இதோ

“ஒரு மணி நேர உரையில்
உலகையே சுற்றி வருகின்றன மகாகவியின் சொற்கள்
ஆயினும்
மூன்று ஹோக்கள் மட்டும்
கவிதையாகி விடுகின்றன
அம்மையப்பனைச் சுற்றிவந்து
அபகரித்துக்கொண்ட ஞானப்பழமென”

அதே சமயம் இன்றைய சமூக வலைதளங்களில் எதைத் தொடுகிறோமோ அவை பெரும் தரவாக வந்து தொல்லை தந்து கொண்டிருப்பதையும் அதை மறுப்பதற்கு வேறொன்றைத் தொட்டு அது தொடர்கதையாகி விடும் அவலங்களையும், இக்காலத்தில் தொடுதிரை அலைபேசி பயன்பாட்டாளர்களின் இன்னல்களை புத்த விளம்பரம் எனும் கவிதை தெளிவாக காட்டுகிறது.

ஒவ்வொரு கவிதையை வாசிக்கும் போதும் நான்முனைச் சந்திப்பு சாலைகளில் போக்குவரத்தை சரிசெய்யும் காவலரிலிருந்து அங்கு புத்தகம் விற்பனை செய்பவர் வரை ஒவ்வொருவரையும் நம் கண்முன் நிறுத்தி மகிழும் கவிஞர் அலைபேசிகளின் வழியே நமது கேளிக்கைகள் நாள்முழுவதும் எவ்வாறெல்லாம் செலவிடப் படுகிறதென்பதை வித விதமாய் வரைந்திருக்கிறார்.

அதிசய மழை எனும் கவிதையில்

அலைபேசி வாயிலாக பேசும் ஒருவர், பெய்யாத மழையை பெய்வதாய் கூறி அருகிலிருப்பவரை வியப்பில் ஆழ்த்துவது எல்லா ஊர்களிலும் நடந்துகொண்டுதானே இருக்கிறது.

வழியிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பைத்தியகாரர்களை கண்டிருப்போம், அவர்கள் எப்போதும் எதையாவது உளறிக்கொண்டேயிருப்பார்கள், அப்படிப்பட்ட ஒரு பைத்தியகாரியைப் பற்றி இவரது பார்வை….

“ஒரு பைத்தியக்காரியின் சொற்களென
சதா பெய்கிறது மழை
நகர வழியற்று
அருகமர்ந்து
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
சக
பைத்தியகாரனாக”

பல்வேறு விதமான மனிதர்களையும் நிகழ்வுகளையும் கருணை மனதோடும் இரக்க குணத்தோடும் வெளிப்படுத்தியிருக்கும் கவிஞர், மீண்டுமொரு முறை தந்தையைப்பற்றியும் அவரது இழப்பினைப்பற்றியும் எழுதி வாசிப்பவர்களின் விழிகளையும் மனதையும் நனைய வைத்துவிடுகிறார், ஆம் தந்தையின் அஸ்தியோடு அவர் ஆறுவரை நடந்து செல்லும்போது மனதில் ஏற்படும் வலிகள் எவ்வளவு கொடுமையானது என்பதையும், அத்துயர நேரத்தில் கண்ணில் தென்படும் ஒவ்வொன்றும் அப்பாவுடனான பழைய நினைவுகளை பேசுவதை நினைத்து நினைத்து நகரும் தூரம் எவ்வளவு துயரமானதென்பதையும் கண்ணீரோடு பதிவு செய்திருக்கிறார்.

இறுதியாக நான்கு தேநீர் கோப்பைகளோடு வழியனுப்பும் கவிஞரின் இத்தொகுப்பு, உளவியலோடு உணர்வுகளும் கலந்த உன்னத தொகுப்பாகும்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : “ஹோ… என்றொரு கவிதை”

நூலாசிரியர் : இரா.பூபாலன்

வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு

பக்கங்கள் : 96

விலை : ₹130

நூலைப் பெற  : 98422-75662


நூல் அறிமுகம் : கவிஞர் கோவை ஆனந்தன்



இந்த நூல் அறிமுகம் புக் டே இணைய இதழில் வெளியாகியுள்ளது..

வாசிக்க :

https://bookday.in/hoo-ennoru-kavithai-book-review-by-kovaianandan/?fbclid=IwAR1fH6wliDFQAm9o-rShAGvs9hsCySZRtaKqTlKbtYRLuMIu4NuKQN7KPHY#google_vignette



திங்கள், 11 மார்ச், 2024

நின் நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு நூல் அறிமுகம் - கவிஞர் இளையவன் சிவா

 நின்நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு

- இரா.பூபாலன்



பதிப்பு 2023 டிசம்பர்
பக்கம் 72
விலை ரூ 120
வெளியீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பொள்ளாச்சி
தொடர்புக்கு : 9842275662

பொள்ளாச்சியில் செயல்படும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் செயலாளர் கொலுசு இலக்கிய இதழின் பொறுப்பாசிரியர் டில்லியில் நடந்த இளம் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்தவர் ஏழு கவிதை நூல்களை வெளியிட்டவர் என்ற சிறப்புக்குரிய
இரா பூபாலன் அவர்களின் எட்டாவது கவிதை தொகுப்பு இது.
அம்மாவாக மனைவியாக மகளாக தோழிகளாக அக்காக்களாக என்னை நானாக்கிய பெண்கள் தான் இந்த கவிதைகள் என்று தனது முன்னுரையில் குறிப்பிடும் பூபாலன் பெண்களுக்கான கவிதைகளை எழுதி தனித் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.
பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற மொழியின் வீரியத்தை வாழும் உயிர்களுக்குள் துடித்திடும் இதயத்தின் தன்னலமற்ற சேவையென உணர்த்திடத் துடிக்கும் வரிகளைக் கொண்டு மங்கையரின் மாண்புகளை மாலையிடுகிறது நின்நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு.
உலகத்தின் இயக்கத்திற்கு சூரியனின் மையமும் கோள்களின் நிலையற்ற நகர்தலும் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் உயிர்களின் நகர்தல் தொடங்கும் புள்ளியும் தொடர்ந்து இயங்கும் புள்ளியும் பெண்ணின் கரங்களுக்குள் ஒளிந்து கிடப்பதை மறுப்பதற்கில்லை. மகளாக மனைவியாக அன்னையாக பாட்டியாக சகோதரியாக என பலவித பரிமாணங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் மகளிரின் வாழ்வின் எல்லாத் தருணங்களையும் கொண்டாடித் தீர்த்திட சுழன்றிடும் கவிதைகளைக் கொண்டு அழகு பார்த்திடும் கவிஞரின் திறமைக்கு வாழ்த்துக்களும் பேரன்பும் உரித்தாகுக.
மனித வாழ்வின் நிலையாமைப் பொழுதுகளை உயிர்ப்பிக்கச் செய்து நகர்ந்திடும் தருணங்களை அர்த்தமுள்ளதாக மாற்றிடும் சக்தியும் பேராற்றலும் பெண்ணின் மனங்களுக்குள் பூத்திடும் அதிசயமாக புதைந்து கிடக்கிறது. இல்லறத்தின் சராசரி இயக்கத்தைக் கூட சிறப்பானதாக மாற்றி இமயத்தைத் தொட்டுவிடும் சாதனைகளை எட்ட வைக்கும் திறனை தங்களுக்குள் தேக்கி வைத்தே வழிநடத்திடும் மங்கையரின் வாழ்வில் வசதிகள் வளராமல் போனாலும் நிம்மதியும் ஆனந்தமும் நிலைகொண்டு நின்றிடும்.
ஆணும் பெண்ணும் சமமென்றே அறிவினை ஊட்டி வளர்த்திட்டாலும் ஏடுகளில் எழுதி உரைத்திட்டாலும் பேச்சிலும் உரையிலும் போற்றி வளர்த்தாலும் நிகழ்வுகளை கவனிக்கையில் சமத்துவத்தின் பாதையில் தடங்கல்கள் நிறைகின்றன. ஆணின் மனதில் இன்றும் கூட பெண்ணின் மனதை வாசிக்க முடியாத பக்கங்கள் நிறைகின்றன. பெண்ணை உடலை வைத்து எடை போடும் மனங்களே மிகுந்து நிற்கின்றன. கல்வியும் சிந்தனையும் இன்னும் சில ஆண்களின் மூளைக்குள் பெண்ணை போகப் பொருளாகப் பயன்படுத்திப் பார்க்கும் எண்ணத்தையே விதைக்கின்றன. விடியும் ஒவ்வொரு நாளும் செய்திகளில் கதறிடும் பெண்ணின் வலிகளை வேதனைகளை பாலியல் சீண்டல்களை வாசித்து விட்டும் கண்டும் காணாது கடந்து போகும் இன்றைய சமூகப் போக்கில் இவற்றைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கும் பிரச்சனைகளின் மூலத்தை ஆராய்தல் காலத்தின் அவசர அவசியமாகிறது.
கல்வி முறைக்கும் குடும்பத்தில் ஆண் பிள்ளைகளை வளர்த்திடும் விதமும் பெண் பிள்ளைகளை வளர்த்திடும் விதமும் பெண்களைப் பற்றிய சரியான புரிதல்களை விதைத்திடுதல் அவசியம். அதற்கு பெண்ணின் பரிமாணங்களை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. பெண்களின் மீதான புறச்சீண்டல்களை சமூகம் கொடுக்கும் வெளி அழுத்தங்களைப் பற்றி நம்மிடையே விசனப்படாமல் வேதனைப்படாமல் பெண்ணின் அகத்தையும் அதன் வழியே அவர்களின் வாழ்வு முறையையும் அவர்களின் மனங்களுக்குள் மலர்ந்திடும் கனவுகளின் நிகழ்வுகளையும் கவிதைகளாக்கி கல்வெட்டுகளாய் நமக்குள் புகுத்தி விடுகிறார் கவிஞர்.
எல்லா உயிர்களும் இந்த உலகின் இயக்கத்தை அதன் பேராற்றலை முதன்முதலாக அவரவர் தாயின் விழிகளின் வழியே தான் உணரத் துவங்குகின்றன. அவற்றின் வளர்ச்சியும் அவரவர் தாயின் நகர்தலுக்கேற்ப நினைவுகளை உருவாக்கி நிலை கொள்கின்றன. தாய்மையைக் கொண்டாட விரும்பாத மனங்கள் கிடையாது. ஆனால் தாய்மையின் மனமோ தன்னைத்தானே கொண்டாடி மகிழ விரும்பாது. தனக்கான வாசனையைத் தானே உணராத மலரின் புன்னகை காண்போருக்கு மகிழ்வை பிறப்பிப்பதைப் போல தனக்கான விருப்பங்களைப் புதைத்துக் கொண்டு தன்னை நம்பி நின்றிடும் குடும்பத்தின் உயர்வைக் கொண்டாடிடும் உள்ளம் தாய்மையன்றி வேறொன்றுமில்லை. அத்தகைய தாய்மையின் கரங்களைக் கைவிடாது பிடித்துக் கொள்ளும் உயிர்கள் தங்களின் வாழ்வை சிறப்பான உயரத்துக்கு எடுத்துச் சென்று விடுகின்றன.
குடும்பத்தின் உயர்வில் அன்றாட நிகழ்வுகள் இடைவிடாது நடந்தால் மட்டுமே இயக்கம் சீரான ஒன்றாக மாறி இன்பத்தைக் கொடுக்கும். இல்லறத்தை நல்லறமாக்கும் எல்லா செயல்களிலும் ஆணின் பங்கு இருக்கிறதா என்பதை பட்டியலிடுகையில் விடுபடுதல் வரலாம். ஆனால் பெண்களின் நுழைவுகள் இல்லாது பிரபஞ்சமும் அசைவதில்லை என்பதைப் போன்றே குடும்பத்தின் செயல்களும் அமைந்து விடுகின்றன.
சமையலறை என்னும் ஒற்றை அறைக்குள் சிறைப்பட்டுப் போயினும் தன்னைச் சுற்றியே வீட்டின் அசைவுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் தாய்மையின் நெஞ்சம் போற்றப்பட வேண்டும் பாராட்டப்பட வேண்டும். ஆனால் நம்மை நாமே கவனித்துக் கொள்ளும் உலகத்தில் இருந்து விடுபட்டு வேகமான ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கையில் நின்று நிதானித்து கவனித்துச் சொல்லும் கனிவான சொற்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
நின் நெஞ்சு நேர்பவள் நூலின் வழியே தாய்மையின் தவத்தையும் தனிச்சிறப்பையும் பேரன்பினாலும் பெரு மகிழ்வினாலும் எழுதிப் பார்த்து நிறைவு கொள்கிறது கவிஞரின் மனம். தவறு செய்யும் மனங்களை மன்னிப்பதில் தொடங்கும் பெண்களின் அன்பு வீட்டிலும் பெரியவர்களின் தவறுகளை பெரிது படுத்தாது மன்னித்தும் மறந்தும் கடந்து விடுகிறது..

"அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான் அப்பாவுடைய
என்னுடைய
இன்ன பிற ஆண்களுடைய
கறைகளை
மனதின் எரவானத்தில்
யாரும் பாராமல்
ஒளித்து வைத்தே இருக்கிறாள் "

என்பதான கவிதையின் வழியே தனக்கான வலிகளை வேதனைகளை குடும்பத்தில் பெரிதாக்கிடாமல் தாங்கிக் கொள்ளும் தாய் தான் எல்லா ஆண்களின் நடத்தைக்கும் அடித்தளம் இடுகிறாள்.
பொம்மைகள் மீதான நேசமும் விளையாட்டுகள் மீதான பிரியமும் வளர்ப்பு உயிரிகள் மீதான அக்கறையும் பெண் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஆனந்தத்தை உருவாக்கி விடுகின்றன தங்க மீன்களை வளர்க்கும் குழந்தை நாளடைவில் மீன் தொட்டிக்குள் நீந்தியுடியே தனது வாழ்வை நகர்த்துகிறது என்பதை வாசிக்கையில் இளமைப் பருவத்தின் கவலையற்ற பொழுதுக்குள் நாமும் நுழைந்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தை விதைக்கிறது.
" எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்பத்துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள் "

என்ற வரிகள் நமக்குச் சொல்லும் பாடத்தை இன்றும் எல்லோர் இல்லங்களிலும் காண முடியும். விரும்பி அன்பாலும் பாசத்தாலும் சுவைபட தயாரித்த உணவைக்கூட வீட்டில் எல்லோருக்கும் பரிமாறி விட்டு மிச்சத்தை மட்டுமே ருசி பார்க்கும் எத்தனையோ பெண்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே உணவு மட்டுமல்ல தனக்கான கனவுகள் தனக்கான கட்டமைப்புகள் என எதிலும் பெண்கள் தனியான அட்டவணையை அவ்வளவு எளிதில் நீட்டி விடுவதில்லை.
பொதுவெளியிலும் கையறு நிலையிலும் தவித்துக் கிடக்கும் உயிர்கள் மீதான பெண்களின் மனப்பார்வையை காட்சிப்படுத்தி இருக்கும் கவிதைகளில் உலகத்தின் மீதான பச்சையம் நிரம்பி வழிகிறது உயிர்களின் மீதான கருணையும் கை நீட்டலும் நீண்டு நெகிழ்கிறது. மருந்து வாங்கப் போதுமான பணம் இல்லாத நிலையில் கிழவி அறியாமலும் மொத்த மருந்துகளையும் கொடுத்துவிட்டு இடிக்கும் கணக்குக்கும் பிடிக்கும் சம்பளப் பணத்திற்கும் கவலைப்படாத பெண்ணின் மனதில் விளையும் அன்பே அவளுக்கான வலி நிவாரணியாக மாறிவிடக் கூடும் என்பதை ரசனையுடன் விளம்புகிறது வலி நிவாரணி கவிதை.
ஆசைகளின் கோட்டைக்குள் தனக்கு பிடித்தவற்றோடு உறவாடி விளையாடும் பெண்களின் பருவத்தில் எல்லா நாளும் சிறப்பாய் அமைவதில்லை. காலமும் பருவமும் பெண்ணை குடும்ப அமைப்பிற்குள் நுழைத்து விடுகையில் தனக்கான பிடித்தமானவைகளை தொலைத்து விட்டு ஓட வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொள்ளும் நிலையின் கையறு கணத்தை பதிவு செய்கிறது டெய்ரி மில்க்குகளை அடுக்குபவள் கவிதை.
மகளுடனான உரையாடல்களை காட்சிப்படுத்தும் பல கவிதைகளில் சூழலியில் பார்வையும் இயற்கை வளத்தின் மீதான கவிஞரின் நேசமும் சிறப்புற வெளிப்படுகின்றன. மலைகளை காடுகளை பாதுகாக்க வேண்டிய அமைப்புகளையும் அதில் பொதிந்துள்ள நுண் அரசியலையும் பகடி செய்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
இயற்கையும் பெண்ணும் சற்றொப்ப சமமானவர்கள் எனலாம். இருவருமே தனது வாழ்வை பிறருக்காக அமைத்துக் கொடுப்பதிலும் பிறரின் நலனுக்காக இடையறாது உதவுவதிலும் உழைப்பதிலும் சிறப்பானவர்களே. அதனால் தான் கவிஞரும் பெண்மையைப் போற்றும் எண்ணங்களுக்குள் இயற்கை நலத்தையும் பேணிக் காக்க அறைகூவல் விடுக்கிறார்.
"எல்லா காலங்களிலும்
மந்திரங்களால்
எங்களை காக்கிறவள்
தனக்கென ஒரு போதும்
சுழற்றியதில்லை
தன் மந்திரக்கோலை"

என்ற கவிதை வரிகளே இந்த நூலின் ஒட்டுமொத்த ஆழ்மன எண்ணத்தை விளக்கி விடுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் பெண் குழந்தைகளைப் பெற்றோரின் அச்சமும் பயமும் அதிகரித்து வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடுமோ என்ற காலகட்டத்தில் பெண்கள் மீதான புரிதலையும் அன்பையும் நமக்குள் விதைக்கும் நின் நெஞ்சு நேர்பவள் எல்லோர் மனதிற்குள்ளும் நல்லாட்சி புரிவாள் என்பது நிச்சயம்.

- நூல் அறிமுகம் கவிஞர் இளையவன் சிவா



நின் நெஞ்சு நேர்பவள் கவிதை நூலுக்கு கவிஞர் ஜி.சிவக்குமார் நூல் அறிமுக உரை

எனது நின் நெஞ்சு நேர்பவள் கவிதை நூலுக்கு எழுத்தாளர் ஜி.சிவக்குமார் அவர்கள் எழுதிய நூல் அறிமுக உரையை இங்கு பகிர்கிறேன்... 

நின் நெஞ்சு நேர்பவள்


கவிதைகள்


- இரா.பூபாலன்

பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு
பக்கங்கள் 72
விலை ரூ120
தொடர்புக்கு 9842275662

குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய். அது தெரிந்த போதும் அன்பே, மனம் அதையேதான் எதிர்பார்க்கும் என்று தாமரையின் திரைப் பாடல் நினைவில் உள்ளதா? பெண்களுக்கு, அது பொய்யாக இருந்தாலும், தன் அழகைப் புகழும் ஆணைப் பிடிக்கும்.
பெண்களுக்கு தன் அழகைப் புகழும் ஆணை விட, தன் வலியை உணர்ந்தவனை ரொம்பவும் பிடிக்கும்.
கவிஞர் இரா.பூபாலனின், நின் நெஞ்சு நேர்பவள் என்கிற இந்தத் தொகுப்பு அந்த வகையில் பெண்களுக்கும்,பெண்களின் வலிகளை உணர்ந்த ஆண்களுக்கும் மிக மிக நெருக்கமான ஒன்றாக இருக்கும்
அப்பாவின் குளியலறை எரவானத்தில் பத்திரப்படுத்தி இருந்த அப்பாவின் பழைய லுங்கிச் சதுரங்கள்,இன்று பஞ்சடைக்கப்பட்ட பாதுகாப்பான நாப்கின்களாக மாறியிருக்கலாம்.ஆனால்,வலி மாற்றமின்றி அப்படியேதானே தொடர்கிறது.அந்தத் துணிகளில் படாமல் போன செந்துளிகளில் ஒரு துளி நான் என்று சொல்லும் பூபால வார்த்தைகளை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளுக்காக தன் கைவளை ஒன்றை மந்திரக்கோலாக மாற்றி, எதை எதையோ தந்து, தனக்கென ஒருபோதும் மந்திரக் கோலை சுழற்றிக் கொள்ளாத, விளையாட்டுகளிலும்,வாழ்விலும் தோற்றுத் தோற்று அப்பாவையும், நம்மையும் ஆளாக்குகிற அம்மாவைப் பற்றி ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மழையைப் போலவே, அவையும் ஒரு போதும் வாசிக்கச் சலிப்பதில்லை.
எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்ப துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள்
இது அம்மா.
கோபமென்றால்
எதையாவது உருட்டுவாள்
நிலம் அதிர நடப்பாள்
முந்தைய நாள்
விருப்பப்பட்டு கேட்ட உணவை
சமைத்து வைத்துவிட்டு
இது மனைவி.
நீங்கள் சொல்வது உண்மைதான் பூபாலன்.தாயோ,மனைவியோ. பெண்கள் அப்படித்தான். அவர்களால் அப்படித்தான் இருக்க முடியும்.
உடற் கூராய்வு அறைக்கு வெளியே அப்பாவுக்கு வலிக்காம ஊசி போடுங்க என்று சொல்கிற சிறு பெண், பழைய நெகிழிப் போத்தலொன்றில், நிகழ்காலத்தைப் பூக்கும் செடி வளர்ப்பவள், பணப் பற்றாக்குறையால் இரண்டு நாளைக்கு போதும் என சொன்ன முதுமகளிடம் தனது சம்பளத்தில் பிடிக்கப்பட போகும் தொகையும் சேர்த்து மொத்த மருந்துகளையும் தரும் மருந்து விற்பனை கடைப் பணிப் பெண், மழையை கைகளில் ஏந்தி செடி மீது தெளிக்கும் தொடர் விளையாட்டை அத்தனை மகிழ்ச்சியோடு விளையாடுப்வள், இன்னும் குழந்தை இல்லையா என்ற கேள்வியை அப்புறம் வேறு என்ன என்று சிரித்த திசை மாற்றுகிறவள், ஒரு நிறை குப்பி தூக்க மாத்திரைகளை விழுங்குவதற்கு முன் கணம் மேலெழும்பி வந்த ஒரு முகத்தை முதலில் விழுங்குகிறவள், சில நாட்கள் உடனிருந்து ஒரு கடும் கோடை காலத்தை ஆணுக்கு பரிசளித்து சென்றவள்,
இப்படி கவிதைகளில் இரத்தமும் சதையுமாய் உயிர்ப்போடு நம் முன் அசையும் எத்தனை எத்தனை பெண்கள்.
இத்தனை பெண்களால் சூழப்பட்டிருக்கும் பூபாலன் அதிர்ஷ்டசாலி பூபாலனைச் சூழ்ந்திருக்கும் பெண்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்
அப்பாவுக்கு மகளுக்குமான உரையாடல்களாய் அமைந்த கவிதைகள் மிக அழகாக இருக்கின்றன.இந்த கவிதையைப் பாருங்கள்
மலைக் கோயில்
எப்பொழுதிருந்து இருக்கிறது அப்பா?
நாம் பிறப்பதற்கு முன்பிருந்து..
மலை எப்போதிருந்து
இருக்கிறது அப்பா?
கடவுள் பிறப்பதற்கு
முன்பிருந்து.
இப்படி ஒரு தகப்பனைப் பெற்ற குழந்தை மிகத் தெளிவாக மிகச் சரியாக வளரும்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும்
சாலையில் கடக்கும்
ஏதோ ஒரு புல்லட் சத்தத்துக்கும்
சேலையைச் சரி செய்து கொள்வாள்
கண்ணாடியை ஒரு முறை
பார்த்துக் கொள்வாள்
நாக்கைக் கடித்துக் கொண்டு
நிகழ் காலத்திற்கு மீள்வாள்.
இந்தச் சிறு கவிதையில் விரிகிற பெருங் கதையை நீங்களும் உணர்கிறீர்கள் தானே?
முழு ஆடையும் உடுத்தி
முகமெங்கும் வண்ணம் தீட்டி
சலங்கைகள் அதிர
மேடையில் ஏறும் கணத்தில்தான்
சுண்டியிழுக்கிறது வயிறு
நாட் கணக்கு பிசகி
எதிர்பாராத கணத்தில் பொங்கத் துவங்கி விட்டது
மாதாந்திரச் சிவப்பு
என்று துவங்குகிற,குங்குமத்தில் சிரிக்கும் காளி, கவிதையை உயிர் நடுங்காமல் உங்களால் வாசித்துக் கடந்து விட முடியுமா?
சொல்லாமல் வந்துவிட்ட விருந்தாளியாய் குருதி பெருகும் போதும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட மேடையில், துளிச்சிவப்பும் மேடையில் தெறித்திடக் கூடாது என்ற அச்சத்துடன் அவள் ஆடித்தானே தீர வேண்டியிருக்கிறது. இது மேடையில் ஆடுபவர்களுக்கு மட்டும் தானா? வீட்டிலும், அலுவலகத்திலும் இருக்கும் பெண்களுக்குமானதுதானே?
தொகுப்பின் கவிதைகளை,இது நாள் வரை என் வாழ்வில் நிறைந்திருந்த,நிறைந்திருக்கும் பெண்களையெல்லாம் நினைத்தபடிதான் வாசித்தேன்.தொகுப்பை வாசிக்கிற யாரும் அதைத்தான் செய்வார்கள்.
எங்கிருந்தோ ஒரு பெண்ணின் வழியாகத்தான் இங்கு வந்தோம். அவளால்தான் ஆளானோம்.அம்மாவென்றும்,பாட்டியென்றும், அத்தையென்றும்,சகோதரியென்றும், தோழிகள் என்றும், காதலியென்றும், மனைவியென்றும், பிள்ளைகளென்றும், பேத்திகளென்றும், பெண்ணோடு தோன்றி, பெண்ணோடு வாழும் இந்த வாழ்வில், நம்மில் எத்தனை பேர் பெண்களுக்கு அவர்கள் தந்ததில் ஒரு சிறு துளியையாவது திருப்பித் தந்திருக்கிறோம்? இந்த தொகுப்பின் வழி இரா. பூபாலன் அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.

நூல் அறிமுகம் : கவிஞர் ஜி.சிவக்குமார்




இந்த நூல் அறிமுகம் புக்டே இதழிலும் வெளியானது..

வாசிக்க :