வியாழன், 31 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல்

"உழவையும் தொழிலையும் நிந்தனை செய்வோம் "

மறுபடியும் படிக்க வேண்டாம். சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளது . உலகின் மிகச் சிறந்த, ஆகத்தகுதியான விவசாய நாட்டின் இன்றைய நிலையைத் தான் இப்படி எழுதியுள்ளேன்.

விவசாயத்தில் தன்னிறைவு அடைந்ததோடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளின் பசிக்கு அட்சய பாத்திரமாய் இருந்த ஒரு தேசத்தின் இன்றைய நிலை என்ன.? விவசாயம் செழிப்பாக உள்ளதா.? விவசாயி சிறப்பாக வாழ்கிறானா.?

                              " இல்லை "

ஏன்.?

விவசாயம் செய்ய மழை இல்லை

விவசாயம் செய்ய நிலம் இல்லை

விவசாயம் செய்ய விவசாயி இல்லை

விவசாயிக்கு வருமானம் இல்லை

எல்லா இல்லைகளும் இறுக்கிப் பிடிக்க, இல்லையென்று ஆகிக் கொண்டிருக்கிறது விவசாயியின் வாழ்க்கை.

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட இந்த தேசத்தின் பசுமை கருகி கான்கிரீட் காடுகளாக உருமாறிப் போக காரணம் / காரணங்கள் யாவை.?


  • மரங்களையும், காடுகளையும் பல்வேறு காரணங்களையும் காட்டி அழித்து அழித்து மழை வளத்தைக் குறைத்து விட்டோம்.

  • மழை குறைந்து , பயிர் கருகி விவசாயம் பொய்த்து, விவசாயியைப் பிழைக்க விடாது செய்து விட்டோம்.

  • விவசாய நிலங்களையெல்லாம் கூறு போட்டு அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உருமாற்றி விட்டோம்.

  • விவசாயிகளின் சந்ததியினர் கூட விவசாய நாட்டமில்லாத போது, மற்றவர்களும் அவ்வழியே வந்து விட்டோம்.

  • இடைத்தரகர்களும் , வியாபாரிகளும் கொழுத்த லாபம் பார்க்க, கொள்முதலையே திரும்ப எடுக்க முடியாமல் உழுபவனை வெறுங்கையுடன் நிற்க வைத்தோம்.

  • ஒரு விவசாய நாட்டில், விவசாயத்திற்கான தொலை நோக்குத்திட்டத்தை ( கண்துடைப்புக்குக் கொண்டு வரப் பட்டவை கணக்கிலில்லை ) வகுக்காமல் விட்டு விட்டோம்.

  • நியாயமாக, சரியாகக் கிடைக்க வேண்டிய நீரையே சகோதர முறை கூட தர மறுக்க, வேடிக்கை பார்த்தோம்.

  • காலத்திற்கேற்ப விவசாயத் துறையிலும் அறிவியல் நுட்பங்களைப் புகுத்தி உற்பத்தியைப் பெருக்கத் தவறி விட்டோம்.

  • சரியான திட்டமிடலோ , வழி நடத்துதலோ, ஒரு நிலைப் படுத்துதலோ என வேளாண் துறையை முறையாக கவனிக்காது விட்டு விட்டோம்.

  • சொல்லவே வேண்டாம், இருக்கும் சில திட்டங்களிலும் அரசியலையும் . ஊழல்களையும் உட்புகுத்தி வளர்ச்சியை மட்டுப் படுத்திவிட்டோம்.

  • மழை பெய்தாலும் , பெய்த நீர் வழிந்தோடுவது தார் சாலைகளிலும் சாக்கடை நதிகளிலுமே. மழை நீர்த் தேக்கங்களான குளம்,குட்டை, ஆறு யாவற்றையும் ஆக்கிரமித்து விட்டோம் நம் பேராசையின் பெரு வாழ்வுக்கு.

இவை நம் சிற்றறிவுக்கு எட்டிய, நமது வெறுங் கண்களுக்குப் புலப்பட்ட சில காரணங்கள். சூழலியல் ஆர்வலர்களையும், நிபுணர்களையும் கேட்போமானால் நமக்குக் கிடைப்பவை ஒரு புத்தகம் முழுக்கக் காரணங்களாயிருக்கும்.

எப்படியோ, இன்றைய நிலை.? நாளொரு விவசாயி, வாழ வழியின்றி தற்கொலை செய்து இந்த தேசத்தின் முகத்தில் ரத்தக் கறையைத் தோய்த்து விடும் பரிதாப நிலைக்குத் தௐள்ளப்பட்டுள்ளோம்.


குடும்பம் குடும்பமாக , குலத்தொழிலை விட்டு அடிமை வாழ்வு வாழவும் , பஞ்சம் பிழைக்கவும் தன் மண்ணை விட்டு புலம் பெயர்தல் இன்னும் நடப்பில் இருப்பது நமக்கெல்லாம் வேதனை.

மனம் முழுக்க பாறையின் கனத்துடனும், எதிர்காலம் குறித்த கவலையுடனும், அடுத்த தலை முறையின் வாழ்வு குறித்த அதீத மனக் குழப்பத்துடனுமே இக் கட்டுரை.

இப்படியான இறுக்கமான சூழ்நிலையில் வந்திருக்கிற உழவர் திருநாளில் யாருக்கு வாழ்த்து சொல்லுவது ? யார் கொண்டாடுவது ?

மிஞ்சியிருக்கும் உழவர்களான கடவுளர்களுக்கும் , அவர்கள் விளைவித்ததை உண்டுவிட்டு உழவர் திருநாளில் உலகத் தொலைக் காட்சி வரலாற்றில் முன்னூறாவது முறையாக தனது பண்டிகையை எந்தப் பிரக்ஞையுமற்று தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் கொண்டாடும் நம்மைப் போன்ற் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் , உழவர் திருநாள் நல்வழ்த்துக்கள்.


நன்றி : கருந்துளை சனவரி - பிப்ரவரி '2013

நூல் விமரிசனம் : தேவதைகளின் மூதாய் கவிதைத் தொகுப்பு: கவிஞர் த.விஜயராஜ்

நூல் விமரிசனம் 

தேவதைகளின் மூதாய்

  • கவிதைத் தொகுப்பு: கவிஞர் த.விஜயராஜ்

பிரபஞ்சத்தின் எல்லா அணுக்களிலும் உள்ளது கவிதைக்கான பாடுபொருள்.

பாடு பொருள் தேர்விலும்,சொற்களைக் கையாளும் சூத்திரத்திலும்,கவிதையை வழி நடத்தும் கைங்கர்யத்திலும் உள்ளது கவிஞரின் தனித்துவமும் வெற்றியும்.மரபுக் கவிதையோ,புதுக் கவிதையோ, நவீன அதி நவீனக் கவிதையோ, கவிதைப் படுத்தலுக்கான விதிமுறைக்குள் எப்போதும் வந்து விடுவன சில.

வண்ணத்துப் பூச்சி எப்போதும் கவிஞர்களின், காதலர்களின் ஆதர்ஷமாய் வடிவெடுக்கிறது. வண்ணத்துப் பூச்சியுடன் உறவு கொண்டாடாமல் பால்யமோ,காதலோ,கவிதையோ அநேகமாய் இருப்பதேயில்லை யாவர்க்கும்.

விதிமீறல் இருப்பின்,அவர்கள் வாழ்க்கைப் புத்தகத்தின் வசந்தப் பக்கத்தைப் படிக்கத் தவறிவிட்ட துர்பாக்கியசாலிகள்.

கவிஞர் விஜயராஜ்க்கு சொற்கள் கூடி வந்திருக்கின்றன. தேவதைகளின் மூதாய் என இவர் சொல்லும் வண்ணத்துப் பூச்சி தன் மென் சிறகுகளசைத்து தொகுப்பின் பக்கங்களெங்கும் படபடத்தபடி இருப்பது பரவச அனுபவம்.

ஒரே பொருளைப் பாடுவதில், அதிலும் புத்தகம் முழுதும் உள்ள கவிதைகள் அனைத்தும் ஒன்றையே பாடுவதில் வரும் அயர்ச்சி தவிர்க்கவியலாததாகி விடுகிறது. இருப்பினும், அவ்வயர்ச்சியைப் போக்கி விடுவது அடுத்தடுத்த கவிதைகளின் அடர்த்தியான சொற்கள்.

" அடுக்கக சன்னல்கள்

திறந்திருக்கின்றன

அடுக்ககப் பூந்தொட்டிகள்

மலர்ந்திருக்கின்றன

வருவதாக இல்லை

ஒரேயொரு வண்ணத்துப் பூச்சியும்"


இது ஒரு வலி, இது ஒரு கவலை, இது ஒரு ஏக்கம். இதைக் கவிதைப் படுத்துதல் எல்லாருக்குமானதாகிறது.


" தனித்தனியாகப்

பெயர் சூட்டுங்கள்

எல்லா வண்ணத்துப் பூச்சிகளுக்கும்"


ஒரு குழந்தையின் வேண்டுகோளாக,


" ஒரு ஊர்ல ஒரு வண்ணத்துப் பூச்சியாம்

அநத வண்ணத்துப் பூச்சிக்கு...

இப்படியாகவும்

கதைகள் சொல்லுங்களேன் குழந்தைகளுக்கு"


ஒரு குழந்தைக்கான வேண்டுகோளாக,


" உன் சிறகு

என் வானம்

வா பற..."


காதலாக,


" உனக்குப் பரிசளிக்க

எதுவுமில்லை என்னிடம்

கொஞ்ச நேரம்

அவ் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்"


ரசனையாக,


என எல்லாக் குடுவைகளிலும் தன்னை நிறைத்துக் கொள்கிற சிறு நதியின் துளி நீர் இவை.

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளேறி அடர்வனத்தின் யவ்வனதினூடே பயணிப்பது அத்தனை சுகமாயிருக்கிறது. தொகுப்பை மூடி வைத்த பிறகும் அதன் சிறகுகள் நமக்கு சுகந்தக் காற்றை வீசியபடியே இருக்கின்றன...

வாழ்த்துவோம் கவிஞரை....




தொகுப்பு : தேவதைகளின் மூதாய்

ஆசிரியர் : கவிஞர் த.விஜயராஜ்

வெளியீடு : அகரம், எண் 1, நிர்மலா நகர்,தஞ்சாவூர் - 613007
விலை : Rs.70/-

தொடர்புக்கு : 9787853434


 நன்றி : கருந்துளை நவ -திசம்பர் '12

வெள்ளி, 18 ஜனவரி, 2013

நீ இல்லை ...

என்னிடமே கொட்டித்
தீர்க்கிறேன் என்
கோபங்களை.

எனக்குள்ளேயே அழுது
தீர்க்கிறேன் என்
கண்ணீரை.

என் தோளிலேயே
சாய்ந்து கொள்கிறேன்
நாதியற்று.

நீ எனக்கானவள் 
இல்லை என்று
முடிவான பின்பு

வேறு யாரிடம்
சொல்லி அழ என் சோகங்களை..?

இருப்பினும்
உனக்கே உனக்கான
என் காதலையும்
கருணையையும்
யாரிடத்தும் காட்டவியலவில்லை
என் உட்பட..