புதன், 28 பிப்ரவரி, 2024

சலுகை விலையில் எனது கவிதை நூல்கள்

 வணக்கம்,

எனது ஹோ என்றொரு கவிதை, நின் நெஞ்சு நேர்பவள் ஆகிய இரண்டு கவிதை நூல்கள்  பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களால் வெளியிடப்பட்டன. 

250 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்களும்  சலுகையில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. வேண்டும் நண்பர்கள் 98422 75662 எனும் எனது எண்ணுக்கு கூகுள் பேவில் தொகை அனுப்பிவிட்டு, வாட்சப்பில் முகவரி அனுப்புங்கள். புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்




செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

எனது இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பு

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

வரும் ஞாயிறு பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 116ஆவது சந்திப்பில் எனது இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு.. என்.ஜி.எம் கல்லூரியில் காலை 10 மணிக்கு நிகழ்வு...
அவசியம் வருக... அன்புடன் அழைக்கிறோம்...





ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

தேநீர்க் கவிதைகள் - பொற்றாமரை இதழில்

இந்த மாத பொற்றாமரை இணைய இதழில் எனது நான்கு தேநீர்க் கவிதைகள் இடம் பெற்றுள்ளன..



தேநீர் # 1


தேநீரைப் பற்றி
எழுதப்பட்டிருக்கின்றன ஓராயிரம் கவிதைகள்
தேநீர் அழகிய ஓவியங்களாகி
ஆவி பறக்கிறது
தேநீர்க் கோப்பையோடு
புகைப்படங்களைப் பகிர்ந்து
கொண்டாடுகிறார்கள் நண்பர்களின் சந்திப்புகளை
தேநீர் தயாரிப்பிலும்
பரிமாறலிலும்
முதல் மிடறு உறிஞ்சலிலும்
ஒரு தியானம்
இருப்பதாய்
சீனத்து யாத்ரீகன் ஒருவன்
சதா உரைத்துக்கொண்டே யிருக்கிறான்

தேநீரையே விரும்பாத
ஒருவன் கைகளில்
மணந்துகொண்டிருக்கும்
காபிக் கோப்பையிலும்
இருக்கத்தான் செய்கிறது
ஆவி பறக்கும் ஒரு வாழ்வு


*****

தேநீர் # 2


ஒரு கோப்பைத் தேநீர்
அது ஒன்றுதான் கூலி
அந்தக் கோப்பையின் விளிம்பில் தான்
சாக்கடையைத் தூர் வாருவார்
பத்துத் தேங்காயை உரிப்பார்
பத்திருபது குடம் நீர் சேந்துவார்
சோர்வின் பொழுதில்
கொட்டாங்கச்சிக் கோப்பையில்
அருளப்படும் தேநீரை
குத்தவைத்து அமர்ந்து
குடிப்பார் மாரியண்ணன்

பிறகான மாலைப் பொழுதில்
குலுக்கலில் விழுந்த
எவர்சில்வர் டம்ளரில்
கருப்பட்டிக் காப்பி கலந்துவைத்துக்
காத்திருந்த இரவில்
மாரியண்ணன்
வெறிகொண்டு புணர்ந்த கதையை
செல்வியக்கா
இட்டேரியில் வள்ளியக்காவிடம்
கிசு கிசுத்த பூரிப்பில்
இட்டேரிக் கள்ளிகள் நூறு நூறாய்ப் பூத்தன


*****

தேநீர் # 3


என் தேநீரின்
நிறம்
வடிவம்
சுவை
திடம்
எல்லாமும் மாறிவிட்டிருக்கின்றன
இன்னும் மாறாதது
கை பட்டுவிடாமல்
நிரப்பக் காத்திருக்கும்
தனிக்குவளை தான்


*****

தேநீர் # 4


கொஞ்சம் கூடுதல் இனிப்புடன்
இரண்டே துளிகள்
எலுமிச்சைச் சாறு பிழிந்த
ஒரு குவளை கருந்தேநீர்
பின்
தாராளமாக எறிந்துவிடு
உன் கடைசிச் சொல்லை.


*****

வியாழன், 1 பிப்ரவரி, 2024

கனவின் இசைக்குறிப்பு - நூல்வெளியீட்டு விழா

 கடந்த ஞாயிறு கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் எழுதிய கனவின் இசைக்குறிப்பு புத்தக அறிமுக விழா புதுக்கோட்டையில் நடந்தது..




முந்தைய நாள் வேலை, அடுத்த நாள் காலையில் கோவை இலக்கிய சந்திப்பில் சோலைமாயவன் நூல் அறிமுக விழா இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டு காலையில் கிளம்பி, இரவு திரும்பிவிடுவது என திட்டமானது. நானும், சோலைமாயவன் இருவரும் மகிழுந்திலேயே சென்றுவிட்டோம்..

காலையில் 4 மணிக்கு சத்தமில்லாமல் எழுந்து, 4.30க்கே மிக வேகமாகக் கிளம்பிவிட்டேன்... 5 மணிக்கு சோலைமாயவனை வீட்டில் சென்று அழைத்துக்கொள்வது திட்டம். யாருடைய தூக்கமும் கெட்டுவிடக் கூடாது என்பதால் விளக்கு கூட போடாமல் சத்தமில்லாமல் மாடியிலிருக்கும் படுக்கையறையிலிருந்து கீழே வந்து குளித்து கிளம்பிவிட்டு, மாடியில் சென்று கீழ் வீட்டுச் சாவியை வைத்துவிட்டு, வாசல் கதவையும் பூட்டி சாவியை உட்பக்கம் வீசிவிட்டு வண்டியை எடுத்த பின்பு ஞாபகம் வருகிறது புத்தகத்தை எடுக்கவில்லை...
அதிகாலை, சத்தமில்லாமல் வாசல்கதவைத் திறந்து, மேல்வீட்டுக்குச் சென்று சாவியெடுத்து, கீழ் வீட்டைத் திறந்து புத்தகத்தை, தண்ணீர் போத்தலை எடுத்துக்கொண்டு , மேலே போய் சாவியை வைத்துவிட்டு மெதுவாக , மிக மெதுவாகக் கதவைச் சாற்றிவிட்டு, கீழே வந்து, வாசல் கதைவைச் சாத்திவிட்டு வண்டியைக் கொஞ்ச தூரம் ஓட்டியவுடன் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்ற சிந்தனை வந்தவுடன் நினைவுக்கு வந்தது பணப்பையை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது..
வண்டியைத் திரைப்படங்களில் திருப்பதுபோல கிறீச்செனத் திருப்பி மீண்டும் வாசல் கதவைத் திறந்து, மேலே போய்.. சத்தமில்லாமல்... ஐயோடா .. மீண்டும் கிளம்பிவிட்டேன்...
இந்த முறை வாகனத்துக்கு பொள்ளாச்சி வந்து எரிபொருள் நிரப்பும் போது கவனித்தேன்.. அங்கு போய் உடை மாற்றிக்கொள்ளலாம் என சாதுர்யமாகத் திட்டமிட்டு உடை எல்லாம்ச் சரியாக எடுத்தவன் பெல்ட் எடுக்க மறந்துவிட்டேன்... மறுபடியுமா ? மறுபடி வண்டியைத் திருப்ப முடியாது எனவே அரைஞாண் கயிறு வைத்து சமாளித்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்துகொண்டேன்... நல்லவேளையாக பேன்ட் சரியாக நின்று கொண்டது.. ஒரு வழியாக சோலைமாயவன் வீட்டுக்கு வந்து சேரும் போது மணி 5.30 .. அரைமணி நேர தாமதம்..
இருந்தும் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு விரைந்தோம்.. வழியெங்கும் பேசிக்கொண்டு வந்ததால் களைப்பு தெரியவில்லை.. காலை உணவுக்கு மணப்பாறையில் நிறுத்தும் தருணத்தில் மணவை இலக்கிய வட்ட நண்பர்களைச் சந்தித்துவிட்டுச் செல்லலாம் என தோழர் Ashraff Ali அவர்களுக்கு அழைத்தால், அவர் அப்போது தான் திருச்சிக்குச் சென்றுகொண்டிருப்பதாக அங்கலாய்த்தார். இருப்பினும் மணவை இலக்கிய வட்டத் தலைவர் தோழர் தமிழ் மணியை வந்து எங்களைச் சந்திக்கும்படி சொல்லி இருந்தார்... வழியில் தோழர் தமிழ் மணியைச் சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு சில புத்தகங்களைக் கொடுத்தோம் அவர் பழங்களைப் பரிசளித்தார்..

வரும் வழியில் நிறைய அழைப்புகள் வீதி நிகழ்வு என்றவுடம் எப்போதும் முதலில் நினைவுக்கு வரும் Devatha Tamil Geetha, தோழர் Kasthuri Rengan, தோழி Revathi Ram என ஒவ்வொருவராக அழைத்து சாப்பிட்டீர்களா, சாப்பிட இங்கு வாங்க என்று அழைத்தபடி இருந்தார்கள்..
எனக்கு நான் எழுதிய யாரவது சாப்பிட்டாயா என்று கேட்டால் பதற்றமாகிவிடுகிறேன் எனும் கவிதை நினைவுக்கு வந்தது.. புதுக்கோட்டை இப்படித் தான். அது எப்போதும் சொல்வது போல புத்தகக் கோட்டை மட்டுமல்ல, கவிதைக் கோட்டை மட்டுமல்ல, அன்பின் கோட்டையும் கூட..
அங்கு கிளம்பிய வண்டி பின்பு புதுக்கோட்டை தாஜ் சிற்றரங்கத்தில் வந்து தான் நின்றது.. நிகழ்ச்சி தொடங்கவும் வந்து சேரவும் சரியாக இருந்தது.. வந்த உடனே முதலில் சந்தித்தது முத்துநிலவன் ஐயாவைத் தான்.. வாஞ்சையுடன் கைகுலுக்கி வரவேற்றார். யாழியை, சுரேஷ் சூர்யாவை, ரேவதியை, கஸ்தூரி ரங்கனை என அனைவரையும் பார்த்துவிட்டு உள்ளே சென்றதும் கவிஞர் தங்கம்மூர்த்தி ஐயா உற்சாகமாக வரவேற்று இறுக அணைத்துக்கொண்டார். அவரது புதிய கட்டுரைத் தொகுப்பான சொற்கள் மீட்டிய மாய இசையை அன்புடன் கொடுத்தார். அதில் முதல் கட்டுரையே என் கவிதைகளைப் பற்றியது.. பின்னர் எழுதுகிறேன் அதை..
உள்ளே நுழையும் போதே தோழர் ஸ்டாலின் சரவணன் Stalin Saravanan அலைபேசியில் அழைத்து இன்றைய நிகழ்வுக்குத் தான் வரமுடியாததைச் சொன்னார்..
அமர்ந்தவுடன் அருகிலமர்ந்திருந்த மருத்துவர் Dhakshana Moorthy அறிமுகம் செய்துகொண்டு தான் எனது கவிதைகளின் விசிறி என்று சொன்னதோடு எனது புலி துரத்திக்கொண்டோடும் கவிதையைச் சொன்னார்... மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது..
நிகழ்வு தொடங்குகிறது..
தங்கம்மூர்த்தி ஐயா, முத்துநிலவன் ஐயா, சுரேஷ் சூர்யா, ஜெயா அம்மா என நிறைய பேர் ஒரு தொகுப்பைப் பேசுகிறார்கள்.. பகீர் என்றிருந்தது....
வரவேற்புரை பேசிய நண்பர் ஸ்ரீமலையப்பன் Srimalaiyappan Balachandran உற்சாகமாகத் தொடங்கிவைத்தார்... தலைமை உரை கவிஞர் தங்கம்மூர்த்தி சிறப்பான உரையை நிகழ்த்தினார். விக்ரமாதித்யன், இசை என கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசினார்... மைதிலியின் கவிதைகளைக் குறிப்பெடுத்து வந்து அர்ப்பணிப்புடனும் தயாரிப்புடனும் அவர் பேசியவிதம் ஆச்சர்யத்தைத் தந்தது. என்ன ஒரு குரல்வளம், என்ன ஒரு நினைவாற்றல்.. அதெல்லாம் நன்றாகவே இருந்தது ஆனால் இந்தத் தொகுப்புக்கு சம்பந்தமே இல்லாத மதிக்குமார் தாயுமானவனின் யாமக்கோடங்கி தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை வாசித்தது தான் எனக்கு திக்கென்றாகிப் போனது. காரணம் முந்தைய இரவு அந்தத் தொகுப்பைப் படித்து அதிலிருந்து ஒரு கவிதையைச் சொல்லி தான் இந்த உரையை ஆரம்பிக்க நினைத்தேன்.. சோலி முடிஞ்ச்... எனது உரையிலும் இதைக் குறிப்பிட்டேன். நான் குறித்து வைத்திருந்த சில கவிதைகளை ஐயா சொன்னதும் நான் மடித்து வைத்திருந்த பக்கங்களை நீக்கிவிட்டேன்...
நூல் அறிமுக உரையாற்றிய கவிஞர் சுரேஷ் சூர்யா Suresh Suriya நன்றாகப் பேசினார். பாட்டெல்லாம் பாடி அசத்தினார். தான் எடுத்த புகைப்படம் என்று சொல்லி புத்தனின் கைகளை கவிஞர் மைதிலிக்குப் பரிசளித்தார் அழகான புகைப்படம்.
வாழ்த்துரை வழங்க வந்த மருத்துவர் ச. தெட்சிணாமூர்த்தி Dhakshana Moorthy ஒரு நீண்ட சிறப்புரையையே வழங்கினார்.. மைதிலியின் கவிதைகளைக் குறிப்புகள் ஏதுமின்றி மனனமாகப் பேசியது வியப்பில் ஆழ்த்தியது. கனவின் இசைக்குறிப்புக்கு மார்க்ஸ் எங்கல்ஸிடமிருந்தெல்லாம் மேற்கோள்கள் எடுத்துப் பேசினார்... அவரிடம் நிகழ்வு முடிந்ததும் பேச நினைத்தேன். பேசிவிட்டு அவசரமாகக் கிளம்பிவிட்டார். அவரும் தன் பங்குக்கு நான் குறித்து வைத்திருந்த சில கவிதைகளைப் பேசிவிட்டார்.
அடுத்துப் பேசிய கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுடைய இணையரும் கவிஞருமான அஞ்சலி அம்மா Anjalii Moorthy ஆற்றியது பேரன்பின் மிகையுரை.. கவிஞர் மைதிலி அவர்களின் கவிதைகளை அப்படிச் சிலாகித்துப் பேசினார். புதுக்கோட்டையிலேயே இப்படி ஒரு கவிதைத் தொகுப்பு வரவில்லை என நெக்குருகிப் பேசினார்..
அடுத்துப் பேசியா கவிஞர் இரா.ஜெயா அம்மா பகிரப்படாத முத்தம் என்கிற ஒரு கவிதையை சிலாகித்துப் பேசினார். அதுவும் நான் குறிப்பெடுத்து வைத்திருந்த கவிதை.. ஹ்ம்ம்ம்
அடுத்து நான் பேச வேண்டும்.. ஏற்கனவே நேரம் கடந்துகொண்டிருக்கிறது.. எனக்கு ஒதுக்கப்பட்ட அரை மணி நேரத்தைப் பேச முடியாது. எனவே பதினைந்து நிமிடத்தில் பேசி முடித்துவிடலாம் என நினைத்து எழுதி வந்த குறிப்புகளை மனதிற்குள்ளேயே சுருக்கி, திருத்தி ஒருவழியாக 17 நிமிடங்களில் பேசி முடித்தேன்...




அடுத்து நிறைவுரையாற்றிய முத்துநிலவன் ஐயா குறைவாகவும் அல்லாமல் நிறையவும் அல்லாமல் சரியாக கவிதைகள் குறித்துப் பேசினார்...
ஏற்புரையாற்றிய கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் தனது அன்பையும் நன்றியையும் ஒருவர் விடாது அனைவருக்கும் பகிர்ந்துகொண்டார்... பேசிய அனைவரும் , அவரது கவிதைகளை விடவும் அவருடைய மற்றும் அவரது இணையர் கஸ்தூரி ரங்கன் இருவருடைய இலக்கியப் பங்களிப்பு, அன்பு, சமூக அக்கறை இதுகுறித்தே அதிகம் பேசினர். அவ்வளவு தூரம் சிறப்பாக அன்பு செய்தும், செயலாற்றியும் வருகின்ற இணையரை நானும் வாழ்த்துகிறேன்..
நன்றியுரையாற்றிய Devatha Tamil Geetha சுருக்கமாகவும் அழகாகவும் முடித்துக்கொண்டார்..
தொகுப்புரையாற்றிய கவிஞர் ரேவதி ராம் ஒவ்வொருவரையும் அவர்களது கவிதைகளைச் சொல்லி அழைத்தது அழகு.. தயாரிப்புடன் வந்திருந்தார்..
புகைப்படங்களை மிக அழகாக Sbp Bala எடுத்துக்கொண்டிருந்தார்
நிகழ்வில் நான் பெரிதும் விரும்பும், மதிக்கும் எழுத்தாளர்கள் பலரைச் சந்திக்க வாய்த்தது. அண்டனூர் சுரா Andanoor Sura, கவிஞர் விஜய் ஆனந்த், எழுத்தாளர் பாஸ்கர் , அமிர்தா தமிழ் என எல்லோரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி..
ஐஸ்வர்யா உணவகத்தில் சிறப்பான உணவை உண்டுவிட்டு.. பேக்கரி மகாராஜ்ஜில் வீட்டுக்கு புட்டிங் கேக் வாங்கிக்கொண்டு வாகனத்தைக் கிளப்பிவிட்டோம்... புதுக்கோட்டை, பேக்கரி மகராஜ் எல்லாம் வைகறையை நாள் முழுதும் நினைவிலேயே வைத்திருந்தது.. அவரது மனைவி நிகழ்வுக்கு வருவார் என எதிர்பார்த்தேன்.. அவசரமாகக் கிளம்பியதால் சந்திக்கவும் இயலவில்லை..
ஒரு நிறைந்த இலக்கிய நிகழ்வுக்குச் சென்று திரும்புகிற உற்சாக மனநிலையோடு வாகனம் பொள்ளாச்சிக்குக் கிளம்பிவிட்டது...
பின்குறிப்பு :
நான் நிகழ்வில் அவசர அவசரமாகப் பேசிய உரை இதோ உள்ளது.. கண்டு களிப்பீராக..