ஞாயிறு, 28 மே, 2017

மீன்கள் பறக்கும் வானம்

மீன்கள் பறக்கும் வானம்

- ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பை முன்வைத்து

( நான்காவது கோணம் - ஏப்ரல் மாத இதழில் வெளியானது )




கவிதை மனநிலையின் மைய இழைகளை எப்போதும் சில கண்ணிகள் இணைத்தபடியே இருக்கும். அந்தக் கண்ணிகளின் வடிவங்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருப்பன. நம் காலத்தில் அது ஒரு குழந்தையாகவும் நிற்கிறது.

பொதுவாகவே நாம் நம் குழந்தைகளைக் குழந்தைகளாகவே பார்ப்பதில்லை. நம் கனவுகளின் ஒட்டுமொத்த உருவமாக, நமது எதிர்காலத்துக்கான முதலீடாக, உற்பத்திக்காரர்களாக, நமது கட்டளைகளுக்குக் கீழ் படிந்து நடக்கும் நம் சேவகர்களாக, பிராய்லர் கோழிகளாக என பல்வேறு வடிவங்களில் அவர்களைக் காணுகிறோம்.

கவிஞர் ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பு குழந்தைகளைக் குழந்தைகளாகக் கண்ட கவிதைகள். குழந்தைகளின் அழகியல் தருணங்களைப் பதிவு செய்த கவிதைகள் நிறைந்த ஒரு தொகுப்பு.

குழந்தைகளையும் அவர்களின் குழந்தைமையையும் இழக்கத் துவங்கும் பருவம் ஒன்றுண்டு. அது அவர்கள் பள்ளிக்குச் செல்லும் பருவம். அரசுப்பள்ளிகளில் கூட பெரிய ஆபத்தில்லை. அங்கெல்லாம் இன்னும் ஓட்டாங்கரம் , கபடி, கோ கோ, நொண்டி என இணைந்து விளையாடுகிறார்கள். காக்காக் கடி கடித்து ஒரே மாங்காயைப் பகிர்ந்துண்ணுகிறார்கள்.. ஆனால் இந்தத் தனியார் பள்ளி மாணவர்கள் அவ்வளவு பாவப்பட்டவர்கள். ஆண்டொன்று ஆவதற்குள் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

பள்ளி வளாகத்துக்குள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், தின்பண்டங்களையும் உணவையும் யாரிடமும் பகிராமல் கீழே மேலே சிந்தாமல் உண்ண வேண்டும், விளையாட்டெல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் அதுவும் கணினி முன் அல்லது அறைச்சுவர்களுக்குள் என படிப்படியாக சிறகுகளைக் கத்தரித்து நடக்கவும் ஓடவும் மட்டுமே பழக்கத் தொடங்கிவிடுகிறார்கள் பறக்கத் தெரிந்த பறவைகளை.

இப்படி பிராய்லர் கோழிகளாக, பலன்களுக்காக மட்டுமே லாப நோக்கில் வளர்த்தப்படும் குழந்தைகள் தங்களது குறும்புகளை, விளையாட்டுகளை, குழந்தைத் தருணங்களை என யாவற்றையும் இழந்து விடுவதில் என்ன பிழை நேரப்போகிறது.


பள்ளிக்கூடம்

அடிக்கடி நீரிலிட்டு
புதிது புதிதாக சோப்பு வாங்க
பூனை மீது பழி போடுவாள்

விருந்தினரின் செருப்புகளை ஒளித்து
புறப்படுகையில் பரபரப்பூட்டி
நாயின் மீது சாட்டிடுவாள்

தேவைகளை வாங்கிக் கொள்ள
உறுதியளித்த பின் தந்திடுவாள்
தலையணை கிழித்து மறைத்த
ரிமோட்,வண்டி சாவிகளை

கொஞ்ச நாட்களாக 
குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்

மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது
அவளை பள்ளிக்கு அனுப்பி

பள்ளிக்கூடங்கள் அப்பட்டமான வதைக்கூடங்களாகிவிட்டன என்பதற்கான நிகழ்கால சாட்சியாய் நிற்கிறதிந்தக் கவிதை.

குழந்தைகள் தங்கள் ஓவியங்களின் மூலம் உயிர்களைப் பிறப்பிக்கிறார்கள், இயற்கையை சிருஷ்டிக்கிறார்கள். அது கோணல் மாணலாக இருந்தாலும் ஒரு அழகுடன் இருக்கிறது. ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுங்குடன் அந்த ஓவியம் இருப்பதில்லை ஆகவே அது எக்காலத்துக்குமான நவீன ஓவியமாகிறது.அதன் புள்ளிகளில் , கோடுகளில், கிறுக்கல்களில் உயிர்ப்பானது ஓவியம் மட்டுமல்ல இந்தக் கவிதையும் கூட


அருவி

இறுக மூடினான்
முன்பின் கதவுகளை
திரைச்சீலைகளால் மறைத்தான்
ஜன்னல்களை
துவட்டிக்கொள்ளவென
துண்டுகளைக் கொடுத்தான்
அவனது அடுத்த கோமாளித்தனமென
பரிகசித்துக் கொண்டிருக்கையில்
சாரலில் நனையத் துவங்கினோம்

சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்
அருவியை 


இவரது கவிதைகளில் இருப்பதெல்லாம் குழந்தைத் தருணங்கள் தாம். அவை தரும் அனுபவங்கள் அந்தத்தக் கணத்துக்கான கொண்டாட்டங்கள். குழந்தைகள் நமது வானின் நட்சத்திரங்கள். நமது வானத்தை ஒளியூட்டி வருபவர்கள். அவர்களல்லாது நாம் ஒரு வானம் என்று யார் அடையாளப்படுத்துவது ? சொல்லப்போனால் அவர்களால் தான் நாம் வானமாக இருக்கிறோம் .

நட்சத்திரம்

நுழைந்ததும்
காத்திருந்தார் போல் இழுத்தான்
அறையுள் கலர்
கலராக நட்சத்திரங்கள்
அறிமுகப்படுத்துவதாக
நீண்ட பெயர்ப்பட்டியலை வாசித்தான்
வானில் இருத்தல் தானே 
அழகென்றேன்
எங்க டீச்சர் சொல்லிட்டாங்க
அதெல்லாம் கோள்களாம்
அப்போது பூமியிலிருந்து
ஒரு நட்சத்திரம்
வானுக்குத் தெரிகிறது

குழந்தைகளைக் கடவுளாக்கிக் கவிதையாக்குவது தொன்று தொட்டு நாம் செய்வது தான். அப்படியான கவிதைகளிலெல்லாம் குழந்தைகளின் சிறு செயல்களெல்லாம் வரங்களாக்கி படைப்புகளாக்கப்படும். ந.பெரியசாமியும் அதைச் செய்திருக்கிறார். கொஞ்சம் தனித்த தன்முத்திரையுடன்


எளியவர் என் கடவுள்

ஈரமாக்கியது நீதான்
குற்றச்சாட்டோடு எழுவார்

சமாதானம் கொள்வார்
எட்டணா சாக்லேட்டுக்கும்
மெனக்கிடாத பொய்களுக்கும்

சிறு அறைதான்
சிங்கம் உலாவ 
பெரும் வனமாகவும்
மீனாக துள்ளிட ஆறாகவும்

பூங்காக்களில் சறுக்கும் 
பலகை போதும்
புன்னகை சிறகு விரிக்க

வடை தூக்கும் 
காக்கைக் கதையில்
உறக்கம் கொள்ளும்
என் கடவுள் எளியவர்

நெற்றியில் பூசும் திருநீறுக்கே
மலையேற்றம் கொள்ளும்
என் குடிசாமி போல

கடைசி வரிகள் இதை ஒரு குழந்தைக் கவிதை என்று மட்டும் அடையாளப்படுத்தாமல் எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களது எளிய கடவுளின் வழியாகச் சொல்கிறது.


குழந்தைக் கவிதைகளின் தொகுப்பென்ற வகையில் இது வழக்கமான தொகுப்பு தான். ஆனால் இந்தக் கவிதைத் தொகுப்பின் கவிதைகள் வழக்கமான கவிதைகள் அல்ல. இது நவீன பிள்ளைத் தமிழ். இவை குழந்தைகளை அறிவுறுத்தாத அச்சுறுத்தாத மொழியில் பேசுகிறது. மேலும், குழந்தைகளுக்கு மாறுவேடம் எல்லாம் போடாமலும், அவர்களைக் கடவுளாக்காமலும் இயல்பான குழந்தைமையைக் கவிதையாக்கியிருக்கிறார்.

இது முழுக்க முழுக்க குழந்தைகளின் உலகம் ; நாம் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும், இந்தக் கவிதைகளையும்


ஆசிரியர் :  ந.பெரியசாமி
வெளியீடு : தக்கை , 15, திரு.வி.க சாலை, அம்மாப்பேட்டை, சேலம் 3
தொடர்புக்கு : 9487646819

நன்றி : நான்காவது கோணம் மாத இதழ் , கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா


மேலும் ஒரு விருது

நண்பர்களுக்கு வணக்கம்,

ஒரு மகிழ்ச்சியான செய்திப் பகிர்வு ...

எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பான ஆதிமுகத்தின் காலப்பிரதி நூலுக்கு 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலுக்கான இரண்டாம் பரிசை அறிவித்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் நாங்கள் இலக்கியகம் அமைப்பு.

இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் கலை இலக்கிய சிந்தனையாளர் மன்றமும், மேல்சாத்தம்பூர்  கருப்பசாமி நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பரிசுப் போட்டியில் வென்றிருப்பதில் மகிழ்ச்சி.

எனது ஆதிமுகத்தின் காலப்பிரதிக்கு இது இரண்டாவது விருது, முன்னர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த கவிதை நூலுக்கான கவிஞர் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவுப்பரிசையும் வென்றுள்ளது என்பது பின் குறிப்பு.

நாங்கள் இலக்கியகத்துக்கும், தேர்வுக்குழுவுக்கும் மனமார்ந்த நன்றி.
எப்போதும் உடன் இருக்கும் நண்பர்களுக்கும், பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கும் என் அன்பு ...





செவ்வாய், 9 மே, 2017

கோடைக் குழந்தைகள் ...

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை ... 

கோடைக் குழந்தைகள் ...

கோடை விடுமுறை துவங்கிவிட்டது. காலியாக இருந்த வீடு குழந்தைகளால் நிறையப்போகின்றது . குழந்தைகளைச் சமாளிப்பது பெரிய வேலையாயிருக்கிறது இப்போதெல்லாம். அவர்கள் சளைக்காமல் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது, அவர்களது குறும்புகளை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கான கோடை வகுப்புகளைத் திட்டமிட வேண்டியிருக்கிறது, எங்காவது சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அப்பப்பா எத்தனை கவலைகள்.

நமது குழந்தைப் பருவம் இப்படி இருக்கவில்லை. விடுமுறை நாட்கள் என்பது பெரிய எதிர்பார்ப்புதான் என்றாலும் மற்ற நாட்கள் பெரும் பாரமாகவெல்லாம் இல்லை. அப்போதும் விளையாட்டு குதூகலத்துக்குப் பஞ்சமில்லாமலே இருந்தது.

பொள்ளாச்சி ஆனைமலைக்கு அருகில் உள்ள பெத்தநாயக்கனூர் நான் பிறந்த ஊர். அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.

வீட்டில் அப்பத்தா, ஆத்தா என நிறைய பாட்டிகளும், பக்கத்து வீட்டுப் பாட்டிகளும் இருந்ததால் வீட்டிலேயே எப்போதும் விளையாடியபடி இருப்போம் அவர்களுடன்.

தாயம்,பல்லாங்குழி, உமிக்காசு, ஆடுபுலி ஆட்டம் தான் பிரதானமான ஆட்டங்கள். தாயத்தில் கரம் போட்டு விளையாடுவது, வெட்டாட்டம்,  பரமபதம், காசு கட்டி தாயத்துக்கு ஆடுவது என பல கிளை விளையாட்டுகள் உண்டு. பல்லாங்குழியிலும் 12 முத்து, ஆறு முத்து, ஒன்னு விட்டு ஆட்டம் என பல கிளைகள். விடுமுறை நாட்களின் மாலைப்பொழுதுகளிலும், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரியில் இரவு விடிய விடிய கிழவிகளுடனும் அம்மா, அக்காக்களுடனும் விளையாடுவோம்.

அந்தச் சமயங்களில் கிழவிகள் சொல்லும் கதைகளும், சொலவடைகளும் அற்புதமானவையாக இருக்கும். ஊர்க்கதைகள், நீதிக்கதைகள், பேய்க்கதைகள், மந்திரக்கதைகள் எல்லாம் அவர்களது ஏற்ற இறக்கமான குரலில் கேட்டுக்கொண்டே விளையாடியது பொற்காலம்.

ஆடத்தெரியாதவ வீதி கோணல்னு சொன்னாளாம், அண்டப்புளுகன் காட்டுல கடுகு மொடாச்சோடாமா ( அண்டப்புளுகன் தன் காட்டில் கடுகு பானையின் அளவுக்கு இருக்குனு புளுகுவான் ), போன்ற கிராமியச் சொலவடைகளையும், ஊர்வம்புக் கதைகளையும் கேட்ட படி அவர்களுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறோம்.

வீட்டிலேயே பக்கத்து வீட்டு சிறுவர்கள், சிறுமிகள் கூடிவிடுவார்கள், டிரிங் டிரிங்.. யாரது? பேயது என்னா வேணும்? நகை வேணும் என்ன நகை? கலர் நகை என்னா கலர்? என்ற  உரையாடலில் பேயானவன் ஒரு நிறத்தைச் சொல்லுவான் அந்த நிறத்தை மற்றவர்கள் ஓடிப்போய்த் தொட்டுக்கொள்ள வேண்டும், தொடாதவர்களை பேய் தொட்டால் அவுட்.  வெள்ளை கலர் என்று சொன்னால் ஒருத்தன் பல்லைத் தொட்டுக்கொண்டு நிற்பான், அவனை பேய் தொட்டுவிட்டு நீ அவுட்டுடா உன் பல்லு வெள்ளை கலர் இல்லை மஞ்சள் கலர் என்று போங்காட்டம் ஆடுவோம்.. இப்படியான விளையாட்டுகள் திரும்பத் திரும்ப எத்தனை முறை விளையாடினாலும் அலுத்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குதூகல அனுபவம் கிடைக்கும்.

மாலை நேரங்களில் கிழவிகளுடன் விளையாட்டு எனில் விடுமுறை தினத்தின் பகல் நேரங்களில் பள்ளிக்கூட மைதானம் தான் கிடை.
வீட்டுக்கு அருகிலேயே பள்ளிக்கூடம் என்பதால் காலை சாப்பாடு முடித்தவுடன் கிளம்பி விளையாடப்போனால் மதியம் தான் வீடு திரும்புவோம் சில சமயங்களில் விளையாட்டு சுவாரஸ்யத்தில் மாலை ஆகிவிடும். உணவை மறந்து விளையாடிக்கொண்டிருப்போம். பையன்கள் பிள்ளைகள் என்ற பாகுபாடில்லை. அனைவரும் கூடுவோம்.

பையன்கள் மட்டுமெனில் கில்லி, பட்டம் விடுதல், மச பந்து, ஐஸ் பந்து என விளையாட்டு களை கட்டும்.
பிள்ளைகளும் சேர்ந்து கொண்டால், கோ கோ, நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, என விளையாட்டின் வண்ணம் மாறும்.
கபடி விளையாடுவோம். சிலை விளையாட்டு விளையாடுவோம்.
பல சமயங்களில் மண்ணில் புரண்டு அழுக்காகி, சட்டை கிழிந்து வீடு திரும்பிய கதையெல்லாம் உண்டு.

பள்ளி வளாகமெங்கும் வேப்பமரங்கள் பூத்துக்குலுங்கும். வெயிலின் கொடுமை துளியும் தெரியாது. இயற்கையாகவே பொள்ளாச்சி குளுமையான ஊர். எப்போதும் சில்லென்று தான் இருக்கும். எங்கள் பள்ளி மைதானத்தில் சுற்றிலும் மரங்கள் என்பதால் வெயிலின் தாக்கமோ, களைப்போ இருந்ததில்லை எங்களுக்கு. பசித்தால் வேப்பம் பழங்கள் தான் சமயங்களில் தின்பண்டம்.

அதுமட்டுமல்லாது, அங்கு கிடக்கும் வேப்பம் கொட்டைகளைப் பொறுக்கி அண்ணாச்சி கடையில் போட்டால் ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் தேறும். அதற்கு நெல்லிக்காய் , வத்தல் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு டவுசரில் துடைத்துக்கொண்டு விளையாட்டைத் தொடர்வோம்.

களிமண்ணை எடுத்து வந்து நாங்களே சமையல் சாமான்கள் செய்வோம், சட்டி பானை, அடுப்பு, கரண்டி எல்லாமே களிமண்ணில் நேர்த்தியாக தயாராகும். களிமண் காய்வதற்குள் வித விதமாக பூக்கள், இலை தழைகள் பறித்து வந்து வைப்போம். அதில் சமையல் நடக்கும். நான்கைந்து குழுவாக பிரிந்து இதைச் செய்வோம். ஒரு குழுவுக்குக் குறைந்தது ஒரு பெண்ணாவது இருப்பாள். வண்ண வண்ணமாக வித விதமாக சமையல் தயாராகும். அழகாக ( கவனிக்க சுவையாக அல்ல) சமையலைத் தயாரித்த குழுவுக்கு குச்சி ஐஸ் அல்லது கலர் சோடா பரிசு.

இப்போதெல்லாம் இந்த மாதிரியான விளையாட்டுகளுக்கு ஏங்குகிறேன். நம் பிள்ளைகளாவது விளையாடுவார்களா எனப் பார்க்கிறேன். நவீன விளையாட்டுகளிலும், கணினி, அலைபேசித் திரை விளையாட்டுகளிலும் தான் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

நமது மரபான கிராமிய விளையாட்டுகள் நமக்குத் தந்த உடல் பயிற்சியையும், மனப் பயிற்சியையும் இந்த விளையாட்டுகள் ஒரு போதும் தந்துவிட முடியாது. மண்ணில் புரண்டு விளையாடி நாம் மண்ணோடு மண்ணாக இருந்தோம். இப்போது நமது பாதங்கள் மண்ணில் பதிவதே இல்லை. மண்ணை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். சொந்த ஊரிலேயே அகதிகளைப்போல.

நாமும் அவர்களை சும்மா இருக்க விடுவதில்லை. ஒரு மாதம் விடுமுறையா ? மாலையில் இந்தி அல்லது ஃப்ரெஞ்ச் வகுப்பு, வார இறுதிகளில் கராத்தே குங்பூ வகுப்புகள். பத்தாவது அல்லது பன்னிரண்டாவது போகப்போகிறவர்கள் தீர்ந்தார்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது படி படி என்று பந்தாடிவிடுவோம்.

கோடை விடுமுறை நாட்களிலாவது மற்ற நாட்களில் அவர்களுக்குக் கிடைக்காத சிலவற்றை நாம் அவர்களுக்குத் தரச் செய்யலாமே. கிராமங்களுக்கு அழைத்துச் சென்று உறவுகளுடன், மனிதர்களுடன் அவர்களைப் பழகச் செய்யலாம், விவசாயம் காடுகழனிகளை அறிமுகம் செய்யலாம். ஆற்றிலோ நீரோடையிலோ கொஞ்சம் ஆடச் செய்யலாம். சிறுவர்களைக் குழுமச் செய்து விளையாடச் செய்யலாம். நல்ல கதைப் புத்தகங்களைத் தந்து வாசிக்கச் செய்யலாம். வழக்கமான உணவுமுறைகளுடன் கொஞ்சம் கம்பு சாதம், பழைய சாதம், கம்பு , கேழ்வரகுக் கூழ், என கோடைக்கான சிறப்பு உணவுகளை அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

குழுவாக குழந்தைகள் விளையாடுவதைத் தள்ளி நின்று சற்று பாருங்கள். பொறாமையாக இருக்கும். நாம் குழந்தையாகிவிட மாட்டோமா என்று தோன்றும். அந்த வாய்ப்பை, அந்த அனுபவத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவோம். குழந்தைகள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து பெரிய பெரிய மனிதர்களாவதெல்லாம் பிறகு.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடலாம். இந்தப் பருவம் போனால் கிடைக்காது. ஒரு போதும் வளர்ந்த மனிதர்கள் குழந்தைகளாகிவிட முடியாது.


கொலுசு மின்னிதழில் வாசிக்க :

கோடைக் குழந்தைகள்