செவ்வாய், 5 மே, 2020

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் - சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம்

கவிஞர் இசையின் வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் தொகுப்பு குறித்த எனது வாசிப்பனுபவக் கட்டுரை கனலி இதழில் வெளியாகியுள்ளது
கட்டுரை இங்கே உங்களின் வாசிப்புக்கு ....

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் - சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம்


இசை : தற்கால தமிழ்க்கவிதையின் மிக முக்கியமான முகம். இவரது உறுமீன்களற்ற நதி பரவலாக கவனத்தையும் பல விருதுகளையும் குவித்த தொகுப்பு, அதன் பின்னர் வந்த சிவாஜி கணேசனின் முத்தங்கள், அந்தக்காலம் மலையேறிப்போனது, ஆட்டுதி அமுதே ஆகிய கவிதைத் தொகுப்புகளும் முக்கியமான கவிதைத் தொகுப்புகள் தாம். அவரது உய்யடா உய்யடா உய், அதனினும் இனிது அறிவனர் சேர்தல், லைட்டா பொறாமைப்படும் கலைஞன், பழைய யானைக் கடை போன்றவை கவிதையியல் கட்டுரைத் தொகுதிகள். இவ்வாறு தொடர்ந்து கவிதையும் கவிதை சார்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும் இசை அவர்களின் சமீபத்திய தொகுப்பு நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன். நாம் இப்போது பேசப் போவது அதற்கு முந்தைய தொகுப்பான வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் தொகுப்பைப்பற்றி.

இசையின் கவிதைகளின் தனித்தன்மை அல்லது ஒழுங்கு என்னவென்றால் பகடி மொழி.
ஆம், அவரது கவிதைகள் பகடி பேசுகின்றன. பகடி என்பது நக்கல், கிண்டல் , கேலி,எள்ளல்,நையாண்டி என நிறையச் சொற்களின் மேம்பட்ட வடிவம். ஆனால் இந்தச் சொல்லுக்கெல்லாம் இல்லாத ஒரு கிறக்கமும் பகடிக்கு உண்டு தான்.

நகையுணர்வு என்பது நவீன வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வாழ்வு தரும் அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள அது வசதியான ஒன்றாகவும் இருக்கிறது. ஏன் வடிவேலு என்னும் திரைமொழிக் கலைஞன் நம் காலத்து நாயகனாக இருக்கிறார் என்று யோசித்தாலே போதும் என நினைக்கிறேன்.


நமக்கு வடிவேலு நமது அன்றாடங்களின் அத்தியாவசியமான ஒரு கலைஞனாகிவிட்டார். பள்ளிகளில், கல்லூரிகளில், கார்ப்பரேட் நிறுவனங்களில், அரசியலில், ஆன்மீகத்தில் என அத்துணை இடங்களிலும் வடிவேலு மீம்களாக சிரித்தபடியிருக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் பகடி தவிர்க்கமுடியாத அங்கம். எம்.ஆர் ராதா போல மக்களை, அரசியலை எள்ளி நகையாடியவர்களிலிருந்து வடிவேலு வரைக்கும் நாம் குறிப்பிட்டுச் சொல்ல மிக முக்கியமான ஆளுமைகள் திரையில் இருக்கிறார்கள். நமது கலைகளில், கூத்தில், நாடகங்களில், எல்லா இடங்களிலும் பகடிக்கென ஒரு விதூசகன் இருந்திருக்கிறான். பிரம்மாண்டமான சர்க்கஸ் நிகழ்வுகளில் கோமாளிகள் சிங்கங்களை விடவும் ஈர்ப்பான கதாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள் எல்லாக் காலங்களிலும்.

நமது இலக்கியத்திலும் பகடி சங்கம் முதல் நவீனம் வரை தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. இது குறித்து தமிழ்க் கவிதைகளில் விளையாட்டு என்ற பொருளில் பழைய யானைக் கடை என்ற ஒரு கட்டுரைத் தொகுப்பையே இசை எழுதியிருக்கிறார். நவீன கவிதைகளில் பல்வேறு கவிஞர்கள் பகடி மொழியைக் கையாண்டிருக்கிறார்கள் என்றாலும் இசையின் மொழி தனித்துவமானது. இசை தனது கவிதைகளை வாழ்க்கைக்குள்ளிருந்து தான் எடுக்கிறார்.
                     அருகிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை சோகமானது; ஆனால், தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது. - சார்லி சாப்ளின்
இதே கருத்தை சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் தென்னாட்டு சார்லி சாப்ளின் என்று புகழப்பட்ட நாகேஷ் அவர்களது குரலில் கேட்டிருக்கிறேன். வாழ்க்கையில் பிரச்சினை என்பது ஒரு சின்ன கல் மாதிரி அதை நாம் கண்ணுக்குப் பக்கத்துல வச்சு பார்த்தோம்னா உலகத்தையே மறைச்சுடும்,  அதையே கொஞ்சம் தூரமா தள்ளி வச்சு பார்த்தால் அது எவ்வளவு சிறியது என்று புரிந்துவிடும், அதையும் தாண்டி அதைத்தூக்கி நம் காலடியில் போட்டுவிட்டோம் என்றால் அதை நாம் சட்டை செய்யவே மாட்டோம், மிதித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்போம் என்கிறார். உண்மைதான்
  

இசையின் இந்தக் கவிதை இதைத்தான் பேசுகிறது

நான் உன்னிடம்
எவ்வளவோ சொன்னேன்
உண்மையை
அவ்வளவு பக்கத்தில் போய்ப் பார்க்காதே என்று
இப்போதோ
தலை வெடித்துச் சாகக் கிடக்கிறாய்

உண்மைதான் , உண்மையை, சத்தியத்தை, நெருங்கி விடவே கூடாது. 2014 ன் இறுதியில் நான் ஒரு கவிதை எழுதினேன். நெருங்கிப் பழகினால், நொறுங்கி விடுகிறது, பெரிய மனிதர்களின் மீதான பிம்பம் என்று. இன்று வரைக்கும் அப்படித்தான் தொடர்கிறது. ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டுத்தான் உண்மையைத் தொடரவேண்டும் போல.

அவ்வளவுதான்
பாத்ரூமென்றால் அப்படித்தான்
எப்படி கழுவினாலும் அழுக்கு நீங்காது
எவ்வளவு நறுமணமூட்டினாலும்
நாற்றம் போகாது

சோப்பென்றால் அப்படித்தான்
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
கைகளில் நிற்காது

நாமென்றால் அப்படித்தான்

நழுவிக் கீழே விழுந்து விட்டால்
எடுத்து
ஐந்துவிநாடிகள் ஓடும்நீரில் காட்டிவிட்டு
தொடர்ந்து  தேய்க்க வேண்டியதுதான்

இசை, இப்படித்தான் நாம் நினைப்பதை எழுதுகிறார், அன்றாட நிகழ்வுகளிலிருந்து அவர் கவித்துவத்தைக் கண்டெடுக்கிறார். நமது சறுக்கல்களிலிருந்து நம்மைத் தேற்ற ஒரு வீராவேசம் கொப்பளிக்கும் தன்னம்பிக்கைக் கட்டுரையோ, கதையோ தேடிப்போக அவசியமில்லை, இந்தக் கவிதை அதைச் செய்யும், கொஞ்சம் நம்மையே சுயபகடிக்கு ஆளாக்கி.

பகடி செய்தல் அவரது பிரத்யேக பாணி என்றாலும் அவரது கவிதைகளில் எப்போதும் மறை பொருளாயிருக்கும் மனிதமும் அன்பும் இசை வெளியே சொல்லி விட்டிருக்காத ஒரு அற்புத மொழி.

போலீஸ் வதனம்

நான்குமுனைச் சந்திப்பொன்றில்
ஒரு போலீஷ்காரரும் ஒரு குடியானவனும்
கிட்டத்தட்ட மோதிக் கொண்டனர்.
குடியானவன் வெலவெலத்துப் போனான்
கண்டோர் திகைத்து நின்றனர்
அடுத்த கணம் அறைவிழும் சத்தத்திற்காய்
எல்லோரும் காத்திருக்க
அதிகாரி குடியானவனை நேர்நோக்கி
ஒரு சிரி சிரித்தார்.
அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்று கூடும் 
ஓசை கேட்டது.
நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே ! “
 என  வாழ்த்தியது வானொலி.
 போலீஸ் தன் சுடரை
 ஒரு கந்துவட்டிக்காரனிடன் 
பற்ற வைத்து விட்டுப்போனார்.
 அவன்
ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் 
கந்து வசூலிக்க வந்தவன்.
கிழவி தலையைச் சொரிந்த படியே
நாளைக்கு... “ என்றாள்.
 ஒரு எழுத்து கூட ஏசாமல் தன்  ஜொலிப்பை
அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.
அதில் பிரகாசித்துப் போன கிழவி
இரண்டு குட்டி ஆரஞ்சுகளை சேர்த்துப் போட்டாள்.
அது ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது.
எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை
ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க
அதிலொன்றை  ஈந்து விட்டுப் போனாள்.
சிறுமியின் காலடியில்
நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.
அதிலொரு சுளையை எடுத்து
அவள் அதன் முன்னே எறிய
சொறிநாய்க் குட்டி
அந்த "ஒளிநறுங்கீற்றை“ லபக்கென்று  விழுங்கியது.

இந்தக் கவிதை நமது முகத்துக்கும் ஒரு ஒளி நறுங்கீற்றை பச்சக்கென ஒட்டி விடுகிறது. இந்தக் கவிதையைப் படித்த கணம் ஒரு வெளிச்சம் நமது முகத்தில் பரவுவதை நாம் உணர முடியும்.  ஒரு சம்பவம் தான், அதை இசை ஊதிப் பெரிதாக்குகிறார், அதிலிருந்து வாழ்வின் எதார்த்தத்தை உறிஞ்சி எடுக்கிறார் நம்மைப் போலவே. ஆனால் தனது பிரத்யேக மொழிதலின் மூலமாக அவர வேறோர் உயரத்தில் நிற்கிறார்.

எனக்கு மிகப் பிடித்த ஒரு கவிதை இந்தத் தொகுப்பில் இருக்கிறது

சின்ன குலுங்கல்

உலகம்
ஒரு சின்ன  குலுங்கு குலுங்கிவிட்டு
இயல்புக்கு திருப்பி விட்டது.
சேதாரம் ஒன்றும் பெரிதாக இல்லை.
ஒரே ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து விட்டது
எதில் அருந்தினால்
உன் தாகம் தணியுமோ
அந்தக் கண்ணாடி டம்ளர்.

எப்போதும் நமது வண்டிதான் பஞ்சர் ஆகும், எப்போதும் நமது கைப்பை தான் தொலைந்து போகும், நேர்முகத்தேர்வில் நமது முறையின் போது தான் நமக்கு ஒண்ணுக்கு முட்டிட்டு வரும், இப்படி எல்லாமே எனக்கு மட்டுமே ஏண்டா நடக்குது ஆண்டவா என நான் கேட்டுக் கொள்ளும் ஒவ்வொரு தருணமும் இந்தக் கவிதையின் தருணம் தான்.

பகடியில், கவிதையில் சமூகத்துக்கான மொழி, சமூகத்துக்கான குரல் இல்லையா என்று கேட்பார்கள். இசையின் கவிதை அதையும் தான் கேட்கிறது. அதையும் தான் பகடி செய்கிறது.

இரண்டு வழிகள்

பொதுவழியும்
சிறப்பு வழியும்
ஒன்றாகும் இடத்தில்
என்னய்யா இரைச்சல்?
பொது வழியும் சிறப்பு வழியும்
ஒன்றாவதால்
எழும் இரைச்சல்.
                            
இது அரசியல் கவிதையா என்றால் ஆம் என்பேன். சமூகக் கவிதையா என்றால் அதற்கும் ஆம் என்பேன். அரசியல் கவிதையும், சமூகக் கவிதையும் பெருங்குரலில் தான் பேச வேண்டுமா ? கரகரத்த தன் குரலில் அதிரக் கத்த வேண்டுமா ? அப்படி இல்லாமலும் இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஆகவே தான் இந்தக் கவிதையை அந்த வரிசையில் வைத்துப் பார்க்கிறேன்.

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் என்கிற இந்தத் தொகுப்பின் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கைக்கு உள்ளிருந்து எடுக்கப்பட்டவை தாம். ஆனால் வாழ்க்கைக்குள்ளேயே அந்தந்தச் சூழலின் சூட்டுக்குள்ளேயே இல்லாமல் தள்ளி நின்று பேசுகிறது. வாசிக்கவும் பத்திரப்படுத்திக் கொள்ளவுமான ஒரு தொகுப்பு.

வெளியீடு : காலச்சுவடு
விலை : ரூ 100
கவிஞர் இசையின் தொடர்புக்கு : isaikarukkal@gmail.com

கனலி இதழில் வாசிக்க :





வெள்ளி, 1 மே, 2020

ஆகுளி - சிறுபான்மைக்காக அதிரும் சிறு பறை


இந்த மாத படைப்பு தகவு இதழில் ஆகுளி கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய நூல் அறிமுக உரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் வாசிக்க ஏதுவாக இங்கு ....






ஆகுளி - சிறுபான்மைக்காக அதிரும் சிறு பறை



தமிழ் மொழியில் ஒரு சொல் என்பது மிக நீண்ட ஆயுளைக் கொண்டது. வேறெந்த மொழியை விடவும் தமிழில் தான் சொற்கள் பன்னெடுங்கால ஆயுள் கொண்டவையாக சங்க காலத்தில் இருந்து இன்றைய காலம் வரைக்கும் வெகுமக்களின் புழக்கத்திலும் வழக்கத்திலும் இருந்து வருகின்றன. சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஏராளமான சொற்கள் இன்றளவும் மக்களின் பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றன என்பது தமிழன் தனது மொழியை சிதையாமலும் அழியாமலும் பல்லாயிரம் ஆண்டு காலம் காத்து வருகிறான் என்பதன் எடுத்துக்காட்டு. இன்றைய நவீன தமிழில் நாம் பழஞ்சொற்கள் பலவற்றைக் கைவிட்டு விட்டோம். மிகக் குறைந்த சொற்களுக்குள் புழங்கி நமது படைப்பின் எல்லையைச் சுருக்கிக் கொண்டோம். நாம் புழங்கிக் கொண்டிருக்கும் சில ஆயிரம் சொற்களுக்கு வெளியே நம் மொழி சில லட்சம் சொற்களுடன் ஒரு பேராழியாக நீண்டு விரிந்து கிடக்கிறது. அவற்றிலும் நாம் கற்றுத் தேர்ந்து கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் அவசியம். சொற்கள்,எழுத்து, பேச்சு வழக்கு இவை அனைத்தும் இணைந்து தான் ஒரு மொழியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும். ஒரு சொல் என்பது கூழாங்கல்லைப் போல பளபளப்பாக இருக்கிறது. கூழாங்கல்லைப் போலவே காலமெல்லாம் மொழியின் பிரவாகத்தில் உருண்டு உருண்டு தன் பளபளப்பைப் பெறுகிறது. இன்று நாம் பார்க்கும் கூழாங்கல் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும். நாம் பயன்படுத்தும் ஒரு சொல்லும் அப்படித்தான்.


கவிஞர் கீதாபிரகாஷ் வெளியிட்டிருக்கும் அவரது இரண்டாவது தொகுப்பின் பெயரைக் கேட்டதும் அந்தச் சொல் மிகப் புதியதாக இருந்தது எனக்கு. அந்தச் சொல் மிகப் புதியதன்று மிகப் பழையது. ஆகுளி அவரது கவிதைத் தொகுப்பின் பெயர். ஆகுளி என்று இணையத்திலும் இலக்கியங்களிலும் தேடிப்பாருங்கள் நிறைய செய்திகள் கிட்டும். இந்தச் சொல் நம் பண்டைய இலக்கியங்களான பெரிய புராணம், புறநானூறு, மலைபடுகடாம் உட்பட பல இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியும். ஆகுளி என்பது பறையின் வகையைச் சேர்ந்த ஒரு சிறிய இசைக்கருவி. குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த மக்கள், சிவ வழிபாட்டில் பயன்படுத்திய உடுக்கையைப் போன்ற சிறிய இசைக் கருவி. சரி ! இந்தத் தொகுப்பு இசையைப் பற்றியதா, இசைக்கருவிகளைப் பற்றியதா, பறையைப் பற்றியதா என்றால் இல்லை. ஆகுளி என்பது இங்கு காரணப் பெயர். சிறுமையைக் கண்டு அதிரும் சிறு பறை, சிறுபான்மைக்கு எதிராக குரலுயர்த்தும் ஒரு சிறிய கருவி இந்தக் கவிதைகள், இந்தக் கவிஞர். ஆம் , அதே தான்.

அடித்தவனும்
சொல்கிறான்
அமைதிகொள்
அழுதவனும்
சொல்கிறான்
அமைதிகொள்

நீதியைக் கொன்று
நம்பிக்கையைப் பலியிட்ட
இடத்தில்தான்
இனி
பஜனைகள் நடக்கும்

தரிசனம் வேண்டி
பிரவேசிக்கப் போனால்
பிரம்மாண்டமாக எழும்பி நிற்கும்
தூணில்
நிச்சயம் கேட்கும்
பாங்கொலி

நீதியைக் கொன்று நம்பிக்கையைப் பலியிட்ட இடம் என்று சொல்லும் இடமும், தூணில் கேட்கும் பாங்கொலியும் குறியீடுகளாக நம் சமகாலத்தின் நீதியென்ற பெயரில் நிகழ்ந்த அநீதியைக் காட்சிப் படுத்துகிறார். சமகாலத்தின் சமூகப் பிறழ்வுகளைப் படைப்பில் ஆவணப்படுத்துவது ஒவ்வொரு படைப்பாளனின் சமூகக் கடமை .

பெண்ணின் வலிகளை பெண் எழுதும் போது தெறிக்கும் உண்மையின் பெருவலி வாசகனுக்குத் தன் வலியாகக் கடத்தப்படுகிறது.  எப்போதாவது குருதி பார்க்கும் ஆண்களைப் போலில்லை பெண்கள் என்பது எத்தனை சத்திய வாக்கு.

உயிர் போய் உயிர் வரும்
பிரசவத்திற்குப் பின்பு
ஆட்டின் கோழியின் கல்லீரல் போல்கட்டி கட்டியாகக் கொட்டித்தீர்க்கும்
பெண் உடலின் சிவப்புக் குருதியை
வெறும் இரத்தமெ
எப்படிச் சொல்வது?
மோப்பம் பிடித்து வரும்

கழிவுத்தீட்டு
எப்போதாவது
குருதி பார்க்கும்
ஆண்கள் போலில்லை
பெண்கள்
மாதங்கள் தோறும்
குருதியின் வாடை
சுமக்கும் பெண்டீரை
எறும்புகளிடம் தப்பித்தல்
அத்தனை எளிதல்ல

எறும்புகளிடம் தப்பிக்க எத்தனை பிரயத்தனம் வேண்டியிருக்கிறது எப்போதும் பெண்டிருக்கு.

புதிதாக வந்தவர்களிடம்
பழைய ரகசியங்களை
ஒரு போதும் சொல்லாது
வாடகை வீட்டின் சுவர்கள்


புதிய நண்பர்களிடம் பழைய ரகசியங்களை மனிதர்கள் தான் சொல்லிவிடுகிறார்கள். பழைய நண்பர்களின் பழைய அன்பைத் துறந்துவிடுகிறார்கள். எத்தனை நினைவுகளைக் கிளறவிடுகிற கவிதை இது.

தன் கூவலை நிறுத்திச்
செய்வதறியாது
தலையசையாமல்
மரத்தின் கிளையில் அமர்ந்து
பெண்ணொருத்தியின் கதறலை
வெறுமனே கண் அகலப் பார்க்கிறது
ஒற்றைக் குயில்
பிறகு அவளின் கால்கள் உதற உதற
கழுத்தில் மேலும் கீழுமாய்
இழுபறித்து அடங்கிய சுவாசம்
அடங்கிய கணம்
எங்கிருந்தோ வந்த பிணப்பறவை
குருதி படர்ந்த அவள் சதைகளைக்
கொத்தத் துவங்கியவுடன்
தன் கேவலோடு
வேறு கிளைக்குத் தாவியது
சாட்சியான அந்த
ஒற்றைக் குயில்

பெண்ணொருத்தியின் கதறலைக் கண்களால் கண்ட ஒற்றை சாட்சியாக இருக்கும் குயில் தான் இந்தக் கவிதை. இந்தக் கவிதை காலத்தின் சாட்சியாக இருக்கிறது. தன் காலத்தில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் பெண் கொலைக்கும், ஒரு நாகரீக சமுதாயம் தன் நாகரீக உச்சத்திலும் பெண்ணை சக மனுஷியாய் ஒரு துளியும் பொருட்படுத்தாது வல்லுறவு கொண்டு சாகடித்துக் கொண்டிருந்தது என்கிற கசப்பான வரலாற்றின் சாட்சியாக இருக்கப் போகிற படைப்பில் இதுவும் ஒன்றாக இருக்கும். இதைத்தான் படைப்பின் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

ஆகுளி தொகுப்பு முழுவதும் சமூகத்துக்கான கவிதைகள் சிறு பறையென அதிர்கின்றன. கவிஞரின் குரல் வலுவாக கவிதைகளில் ஒலிக்கிறது. கவிதைகள் வெறும் விளையாட்டுப் பொருளல்ல என்று தீர்க்கமாக நம்பும் என் போன்ற வாசகர்களுக்கு இதில் உள்ள மிகை உணர்ச்சியும், வலிந்த கட்டமைப்பும் ஒரு குறையாகத் தெரியாது. கவிதைகள் தன்னளவில் சமூகத்துக்கான பணியைச் செய்துகொண்டிருக்கின்றன என்கிற நம்பிக்கை காரணமாக இருக்கலாம். கவிஞர் கீதாப்ரகாஷ் தன் கவிதைத் தொகுப்புக்கான கவிதைகளை மிகச் சரியாகவும் நியாயமாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நெகிழிப் பை மீன்களின் அழுகை, திருவனந்தபுரம் கொச்சுவேலி எக்ஸ்பிரஸை ஒன்றன் வாலை ஒன்று பிடித்து வரிசையாக வரும் யானைகளென்ற ஷமிக்குட்டியின் கற்பனை, வழிந்துபோகும் பெண் குருதியைத் தீட்டெனச் சொன்ன ******* மகன் யார் ? எனும் சீற்றம், நிலமற்றுப் போனவனின் மலடான
நிலம் குறித்த கவலை, அவள் உங்களைப் போல இல்லை எனும் பிரமாணம், மாரிமுத்துத் தாத்தாவின் வாயில் ஒட்டியிருந்து அவரது நிலத்தின் மண் என்று தனது கவிதைகள் அனைத்திலும் சமூகத்துக்கான சில சொற்களையேனும் வைத்திருக்கிறார். கேள்விகளை, பூடகமான பதில்களை, நேரடியான கோபங்களை, மறைமுகமான அரசியல் நையாண்டிகளைப் பேசியிருக்கிறார் கவிதைகளில்.

தொடர்ந்து தனது கவிதைகளை ஆகுளியின் இசையென இசைத்தபடியேயிருக்க வாழ்த்துகள்
  
வெளியீடு : அகநி வெளியீடு, 3,பாடசாலை வீதி,அம்மையப்பட்டு,வந்தவாசி-604 408 பேச: 98426 37637
விலை : ரூ 70/-

படைப்பு தகவு இதழ் வாசிக்க :