வியாழன், 27 அக்டோபர், 2022

கவிதை ரசனை 8

 

கவிதைகள் உயிருள்ள பிராணிகள். அதுவும் மனிதரிடமிருந்து பிறப்பதனாலோ என்னவோ அவற்றுக்கு மனித குணம், மனித மனம், மனித சிந்தனை தாம். அவை தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் மனிதர்களைப் போன்றே ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. சொல்ல வந்ததைப் பட்டென்று போட்டு உடைத்துவிடுவர் சிலர். தயங்கித் தயங்கி சொல்லவந்ததைச் சொல்லியும் சொல்லாமலும் மருகி நிற்பர் சிலர். சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் குறிப்புணர்த்தும்படி வேறெதோ ஒன்றைச் சொல்லி அதன் வழி நாம் அவர் சொல்ல வந்ததை உணரச் செய்வர் சிலர். கவிதைகளுக்கும் இதே குணமுண்டு. சில கவிதைகள் வெளிப்படையாகப் பேசி விடுகின்றன. சில கவிதைகள் சொற்களை வாசலாக்கி பொருளை உட்பக்கமாக ஒளித்து வைத்திருக்கின்றன. தாழிடப்பட்டிருக்கும் சொற்களை ஒவ்வொன்றாகத் திறந்து கவிதையின் பொருளைக் கண்டடையும் படி இருக்கின்றன. நவீன கவிதைகள் நேரடியாக பெரும்பாலும் பேசுவதில்லை. அவை சொல்ல வந்த பொருளை சொற்களுக்குள் ஒளித்து வைத்திருக்கின்றன. கவிதையின் சொற்களே தாழ்களாயிருக்கின்றன அவையே சாவியுமாக இருக்கின்றன. வாசகன் சொற்களைக் கொண்டே சொற்களைத் திறந்து பொருளை அடைய வேண்டியிருக்கும். இது ஒரு மகத்தான அனுபவமாக இருக்கும். ஆகவே தான் நவீன கவிதைகள் கொண்டாடப்படுகின்றன. பொருளும் கூட ஒன்றாயிராது. வாசகரைப் பொறுத்து, வாசிக்கும் மனநிலையைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலையிலும் புதிய புதிய வாசல்களை நவீன கவிதைகள் திறந்து காட்டியபடி இருக்கின்றன.

கவிதைகளின் வாசல்களுக்குள் பயணிப்பது என்பது அலாதியானது. ஒரு இருட்குகைக்குள் பயணிக்கும் சாகச உணர்வோடும் ஒரு வெட்டவெளியின் சுதந்திரத்தோடும் நாம் அவற்றுக்குள் பயணிக்க முடியும். கவிதைக்குள் கவிஞனுக்கான இடமென்ற ஒன்றுண்டு. அவனுக்கான சிம்மாசனம் அது. வாசகன் கவிதையின் ஒவ்வொரு சொல்லாகத் திறந்து திறந்து அதை அடைய வேண்டும். சமயங்களில் அவன் அடைவது அதனினும் உயர்வான ஒன்றாயிருக்கக் கூடும். அந்தச் சுதந்திரத்தைத் தான் நவீன கவிதைகள் தருகின்றன. ஒரு நிலைக்கண்ணாடியைப் போலல்லாமல் ஒரு மாயக் கண்ணாடி போல நாம் நினைத்ததையெல்லாம் காட்டும் வல்லமை படைத்தவை கவிதைகள். 

கவிதைகள் நிகழ்விலிருந்து விலகி நின்று எதிர்க்கோணத்தில் அதை தரிசிக்க வல்லவை. அவ்வாறே நமக்கும் புலப்படுத்துபவை. பெரு.விஷ்ணுகுமாரின் இந்தக் கவிதை அதற்குச் சான்று


சிரசாசனம்


முதல்முறையாக நான் சிரசாசனம் பழகுகையில் 

வானத்தின்மீது சம்மணமிட்டு நிமிர்ந்து நின்றேன் 

அடுத்த கணம் உச்சந்தலையில் நிலம் முட்டியது 

நம்ப முடியவில்லை

ஆகாயத்திலிருந்து பூமி தொடும் தூரம்தானா...

விடையிலிருந்து எம்பும்போது மட்டும் ஏனோ

கேள்வியின் கிளை எளிதாகச் சிக்கிவிடுகிறது

தற்சமயம் 

நான்தான் என் வீட்டைப்போல 

இவ்வுலகு மொத்தத்தையும் சுமந்துகொண்டிருக்கிறேன்

உதவிக்கு ஒருவர்கூட இல்லாதபோதும் 

நான் மட்டுமே செய்வதற்குச் சற்றுச் சிரமமான காரியம்தான் 

என்றாலும்

மறுநாள் வீதியில் நடந்துசெல்கையில்

அனைவருக்கும் நான் யாரெனத் தெரிந்திருந்தது


- பெரு.விஷ்ணுகுமார் 

“ அசகவதாளம்” தொகுப்பிலிருந்து , காலச்சுவடு வெளியீடு, தொடர்புக்கு 04652278525



தலைகீழாய் நடக்கும் போது நமக்கு உலகமே தலைகீழாய் இருப்பதான ஒரு மயக்கத்தைத் தருவது போதை தான். இந்த போதையை ஒரு போதை வஸ்து தான் தரவேண்டுமென்பதில்லை. கவிதை தரும்.  இந்தக் கவிதையை தலைகீழாய் இருக்கும் ஒருவனின் தலைகீழ்ப் பார்வை என நேரடியாக ரசிக்கலாம் தான்; ஆனாலும் இந்தத் தலைகீழ்த் தனத்தை வேறெதுவோடாவது பொருத்திப் பார்த்துக்கொள்ளக் கூடிய இடத்தையும், சுதந்திரத்தையும் இக்கவிதை தருகிறது. தான் தான் இந்த வீட்டைப் போல இவ்வுலகு மொத்தத்தையும் சுமந்து கொண்டிருக்கிறேன் என்பதான நினைப்பு தான் ஒருவனின் இருப்பை பதற்றமாக்குகிறது. அந்நினைப்பு தான் இக்கவிதைக்கான பொறி. சிரசாசனம் என்கிற தலைப்பே பொருத்தமாயிருக்கிறது. அது தானொருவன் மட்டும் தலைகீழாய் நிற்பதன் குறியீடாக இருக்கிறது. தலைகீழாய் நிற்பது என்பதே இயல்பிலிருந்து பிறழ்ந்த ஏதோ ஒன்றின் குறியீடாக இருக்கிறது. ஏதோ ஒன்று என்பது இங்கு ஒரு கோடிட்ட இடம். நிரப்பிக்கொள்தல் சூழல் தரும் வாய்ப்பு. மறுநாள் வீதியில் நடந்து செல்கையில் அனைவருக்கும் நான் யாரெனத் தெரிந்திருந்தது என்கிற கடைசி வரிகள் ஒருமுறை வாசிப்பில் இறுமாப்பின் உணர்வைத் தருகிறது. மறுமுறை வாசிப்பில் பகடியாகத் தெரிகிறது. நவீன கவிதையை எந்தக் கோணத்திலும் அணுகிவிட முடியும் என்பதையும் உணர்த்துகிறது இந்தக் கவிதை.  



கவிஞர் இசையின் கவிதைகள் நல்லுணர்வைத் தருவன. நல்ல வாசிப்பனுபவத்தைத் தருவன.  எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டத்துக்கும் பிரம்மாண்டமளிப்பது ஒரு சின்னஞ்சிறியது என்பதை தத்துவ மொழிதலைப் போலல்லாமல் கவித்துமாக மொழிதல் ஆசுவாசமானது. ஒரு சின்னஞ்சிறியது குறித்த கவிதை



சின்னஞ்சிறியது


நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்று 

ஏலத்திற்கு வந்தது.

பிரம்மாண்ட அரண்மனையின் விண்முட்டும் கோபுரம் 

அதன் உச்சியில் ஒரு சிறுபுறா.

வாங்கி வந்து

வரவேற்பறையில் மாட்டிவைத்தேன்.

ஒவ்வொரு நாளும்

அந்தப் புறா இருக்கிறதாவெனத்

தவறாமல் பார்த்துக்கொள்வேன்

எனக்குத் தெரியும்

அது எழுந்து பறந்துவிட்டால்

அவ்வளவு பெரிய பிரம்மாண்டம் 

சடசடவெனச் சரிந்துவிடும்.


- இசை

“உடைந்து எழும் நறுமணம்” தொகுப்பிலிருந்து, காலச்சுவடு வெளியீடு, தொடர்புக்கு 04652278525


அவ்வளவு பெரிய மாளிகை ஓவியத்தையும் பிரம்மாண்டமாகக் காட்டுவது அதில் உயிர்ப்போடு வரையப்பட்டிருக்கும் ஒரு சிறு புறா என நினைப்பது கவிதை மனது. ஒரு பிரம்மாண்டத்தைக்  காட்சிப்படுத்த ஒரு சின்னஞ்சிறியது தேவைப்படுகிறது. ஒரு கோட்டை பெரிய கோடெனக் காட்ட அருகில் சின்னக் கோடு வரைவது போலான எளிய அறிவியலும் இந்தக் கவிதைக்குள் இருக்கிறது. ஒரு புறா தான் அவ்வோவியத்தின் பிரம்மாண்டம் என்கிற அழகியலும், ஒரு சிறு உயிர்ப்பு தான் அந்தக் கட்டிடத்தின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றுகிற ஒன்று என்கிற அறிவியலுமாக இந்தக் கவிதை காட்சிப்படுத்தப்படுகிறது. பழங்கதைகளில் மந்திரவாதியின் உயிர் ஒரு சிறுகிளியிடம் இருப்பதைப் போல இந்த ஓவியத்தின் பிரம்மாண்டம் இந்தச் சிறு புறாவிடம் இருக்கிறது. 


-


ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்


சனி, 24 செப்டம்பர், 2022

கவிதை ரசனை - 7

கவிதை ரசனை 



கவிதைகள் ஒரு குளத்தில் பூக்கும் பல்வேறு நிறமும் மணமும் கொண்ட பூக்கள். அழகியல், அறிவியல், அனுபவம், சமூகத்தின் மீதான குறுக்குவிசாரணை, ரெளத்திரம், என பல குணங்களையும் கொண்டவை. மிடுக்கும் சிடுக்குமாக எப்போதும் அலையும் ஓர் இராணுவ அதிகாரி வீடு வந்ததும் தன் ஆடைகள் தளர்த்தி, உடைக்கு உள்ளேயிருக்கும் மிடுக்கைக் கொஞ்சம் தளர்த்தி தன் குழந்தையிடம் குழைவாரே அப்படி கவிதைகளும் குழந்தைகளிடம் குழைகின்றன. குழந்தைகளுடன் நடை பயின்று விளையாடுகின்றன. கவிதை குழந்தைமையைக் கொண்டாடுகிறது. குழந்தைகளுக்கென தயாராகும் எல்லாப் பொருட்களிலும் கலைநயம் மிளிரும்; குழந்தைகளைக் கவரும் வண்ணங்கள் நிறைந்திருக்கும். குழந்தைகளைப் பற்றிய கவிதைகளிலும் அப்படியான வண்ணங்கள் வந்து நிறைந்துவிடுகின்றன. 


இயல்பாகவே குழந்தையின் குறும்புகளை ரசிக்கும் நாம் கவிதையென்று வரும் போது அதைக் கொண்டாடுகிறோம். குழந்தைமையைக் கவிதையில் கொண்டாடிய கவிதைகள் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முகுந்த் நாகராஜனின் கவிதைகள் தாம். நீர் தெளித்து விளையாடுதல், குழந்தைக்கு பந்து வீசுதல், ஜன்னல் சீட் போன்ற பல கவிதைகள் என்றென்றைக்கும் நினைவில் இருக்கும்படியான படைப்புகள். அவரது மொழியும், சின்னச் சின்ன சம்பவங்களையும் அழகிய கவிதைகளாக்கிவிடும் அவரது சொல்நேர்த்தியும், அவரைத் தனித்துவமான கவிஞராக அடையாளம் காட்டுகின்றன. அவரது கவிதை ஒன்று...


                        பூப்பறித்தல்


வழியில் அழுது அடம் பிடிக்கும் 

குழந்தையை மிரட்ட

இருப்பதிலேயே சின்னக் கிளையை

சாலையோர மரத்தில்

தேடுகிறாள் அம்மா.

அழுகையை நிறுத்திய குழந்தை 

அதே மரத்தின்

பூ வேண்டும் என்கிறது.


முகுந்த் நாகராஜன்

கிருஷ்ணன் நிழல் தொகுப்பிலிருந்து 


குழந்தையை மிரட்டும் சின்ன சம்பவம் தான் கவிதை. இந்தக் கவிதையில் சில சொற்களை எவ்வளவு லாவகமாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது இந்தச் சின்ன சம்பவத்தின் மீது அழகுப் பூச்சுகளைப் பூசி மெருகேற்றியிருக்கிறது. இருப்பதிலேயே சின்னக் கிளை என்கிற வரி அம்மாவின் மனதைக் காட்டுகிற வரி. குழந்தையை மிரட்டவும் வேண்டும், வலிக்காமலும் அடிக்க வேண்டும் என்பதான அம்மாவின் மனதினை இந்த ஒரு வரி காட்டிவிடுகிறது. அதே மரத்தின் பூ வேண்டுமெனக் கேட்கும் குழந்தையின் மனம் தான் இந்தக் கவிதை. அழுகையை நிறுத்தியவுடனே அழுகையிலிருந்து மீண்டுவிடும் சக்தி குழந்தைகளுக்குத் தான் வாய்க்கின்றன. அடித்தாலும் கொன்றாலும் மீண்டும் அம்மாவின் காலைக் கட்டிக்கொள்ளும் குழந்தையை இந்தக் கவிதை அழகுற நம் முன் வடித்துத் தந்திருக்கிறது. பூப்பறித்தல் எனும் கவிதையிலில்லாத கவிதையின் தலைப்பு இந்தக் கவிதையில் நிகழும் நிகழ்வாக மட்டுமன்றி வாசிக்கும் மனங்களில் நிகழும் விளைவாகவும் இருக்கிறது. 


குழந்தைகள் எதுவரை குழந்தைகளாக இருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. நம் நவீன வாழ்வு தந்த பேரழுத்தங்களில் ஒன்று இந்தக் கேள்வி. நம் குழந்தைகள் நம் குழந்தைகளாக இருப்பதில்லை, குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பதுமில்லை. மூன்று வயதுக்கும் முன்னரே பள்ளிகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் தம் பால்யங்களைத் தொலைத்துவிடுகிறார்கள். தங்கள் குழந்தைமையைத் தொலைத்துவிடுகிறார்கள். இவ்வுலகை அழகிய கண்களால் தரிசித்து மகிழ வேண்டிய வயதில் அவர்கள் மீது கணக்கும் அறிவியலும் திணிக்கப்படுகிறது. உலக அறிவையெல்லாம் மூன்று வயதிலேயே அடைந்துவிட வேண்டுமென்கிற பெற்றோர்களின் நிர்பந்தம், போட்டி நிறைந்த உலகிற்குள் அவர்களை இழுத்துவந்து விடுகிறது. ந.பெரியசாமியின் இந்தக் கவிதை, குழந்தைகள் என்று தம் குழந்தைமையைத் தொலைத்தார்கள் என்று பேசுகிறது. 



பள்ளிக்கூடம்


அடிக்கடி நீரிலிட்டு

புதிது புதிதாக சோப்பு வாங்க 

பூனை மீது பழி போடுவாள்


விருந்தினரின் செருப்புகளை ஒளித்து 

புறப்படுகையில் பரபரப்பூட்டி 

நாயின் மீது சாட்டிடுவாள்


தேவைகளை வாங்கிக் கொள்ள 

உறுதியளித்த பின் தந்திடுவாள் 

தலையணை கிழித்து மறைத்த ரிமோட், வண்டி சாவிகளை


கொஞ்ச நாட்களாக குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்


மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது 

அவளை பள்ளிக்கு அனுப்பி.


- ந.பெரியசாமி

குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீல வானம் தொகுப்பிலிருந்து


இது இயல்பாக நாம் எதிர்கொள்ளும் சிக்கல் தான். பள்ளிக்குச் செல்லும் வரை இருந்த குழந்தை தனியார் பள்ளிகள் தரும் மன அழுத்தத்திலும் வீட்டுப்பாடச் சுமைகளிலும் கசக்கப்பட்டு தன் குழந்தைத் தன்மையை இழந்து விடுகிறது. அதுநாள் வரைக்குமான குறும்புகள் குறைந்து குழந்தைகள் வளர்ந்துவிடுகிறார்கள் வெகு வேகமாக. முந்தைய தலைமுறைக் குழந்தைகள் அனுபவித்த பல அற்புதங்களை இழந்து நம் காலத்துக் குழந்தைகள் நவீன வாழ்வின் சாட்சியாக வளர்கிறார்கள். கல்விமுறையிலும் பெற்றோர் மனங்களிலும் தற்போது ஏற்பட்டு வரும் விழிப்புணர்வு இன்னும் அதிகமாகி புதிய கற்பித்தல் முறைகளாலும், வாழ்வியல் கல்வி முறைகளாலும் நாம் வேறொரு திசையை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலம் இது. இப்படியான காலத்தின் சாட்சி தான் ந.பெரியசாமியின் கவிதை.






-


ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

கவிதை ரசனை - 6

 

கவிதை ரசனை - இரா.பூபாலன்

 

 கவிதை காலத்தின் மீது விழும் ஒரு கண்ணீர்ச்சொட்டு, காலத்தின் கண்ணீரைத் துடைக்கும் கரமும் அதனுடையது தான். அழகியலின் வனப்புகளை சொற்களின் பல்லக்கில் தூக்கிச் சுமக்கும் பணியாள் கவிதை. காலத்தின் கோர முகத்தைப் பதிந்து அம்பலப் படுத்தும் முதல் கலகக் குரலும் கவிதையினுடையது தான். கவிதையின் சகல பரிமாணங்களையும் ரசிக்கும், ஆராதிக்கும் வாசகனுக்கு நன்றாகத் தெரியும் இவ்வாழ்வின் எல்லாக் கணங்களுக்கும் ஒரு கவிதை இருக்கிறது என்று. ஒரு விதூஷகனைப் போல வித்தை காட்டி சிரிக்க வைக்கும் கவிதை தான் சமயங்களில் குத்தீட்டியைத் தூக்கிக் கொண்டு சமருக்கு நிற்கும். குழந்தையின் அழகில் மயங்கி நிற்கும் அதன் குறுகிய உடல் அதிகாரத்தின் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

 

கவிதையின் அழகியலை ஒரு முறை சிலாகித்துப் பேசினால், அது தரும் அதிர்ச்சி வைத்தியத்தையும் திடுக்கிட்டு ரசித்துக் கொண்டாட வேண்டும். இரண்டும் கவிதையின் முகங்கள் தாம். அனைத்துமே கவிதையின் குரல்கள் தாம். கவிஞர் சுகிர்தராணியின் கவிதைகள் இரண்டாம் வகை. இடமற்று நிற்கும் / கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க / பேருந்துக்கு வெளியே / பார்ப்பதாய் / பாசாங்கு செய்யும் நீ / என்னிடம் / எதை எதிர்பார்க்கிறாய் / காதலையா ? எனும் சுகிர்தராணியின் கவிதையை இதுவரை எத்துணை மேடைகளில், எத்துணை வகுப்புகளில் எத்துணை பேரிடம் பகிர்ந்திருப்பேன் எனத் தெரியவில்லை. இன்னும் இன்னும் வாசிக்கும் கணமெல்லாம் அதிர்கிறேன். ஒவ்வொரு பேருந்துப்பயணத்திலும் இந்தக் கவிதை எப்படியோ பயணச்சீட்டின்றி என்னுடன் வலிந்து வந்து ஏறிக்கொள்கிறது.. அவரது சமீபத்திய தொகுப்பிலிருந்து அதே அதிர்ச்சியைத் தரும் கவிதை...

 

 

எனதன்பு சகோதரி மணிஷா...
தீண்டத் தகாத சேரி
தீண்டத் தகாத தெரு
தீண்டத் தகாத குடிசை
தீண்டத் தகாத குளம்
தீண்டத் தகாத கிணறு
தீண்டத் தகாத குவளை
தீண்டத் தகாத பாதை
தீண்டத் தகாத சுடுகாடு
தீண்டத் தகாத சிலை
தீண்டத் தகாத நிலம்
தீண்டத் தகாத காற்று
தீண்டத் தகாத வானம்
தீண்டத் தகாத நெருப்பு

தீண்டத் தகாத கண்ணீர்
தீண்டத் தகாத தொழில்
தீண்டத் தகாத சுவர்
தீண்டத் தகாத மக்கள்
தீண்டத் தகாத உணவு
தீண்டத் தகாத ரத்தம்
தீண்டத் தகாத காதல்
தீண்டத் தகாத சாதி


தீண்டத்தகு நம் உடல்

 

-         சுகிர்தராணி

நீர் வளர் ஆம்பல்தொகுப்பு , காலச்சுவடு வெளியீடு- 04652 278525

 

கவிதைக்கென சில கட்டமைப்பு விதிகள் இருக்கின்றன, சொற்கள் ஒரு தொடரெனெ, பட்டியலென வருவது நவீன கவிதை விரும்பாத ஒன்று. அது ஒரு அயர்ச்சியைத் தரக் கூடிய செயல். ஆனாலும், பொருளின் ஆழம் கருதி, சொல் திரும்பத் திரும்ப இந்தக் கவிதையில் வந்து நிற்பது அவசியமாகிறது. திரும்பத் திரும்ப வரும் சொற்கள் திரும்பத் திரும்ப நம்மை குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்துகின்றன. அந்தக் கடைசிவரி தரும் அதிர்ச்சி நம் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு அக்னிப் பார்வையால் எரிக்கிறது. இது மணிஷாவின் மரணத் தருணத்தில் எழுந்த உணர்வலையின் ஓலமென்றாலும், இது மணிஷாவுக்கான கவிதை மட்டுமா என்ன ? அந்தப் பெயரை இக்கவிதையிலிருந்து நீக்கிவிட்டால் வன்புணர்வில் துன்புறுத்தப்படுகிற, கொல்லப்பட்ட எல்லா சகோதரிகளுக்குமான கவிதையாகிறது. மேலும் தீண்டாமையின் கீழ்மைச் செயல்கள் எல்லாவற்றுக்கும் எதிரான கவிதையாகவும் குரலுயர்த்திப் பாடுகிறது.

 

கவிதையின் குரல் மிகச் சிறியது தான் ஆனால் அதனளவில் அது வலியது. எதிர்க்கத் துணிந்துவிட்டால் மலை கூட மலையல்ல. எந்த நம்பிக்கையில், எந்த அறத்தில், எந்த தைரியத்தில் கவிதையின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அது காலத்தின் குரலாக எப்படி மாறுகிறது? கவிதை ஒரு தனிக்குரலன்று அது கூட்டு மனசாட்சியின் ஒருமித்த குரல். ஒற்றைக் குரலிலிருந்து கிளம்பி இந்த சமூகத்தின் சங்கமித்த குரலாக அது மாறுகிறது. அந்தக் குரலை சிலிர்க்கச் சிலிக்க காட்சிப்படுத்தியிருக்கிறது கவிஞர் வெய்யிலின் கவிதை...

 

              கவிதை நம்புகிறது

 

பெரும் பொய்களின் சூறாவளிக்கு நடுவே

ஓர் எளிய உண்மையை

அணைந்திடாமல் எப்படி ஏந்திச் செல்வது?

குழம்பி நிற்கும் ஒரு சிவப்பு எறும்பைப்பார்த்தேன்

அது நசுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், நகர்ந்தது.

தன் வேதியீரக் கோடுகளைச் சிந்தியபடி

மெல்லமெல்ல ஊர்ந்தது.

பின்னொரு எறும்பு

அக்கோட்டை அடையாளம் கண்டு கொதித்தது-அது

பார்ப்பதற்கு உங்களைப் போலவோ

என்னைப் போலவோ இருந்தது

யாவும் பொது!’

என அது முஷ்டியை உயர்த்தியபோது

உலகம் சிரித்தது.

ஆனாலும்

கவிதை நம்புகிறது.

சிறிய எறும்பின் முஷ்டியே என்றபோதும்

அது

அறத்தின் மாபெரும் செங்கோல்.

 

- வெய்யில்

 மகிழ்ச்சியான பன்றிக்குட்டி தொகுப்பிலிருந்து , கொம்பு வெளியீடு 9952326742

 

கவிதையின் குரல் ஓர் எறும்பளவு தானெனினும் அதனளவில் அது அர்த்தமுள்ளது. விளைவுகளை ஏற்படுத்த வல்லது. யானையின் காதில் சென்றுவிடும் எறும்பின் வலிமை என்பது பழைய உவமை என்றாலும் இங்கு அது பொருந்திப்போகிறது. இந்தக் கவிதையில் எறும்பு என்பது எதன் குறியீடு, அதுவும் சிவப்பெறும்பு என்பது எதன் குறியீடு என்பதும் இந்தக் கவிதை வாசகனின் மனதில் விரிய வேண்டிய ஒன்று. யாவும் பொது என ஒலிப்பது எறும்பின் குரலன்று. கவிஞனின் குரல். காலத்தின் குரல். கவிதையின் கடைசி வரி கவிதையை உலகுக்கு உயர்த்திக்காட்டும் வரி. சங்க காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் எல்லா வரிகளுக்கும் தலைப்பாகவும், உரையாகவும், அடிநாதமாகவும் இருக்கக் கூடிய வரி இது. கவிதை அறத்தின் மாபெரும் செங்கோல்.

 

ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

ஒரு தலைவர் எழுத்தாளர் / வாசகராக இருந்தால்…

 

ஒரு தலைவர் எழுத்தாளர் / வாசகராக இருந்தால்

 



 ஓர் எழுத்தாளர் , புத்தகங்களை நேசிக்கும் வாசகர், தலைமையிடத்தில் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.. பள்ளிகளில், கல்லூரிகளில் பேசுவதற்குச் செல்லும் போதெல்லாம் ஓர் ஆசிரியர் வாசிப்பாளராக இருந்தால் அந்தக் கல்விக்கூடமும் மாணவர்களும் எவ்வளவு மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கிறேன் அது குறித்துப் பேசியும் இருக்கிறேன். மருத்துவர்கள் வாசகர்களாக இருப்பதால் நிகழும் அதிசயங்களையும் பார்க்கிறேன்.. இப்படி, புத்தக வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாது அது புதிய சிந்தனைகளின் வாசலாக, புதிய புதிய கருத்துருவாக்கங்களின் வெளியாக மாறுகிறது என்பது தான் கண்கூடாகக் கண்ட உண்மை. நாம் கண்ட மகத்தான தலைவர்கள் எல்லோரும் சர்வ நிச்சயமாக புத்தக வாசிப்பாளராகத் தான் இருந்திருக்கிறார்கள். உலக அளவில் எடுத்துக்கொண்டாலும் இது தான் உண்மை.

 

கோவையில் ஆறாவது ஆண்டாக புத்தகக் கண்காட்சி சிறப்புற நடைபெற்றிருக்கிறது. அன்றாடம் சிறப்புரைகள், எல்லா அரங்குகளிலும் நூல் வெளியீடுகள், உரைகள், பட்டிமண்டபம், கலை நிகழ்ச்சிகள் என எல்லா புத்தகக் கண்காட்சிகளையும் போல ஆரவாரமான பத்து நாட்கள். எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான திருவிழா.

 

கோவையில் இம்முறை ஒரு சிறப்பு. ஒரு நாள் முழுதும் தொழிலாளர்களின் கலை நிகழ்வுகள், விவாத அரங்கு, நாடகம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான போட்டிகள், பரிசளிப்புகள், நிறுவனங்களில் சிறந்த வாசகருக்கான விருதுகள் என தொழிலாளர்களுக்கான திருவிழாவாகவும் இந்தப் புத்தகத் திருவிழா மாறியிருக்கிறது.. இதற்கெல்லாம் காரணமாக ஒரு மூளையின் சிந்தனை மிளிர்கிறது. அது சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களது மூளை.

 

நான் கோவையில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில் மனிதவளத்துறையின் இயக்குநராக இருப்பவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன். நாடறிந்த பேச்சாளர், தன்னம்பிக்கை எழுத்தாளர். தற்போது கோவை புத்தகக் கண்காட்சியின் ஆலோசனைக் குழுவில் இருப்பவர். அவரது ஆலோசனையின்படியும் வழிகாட்டுதலின் படியும் தொழிலாளர்களுக்கான இத்துணை சிறப்பான நிகழ்வுகளும் ஒரு நாள் முழுவதும் நடந்தது. வாசிப்பின் மகத்துவத்தை உணர்ந்த ஓர் ஆளுமையால் தான் இப்படியான தொலைநோக்கு சிந்தனையைக் கொண்டுவர முடியும்.

 

இதுமட்டுமல்லாது, எங்கள் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் இருந்தும் பல தொழிலாளர்களை அரைநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் புத்தகக் கண்காட்சிக்கு நிறுவனத்தின் பேருந்தில் அழைத்து வந்து புத்தகங்களைப் புரட்டிப்பார்த்து வாங்க, வாசிக்க ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மேலும் இந்த யோசனைகளின் சிகரமாக, விருப்பபடும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூபாய் 500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். அவர்கள் அதே தொகைக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் சம்பளத்தில் ரூபாய் 250 மட்டுமே பிடித்தம் செய்யப்படும். மீதி 250 ரூபாயை நிறுவனமே செலுத்தும். இந்தத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் புத்தகங்களை வாங்கினர்; அதில் பலர் முதன்முறையாக புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள். முதன்முறையாக புத்தகத்தை வாங்குபவர்கள். வாசிப்பைப் பரவலாக்க, இதைவிடவும் வேறு என்ன திட்டத்தைச் செய்துவிட முடியும்? இவர் இவ்வளவும் செய்வதற்கும் இன்னும் இன்னும் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் எங்கள் நிறுவனத்தின் தலைவர் மேன்மைமிகு திரு.ராமசாமி ஐயா எப்போதும் மனமுவந்து வாழ்த்தி வரவேற்பார். மேலும் சமுதாயத்துக்கும், இயற்கைக்கும் எப்போதும் பயன்படும்படி நம் ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளும் கூட.

 

இது ஒரு வாசகனாக, புத்தகங்களின் காதலனாக, எழுத்தாளனாக நான் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு நன்றி செலுத்தும் பதிவு..

 

அன்பின் நன்றி.. வாசிப்பின் வாசல்களைத் தொழிலாளர்களுக்கும் திறந்துவிட்டமைக்கு