செவ்வாய், 14 நவம்பர், 2017

குழந்தைகள் தினம்

Inline image 1


ஒரு கதை கேட்கிறது குழந்தை
என்னிடம் ஓராயிரம் கதைகள் இருப்பினும்
குழந்தைக்கான ஒரு கதையை
என் மனப் பாத்திரத்தின் அடியாழத்தில் துழாவி
எடுக்க வேண்டியே இருக்கிறது
அந்தக் கதை நான் என்
பால்யத்தில் சேமித்தது
அந்தக் கதை என்
பால்யத்தைப் பாதுகாத்தது
அந்தக் கதையைக் குழந்தைக்குச் சொல்ல
நானும் ஒரு குழந்தையாகிறேன்
மேலும்
நான் என் அப்பத்தாவுமாகிறேன்

---

வாசலில் விளையாடிக் கொண்டிருக்கிற
குழந்தை
வாசலுக்கு அழைத்து வந்திருக்கிறது
ஒரு வனத்தை
ஒரு காய்கறித் தோட்டத்தை
ஒரு கனவு இல்லத்தை

மேலும் 
ஒரு அழகான வாழ்வையும்
அதனினும் அழகான மனிதர்களையும்
இந்தக் குடிசை
வாசலுக்கு..

---

குழந்தைகள் தினத்தின் பொருட்டேனும்
புத்தகங்கள்
எழுதுகோல்கள்
சங்கிலிகள்
ஆயுதங்கள்
வன்முறைகள்
அத்துணை தளைகளையும்
களைந்து விட்டு
மீண்டும் அந்தச் சிறகுகளைப் 
பொருத்திப் பார்க்கலாம்
வானம் அதிர அதிர

----

ஒரே ஒரு முத்தத்தை
இடமாற்றம் செய்வதன் மூலம்
இல்லாமல் செய்கிறார்கள் குழந்தைகள்
வெற்று மனது ஓயாமல் எழுப்பிக் கொண்டிருக்கும்
வலியின் சத்தத்தை

----

உதிர்ந்து சுழன்று விழும்
ஒரு இலையை
ஓடோடிப் போய்
ஏந்திக் கொள்கிறது குழந்தை
பச்சையம் மங்கிக் கொண்டிருக்கும்
அவ்விலையில் 
மீண்டும் துளிர்க்கத்துவங்கும் ஒரு வனம்

--
அதோ உங்கள் முற்றத்தில்
கைகளை அகல நீட்டி
மழைத்துளிகளைத் தெளித்து
விளையாடியபடியிருக்கும் உங்கள்
குழந்தையின் பிஞ்சுப் பாதங்களில்
கிடத்தியபடித் திரும்புகிறேன் 
    உங்களுக்கென
கொண்டு வந்த வன்மத்தை