ஞாயிறு, 17 ஜூன், 2018

குரலற்றவனின் எதிர்க்குரல்

தகவு மின்னிதழில் நான் எழுதிய நூல் விமர்சனம் வெளியாகியுள்ளது இங்கு பகிர்கிறேன் .

தகவு மின்னிதழ் வாசிக்க : http://padaippu.com/ta/thagavu-2

குரலற்றவனின் எதிர்க்குரல் 

- கவிஞர் சோலை மாயவனின் விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி கவிதைத் தொகுப்பை முன்வைத்து


 ஒரு கவிதையை நாம் முழுமையாக உணர்ந்து கொள்வது என்பது ஒரு கவிஞனை அவனது உணர்வுகளோடு முழுமையாக உள்வாங்கிக் கொள்வது என்பதையும் சேர்த்தது தான். ஒரு கவிதையை நாம் புரிந்து கொள்வது என்பது வாசக மனநிலையை ஒத்தது. வாசிப்பின் சூழல்,காலம்,மனோநிலை என அத்தனையையும் உள்ளடக்கிய ஒன்றுதான் ஒரு நவீன கவிதையை நாம் புரிந்துகொள்ளுதல் என்பது. ஒரு கவிதை, படைப்பாளனால் என்ன தொனியில் எழுதப்பட்டதோ அதே தொனியில் வாசகன் அதை உள்வாங்கிக் கொள்ளும் இடம் படைப்பாளனின் வெற்றி உறுதி செய்யப்படும் இடம். போலவே, படைப்பாளன் சொல்லாத அல்லது பூடகமாக வைத்திருக்கும் பொருள் அனைத்தையும் சேர்த்து வாசகன் உள்வாங்கிக் கொள்ளும் இடம் என்பது அந்தப் படைப்பின் வெற்றியை உறுதி செய்யும் இடம். ஒரு கவிஞன் தான் சொல்ல நினைத்ததை வாசகனுக்குக் கடத்துவதும், சொல்லாமல் விட்டு வைத்திருக்கும் செய்தியையும் வாசகனுக்குக் கடத்துவதும் கவிதையில் சாத்தியம் தான்.

ஒரு கவிதைத் தொகுப்பு அதனளவில் மனநிறைவைத் தர, குறைந்தபட்சம் ஐந்து கவிதைகளாவது நினைவில் நிற்கும் கவிதைகளாக இருந்தால் போதுமானது. ஒரே ஒரு கவிதையாவது முத்திரைக் கவிதையாக தொகுப்பின் அடர்த்தியைச் சொல்லும்படி அமைவது இன்னும் சிறப்பு.

கவிஞர் சோலை மாயவனின் விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி கவிதைத் தொகுப்பின் கவிதைகள் நவீன மொழிதலில் சொல்லப்பட்ட நூற்றாண்டு கால பழைய வலிகள். அவற்றை இந்த நூற்றாண்டிலும், அதிலும் கவிதையில் பேச வேண்டி வைத்திருக்கிற நம் காலத்தைத் தான் சபிக்க வேண்டியிருக்கிறது.


தேயிலை நிழலில்
உறங்குகிறது
வனமிழந்த சிறுத்தை

இந்த ஒரு கவிதை தரும் அழுத்தமும் இந்த ஒரு காட்சி விரியச் செய்கிற பெரும் வரலாற்றுப் பிழையின் கொடூரச் சித்திரமும் தான் ஒரு கவிதையில் ஆவணப்படுத்தப் பட வேண்டிய காலச் சித்திரம் என உணரச்செய்கிறது. வனத்தை அழித்து தேயிலைச் செடிகளை நட்டு பன்னாட்டு வணிகத்தைப் பெருக்கச் செய்ய நம் வயிறு கிழித்து இடம் கொடுத்த பின் வனத்தின் உயிர்கள் போக்கிடமின்றி சமநிலத்துக்கு வருவதும் அவற்றை நாம் விரட்டுவதுமான விலங்குகளுக்கும் மனிதனுக்குமான போரை வேதனையுடன் நினைவு கூறச் செய்கிறது இந்தக் கவிதை.
தேயிலை குத்துச் செடிக்கடியில் படுத்துக்கிடக்கும் சிறுத்தை ஒரு குறியீடு தான். அது ஒரு மிகப்பெரிய வன உயிர்க் கூட்டத்தை, செழித்த பெருங்காட்டை தனது உருவத்துக்குள் அது மறைத்து வைத்திருக்கிறது. தேநீருக்கு நாம் விலை போன கதையையும் நமது குறிஞ்சிக் காடுகளை அழித்து தேயிலைச் செடிகள் வேரூன்றிய கதையையும் நாம் அறிந்திருந்தால் இந்தக் கவிதை நம் நெஞ்சத்தைத் தைக்கும்.

எம் நூற்றாண்டின்
தாகம் தீர்க்க மறுத்த
ஆதிக்க சாதியின்
சாபத்தின் அடையாளமாக

எம் குழந்தையின்
பீ துடைத்த துணியை
தூக்கி வீசும்
குப்பைத் தொட்டியாக இருக்கிறது

ஊரின் நடுவே
பொதுக்கிணறு

பொதுக்கிணறு தூர்ந்து போனதன் காரணம் கோடையும், நிலத்தடி நீர் வற்றியதும் என நாம் நினைத்துக்கொண்டிருக்க, அதன் பின்னாலும் இப்படி ஒரு சாபம் இருக்கிறது எனச் சொல்லும் இந்தக் கவிதை நம் காலத்தின் சாட்சிதானே ? குடிநீர் மறுத்த ஆதிக்க சாதிக்கான சாபத்தில் தான் நீரின்றி வறண்டு தூர்ந்து போயிருக்கக் கூடும் பொதுக்கிணறு என்ற உண்மை நம்மை இன்னும் பல காலத்துக்கு முகத்திலறைந்து கொண்டே இருக்கட்டும்.

காலகள் இடறி
தலைகுப்புற விழுந்து கிடந்தேன்
கூடவே
சிதறியது கழனி வேலைக்குப் போன
அம்மாவுக்குக் கொண்டு சென்ற
கேழ்வரகுக் கூழ்
மீதமான கூழில் ஆற்று நீரை நிரப்பி
அம்மாவின் பசி போக்கினேன்
அம்மா இருக்கிறாள்
நான் இருக்கிறேன்
காணாமல் போயிருந்தது
பசி தீர்த்த
ஆறு


இந்தக் கவிதை நம் மனக்கண் முன்னால் கொண்டு வரும் சித்திரம் ஒரு விவசாய வாழ்வு அதை நீங்கி நாம் இப்போது நகரத்துக்கு நகர்ந்துவிட்டோம். மேலும் இரண்டாவது தலைமுறைக்கே ஆறு என்ற ஒன்று இல்லை எனக் கவிஞர் பதிவு செய்கிறார். என்றால், அடுத்த தலைமுறைக்கு நீராவது இருக்குமா என்ற அச்சத்தைக் கிளப்புகிறது இந்தக் கவிதை. தமது படைப்புகளில், தமது நிலம், தமது வாழ்க்கை முறை, தமது மண் சார்ந்த காட்சிகளைப் பதிவு செய்யும் எழுத்தாளர்கள் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் தாம் நமது வரலாற்றை இலக்கியங்களின் வழி ஆவணப்படுத்துகிறார்கள். அப்படியான கவிதைகளை கவிஞர் நிறையத் தந்திருக்கிறார் இந்தத் தொகுப்பின் வழி.

நீர் நிலைகள் வற்றிவிட்டதன் கொடுமைகள், அதிகாரத்தின் ஒடுக்குமுறைகள், தீண்டாமையின் கொடுஞ்செயல்கள், என சமூகத்துக்கான புறக் கவிதைகளோடு சில அகக் கவிதைகளையும் சேர்த்து தொகுப்பாக்கியிருக்கிறார்.

தாய்மையடைந்திருக்கும் ஒரு பூனையின் வருகைக்காக சன்னல்களைத் திறந்து வைத்துக் காத்திருக்கும், தட்டு நிறைய பாலுடன் காத்திருக்கும் மனிதம் தான் இந்தக் கவிதைகளின் அடிநாதம். மனிதமும், சாதீய ஒதுக்குதலுக்கெதிரான உரத்த குரலும், இயற்கை, உயிர்களின் மீதான வன்முறைகளைச் சாடும் குரலாகவும் இந்தக் கவிதைகள் ஓங்கி ஒலிக்கின்றன.

இரண்டாவது தொகுப்பிலேயே இவ்வளவு அடர்த்தியான கவிதைகளோடும் இவ்வளவு செங்கோபத்துடனும் வந்திருக்கும் கவிஞர் சோலைமாயவனை வாழ்த்தி வரவேற்போம்.  நல்ல கவிதைகள் காலத்தின் அத்தியாவசியாமாக இருக்கின்றன. நல்ல படைப்பாளர்கள் காலத்தின் பெரும் தேவையாயிருக்கின்றனர்.

ஆசிரியர் : கவிஞர் சோலைமாயவன் -  9597014283
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
தொடர்புக்கு : 9095507547 , 98422 75662

தகவு மின்னிதழ்


முகநூல் குழுக்கள் என்றாலே ஒரு ஒவ்வாமை இருந்திருக்கிறது.  அவ்வளவு ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. எந்தக் குழுக்களிலும் எட்டிப்பார்ப்பதும் இல்லை. சமீப காலமாக, நண்பர்களின் வாயிலாகக் கேள்விப்பட்டு படைப்பு குழுமத்தின் படைப்புகளை, செயல்பாடுகளை கவனித்தே வந்தேன். முற்றிலும் மாறுபட்ட , மேம்பட்ட ஒரு குழு. அதை ஒரு இயக்கம் என்றும் சொல்லலாம். கவிதைகளை குழுவில் வெளியிடுவது சிறந்த கவிதைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து கெளரவிப்பது, அவற்றை நூலாக்கி வெளியிடுவது, விருதுகள் வழங்குவது என மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது படைப்பு குழுமம்.

படைப்பு குழுமத்தின் அடுத்த பாய்ச்சலாக தகவு என்ற மின்னிதழை வெளியிட்டிருக்கிறார்கள். முதல் இதழை வாசித்தபோதே எழுதிவிட நினைத்திருந்தேன். இயலவில்லை. இப்போது இரண்டாவது இதழ் வெளியாகியுள்ளது.

ஒரு சிற்றிதழை நடத்துவது என்பது ஒரு சர்க்கஸ் சாகசக்காரனின் கம்பி விளையாட்டு போன்றது. வெறும் கைகளை நம்பி அந்தரத்தில் பல்டி அடிப்பது போன்றது. அத்தனை பிரயத்தனங்களையும் செய்து இலக்கியத்தை வளர்த்ததில் சிற்றிதழ்களின் பங்கு மிக முக்கியமானது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் இப்போது நிறைய மின்னிதழ்கள், இணைய இதழ்களும் சிறப்பாக சிற்றிதழின் பணிகளைச் செய்தவண்ணம் இருக்கின்றன.

படைப்பு மின்னிதழ், ஒரு அச்சு இதழுக்கான அத்தனை வடிவமைப்பு நேர்த்திகளோடும், கனமான உள்ளடக்கங்களோடும் மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. இதழைப் பார்த்தவுடன் கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும் போல இருக்கிறது. நானும் கொலுசு மின்னிதழின் ஆசிரியராக இருக்கிறேன் என்பதால், இந்த இதழை உருவாக்க எவ்வளவு உடல் உழைப்பு, நேரம், மன உழைப்பு, பொருளாதாரம் தேவைப்பட்டிருக்கும் என்பதை என்னால் வியந்து யூகிக்க முடிகிறது.

ஜின்னா அஸ்மி உள்ளிட்ட படைப்பு மின்னிதழ் உருவாக்கத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். இந்த இதழ் அச்சு இதழாகவும் வெளிவரவேண்டும் மேலும் தொய்வின்றி மிகச் சிறப்பாக பல காலம் வெளி வரவேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்

இரண்டாவது இதழ், கவிஞர் சல்மாவுடன் நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மாணவர் பக்கம், சங்க இலக்கியம் என பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது. கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கலாம். படைப்புகள் அனுப்புக ...

http://padaippu.com/ta/thagavu-2



தந்தையர் தினம்

மிகச் சன்னமாக வானம் மழைத் தூறல்களால் பூமியை ஆயிரமாயிரம்  கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிற இந்த நள்ளிரவிலும் நான் இதை எழுதியிருக்க மாட்டேன் தான்.

இன்று தந்தையர் தினம் என்பதால் மற்ற நாட்களை விடவும் அப்பாவின் நினைவுகள் அதிகதிமாக மேலெழுந்த படியே இருந்தது. அப்பாவைப் பற்றி எதையாவது எழுதத் துவங்கினால் அது இப்போது இருக்கிற மனநிலையை இன்னும் இறுக்கமாக்கி விடும் என்பதால் எதுவும் செய்யாமல் இருந்தேன். கோவையிலிருந்து மகிழுந்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் தமிழ்க் கலைஞர்கள் சங்கம் தந்த இலக்கிய நெறிச் செம்மல் விருது பெற்றுக்கொண்டு. உடன் விருது பெற்ற கவிஞர் அம்சப்ரியா அவர்களையும் உடன் வந்த மாமாவையும் வழியில் இறக்கிவிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்புகையில் நள்ளிரவு. வீட்டுக்குள் நுழையும் போது மகிழுந்தில் அந்தப் பாடல் ஒலித்திருக்க வேண்டாம். வாசலுக்கு வெளியில் வாகனத்தை நிறுத்திவிட்டு மழையிசையுடன் சேர்ந்து முழுதுமாக அந்தப்பாடலைக் கேட்டுவிட்டு தான் உள்ளே நுழைகிறேன்.

“ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே "

நா.முத்துக்குமார் என்ற காலம் அவசரமாக விழுங்கிவிட்ட கவிஞனின் நெகிழ்த்தும் வரிகள் என்னை இந்த இரவில் மேலும் மேலும் உருகச் செய்துவிட்டது.

சென்ற முறை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் விருது விழாவுக்குப் போய்விட்டு வந்ததை மகள் பாரதி இன்று காலையில் தான் நினைவுகூர்ந்தாள். அப்பா என்னுடைய ஒரு பேனாவை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தான் விருது விழாவுக்கு வந்தாராம். பேத்தியிடம் இது அப்பாவுடைய பேனா, நான் முன்பெல்லாம் அப்பா பிறந்தநாளுக்கு பேனா பரிசளிப்பேன் என்றெல்லாம் நிறைய சொல்லியிருக்கிறார். அவள் அதைச் சொன்ன போது நினைவில் வந்தது. சிறு வயதில் எனது பிறந்தநாளுக்கு உடை தவிர அப்பா தரும் அன்புப் பரிசு பேனா தான். எனக்கு பேனா பிடிக்கும் என்பது மட்டுமல்லாது நான் எழுத வேண்டும் , படிக்க வேண்டும் என்பது அப்பாவின் கனவாகவே இருந்தது. பள்ளிக்கே செல்லாத அப்பாவுக்கு என் கல்வியின் மீது பெரும் காதல் இருந்தது. இந்த நினைவுகளின் வழியே நான் முடிவு செய்திருக்கிறேன் இதோ வருகிற ஜூன் 21 மகள் பாரதியின் பிறந்தநாளுக்கு நான் ஒரு பேனாவைப் பரிசளிப்பேன் அது என் அப்பா எனக்குக் கொடுத்ததைப் போல என் கனவுகளை, அன்பை, அப்படியே தூக்கிக் கொடுப்பதாக. படி , எழுது பாரதி என்பதாக...

இன்னொன்றும் தோன்றியது... இது இன்று விருது விழாவில் நான் பேச நினைத்தது.. வாய்ப்பில்லாததால் இங்கு எழுதுகிறேன்.. இந்தத் தந்தையர் தினத்தில் அப்பா உடன் இல்லை, ஆனால் அப்பாவைப் போலவே என் மீது அன்பும் கண்டிப்பும் வழிகாட்டுதலுமாக என்னோடு  மாமா ச.தி.செந்தில்குமார் இருக்கிறார்.  அப்பாவைப் போலவே எனது எல்லா செயல்பாடுகளிலும் உடன் இருக்கிறார், உடன் வருகிறார், ஆற்றுப்படுத்துகிறார், இதோ இன்றும் விருது வாங்க காலையில் என்னுடன் வந்து நள்ளிரவில் தான் வீடு திரும்புகிறார், அப்பாவைப் போலவே பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு அப்படி ஓட்டு , இப்படி ஓட்டு என்று நல்வழி காட்டிக்கொண்டிருக்கிறார்....  அப்பாக்கள் தினத்தன்று அப்பா இல்லாத குறைக்கு முழுநாளும் என்னுடனே இருந்திருக்கிறார் ... அவருக்கானதும் தான் இந்த நாள்.

அப்படிப் பார்த்தால் , நாங்கள் நண்பர்கள் தினத்தையும் , சகோதர தினத்தையும் ஏன் காதலர் தினத்தையும் சேர்ந்து தான் கொண்டாட வேண்டும். கொண்டாடுவோம்.

அப்பாக்கள் அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவதில்லை தங்கள் பிள்ளைகளை...

புதன், 13 ஜூன், 2018

த.மு.எ.க.ச கோவை மாவட்ட மாநாடு


கடந்த ஞாயிறு கோவையில் த.மு.எ.க.ச மாவட்ட மாநாடு நடைபெற்றது.
அதில், கோவை  படைப்பாளர்களுக்கும், கோவை மாவட்டத்தில் விருது பெற்ற படைப்பாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

எனது ஆதி முகத்தின் காலப்பிரதி நூலுக்கு மூன்று விருதுகள் பெற்றமைக்காக என்னையும் சிறப்பு செய்தார்கள்.




நிகழ்வு காலையில், தூத்துக்குடி படுகொலைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்துடனும் , கையெழுத்து இயக்கத்துடனும் துவங்கியது. பின்பு நிமிர்வு குழுவினரின் அதிரும்  பறை இசையுடன் ஆரம்பமானது.



பொள்ளாச்சி இலக்கிய வட்டப் படைப்பாளர்கள் க.அம்சப்ரியா, சோலைமாயவன், பொள்ளாச்சி அபி, ச.ப்ரியா, வே.கோகிலா, கோவை சசிக்குமார், கீதாப்ரகாஷ் உள்ளிட்ட கோவையின் பல்வேறு எழுத்து ஆளுமைகளுக்கும் சிறப்பு செய்யப்பட்டது








கவிஞர் முத்துநிலவன் அவர்களின் சிறப்புரை , நிகழ்வின் முத்தாய்ப்பு உரை.

பின்பும் கலை நிகழ்வுகளும் பல்வேறு நிகழ்வுகளும் அந்த நாளை நிறைத்தன.
அறிமுகப் படைப்பாளர் முதற்கொண்டு மூத்த படைப்பாளர்கள் வரையிலும் ஒருவர் விடாது அனைவரையும் த.மு.எ.க.ச சிறப்பு செய்தது. தொடர் செயல்பாடுகளின் மூலம் த.மு.எ.க.ச தனித்த இடத்தில் எப்போதும் உயர்ந்து நிற்கிறது.