திங்கள், 21 ஆகஸ்ட், 2017

தழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா

பல்லடம் கண்ணம்மாள் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சுப்ரமணியம் அய்யா அவர்கள் தீவிர வாசகர். பல்வேறு எழுத்து ஆளுமைகளுடனும் நட்பைப் பேணுபவர். ஆங்கில வழிப் பள்ளி நடத்தினாலும் தமது மாணவர்களுக்கு தமிழ்ப்பற்றை தொடர்ந்து ஊட்டி வருபவர். அவரது தலைமையில், அவரது பேத்தியும் பள்ளியின் நிர்வாக அறங்காவலருமான செல்வி அபராஜிதா பள்ளியைத் திறம்பட நடத்தி வருகிறார்கள்.
தோழி கவிஞர் செமிழியின் மூலமாக அவர்களது அறிமுகம் கிடைத்தது. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் குழந்தைகள் கலைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சுப்ரமணியம் அய்யா அவர்கள் தொகுத்த பாலும் தெளிதேனும் எனும் நீதி நூல் தொகுப்பு அன்பளிப்பாக அளித்தார்கள்.

பள்ளியில் தமிழ் மன்றம் துவங்க வேண்டும் அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது அவர்களது விருப்பம். கடந்த 19.08.2017 அன்று தழல் பாரதி ஜெயகாந்தன் இலக்கிய மன்றம் என்ற பெயரில் பள்ளியில் இலக்கிய மன்றம் துவங்கப்பட்டது.

பள்ளியின் இலக்கிய மன்றத்துக்கு என்னைத் தலைவராகவும் கவிஞர் செமிழியை செயலாளராகவும் நியமித்திருக்கிறார்கள்.

அன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களும் , விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் அய்யா அவர்களும் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.



நிகழ்வுக்காக , பள்ளிக்குள் நுழையும் போதே பிரம்மாண்ட ஏற்பாட்டோடு வரவேற்பு காத்திருந்தது. மாணவர்கள் அணிவகுத்து நின்று வரவேற்றனர். ஒவ்வொருவரும் எங்களைப் பார்த்து வணக்கம் வாழ்க வளமுடன் என்று சொல்லி வரவேற்றது புதுமையாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு துவங்க, சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினர், சிறப்பு விருந்தினர்க்குச்  பொன்னாடை அணிந்து மரியாதை செய்யப்பட்டது.






நிகழ்வின் சிறப்புரையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் பாரதியையும் ஜெயகாந்தனையும் மிகச்சிறப்பாக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பாரதி ஏன் இன்றைக்குமான மகாகவி என்பதற்கான சான்றுகளை அவரது நெருப்பு வரிகளை முன்வைத்து உரை நிகழ்த்தினார்.

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்கமலைகள் உடைந்து -வெள்ளம் 
பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட
தக்கத் ததுங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட

வெட்டியடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் -கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

பாரதியின் இந்த வரிகளை என்ன குரலில் எவ்வாறு வாசிக்க வேண்டும் என அவர் சொல்லிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது. அவ்வாறு வாசிக்கச் சொல்லித்தான் தனது தமிழ் ஆசிரியர் சொல்லித் தந்ததாக சொன்னார்.

ஜெயகாந்தன் ஏன் எழுத்தாளர்களில் ஒரு சிங்கத்தைப் போல மதிக்கப்பட்டார் என்பதற்கான அவரது வாழ்வில் நடந்த சில சம்பவங்களின் மூலமாக சிறப்பாக எடுத்துரைத்தார். பாரதியையும் ஜெயகாந்தனையும் தெரிந்திருந்தாலும் தெரியாமல் இருந்திருந்தாலும் இந்த உரை நிச்சயம் ஒரு திறப்பு. இதன் வாயிலாக நல்ல மாணவர்கள் பாரதியையும் ஜெயகாந்தனையும் தேடி வாசிப்பார்கள்.

வேலாயுதம் அய்யா அவர்கள் தமது சுருக்கமான வாழ்த்துரையில் மாணவர்களின் வாசிப்பு பற்றியும் புத்தகங்கள் குறித்தும் உரையாற்றினார். பள்ளியின் நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இருக்கின்றன அதில் ஒரு ஆண்டில் எந்த மாணவர் நிறைய புத்தகங்கள் எடுத்து வாசிக்கின்றாரோ அவருக்கான ஒரு சிறப்புப் பரிசை வழங்குவதாக அறிவித்தார்.


எனது உரையில், தழல் என்ற அமைப்பின் அவசியத்தையும், அதன் நோக்கத்தையும் எடுத்துக்கூறியதோடு, வாசிப்பின் அவசியத்தையும் அது தரும் இன்பத்தையும் சொன்னேன்.


கவிஞர் செமிழி, சூழலியல் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக காஸ்டிக் சோடா தயாரிப்பு நிறுவனத்தின் தீமையை, அது தரும் பாதிப்புகளை எடுத்துரைத்து மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வும் அக்கறையும் இருத்தல் வேண்டும் என வலியுறுத்தினார்.



மாணவிகளின் பரதம், தமிழின் வரலாற்றையும் பெருமையையும் எடுத்துரைத்த மாணவி ரக்‌ஷனாவின் அழகிய தமிழ் உரை, மாணவர்களின் யோகா கலை நிகழ்வு என ஒரு பரிபூர்ண நிகழ்வாக இருந்தது. நிகழ்வைத் தொகுத்தளித்த தமிழாசிரியை ஷர்மிளா அவர்களின் தமிழும் உச்சரிப்பும் சிறப்பாக இருந்தது.

துவக்கம் சிறப்பாக இருக்கிறது இனி தொடர்ந்து செயல்பாடுகளின் மூலம் நிறைய மாணவர்களை . தமிழ் உணர்வாளர்களாகவும், பேச்சாளர்,எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளராகவும்  வடிவமைக்க வேண்டும்.


வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பாரத் மாதா கீ ஜே

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத்தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை :
                        
                                  பாரத் மாதா கீ ஜே

ஏழையென்றும் அடிமை யென்றும்
எவனுமில்லை ஜாதியில்- இழிவு கொண்ட
மனிதரென்ப திந்தியாவில் இல்லையே - பாரதி

நீ தீர்க்க தரிசி பாரதி. எத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருக்கிறாய். இந்தியா எப்பேர்ப்பட்ட நாடு என்று. உனது தீர்க்கதரிசனம் குறித்து இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக்கொள்கிறோம். அப்போதெல்லாம் நெஞ்சு விம்மி விம்மித் துடிக்கிறது.

நீ பாடிவிட்டுப் போய்விட்டாய் பாரதி. இப்போதெல்லாம் இந்தியா எவ்வளவு ஏற்றத்திலிருக்கிறது தெரியுமா ?

ஏழைகளே இல்லாத நாடு என்பதால் எங்களுக்கு இனி ரேஷன் இல்லை, எரிவாயு இல்லை எந்த சலுகைகளும் இல்லை பாரதி. எங்கள் பணம் செல்லாது என்று அறிவித்து விட்டார்கள், எங்கள் உடைகளை, எங்கள் உணவை அவர்களே தீர்மானிக்கிறார்கள். நரமாமிசம் உண்பவர்களெல்லாம் நல்லபடியாய் வாழும் போது மாட்டுக்கறி ஆகாதென்கிறார்கள், மேலும் இனி நாங்கள் பிறக்கவும் , இறக்கவும் ஆதார் தான் ஆதாரம். பிறந்தவுடன் எங்கள் நெற்றியில் பொறிக்கப்படும் அந்த எண் எங்களை எரிக்கும் போதும் இருக்க வேண்டும் என்பது கட்டளை. இல்லையெனில் எரிமேடையும் மறுக்கப்படும் என்பதாக எங்கள் அரசு சொல்கிறது. நல்ல வேளை பாரதி நீ உன் கவிதைகளை நிறுத்திக்கொண்டு கிளம்பிவிட்டாய். இப்போது நீ இருந்திருந்தால் என்ன பாடு பட்டுப் புலம்பியிருப்பாய் ?

இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே என்று பாடினாய், இன்றும் கைகளால் மலமள்ளிக் கொண்டிருப்பவர்கள் இந்தியர் தான். அதனினும் இழிவு ஏதுமுண்டோ இந்த தொழில் நுட்ப வளர்ச்சியில்.

பெண்களை எப்படியெல்லாம் போற்றினாய் நீ … நாங்களும் போற்றிக்கொண்டிருக்கிறோம் பாரதி.

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கை கொடுத்து,
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! - பாரதி

பெண் விடுதலையில், காதல் செய்து ஒருவனைக் கை பிடித்து வாழச் சொல்லி அறிவுறுத்தினாய் அப்போதே. ஒரு நூற்றாண்டு கழிந்தது. இப்போதும் எங்கள் பெண்கள் காதலித்தால் என்ன நடக்கிறது தெரியுமா பாரதி.

எங்கள் நந்தினி காதலித்தாள். இந்தியாவின் மகள் தான் அவள். மணிகண்டன் எனும் ஆணை. ஓர் ஆண்டு காதலால் விளைந்த விளைவாக 16 வயது சிறுமி அவள் கர்ப்பமானாள். திருமணம் செய்து கொள்ள மணிகண்டனை வற்புறுத்த, அவள் தலித் என்ற காரணத்தைக் காட்டி மறுத்ததோடு, அவளை நண்பர்களோடு கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவளது பிறப்புறுப்பை பிளேடால் அறுத்து அவளது வயிற்றிலிருந்த சிசுவைக் கொன்று அவளையும் கொன்று பாழும் கிணற்றில் தள்ளி விட்டனர். பதினாறு நாட்கள் கழித்து தான் அவளது சடலத்தைத் தேடி எடுத்தனர். இதோ இன்னும் அவளுக்கான நீதியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். கிடைத்தபாடில்லை.

கொளசல்யா காதலித்த சங்கருக்கு என்ன நேர்ந்தது தெரியுமா ? நடுரோட்டில் கண்ட துண்டமாய் வெட்டிக் கொல்லப்பட்டான் அநியாயத்திலும் அநியாயமாக. கோகுல்ராஜ் கூட அப்படித்தான் ஆனான் தெரியுமா ?

மிகச் சமீபத்தில் போன வாரத்தில் உத்திரப் பிரதேசத்தில் இரண்டு தலித் காதலர்கள் பட்ட பாடு அறிவாயா பாரதி. அங்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தலித் காதல் ஜோடியை ஆர்.எஸ்.எஸ் உயர் வகுப்பை சேர்ந்த சிலர் சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் காதலர்களை நிர்வாணமாக்கிய வன்முறையாளர்கள் ஒருவரை ஒருவர் சுமந்து கொண்டு வர வற்புறுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது காதலர்களை அவர்கள் இரும்புக் கம்பிகளால், இரக்கமின்றி தாக்கிக்கொண்டே வந்தனர். இந்த சம்பவத்தை அவர்களே வீடியோ எடுத்து பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்ததை அடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காதலர்கள் ஒருவரை ஒருவர் நிர்வாணமாக சுமந்து கொண்டும் அழுது கொண்டும் அத்தனை பேர் முன்னிலையில் பட்ட பாட்டைப் பார்த்திருந்தாள் நீ என்ன செய்திருப்பாய் பாரதி. இது தான் இந்தியா. அந்தக் கும்பலில் சிலர் கத்தினார்கள் " பாரத் மாதா கீ ஜே " என. பாரத மாதா என்னவாகியிருக்கிறாள் பார்த்தாயா ?

இனி எப்படிக் காதலிப்பது ? இனி எப்படி வாழ்வது ?

மனிதருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?

மனிதர் உணவை மட்டுமல்ல மனிதர் உரிமையை, மனிதர் உணர்வை, மனிதர் வாழ்வை, மனிதர் மொழியை எல்லாம் வேறு வேறு மனிதர்கள் தாம் தீர்மாணித்துக்கொண்டும், மனிதர்கள் நொந்து போவதை ரசித்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

தாய்மொழி வழியில் கல்வி தேவையில்லை என அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் இதைப் படித்தாலே போதுமானது என தமிழர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.
பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் - பாரதி

உண்மைதான் மகாகவி, பாரத நாடு மிகப் பழமையான நாடு. இந்த நினைவு அகலவேயில்லை எங்களுக்கு. சொல்லப்போனால், இந்த நினைவு தான் எங்களைக் கொலையாய்க் கொல்லுகிறது. இத்தனை பழமையான இந்தியாவில், இத்தனை பழமைவாத மனிதர்களோடு, இத்தனை பழமைவாத எண்ணங்களோடு எப்படி வாழ்ந்து தொலைப்பது என்று.

எத்தனை பழமையென்றால், இன்னும் பழைய சாதிகள் உயிரோடு இருக்கின்றன, இன்னும் பழைய தீண்டாமை உயிர்ப்போடு இருக்கிறது, இன்னும் பழைய பெண்ணடிமைத்தனம் ஓங்கி நிற்கிறது, இன்னும் பழைய சுரண்டல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன, இன்னும் பழைய கடவுள்கள் உயிரோடு இருக்கிறார்கள், புதிது புதிதாய் மனிதக் கடவுள்கள் வேறு அவதாரம் எடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள், இன்னும் பழைய அடிமைகள் புதிது புதிதாகப் பிறந்து கொண்டேயிருக்கின்றார்கள்.

பெண்ணுக்கு விடுதலையென்றிங்கோர் நீதி,
பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால்
மனையாளுந் தெய்வமன்றோ? மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பது போற் கதைகள் சொல்வீர்!
விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்!
பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்
பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை

பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால் உலகில் வாழ்க்கையில்லை என்று எத்தனை பகுமானமாய்ப் பாடிவிட்டுப் போனாய் நீ.

இன்று எத்தனை விடுதலை தெரியுமா பெண்களுக்கு. இதோ இப்போது தான் சப்பாத்தி வட்டமாக இல்லையென்று ஒரு பெண் தனது கணவனால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டாள். பக்கத்து வீட்டு ஆணுடன் அலைபேசியில் இரு முறை பேசி விட்டாள் என்று ஒரு பெண் கடப்பாரையேற்றிக் கொல்லப்பட்டாள், இரவில் தாமதமாக வீடு திரும்பும் போது ஒரு பெண் வன்புணர்வு செய்து ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிறாள், மற்ற ஆண்களைப் பார்த்து விடக்கூடாது என்பதாலேயே ஒரு நவநாகரீகப் பெண் நிர்வாணமாகவே ஆண்டுகளாக வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள், காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் திராவகம் வீசப்படுகிறது, பொது இடங்களில் வைத்து வெட்டிக் கொல்லப்ப்படுகிறாள், கூட்டாக வன்புணர்வு செய்யப்படுகிறாள், பின்பும் வெறி தீராமல் பிறப்புறுப்பில் கம்பிகள்,கடப்பாறைகள் சொருகப்பட்டுக் கொல்லப்படுகிறாள்,
அய்யோ பாரதி பதறாதே பாதியைத்தான் சொல்லியிருக்கிறேன்.
இன்னும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் நெஞ்சு வெடிக்கும்.

நெஞ்சு பொறுக்கு தில்லையே- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்

இப்படி உனது பாடலைத்தான் இப்போதும் புலம்பித் திரிகிறோம் பாரதி. அவ்வப்போது வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே என முழங்குகிறோம் அதைச் செய்யாவிடில் என்ன நடக்குமோ என்ற அச்சம்.

"பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.,"

கொலுசு மின்னிதழில் வாசிக்க :


http://kolusu.in/kolusu/z_want_to_see_book.php?parameter=25K34K1099

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

விகடன் தடம் இதழில் எனது முகம்

ஆகஸ்ட் மாத , விகடன் தடம் இதழில் எழுத்துக்கு அப்பால் பகுதியில் எனது சிறு நேர்காணல் வெளியாகியுள்ளது ..

நன்றி ஆசிரியர் குழுவினர்க்கு ..