வெளிச்சத்திற்கேற்ப
தன் ஒப்பனைகளைக்
கலைத்துக் கலைத்து
மாற்றி மாற்றி
அழகு காட்டுகிறது
பிரகாரச் சிலை
That Word is about ten thousand years of age
That Word is of the hue of dense black
well-soaked and rooted in the soil
That Word’s strength
Is diamond-like
The flavor of the Word
salt of the sweat
That Word we found in archeological excavation
as the remains of ancient human civilization
The Word has eyes all over its being
They are blessing this world
with benevolence immense
Splitting the Word a little
excelling one another
million words
are born.
Only a few could realize
the real strength of it
and it became an armament of might
Realizing that a word can create a world
We hailed it paying our tribute.
When we perceived its pristine beauty
Its all too clear shine
startled us a little.
It is that glow
that guided us all the way
and subsequently
It became the radiance of our very life.
That Word
turning into a painting brush
is drawing me now
in front of thee.
That’s our Mother tongue
I’m its offspring
I’m the lover of its Everything
கவிதை தமிழில் :
அந்தச் சொல்லிற்கு வயது
ஒரு பத்தாயிரம் ஆண்டுகள்
அந்தச் சொல்லுக்கு நிறம்
மண்ணில் ஊறி மட்கி இறுகிய கருப்பு
அந்தச் சொல்லின் திண்மை
வைரத்தின் கெட்டி
அந்தச் சொல்லின் சுவை
வியர்வைக் கரிப்பு
அந்தச் சொல்லை தொன்மையான
நாகரீக எச்சமொன்றாக
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்தோம்
அந்தச் சொல்லின் உடலெங்கும்
கண்கள்
அவை இந்த உலகைத் தனது
கருணையால் ஆசீர்வதித்துக் கொண்டிருந்தன
அந்தச் சொல்லை
கொஞ்சம் உடைத்தால்
ஒரு சொல்லின் அழகை
இன்னொரு சொல் விஞ்சியபடி
ஒரு லட்சம்
சொற்கள் பிறந்தன
வெகு சிலருக்கே அந்தச் சொல்லின்
வலிமை புரிந்தது
அச்சொல் ஆயதமானது
ஒரு சொல் ஒரு உலகத்தைப் படைக்கும்
என்பதை நாங்கள் உணர்ந்து
தொழுதோம்
அதன் பரிசுத்த அழகை தரிசித்த போது
அதன் கூரொளியில் நாங்கள் கொஞ்சம்
திடுக்கிட்டுத்தான் போனோம்
அந்த வெளிச்சம் தான்
எங்களை எங்களுக்குக் காட்டியது
பின்னர் தான் அது எங்கள் வாழ்வின் ஒளியானது
அந்தச் சொல் தான் ஒரு தூரிகையாகி
என்னை உங்கள் முன்
வரைந்து கொண்டிருக்கிறது இப்போது.
அது எங்கள் தாய்ச் சொல்
நான் அதன் பிள்ளை
நான் அதன் காதலன்
நதியில் எப்போதோ மூழ்கிப்போன கூழாங்கல் ஒன்று விடும் மூச்சு, காலம் முழுவதும் நீர்க்குமிழிகளாக மேலே வந்த வண்ணம் இருக்கும். நதியறிந்த ஒன்று, கல்லறிந்த ஒன்று அந்த பெருமூச்சுகளின் வெப்பம். ஒரு வகையில் நாம் நகரத்து நதியில் அமிழ்க்கப்பட்ட கூழாங்கற்கள் தாம். நம்மை வாழ்க்கையும் பொருளாதாரமும் சேர்ந்து நகரத்துத் தெருக்களில் இழுத்து வந்து வாழ வைத்து விட்டாலும் நமது வேர்கள் ஏதோ ஒரு கிராமத்தின் சாணம் மொழுகிய வீதிகளில் தான் படர்ந்து கிடக்கும். நமது நாட்கள் நகரத்தில் நகர்ந்தாலும் நாம் வாழ வேண்டியது நாம் வாழ விரும்புவது நமது மிகப் பழைய வாழ்க்கையைத் தான். ஒரு கிராமத்தானாக இந்த வாழ்க்கையை வாழ்வது என்பது எப்போதும் கொண்டாட்டமானது. அந்தக் கொண்டாட்டத்தை, மகிழ்வை, கிராமத்து வாழ்க்கையும் கிராமத்து அசல் மனிதர்கள் தரும் மன நெகிழ்வை கவிதைகளாக நமக்குத் தந்திருக்கிறார் கவிஞர் ஆண்டன்பெனி.
கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தி மனதை, மிக விநோதமான ஆனால் மிக அழகான மனித இயல்புகளை, பெயரில்லா மிக நெருக்கமான உறவுகளை, இந்தத் தொகுப்பின் வழியாக கவிஞர் அறிமுகப் படுத்துகிறார். உண்மையில் இது அறிமுகமன்று ஆவணம். ஆவணப்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த நூற்றாண்டில் நாம் இப்படியான உண்மையான மனிதர்களையும் உறவுகளையும் இழந்து விடுவோம் என்றே தோன்றுகிறது.
அங்காயி, காட்டு ரோசா, முத்துக்காள,முத்தாலம்மா,சுப்பையா,தவசி கிழவன், பூமாரி, மரிக்கொழுந்து என மிக அற்புதமான மனிதர்களின் சித்திரங்களை இந்தத் தொகுப்பு பதிவு செய்கிறது. கருப்பன், அம்மன் என நாம் தூரத்தில் பய பக்தியுடன் தள்ளி வைத்திருக்கும் கடவுள்களை வெகு நெருக்கமான கிராமத்துக் கடவுள்களாகப் பதிவு செய்கிறது, தட்டான் குழி, பாவைக் கூத்து என கிராமத்தின் நிழல் பாவிய நினைவுகளை மிக அழகாகப் பதிவு செய்கிறது. டூரிங் டாக்கீஸ், ஐஸ் வண்டி என இந்தத் தொகுப்பு நம்மை ஒரு கிராமத்துக் கூரை வீட்டின் திண்ணையில் அமர்த்தி வேப்பமரத்தின் மென் காற்றை உடலெங்கும் பரவச் செய்து மகிழ்ச்சியின் சாரலை நம் மீது தெளித்தபடியிருக்கிறது ஒவ்வொரு பக்கங்களிலும். மொத்தத்தில் இந்தத் தொகுப்பு ஒரு அழகான கிராமத்தின் அசலான மனிதர்களின் ஆவணம்.
பேச்சு வழக்கில், வட்டார வழக்கில் ஒரு முழுமையான கவிதைத் தொகுப்பு. இதில் கவித்துவத்தை விடவும் ஒரு வாழ்வியல் பதிவாகியிருக்கிறது. வாழ்வியல் கவிதையாகும் போது அதன் பயன்பாடு மிக அதிகம். கிராமம் என்றதும் நிலம் காட்சிப் படுகிறது. மனிதனின் ஆன்ம மற்றும் பொருளாதார பலம் நிலம். நிலத்தோடு புலர்ந்து நிலத்தோடு புதையும் வாழ்வு தான் கிராமத்து வாழ்வு. நிலத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து, மனிதர்களை இழந்து, உண்மையை இழந்து இந்த வாழ்க்கைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்பது இந்தத் தொகுப்பை வாசித்து முடிக்கும் போது நம் அறிவைச் சுடும் உண்மையாக உரைக்கும்.
உறவுகளின் பலம் என்பது உறவு முறைப் பெயரில் இல்லை அதை நினைத்த மாத்திரத்தில் நம் மனதுக்குள் படரும் நம்பிக்கையின் ஆணி வேரில் இருக்கிறது. எதிர் வீட்டுக்காரனின் பெயர் கூட அறியாத நகரத்து வாழ்க்கை எங்கே ? மொத்த கிராமமும் சொந்த உறவைப் போல உறவாடி வாழ்கின்ற வாழ்க்கை எங்கே ? கவிஞர் ஆண்டன் பெனி இந்தத் தொகுப்பின் வழியாக காலச் சக்கரத்தை ஒரு சுழற்று சுழற்றி விடுகிறார். நமது காலத்தின் பொன் பரப்பில் நாம் சில கணங்கள் வாழ்ந்து திரும்பும் வரத்தை நமக்கு வழங்கியிருக்கிறார். நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது, நம்மிடம் மிச்சம் மீதியிருக்கும் கொஞ்சநஞ்ச கிராமங்களையும் , உறவுகளையும் சிதைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான்.
தனது முந்தைய தொகுப்புகளின் முத்திரைகளை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு இந்தத் தொகுப்பில் வேறு ஒரு உயரத்துக்குச் சென்றிருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது, ஒரு கதாநாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள். அவர்கள் நாம் பால்யத்தில் சந்தித்திருக்கக் கூடிய சாத்தியமான முகங்களோடு இருக்கிறார்கள். அவர்களை தரிசிப்பது மனதை நெகிழச் செய்கிறது.
இந்தக் கவிதைத் தொகுப்பின் பக்கங்களுக்குள் புகுந்து குதூகலமாக ஓடி விளையாடியபடி இருக்கும் சிறுவன் நான் தான். உணர்ந்து வாசித்துப் பாருங்கள் இந்தக் கவிதைகளை .. அது நீங்களாகவும் இருக்கலாம்.
தட்டான் குழி தொகுப்பிலிருந்து சில கவிதைகள் :
எந்தாயி
திலகராஜ் துணிக்கடையில
தம்பிக்குத் துணியெடுக்கலாம் அத்தேனு
மதினி சொன்னதும் ‘ஓங் கொழுந்தனுக்கு
நீ எங்கனாலும் எடும்மா’னுருச்சி அம்மா.
புருசன் கூடப்பொறந்தவன் கொழுந்தனாலும்
மதினி என்னைய தம்பினுதான் சொல்லும்
அண்ணங்கிட்ட பேசும்போதுகூடப்
பொதுவா தம்பின்னு சொல்லுமே தவிர
தவறிக்கூட உங்கதம்பின்னு சொல்லிடாது.
‘நம்ம இனத்துல புள்ள இல்லனா
ரெண்டாந்தாரம் கட்டுறதொண்ணும்
குத்தமில்லையேன்னு’ பேச்சி வந்தபெறகு
மதினி வீட்டோட பேசுனதே எம்மூலமாத்தான்.
ரெண்டாந்தாரம் கல்யாணம்
வீட்டோடனு முடிவானாலும்
மதினியோட கண்ணுத்தண்ணி
வத்துறவரைக்கும் காத்திருந்தது வீடு.
கல்யாணத்துக்குத் துணி
அம்மையார்பட்டிக் கடையிலனு முடிவானாலும்
எனக்குத் திலகராஜ் கடைதான்னு
மதினி முன்னமே முடிவு பண்ணியிருக்கும் போல.
‘ஏத்தா… இந்தத்துணி இவனுக்கு
நல்லாருக்குமில்ல’ன்னு ஆத்தா கேட்டதும்
என்னை நெஞ்சோட அணைச்சி
‘எம்புள்ளைக்கு எதுனாலும் நல்லாத்தான் இருக்கும்’னது
அண்ணாந்து பாத்தேன்
ஒசரத்துல மதினி முகம்
ஆத்தா மொகம்போலவே இருந்திச்சி.
பேச்சியம்மா ஊரு
பேச்சி ஒரு காட்டு சிறுக்கி
நெதமொரு பூத்தேடி காடெல்லாம் திரியுறவெ
புதுசாப் பூ கெடைக்கலீன்னு ஒருநா
ஊமத்தம்பூவயே வெச்சிக்கிட்டா
தலப்பூவுக்குக் காடெல்லாம் அலைஞ்சவ
சொல்லித்தான் அம்பூட்டுப்பூ
இருக்கிறதே ஊருக்குத் தெரியும்
தலயில வெக்க அதெல்லாம் லாயக்கில்லன்னு
பூக்கார ராசய்யாண்ணன் எம்புட்டுச் சொல்லியும்
காதெடுத்துக் கேக்கிலியே அவெ
பொண்ணுபாக்க வாரவுகளும்
கிறுக்கச்சியா இருப்பாளோன்னு
சொல்லிக்காமலே போயிட்டாகெ
ஆத்தா அப்பன் செத்தப்போ
அத்தன மால சாத்தியும்
அவ கொண்டாந்த பூவப் போட்ட பெறகுதான்
பொணத்தையே எடுக்கவிட்டா
தனிக்கட்டையா வாழப்பிடிக்காம
காட்டுக்குப் போனவள
ஊரே தேடியும் கெடைக்கலெ
எந்த வருசமும் இல்லாத மழயும்
அந்த வருசம் கொட்ட
காடெல்லாம் பேச்சிப்பூ வாசம்
இப்பவும் ஊருல
பேய்யுறதும் பேச்சி
பூக்குறதும் பேச்சி
வெளயுறதும் பேச்சி
இரவில் தூரமாகும் ஊர்
கோவில்பட்டியிலிருந்து
புளியங்குளம் கிராமத்திற்கு
இரவில் போவதென்றால்
பத்துக் கண் பாலத்தில்
ஒரு பேயையும்
ஒற்றைப் பனைமர முனியையும்
மஞ்சனெத்தி மரத்தில் இருக்கும் ஆவியையும்
தாவுபால வெள்ளைப் பிசாசையும் கடந்தே
இன்று வரை ஊர் வழக்கத்தில்
வெகுதூரம் பயணிக்கிறோம்
பகலில் போவதென்றால்
காலேஜ் தாண்டியதும்
ஒத்தக்கடை நிறுத்தத்தில்
வலது பக்கம் திரும்பினால்
ஊர் வந்துவிடுகிறது
சிற்பி கவிதைகளில் மனித நேயம்
கவிஞர் எழுத்தாளர் சாகித்ய அகாடெமி விருதாளர் எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நல்வழிகாட்டி, எங்களின் முன்னத்தி ஏர் கவிஞர் சிற்பி ஐயா அவர்களின் கவிதைகளில் மனித நேயம் என்பது இங்கு நான் பேசவிருக்கும் தலைப்பு
பல லட்சம் சொற்களைக் கூர் தீட்டி, பல்லாயிரக்கணக்கான கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், இன்ன பிற இலக்கிய ஆக்கங்களாகவும் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஒரு கொடையெனத் தந்திருக்கும்.. தந்து கொண்டிருக்கும் 85 வயதைத் தொடவிருக்கும் கவிக்கோ சிற்பி அவர்களின் கவிதைகள் பற்றி நான் எனது பார்வையில்
பகிர்கிறேன்.
மலையாளக் கரையில் விதையாகி தமிழ் நிலத்தில் செழித்து வளர்ந்த சிற்பி எனும் பெருமரம் தனது நறுநிழலால் தமிழ் இலக்கியத்தை 85 ஆண்டுகளாக ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறது. இப்பெரு மரத்தின் நிழலினிது, பூ இனிது, காய் பழம் இலை கிளை என யாவும் இனிது. நிழல் இனிது என்பதை எடுத்துச் சொல்வது போலானது நான் எடுத்துக் கொண்ட தலைப்பு. தனது கவிதைகளை ஒரு பிரம்மாண்ட வெளியில் கட்டமைத்துக் கொண்ட கவிஞர் சிற்பியிடம் மனிதம் போற்றும் சொற்கள் அதிகம் என்பதும் உண்மைதான் இயல்பாகவே.
இங்கு முதலில் மனிதம் என்ற சொல் எப்படிப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாயிருக்கிறது. காரணம், அறம், வள்ளுவம், கற்பு, ஆண்மை போன்ற சொற்கள் எப்படி மேலோட்டமாகப் புரிந்து கொள்ளப்பட்டதோ அப்படியே மனித நேயம் என்ற சொல்லும் மேலோட்டமாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. மனிதநேயம் என்ற சொல்லுக்கான பரவலான நமது புரிதல் என்பது சக மனிதன் பால் அன்பாய் இருப்பதும், தன்னினும் கீழுள்ள மனிதனுக்கு இரங்குதலும் என மனிதனைச் சுற்றியே இருக்கிறது.. தமிழ்க் கவிதை அவ்வளவு குறுகலாகச் சிந்தித்தது இல்லை காக்கை குருவி எங்கள் சாதி என்றும், உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்றும், உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்றும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் எனவும் தமிழ்க் கவிதைகள் சக மனிதர்களுக்கு மட்டுமல்லாது சக உயிரினங்கள் யாவற்றுக்கும் இரங்கி வந்திருக்கிறது. நானும் மனிதநேயம் என்பதை மனிதம் என்று தான் புரிந்து கொள்கிறேன். மனிதம் என்பதை சக உயிரினங்கள் மற்றும் நிலம் ,நிலத்தின் அஃறிணைகள் அனைத்தின் மீதும் பெருக்கெடுக்கும் அன்பு என்று தான் புரிந்து கொள்கிறேன். தமிழ் மரபை மாறாது கடைபிடிக்கும் சிற்பி எனும் மகாகவிஞனின் கவிதைகளில் சக மனிதர்கள் மீதும் சக உயிரினங்கள் செடி கொடிகள் மீதும் மேலும் இந்த பூமியின் மேல் இருக்கும் இயற்கையின் படைப்புகள் அத்துணையின் மீதும் பெருக்கெடுக்கும் அன்பு குறிப்பிடத்தக்கது.
ஒரு கவிஞன் காலத்தின் சகல மாற்றங்களையும் சவாலாக ஏற்றுக் கொண்டு எல்லாக் காலத்திலும் தன் கவித்துவத்தின் உச்சியில் அமர்ந்து ஆட்சி செய்வதை கவிஞர் சிற்பியிடம் வியந்து பார்க்கிறேன் எப்போதும். மரபுக் கவிதைகளில் புலமை பெற்று, புதுக் கவிதைகளில் புதுப் புது பாதைகள் சமைத்து இன்றைய நவீன கவிதை வரைக்கும் தனது கவிதைகளை காலத்தின் ஓட்டத்திற்கு ஈடாக நகர்த்தியபடியே சிற்பி எனும் கிராமத்து நதி பெருக்கெடுத்துப் பாய்ந்து வந்திருக்கிறது.
என்னிலிருந்து .....
என் அந்தரங்கங்களின்
ஊற்றுக்கண் திறந்து
என் மார்புகள்
புல்லரித்து
என் ரத்தக் குழாய்களில்
புல்லும் பூவும் மணந்து
என்னை முழுக்காட்டி
என்னையே கரைத்துக் கொண்டு..
அங்கிருந்து வருகிறது
இந்த நதி
என்று தன் கிராமத்து நதியின் மீதான காதலைக் காத்திரமாகச் சொன்னவர். தனது மண்ணையும் மண்ணின் சகல உயிர்களின் மீதும் அளவிலா நேசம் கொண்டிருக்கிறார். கிராமத்து நதியின் சுவையையும், தண்மையையும் தமிழ் இலக்கியம் காலத்துக்கும் மறக்காது.
பூக்கள்
பகலிலும் எரியும் விளக்குகள்
காய்கள்
மரத்தின் இளம் சேய்கள்
கனிகள்
வரும் சந்ததியின்
தாய்கள்
என்று சொன்னவர்; இலைகளை
அது நம் ஆடை
அது நம் உணவு
அது நம் கூரை என்று மரத்தையே கொண்டாடுகிறார் ( பூஜ்யங்களின் சங்கிலி )
ஒரு மரத்தை அது தரும் நிழலுக்காக மட்டுமல்லாது இலை,கிளை,வேர் என்ன சகலத்தையும் கருணைக் கண்களோடு பார்க்கும் கவிதைகள் கவிஞர் சிற்பி அவர்களுடையது.
எறும்புகள் போகும் வழியில்
ஒரு சின்ன வெடிப்பு
இறங்கி ஏறினால்
இரை நழுவிப் போகுமே
என்ன செய்தன எறும்புகள் ?
என்று எறும்புகளுக்கும் இரங்க கவிஞர் சிற்பியால் முடிகிறது.
அணு என்கிற அறிவியல் உண்மையையும் புரிந்து கொண்ட கவிஞர் சிற்பி இவ்வுலகின் ஒவ்வொரு அணுவையும் எவ்வளவு நேசிக்கிறார் என்று பாருங்கள்
கருமூலம் வந்தவர்க்கெல்லாம்
உயிரின்
திருமூலம் தெரிந்து விடாது
அணுக்களால் ஆனது
அண்டப் பெருவெளி
அணுக்களால் ஆனவை
கோள்கள் விண்மீன்கள்
அணுக்களால் ஆனவை
உலகம் உயிர்கள்
ஓரறிவுள்ளவை
ஆறறிவுள்ளவை
எல்லாம் அணுத்திரள்
கலவை அளவால்
உருவமும் குணமும்
செயலும் திறனும்
மாறுபட்டுள்ளன.
பிறப்பில் உயிர்ப்பதும்
இறப்பில் கரைவதும்
அணுக்களாகவே.
சுருங்கி விரியும்
அண்டப் பெருவெளியில்
பிறப்பும் இறப்பும்
ஆக்கமும் அழிவும்
அதன் விளையாட்டே
இதுதான் மூலம்!
இதுதான் மூலம்!
எல்லா உயிரையும்
உயிரில்லாப் பொருளையும்
நேசித்திருப்பதே
அணுக்கள் சொல்லும்
அர்த்தமுள்ள மதம்
அணுக்களே மூலம்
பரமாணுக்களே
அவற்றின் மூலம்
சூக்கும அணுக்களே
அவற்றுக்கும் மூலம்
அணுக்கள் அன்றி
யாரும் அசைய முடியாது
இதுதான் மூலம்!
இதுதான் மூலம்!
இவ்வுலகின் ஒவ்வொரு அணுவையும் இவ்வளவு நேசிப்பவரின் கவிதைகளில் நிறைந்து கிடக்கும் மனிதத்தை நான் வெறும் மனிதநேயம் என்று மட்டும் எப்படி எடுத்துப் பேசுவது. அது அந்தச் சிறிய எல்லைக்குள் அடங்கிவிட முடியாதது அல்லவா ?
மனிதன் பிறக்கு முன்
இந்த பூமி
பூச்சிகள், பறவைகள்
புற்கள், பூண்டுகள்
யானைகள், புலிகள்
மான்களுக்குத்
தானே சொந்தம்
அவற்றின் வாழ்விடம்
அவற்றின் தடங்களை
ஆக்கிரமித்திருப்பது
மனிதனே நீ அல்லவா ?
என்று இரங்குகிறார் கவிஞர். இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டும் என்றும் மூர்க்க வெறியோடு மனித இனம் காடுகள் மலைகள் வனஉயிரிகள் என அனைத்தையும் வேட்டையாடி தன் கோர நாக்குகளை சுவையூட்டிக் கொண்டிருப்பதை பதைபதைப்புடன் கேள்வியாக்கியிருக்கிறார் கவிஞர்.
வனத்தின் பேருயிரி என்று கவிஞர் வியந்து பார்க்கும் யானையப் பற்றிய கவிதையில்
துவண்ட தும்பிக்கை நீட்டி
அற்பக் காசுக்குப்
பிச்சை எடுப்பதும்
சர்க்கஸ் கூடாரத்தில்
சவுக்கடிச் சத்தத்தில்
கேலிக் கூத்தாய்
முக்காலி மீது
கூனிக் கூனிக்
குறுகி உட்கார்வதும்
காட்டின் கம்பீரத்துக்கு
வாய்த்த விதியா ( கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை )
என்று அங்கலாய்க்கிறார். காட்டின் கம்பீரம் யானை, நாட்டில் அதை ஒரு விளையாட்டுப் பொருளாக்கி விட்டோமே என்று வேதனைப் படுகிறார். வேடிக்கை பார்க்கும் பல்லாயிரக் கணக்கான கண்களில் வேதனையும் கண்ணீரும் பெருக்கெடுப்பது கவிதைக் கண்களில் தாம்.
மதக் கலவர
வன்புணர்வில்
பிறந்த குழந்தைக்கு
யார் கடவுள் ?
மனிதனுக்கும் இரங்குகிறார் இப்படி. மனிதன் தன்னையே இழிவாக்கிக் கொள்ளும் செயலில் பிறந்த ஒரு குழந்தைக்கு யார் கடவுள் என்று கேட்டபடியே உண்மையில் யார் கடவுள் ? எது மதம் ? என்கிற கேள்வியையும் முன் வைக்கிறார்
ஆதிவாசியைப் பற்றிய கவிதை ஒன்றில்
மலசன்,காடன், வேடன்
எல்லாம் நீங்கள் இட்ட பெயர்கள்
நீங்கள் அறிவீர்களா
கானுயிர் அனைத்துக்கும்
பெயர் வைத்த பெரிய மனிதன் அவனென்று
கேட்கிறார். நாம் புழங்குகின்ற பெயர்களில் பலவற்றை அவன் வைத்தான். அவனுக்கு இழிபெயரை நாம் வைக்கிறோம் என ஆதங்கம் கொள்கிறார்.
காணாமல் போன உனக்காக
காடுகள் காத்திருக்கும்
அருவிகள் புரண்டு அழும் என எங்கோ மரீஷியஸ் தீவில் வாழ்ந்து அழிந்து போன டோடோ பறவைக்காக கவிஞர் சிற்பியின் கவிதை இரங்குகிறது
தண்ணீர் சிநேகிதங்கள் எனும் கவிதையில் கவிஞரின் மீன்களின் மீதான அன்பும் அனுக்கமும் கூட காட்சியாகியிருக்கும்
சின்ன வயதில்
சிற்றாறு கூட்டி வைத்த
என் தண்ணீர் சிநேகிதங்கள்
ஓடும் நதி மீன் பண்ணையில்
ஒரு மீன் அடிவயிறு மிதக்கச்
செத்து மிதந்தாலும்
அன்றைக்கு முழுப் பட்டினி நான்
பறவைகள்,விலங்குகள், ஊர்வன, பறப்பன என உயிர்களிடத்தெல்லாம் இவ்வளவு அன்போடு இருக்கும் கவிஞர் மனிதர்களிடத்தும் மாறா அன்போடு இருக்கிறார் அழித்து வரைய முடியாத சித்திரம் என அம்மாவைக் குறிப்பிடும் இவர் அம்மாவை பல கவிதைகளில் நாயகியாக்கியிருக்கிறார், மனைவியையும் சம அளவில் கொண்டாடியிருக்கிறார். மற்ற உறவுகளையும் நண்பர்களையும் சான்றோர்களையும் தனது கவிதைக்குள் கொண்டு வந்து அமர்த்தியிருக்கிறார்.
ஒரு கவிஞன் தன் முற்காலத்தைத் தொழுதலும், சமகாலத்தைக் கவனப்படுத்தலும், எதிர்காலத்துக்கான சிந்தனைகளை விதைத்தலும் என தனது கவிதைகளை ஒரு வித்தையாக செய்யும் கலையை கவிஞர் சிற்பியின் கவிதைகளில் காண்கிறேன். ஆகவே தான் அவர் முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் இருக்கிறார்.
சிற்பி எனும் தமிழ்ப் பெரும் கடலில் அவர் கொட்டி நிறைத்திருக்கும் செல்வம் அளப்பரியன. அவசரத்திலும், பத்து நிமிடம் பேச வேண்டும் என்கிற கால அவகாசத்திலும் நான் மிகச் சொற்பமான முத்துகள் சிலவற்றை எடுத்து உங்கள் முன் நீட்டியிருக்கிறேன். அதனால் என்ன தேனின் சுவையை உணர தேன் கூட்டின் மொத்தத் தேனையும் ருசிக்காவிட்டாலும் ஒரு துளித் தேன் போதும் தானே மொத்தமாக உணர. இங்கு நான் பகிர்ந்து கொண்ட கவித்தேன் துளிகள் போல ஒரு அடைத் தேன் இருக்கிறது கவிஞர் சிற்பியின் எழுத்துகளாக.
காலத்துக்கும் வாசித்துக் கொண்டாட வேண்டிய மகா கவிஞனின் கவிதைகளையும் மானுடம் போற்றும் மகத்தான மனிதனின் ஈர மனதையும் நாம் இன்னும் இன்னும் கொண்டாட வேண்டும் என வாசகர்களிடம் கேட்டுக்கொண்டும், இன்னும் பல்லாண்டு தமிழ்ப்பணியாற்ற கவிஞர் சிற்பி அவர்கள் நலமுடன் வாழ வேண்டிக் கொள்கிறேன்
நன்றி
தமிழ்மொழிக்கு ஒரு சாபம் உண்டு தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள்; கவிஞர்களை காலம் இளம் வயதிலேயே இழுத்துக்கொள்வது தான் அது. மகாகவி பாரதியின் காலம் வெறும் 39 ஆண்டுகள் தான். எழுத்தாளர் புதுமைப்பித்தன் வெறும் 42 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வெறும் 29 வயதில் மறைந்து போனார். இளம் வயதிலேயே இவர்கள் காலமாகிப் போனாலும் காலத்தால் மறக்க முடியாத , காலத்தினால் அழிக்க முடியாத மகாசக்தியாக இன்றும் இவர்களது எழுத்துகள் நின்று பேசுகின்றன. இவர்கள் இன்னும் பலகாலம் வாழ்ந்திருந்தால் இவர்கள் படைப்பு இன்னும் எவ்வளவு குவிந்திருக்கும் என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் தமிழ் வாசகர்களை இன்றளவும் தொந்தரவு செய்கின்றன.
இந்த வரிசையில் ( இந்த வரிசை என்பது இளவயது இயற்கையெய்தியவர்களின் வரிசை என்று கொள்க; பாரதியோடோ, புதுமைப்பித்தனின் படைப்புகளோடோ அல்லது பட்டுக்கோட்டையின் பாடல்கோடோ ஒப்புமைப் படுத்த அவசியமில்லை. அவர்களின் உயரமும் தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பும் வேறு என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் ) சமகாலத்தில் நான் வெகுவாக ரசித்த கவிஞர் நா.முத்துக்குமாரும் நாற்பத்து ஒரு ஆண்டுகள் தான் இந்த நிலத்தில் வாழ்ந்து போனார். ஆனாலும் அவரின் கவிதைகள் பாடல்கள் உரைநடை என அவருடைய எழுத்துகள் காலத்துக்கும் அவர் தந்து போன பொக்கிஷங்கள். எண்பதுகளின் மத்தியில் பிறந்த அவரது கவிதைகள் எண்பதுகளின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவை. எண்பதுகள் எழுத்துலகில் பொற்காலம் தான். புதுக்கவிதை பெரும் வீச்சுடன் இயங்கிய காலம். நவீன கவிதை புது வெளிச்சத்தைக் கொண்டு வந்த காலம். இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டவை தொண்ணூறுகளில் எழுத வந்த நா.முத்துக்குமாரின் கவிதைகள்.
நா.முத்துக்குமாரின் அத்துணை கவிதைகளையும் வாசித்திருக்கிறேன். அவரது கவிதைகளை புதுக்கவிதைக்கும் நவீன கவிதைக்குமான ஒரு பாலமாகப் பார்க்கிறேன். புதிதாக எழுத ஆசைப்பட்டு வந்த மாணவர்கள் நண்பர்கள் பலருக்கு அந்தப் பாலத்தைக் காட்டியிருக்கிறேன். பரிசளித்திருக்கிறேன்.
நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன் இரண்டும் நான் சிலாகித்த இரு பெரும் கவிதைத் தொகுப்புகள் அவருடையன.
கணையாழி இதழ் விழா ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா பேசிய போது, “கணையாழி இதழில் வர்ற கவிதைகளைக், கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இந்தக் கணையாழி இதழில் கூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த சிறந்த 25 கவிதைகளை பட்டியலிடச் சொன்னால் ‘தூர்’ கவிதையை அதில் நான் சேர்ப்பேன்” என்றார். நா.முத்துக்குமாருக்கு அது மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுத்தது.அந்தக் கவிதை :
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நா.முத்துக்குமாரின் பயணம் ஏறு முகம் தான். சிறந்த கவிதைகளைப் படைத்தார் அதனினும் சிறப்பான திரைப்பாடல்களை எழுதினார். புகழின் உச்சிக்குச் சென்றார்.
நியூட்டனின் மூன்றாம் விதி தொகுப்பின் தலைப்புக் கவிதையே அழகானது. அடுக்குமாடிக் குடியிருப்பின் அவஸ்தைகளைச் சொல்ல முயன்ற கவிதை.
நியூட்டனின் மூன்றாம் விதி
மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம்
அதிகப்படியானது.
உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில்
.
திட்டமிட்டு நகர்த்தும்
சாமார்த்தியமும் உனக்கில்லை.
பாக்கு இடிக்கும் பாட்டி;
சச்சதுர அம்மியில்
சார்க் புர்ரக்கென்ற
குழவி நகர்த்தும் அம்மா;
ஏதேதோ பாட்டுக்கெல்லாம்
எம்பிக்குதிக்கும் குழந்தைகள்;
என
உன் உறவுகள் கூட
உன்னைப் போலவே.
உன்னைப் பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.
எனதருமை மேல்தளத்து நண்பா…
தலையணையையும் மீறி
உன்காதுகளில்
சுழன்று கொண்டிருக்கும்
என் மின்விசிறி.
அடுக்குமாடிக்காரனின் அவஸ்தைகள் போலவே எதிர்வீட்டுக்காரனோடு
அனுசரித்துத் தான் வாழவேண்டிய நிலையையும் கவிதையாக்கியிருப்பார் இப்படி
புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்
நா.முத்துக்குமாரின் கவிதைகள் எளிமையானவை. ஆனால் அழகானவை.
அட என ஆச்சர்யம் கொள்ளவும், அச்சச்சோ என ஆதங்கப்படவும் என
ஏதோ ஒரு உணர்வுச் சுழலுக்குள் நம்மை இழுத்து விடுவன.
குறுங்கவிதைகளிலும் அவர் சிறப்பான கவிதைகளைத் தந்துள்ளார்.
உள்ளும் புறமும்
அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன
இது நா.முத்துக்குமாரின் பிரபலமான கவிதை. இது தரும் உணர்வு அவ்வளவு அனுக்கமானது. எண்பதுகளின் மற்றும் தொன்னூறுகளின் பதின் வயதுச் சிறுவர்களின் அனுபவ ஊறல்களில் இந்நினைவு ஊறிக் கிடந்திருக்கும்.
கூர்வாள்
நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.
இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.
மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்
இந்தக் கவிதையும் , இவர் எழுதிய பொண்டாட்டி தாலியை அடகு வைத்து புத்தகம் போட்ட கவிதையும் எண்பதுகளின் ஏன் இப்போதைய வரைக்கும் இலக்கியவான்களின் நிலையைக் காட்டும் கண்ணாடி எனலாம்.
பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணடிகள்.
இது இவரது சிறப்பான ஹைக்கூக்களில் ஒன்று. இந்தக் கவிதை உருவாக்கித் தரும் காட்சி பிம்பங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சலூன்கடைக் கண்ணாடியில் தெரியும் நம் உருவத்தை முதன்முதலில் பார்த்த போது வந்த பரவசத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. நெடுங்கவிதைகளோடு குறுங்கவிதைகளிலும் அழகியலையும் காட்சிப் படிமங்களையும் கொட்டித் தந்திருக்கிறார்.
பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.
சாலையில் நாம் கவனிக்காது கடந்து செல்லும் நிகழ்வுகளுக்கான எதிர்வினை இந்தக் கவிதை.
முதல் காதல்
காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!
இவர் கவிதைகளில் இவர் கட்டமைக்கிற காட்சிகள், இவர் உருவாக்கித் தருகிற மனித பிம்பங்கள், கதை சொல்லும் பாங்கில் கட்டமைக்கப்படுகிற கவிதை மொழி என எல்லாமே மிக எளியன.
கவிதைகளில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். இவரது திரைப்பாடல்களின் இலக்கிய ரசனையைப் பற்றி எழுதினால் பக்கம் பக்கமாக எழுதலாம்.
இவரது கவிதை நடைக்கு நெருக்கமாக அமைந்த உரைநடைத் தொகுப்புகளான வேடிக்கை பார்ப்பவன் மற்றும் அணிலாடு முன்றில் கட்டுரைத் தொகுப்புகளும் அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தருவன.
வாழ்ந்த சொற்ப காலத்திலும், அழகான கவிதைகளையும் அதனினும் மிக அழகான திரைப் பாடல்களையும் எழுதி, மிக வேகமாக இந்த பூமியை விட்டுப் புறப்பட்டுவிட்ட நா.முத்துக்குமார் எனும் கலைஞன் மீது மிகப்பெரிய ஆதங்கம் வருகிறது.
இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம் முத்துக்குமரா…
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இரா.பூபாலன்
12-07-2020