திங்கள், 10 ஏப்ரல், 2017

அப்பாவுக்கு ஆயிரம் கண்கள்

கொலுசு ஏப்ரல் 2017 மின்னிதழில் வெளியாகியிருக்கும் எனது இரண்டு கவிதைகள் ....


அப்பாவுக்கு ஆயிரம் கண்கள்

அப்பாவுக்கு ஆயிரம் கண்கள்
அத்தனையிலும்
என்னைப் பார்த்தபடியேயிருப்பார்

கண்டிப்பு
கனிவு
அன்பு
தைரியம்
நம்பிக்கை
என ஒவ்வொரு கண்ணிலும்
ஒவ்வொரு உணர்ச்சி
எப்போதும் ததும்பியபடியிருக்கும்
அத்தனை கண்களில்
ஒரு துளியும் அவரழுது பார்த்தேனில்லை

தனது மெய்க்கண்கள் இரண்டையும்
இப்போது நிரந்தரமாக மூடிக்கொண்டார்
மிச்சக் கண்களனைத்திலும் என்னையே
கூர்ந்து கவனிக்கிறார் மேலிருந்தபடி


கடைசியாக இறுகத் தாழிடப்பட்ட கணத்தில்
அப்பாவின் கண்களுக்கு நன்றாகத் தெரியும்
என் கண்கள் குளமெனத் தேங்கிக் கிடப்பது
அவரும் ஒரு துளி அழுதிருப்பார்


ஒரு நிரந்தர கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி பிடித்தமான விளையாட்டு
அப்பாவின் கண்களைக் கட்டிவிட்டு
அவரை வட்டமாகச் சுத்திவிட்டு
ஓடுவிடுவோம்
அவரது முதுகுப்புறம் சீண்டுவதும்
கால்களுக்கிடையில் புகுந்து ஓடுவதுமாக
அவரது கைகளுக்கெட்டும் தூரத்திலேயே தான்
ஓடிக்கொண்டிருப்போம்
தொட நெருங்கியும் தொடாமல்
எங்கள் பெரிஞ்சிரிப்புகளுக்காக
நிதம் தோற்பார்.

என் கண்களைக் கட்டிவிட்ட ஒரு நாளில்
அமைதியாக மிக அமைதியாக 
வாசலின் மூலையில் அமர்ந்துகொண்டார்
சத்தமிட்டுத் தேடிச் சலித்து
அழத்துவங்கிவிட்ட நேரத்தில்
சிரித்தபடி வந்து கட்டிக்கொண்டார் 
வாரியணைத்துக்கொண்டு

இப்போதும் அப்படித்தானே அப்பா
என் கண்களைக் கட்டியிருக்கிறீர்கள்
வாசலில் உலகமே இருளாக 
வெறித்து நிற்கிறேன்
முற்றத்தில் கிடத்தியிருக்கிறார்கள் உங்களை
ஓடி வந்து கட்டிக்கொள்ளுங்கள் அப்பா 
இப்போதும் அழுது  கொண்டிருக்கிறேன் நான்

கொலுசு மின்னிதழ் வாசிக்க :


 

2 கருத்துகள்: