செவ்வாய், 26 ஜூலை, 2016

ஏனென்றால் எனது பிறந்தநாள் ...

ஜூலை 22


ஜூலை 22 இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று இந்தக் கட்டுரையை ஆரம்பித்தால் கொஞ்சம் மொக்கையாக இருக்கும். எனக்கு ஞாபகமறதி கொஞ்சம் அதிகம்தான் ஆனால் எனது பிறந்தநாளை எப்படி மறக்க முடியும் ?

ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் என்பது வழக்கமான நாட்களைவிட கொஞ்சம் வண்ணமயமாக இருக்கும். இது நான் சிறு வயதிலிருந்தே அனுபவிப்பது. இதில் என்ன பெரிய வியப்பு பிறந்தநாள் என்றாலே அப்படித்தானே இருக்கும் என நினைக்கலாம். ஆனால் அதெல்லாம் வசதிபெற்றவர்களுக்குத்தான். நடுத்தரவர்க்கத்துக்கும் அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கும் பிறந்த நாள் என்பது மற்றுமொரு நாள் தான்.

நான் அதற்கும் கீழ் தான். பெரிய வசதியெல்லாம் இல்லை. ஆனால் வீட்டுக்கு ஒரே பையன். அம்மாவுக்கு நான் உயிர் எல்லாம் இல்லை அதற்கும் மேல் ஏதோ ஒன்று. என்னை இடுப்பிலேயே தூக்கி அலைந்தவள் நான் ஓடத் தொடங்கிய பின்னும். வீட்டில் வறுமை தான் என்றாலும் எந்தப் பண்டிகையை கொண்டாடாவிட்டாலும் என் பிறந்த நாளுக்கு கடன் வாங்கியாவது துணி எடுத்துவிடுவாள் அம்மா. அன்றிலிருந்து இன்று வரை அப்படித்தான். நான் பெரியவன் ஆயிட்டேன் பிறந்த நாளுக்கு புதுத்துணியெல்லாம் வேண்டாம் என்றாலும் பிடிவாதமாக எடுக்கச் சொல்லிவிடுவார்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என நினைக்கிறேன். துணி எடுக்க ஒரு வாரம் முன்பு தான் பணம் கிடைக்கிறது. எடுத்து தையல்காரரிடம் தந்தாயிற்று அவர் முந்தின நாள் வரை தரவில்லை நாளை நாளை என்றே தள்ளிப்போட்டு வந்தார். முந்தின நாள் வேலை முடிந்து வந்து அவர் வீட்டுக்குப் போய் அமர்ந்து விட்டார். இப்பவே வேண்டும் என்று. அவரோ எங்கோ அவசரமாகப் போக வேண்டும் காலையில் ஆறு மணிக்கே தந்து விடுவதாக வாக்குக் கொடுத்திருந்தார். காலையில் ஐந்தரைக்கே அம்மா கிளம்பிப் போய்விட்டார் அவரோ தைக்கவே இல்லை. அரை மணிநேரம் அவரிடம் பயங்கரமாக சண்டைக் கட்டிவிட்டு அம்மா வந்து விட்டார். கொஞ்ச நேரத்திலேயே எங்கேயோ போய் பணம் வாங்கிவிட்டு வந்தவர் பொள்ளாச்சி போலாம், அங்க ரெடிமேட் துணி இருக்குமாமா வாங்கி போட்டுட்டு கோயிலுக்குப் போலாம் என்று என்னையும் அப்பாவையும் கிளப்பினார். இந்த முறை புதுத்துணி இல்லாட்டி பரவால்லமா என்றேன் ஆனாலும் கேட்காமல் அழைத்துப்போய், பொள்ளாச்சியில் புதுத்துணி எடுத்து கடையிலேயே மாற்றி , திருமூர்த்திமலை கோயிலுக்கு அழைத்துப்போனார்கள். அதுதான் நான் முதன்முறையாக ரெடிமேட் ஆடை அணிந்தது. இன்னும் அந்த ஆடையின் வண்ணம் உட்பட அனைத்துக் காட்சிகளும் மனதில் இருக்கின்றன. காரணம் அம்மா. அபரிமிதமான அன்பு மட்டுமல்ல, ஆக்ரோஷமான அன்பு அவருடையது. சிறு வயதில் என்னை ஊரில் யாரும் ஒரு வார்த்தை குறை சொல்லி விடக் கூடாது, அவ்வளவுதான் அவர்களுடன் அம்மாவுக்கு அதற்குப்பிறகு ஒட்டுமிருக்காது உறவுமிருக்காது. ஆடி வெள்ளிக்கிழமை தலைச்சன் பிள்ளை ஆண் பிள்ளை பிறந்திருக்கு குடும்பத்தையே ஆட்டம் காணவைக்கும் என்று ஊர்ப்பெண்கள் சொன்னபோது, " ம்க்கும், ஏற்கெனவே ஆடாம நட்டமா நிக்குதாக்கும் " என்று கேட்டு எரிவாள். காங்காரு தன் குட்டியை மடியில் சுமந்தபடியே திரிந்ததைப்போலத்தான் அம்மாவும்.

ஒவ்வொரு வருடமும் அம்மாவிடம் தான் முதல் ஆசி வாங்குவேன். எனது பிறந்தநாளுக்கு முந்தைய தினம் மாலை அம்மாவிடம் செல்கிறேன். கேசரி செய்து வைத்திருந்தார். நான் " என்னம்மா, இன்னிக்கே செஞ்சுட்ட" என்று கேட்கும்போதே,” "என்ன தம்பி,பொறந்த நாளன்னிக்கு ஷேவிங் பண்ணாம,புதுத்துணி போடாம இருக்க ?” என்றார். "அம்மா. நாளைக்குத்தானே ஜூலை22 நாளைக்குத்தான் பிறந்தநாள் " என்றேன்.
இன்னிக்கு ஆடி 6, தமிழ் மாசப்படி இன்னிக்கு தான் உன் பிறந்தநாள் , இங்கிலீஷ் கணக்கெல்லாம் ஆபீஸ்ல கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்கறதுக்கு மட்டும் வச்சுக்க, வேணும்னா உன் பிரன்ட்ஸ் இங்கிலீஸ் தேதில வாழ்த்தட்டும் நீ தமிழ்த்தேதிப்படித்தான் கொண்டாடனும் என்றார். நானும் அப்போது தான் பார்த்தேன் தேதியை. " சரிம்மா , அடுத்த வருசத்துல இருந்து சரியா ஞாபகம் வச்சுக்கறேன்" என்று சொல்லிவிட்டு வந்தேன். சரி இந்தவருசம் நாளைக்கு கொண்டாடிக்கோ என்று அனுப்பிவிட்டார். பிறந்தநாளன்று காலையிலேயே போய் அப்பா,அம்மா காலில் விழுந்து ஆசிகளுடன் ஆளுக்கு ஐநூறு பணத்தையும் வாங்கிக்கொண்டு அலுவலகம் கிளம்பிவிட்டேன் அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் வெளியில் வந்து இன்னும் ஐநூறு தந்தது தனிக்கதை. எப்போதும் இப்படித்தான் தெரிந்து தருவது போக தெரியாமல் இன்னும் கூடுதலாகத் தருவார்.

எனக்கும் அம்மா அப்படித்தான், பாரதிக்கு வாங்கும் அனைத்திலும் அதே பங்கு அளவுக்கு அம்மாவுக்கும் வாங்குவேன். அம்மாவும் எனக்குக் குழந்தை மாதிரித்தான். தேன்மிட்டாய், கடலைமிட்டாய், லாலிபாப்,கேக் என பாப்பாவுக்கு வாங்கும் அனைத்திலும் ஒன்று அம்மாவுக்குத் தருவேன். அவரும் விரும்பி உண்பார்.

இப்படித்தான் துவங்கியது இந்த வருடப் பிறந்தநாள். சரியாகச் சொல்வதானால், ஒரு வாரம் முன்பாகவே பிறந்தநாள் கொண்டாட்டம் துவங்கிவிட்டது. இலக்கிய வட்ட நிகழ்ச்சியிலேயே அபிமதி ஒரு பெரிய பரிசுடன் வந்துவிட்டாள். தான் கைப்பட வரைந்த எனது படத்தை பெரிதாக ஃப்ரேம் செய்து பரிசளித்தாள். பரிசைப் பிரித்துப்பார்க்கும் முன்னரே யூகித்தேன் எனினும் அதைப்பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி. எனக்கு ஒரு தங்கையோ தம்பியோ இல்லை என்று சிறுவயதில் வெகுசில சமயம் நினைத்துப்பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் நிறைய தங்கைகள், தோழிகள்,தோழன்கள், தம்பிகள் கிடைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அனைத்தையும் எனக்குக் கொடுத்தது கவிதையும் அன்பும்தான்.

பிறந்தநாளுக்கு முந்தைய நாளே முகநூலில் வாழ்த்துகள் வரத்துவங்கிவிட்டன. அனைத்துக்கும் அன்று,பிறந்தநாளில்,மற்றும் அடுத்த இரண்டு நாட்கள் வரையிலும் பதில் சொல்லித்தான் முடிந்தது. விரும்பித்தான் இதை அனுமதித்தேன். யாருக்குப் பிறந்தநாள் என்றாலும் தினமும் காலையில் வாழ்த்திவிடுவேன். தினமும் தவறாமல் நான் செய்யும் காரியம் முகநூலில் முதலில் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வது. ஊரில் யாராவது குழந்தைகளுக்குப் பிறந்தநாள் என்றால் ஒரு மிட்டாயும், திருக்குறள் புத்தகமும் பரிசளிப்பேன். முன்பெல்லாம் அலுவலகத்தில் என்னோடு வேலை செய்யும் நண்பர்களுக்கு பேனா, சாக்லேட், சட்டை என பரிசுகள் தந்திருக்கிறேன். காரணம் அம்மா.

என்னைப்போலவே, அவர்களது பிறந்தநாள் அவர்களது அம்மாக்களின் பிறந்தநாள் அல்லவா.. ஆகவே தான்.

நள்ளிரவு 12 மணிக்கு மனைவி புத்தாடைகள் பரிசளித்தாள் , அதே நேரத்தில் பாப்பா தானே வாங்கி தானே எழுதி ஒரு வாழ்த்து அட்டையைப் பரிசளித்தாள்... ஆச்சர்யமாக 12 மணிக்கு தம்பி கார்த்தி அழைத்தான், அண்ணா கதவைத்திறங்க வெளியே நிற்கிறேன் என்று. சந்தோசமாகப் போய்த்திறக்கிறேன் கையில் கேக் பெட்டியுடன் நிற்கிறான். 12 மணிக்கு மேல் கேக் வெட்டி கொண்டாடினோம். வாழ்க்கையில் நான் கேக் வெட்டி கொண்டாடுவது இது இரண்டாவது முறைதான். முதல் முறை சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பன் மோகன் நள்ளிரவில் இப்படித்தான் கேக் பெட்டியுடன் வந்து இன்ப அதிர்ச்சி தந்தான். அதன் பின்னர் இப்போதுதான்.



இரவு அழைத்து வாழ்த்து சொன்ன நண்பர்களிடமெல்லாம் பேசிவிட்டு உறங்கும் போது மணி 2.30. காலையில் 6 மணிக்கு எழுந்து அம்மா வீட்டுக்குச் சென்று ஆசி வாங்கிவிட்டு அலுவலகப் பேருந்தை ஓடோடிப்போய்ப் பிடித்தேன். தொடர்ந்தும் அனைத்து நண்பர்களும் அழைத்து வாழ்த்திக்கொண்டே இருந்தார்கள்.

வாட்சப்பிலும் நிறைய நண்பர்கள் எனது புகைப்படத்தைத்தான் வைத்திருந்தார்கள், குழுக்களிலும் அப்படியே. இதெல்லாம் எனக்கே கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. ஆனாலும் அந்த கண நேர அன்பு தரும் மகிழ்ச்சி பல அழுத்தங்களைக் குறைத்து விடுகிறது என்பது தான் உண்மை. வாழ்வின் மீதும், அன்பின் மீதும், அறத்தின் மீதும் ஒரு நம்பிக்கை கிளைக்கிறது.

கார்த்திகா மாலை வரும்போது தான் வேலைசெய்யும் கடைக்கு வந்து போகும் படி சொல்லி இருந்தாள். தூக்கம், மாலை சீக்கிரம் அப்பா,அம்மாவைப் பார்க்கலாம் என்பதாலும் அலுவலகத்திலிருந்து நேரமே கிளம்பி வந்தேன். கார்த்திகா வகை வகையாக நிறைய பேனாக்களைப் பரிசளித்தாள். நிறைய எழுத வேண்டும் என நினைத்திருப்பாள். எனக்கும் பேனாக்கள் மீது எப்போதும் ஒரு கிறக்கம் உண்டு.

வழக்கம் போலவே செந்தில்மாமா, வினோ மேடம், சோலைமாயவன் புத்தகங்களைப் பரிசளித்திருந்தார்கள். ப்ரியா ஒரு பொம்மையும் பரிசளித்திருந்தார்.

குடும்பம், நண்பர்கள், உறவுகள் என அனைவரும் வாழ்த்தினார்கள். முகநூலில் நான் மதிக்கும் பெரிய எழுத்தாளர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தியது மிக மகிழ்ச்சியானதாக இருந்தது.

அலைபேசியில் வாழ்த்தியவர்கள் அனைவரும் கேட்டது, அப்புறம் இன்னிக்கு என்ன ஸ்பெஷல் என்று தான். அனைவருக்கும் ஒரே பதிலையே சொல்லி இருந்தேன். இன்று மற்றுமொரு நாள்தான் பெரிதாக சிறப்பில்லை என்று. ஆனால் உண்மையில் அது மற்றொரு நாளன்று. நான் எனக்கு எத்தனை உறவுகளின் கரங்கள் இருக்கின்றன பற்றிக்கொள்ள என்று காட்டிய நாள்.

நான் அம்மாவுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்று உணர வைக்கும் ஒவ்வொரு நாளிலும் இது இன்னும் அழுத்தமான நாள் …

வாழ்த்திய, உடன் இருக்கின்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி











4 கருத்துகள்:

  1. அண்ணா உங்களோடு சேர்த்து அம்மாவுக்கும் எனது பேரன்பும் பிரியங்களும் முத்தங்களும்.. ஏனோ படிக்கும் போது கண்ணீர் துளிர்த்துவிட்டது..பேரன்பு போல ஏதும் இல்ல அண்ணா <3

    பதிலளிநீக்கு
  2. அண்ணா உங்களோடு சேர்த்து அம்மாவுக்கும் எனது பேரன்பும் பிரியங்களும் முத்தங்களும்.. ஏனோ படிக்கும் போது கண்ணீர் துளிர்த்துவிட்டது..பேரன்பு போல ஏதும் இல்ல அண்ணா <3

    பதிலளிநீக்கு