புதன், 20 ஜூலை, 2016

ஒரு டீ சொல்லுங்கள் - இரண்டாம் குவளைத் தேநீர் கொஞ்சம் கூடுதல் கதகதப்புடன்


ஒரு டீ சொல்லுங்கள் - இரண்டாம் குவளைத் தேநீர் கொஞ்சம் கூடுதல் கதகதப்புடன்


கவின் கொண்டு வந்த ஒரு டீ சொல்லுங்கள் நினைவில் இன்னும் இருக்கும் நல்ல சென்ரியூ தொகுப்பு. சில வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது அதன் இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது ஒரு டீ சொல்லுங்கள் இரண்டாம் குவளை.



எப்போதும் ஒரு பிரதியின் இரண்டாம் பிரதி முதல் பிரதியின் வெற்றியைத் தக்க வைக்குமா என்பது சந்தேகமே. திரைப்படங்கள் பல இரண்டாம் பாகங்கள் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை கேலி செய்து விடுவது வாடிக்கை. இந்த இரண்டாம் குவளை என்ன செய்திருக்கிறது ?

ராணி நாலா பக்கமும் பறப்பாள்
ராஜா ஒரே எடத்துல இருப்பாரு
மந்திரி சைடு வாங்கியே வருவாரு

- இது வெறும் ட்ரெய்லர் தான் மெயின் பிக்சருக்குள் செல்லலாம்.

சென்ரியூ , உணர்வுகளை நகையுணர்வோடு அதே சமயத்தில் கூர்மையாக நறுக்குத் தெரித்தாற் போல வெளிப்படுத்தும் கவிதை வடிவம். எப்பேர்ப்பட்ட சமூக அரசியல் செயல்பாடுகளையும் எள்ளல் சுவையுடனும் அதே சமயம் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் தைரியத்துடனும் வெளிப்படுபவை.சென்ரியூக்கள்.

நம்மவர்களுக்கு ஹைக்கூவுக்கும், சென்ரியூவுக்கும் வித்தியாசம் தெரியவேண்டும். அதற்காக இவற்றுக்கு இடையேயான வித்தியாசங்களை இரண்டு பக்கங்களுக்கு அட்டவணை போட்டு எடுத்துக்காட்டுகளுடன் பள்ளிக்குழந்தைகளுக்கான துவக்க நிலைக் கையேடு போல எளிமையாக விளக்கியுள்ளார் கவின். இது அவசியம் தான். சென்ரியூவுக்கும் ஹைக்கூவுக்குமான.வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு நல்ல ஹைக்கூ சென்ரியூக்கள் தர விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல புரிதலைத் தரும்.

தெரியாமல்தான் கேட்கிறேன்
எனத்துவங்கும் பெரும்பான்மையும்
தெரிந்தேதான் கேட்கப்படுகின்றன

ஒரு தத்துவார்த்தமான எள்ளலோடு வெளிப்படும் சென்ரியூ இது. இப்படி நிறைய நகைமுரண்கள் நம் வாழ்வில் உண்டு. இப்படியான நமது அன்றாட வாழ்வின் நகைச்சுவைகளையும் சென்ரியூ பேசும்.

சமூகத்தின் எல்லா அநீதிகளுக்கும் முதலில் குரல் கொடுப்பது அடிமட்டக் குடிமகனாகத்தான் இருப்பான். அவனுக்குத்தான் வாழ்வின் வலி தெரியும். அநீதிகளுக்கு மட்டுமல்லாது எல்லா பேரிடர்களிலும் உன்னிப்பாக கவனித்துப்பார்த்தால் அவர்கள் தான் மிகப்பெரிய மீட்புக் காரியங்களில் ஈடுபட்டு பல உயிர்களைக் காத்திருப்பார்கள். இது நாம் நமது சமகாலத்திலும் கண்ணுற்ற உண்மை. அந்த உண்மையைத்தான் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்கிறது இந்த சென்ரியூ ..

கோடீஸ்வரன் கமுக்கமாகத்தான் இருக்கான்
நூறு ரூபாய்கூட இல்லாதவனுக்குத்தான்
தர்மமும் நியாயமும் பெருங்கோபமும்


இலக்கியவாதிகளிடம் காணக்கிடைக்கும் நகைச்சுவைகளை நாம் ரூம் போட்டு விவாதிக்கலாம் சிரிக்கலாம்.நாமும் அதில் ஒரு பாத்திரமல்லவா?

கவிதைப்புத்தகம்
வாசிக்கக் கொடுத்தவுடன்
Font சரியில்லை என்கிறார்கள்

இந்தக்கவிதையை ஒரு குற்றவுணர்ச்சியோடும் நமட்டுச்சிரிப்போடும் தான் கடக்க முடிகிறது.

சென்ரியூவில் சொற்களின் சதிராட்டம் அதன் தன்மைக்குக் கைகொடுக்கும். அவை ஒரு சொல்லில் பல்வேறு பொருள்களுடன் இருக்கும் போது தனிச்சுவையைத் தருகின்றன.

உன்
ஓட்டு
சாவடி

இந்தக் கவிதையில் சாவடி என்பது சிலேடையாக வெளிப்பட்டு இதை சென்ரியூவாக்குகிறது.

பலமுறை, செய்திகளில் விபத்துகள் பற்றிய செய்திகளைப்பார்க்கும் போது நாம் அங்கலாய்க்கும் ஒன்று கடவுளைக் கேள்விக்குறியாக்குவது.

புனித யாத்திரைகளில் இது மாதிரியான விபத்துகள் நடக்கும் போதெல்லாம் கடவுளின் மீதான நம்பிக்கை கொஞ்சம் சிதையும்.

வானவேடிக்கையில் 100 பேர் பலி
அன்புள்ள கடவுள்
நீ இருக்கியா செத்துட்டயா

கடவுளின் இடத்தில் வான வேடிக்கையில் 100 பேர் பலி என்றால் அதில் ஒருவர் கடவுளாகவும் இருக்கலாம் எனும் கேள்வியில் வெளிப்பட்ட சென்ரியூ இது.

இப்படியாக, வேறெங்குமில்லாமல் வாழ்வின் தினங்களிலிருந்து தான் சென்ரியூக்கள் பிற.க்கின்றன. நமது அன்றாட பேச்சுகள், வசனங்கள், அனுபவங்களில் அங்கதம் நிறைந்திருக்கிறது. அதுதான் சென்ரியூ எனும் வடிவமாகிறது.ஹைக்கூ செய்தித் துணுக்காகிவிடும் விபத்தைப்போலவே சென்ரியூ வசனமாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

அதைத்தாண்டித்தான் நாம் நல்ல சென்ரியூக்களைப் படிக்கவும் படைக்கவும் வேண்டும்.

இரண்டாம் குவளை ஒரு டீ சொல்லுங்கள் தொகுப்பில் அவற்றை சுவைக்கலாம் ...

ஆசிரியர் : கவின்
வெளியீடு : இடையன் இடைச்சி நூலகம்
தொடர்புக்கு : 9942050065, 9842426598

1 கருத்து: