வியாழன், 24 டிசம்பர், 2015

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளி விருது

கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன் கணபதியிலிருந்து. மாலை ஆறு மணியிருக்கும். அலுவலகம் முடிந்து ஊஞ்சல் இலக்கியக்கூட்டத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். கவிஞர் சிற்பி  அவர்களின் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. அவரது எண்ணைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட நான் அவருக்கு அழைத்ததில்லை. அவர் இதற்கு முன் ஒரே ஒரு முறை என்னை அழைத்துள்ளார். அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் கருந்துளை சிற்றிதழில் நாங்கள் எழுதிய தலையங்கம் சிறப்பாக இருந்தது என்று பாராட்ட. இத்தனை நாட்கள் கழித்து இப்போது தான் அழைக்கிறார் என்றதும் நிச்சயம் முக்கியமான செய்தியாக இருக்கும் என நினைத்தேன். எதாவது நிகழ்ச்சிக்கு அழைப்பார் என்று தான் நினைத்தேன்.

அலைபேசியை எடுத்ததும் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். இப்போது வீட்டுக்கு வரமுடியுமா என்று கேட்டார். பேருந்து சத்தத்தில் நான் பேசுவது அவருக்குக் கேட்கவில்லை. உடனே பாதி வழியிலியே பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன். நடந்து கொண்டே பேசுகிறேன். " அய்யா, கோவையில் இருக்கிறேன், ஊஞ்சல் இலக்கியக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறேன் இப்போது கிளம்பினாலும் வர இரவாகிவிடும். நாளை வரட்டுமா என்ன விசயம் ?” என்றேன். அவர், “ வேறொன்றும் இல்லை, நல்ல செய்திதான், உலகத்தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளி விருதுக்கு, தங்களைத் தேர்வு செய்திருக்கிறோம். வாழ்த்துகள் "என்றார்.  எனக்குத் தலைகால் புரியவில்லை சந்தோஷத்தில். “ என்னென்ன பேசினேன் என்று கூட நினைவிலில்லை. அவர் " இன்னும் சில தினங்களில் அவர்கள் அழைப்பார்கள், அதுவரை பொறுத்திருங்கள் " என்றார்.

அந்தக்கணத்தின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. உடனடியாக இதை முதன் முதலாக கவிஞர் அம்சப்ரியா அவர்களிடம் தான் சொல்ல வேண்டும் என நினைத்தேன். இந்த விருதுக்கு எங்கள் அனைவரின் தொகுப்பையும் அவர்தான் அனுப்பி வைத்தார். மேலும், நாங்கள் இருவரும் இணைந்து நடத்தும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் மூலம் எங்கள் நட்பும், நட்பு வட்டமும் அதிகரித்தது. அதன் மூலம் பரவலாக அறியப்பட்டேன். மேலும் அம்சப்ரியா ஒரு ஆசானாக இருந்து என்னை வழிநடத்துவார், நல்ல நண்பனாக எனது இலக்கிய மற்றும் சொந்த விஷயங்களில் நிறைய ஆலோசனை சொல்வார். அவருக்கு அழைத்தால் எடுக்கவில்லை, ஒரு மணி நேரம் கழித்து பள்ளி விட்டு வெளியில் வந்ததும் அழைத்தார். அப்போது அவரிடம் சொன்னேன் விஷயத்தை அவரது குரலிலும் உற்சாகம் தொற்றிக்கொண்டது மிகவும் மகிழ்ந்தார். அவரிடம் சொன்ன பின்பு பெற்றோரிடம், மனைவியிடம் மற்றும் குறிப்பிட்ட நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

டிசம்பர் 19 அன்று நிகழ்ச்சி என்று உறுதியாகி அழைப்பிதழ் வந்து விட்டது. நானும், அம்சப்ரியா,மாமா, சோலை மாயவன், புன்னகை ஜெயக்குமார் அனைவரும் அழைப்பிதழை நிறைய நண்பர்களுக்குக் கொண்டு சேர்த்தோம்.

அந்த நாளும் வந்தது … டிசம்பர் 19.

அப்பா,அம்மா கேன்டீன் வைத்திருக்கிறார்கள் விடுப்பு சொல்லிவிட்டனர். மாமா, மனைவி, மச்சான் , அம்சப்ரியா அனைவரும் விடுப்பெடுத்துவிட்டனர். பள்ளி சேர்ந்த 5 வருடங்களில் பாரதி ஒரு நாள் கூட விடுப்பெடுக்கவில்லை. எந்தக் காரணத்துக்கும் எடுக்க முடியாது என்று சொல்லி விடுவாள். எங்கள் வீடு புண்ணியர்ச்சனையின் போது கூட ஒரு மணி நேரம் இருந்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றுவிட்டாள். ஆனால், எனக்கு விருது என்றவுடன் ஒருமுறை கூட மறுப்புச் சொல்லாமல் விடுப்பு எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள் எங்களுக்கெல்லாம் அவ்வளவு ஆச்சரியமும் சந்தோஷமும்.
நாங்கள் அனைவரும் மாமா,கார்த்தி அனைவருடனும் நண்பர் ஒருவரின் காரில் புறப்பட்டுவிட்டோம். கல்லூரிக்குள் நுழைந்து, அரங்கத்துக்குள் நுழைந்தவுடன் என்னைத் தனியே அழைத்துப் போய் சிறப்பு விருந்தினர்களுக்கு அறிமுகம் செய்து உரையாட வைத்தனர். நல்ல பழனிசாமி அய்யா, சிற்பி அய்யா உட்பட அனைவரும் அவ்வளவு இனிமையாகப் பழகினர்.

மிகச் சரியாகப் பத்துமணிக்கு நிகழ்ச்சி துவக்கம். அப்போது தான் எங்களை மேடைக்கு அழைத்து வந்தார்கள்.. மேடையில் அமர்ந்த பின்பு தான் வந்திருந்த நண்பர்களைக் கவனித்தேன்...

பொள்ளாச்சியிலிருந்து இரண்டு கார்களில் அம்சப்ரியா,புன்னகை ரமேஷ், அறவொளி,உமா அறவொளி,ஆன்மன்,சோலை மாயவன், புன்னகை ஜெயக்குமார்,ஆன்மன், இன்பரசு,கிருத்திகா , கோகிலா, கீதாப்ரகாஷ் ஆகியோர் வந்திருந்தார்கள்.

கோவையிலிருந்து இளஞ்சேரல்,பொன் இளவேனில், தெய்வீகன்,அனாமிகா, இலக்கியன் விவேக்,த.வாசுதேவன்,பாலச்சந்தர்,சுபாலன்,செந்தில்  வந்திருந்தனர்.அவினாசியிலிருந்து அனிதா வந்திருந்தார்.

இரா.பானுமதி அவர், அவரது மகள் மற்றும் மகளின் இரண்டு தோழிகளுடன் வந்திருந்தார். மூவரும் என் கவிதைகளின் ரசிகைகளாம். கண்கள் விரிய நன்றி சொன்னேன்.

இவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்க நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது...

மூவருக்கு விருது, ஒரு நூல் வெளியீடு. இது தான் திட்டம். மேடையில் இருந்ததிலேயே பொடியன் நான் தான்.

பேராசிரியர் கா.செல்லப்பன் அவர்களுக்கு தமிழறிஞர் விருது, திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு இதழியல் விருது, இவனுக்கு இளம் படைப்பாளர் விருது.

எங்களைப் பற்றி அறிவித்ததும், முதலில் பூச்செண்டு கொடுத்தார்கள். விருது பெறுபவர்களை சிற்பி அய்யா அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்கள்.
பின்னர் டாக்டர் கிருஷ்ணராஜ வானவராயர் கைகளால் விருது வழங்கினார் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள். முதலில் ஒரு பொன்னாடை போர்த்தினார், பின்னர் ஒரு பெரிய கேடயம் அதில் என்னைப்பற்றிய அறிமுகம், எனது செயல்பாடுகள் அடங்கிய தகவல்களை அச்சிட்டு ப்ரேம் செய்து வழங்கினர், பின்னர் தங்க நிற விருதுக் கேடயம். அதன் பின்னர் ஒரு அழகான பொற்கிழியில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம். சகலமும் நிறைந்தது. எவ்வளவு பெரிய விருதும் மதிப்பும் எளியவனுக்கு.










நூல் வெளியீடு,அறிமுகத்தில் கொஞ்சம் காலம் கடந்ததால் என்னைப் பதினைந்து நிமிடத்துக்குள் பேசுமாறு ப.க.பொன்னுசாமி அய்யா அவர்கள் அறிவுறுத்தினார். நீங்கள் சொல்லாவிட்டாலும் நான் அவ்வளவு தான் பேசுவேன் என்று பேசக் கிளம்பினேன்.

இது எனது முதல் விருது, முதல் பிரம்மாண்ட மேடை, எனவே ஒருவர் விடாது அனைவருக்கும் என் நன்றியைச் சொல்லிவிட வேண்டும் என விரும்பினேன். நான் பேசத்துவங்கி சற்று நேரத்தில் என் பெற்றோரைப் பற்றிச் சொன்னதில் , என் அப்பா கண் கலங்கிவிட்டார் என்று மனைவி சொன்னார். மகளைப்பற்றிச் சொல்லும்போது அவளும் அழுதுவிட்டாளாம். இதையும் மனைவி சொன்னாள். கடைசி வரை அவளும் கண்கலங்கினேன் எனச் சொல்லவில்லை. அனிதா இதை என்னிடம் சொல்லிவிட்டாள்.

நான் பேசிக்கொண்டிருக்கும் போதே 13ஆவது நிமிடத்திலேயே ப.க.பொன்னுசாமி அய்யா தந்த சமிக்ஞையால் திட்டமிட்ட அனைத்தையும் பேசாமல் கீழிறங்கிவிட்டேன் இடையில் நிறுத்திக்கொண்டு. பேசியிருக்க வேண்டிய சொற்கள் இன்னும் உள்ளுக்குள் குதிக்கின்றன .
எனது பேச்சின் எழுத்து வடிவத்தை அடுத்த பதிவில் பதிந்திருக்கிறேன் பாருங்கள்.

நிகழ்ச்சி முடிந்து நண்பர்களிடம் பிரியாவிடை பெற்று வண்டியில் வரும்போதே ஒரு லட்சம் பணத்தை அம்மா, அப்பாவிடம் கொடுத்து இந்தப்பணத்தை என் எந்தச் செலவுக்கும் கேட்க மாட்டேன் இதில் உங்கள் இருவருக்கும் பிடித்ததை வாங்கிக் கொள்ளுங்கள். அம்மாவுக்காவது எதாவது வாங்கித் தந்திருப்பேன். அப்பாவுக்கு இதுவரை பெரிதாக எதுவுமே வாங்கித் தந்ததில்லை, அப்பாவுக்கு தங்கச் சங்கிலி ஒன்று போட்டால் ஜம்மென்று இருப்பார் அதையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். பெருமிதத்தில் இருந்த அவர்கள் கண்களில் இருந்தேன் நான்.

இந்த விருது என்னை உசுப்பியிருக்கிறது. என்னை நிறைய யோசிக்க வைக்கிறது மகிழ்ச்சியை விடவும் அதிகமாக. பொதுவாகவே நல்லவன் அனைவருக்கும் நல்லவனாக இருக்கிறேன் என்பதையும் உடைத்திருக்கிறது.
எல்லோரிடத்திலும் அன்பை யாசிப்பவன், அனைவருக்கும் பிரியமானவன் என்பதைத் தாண்டி, நெருக்கமானவர்களின் பொறாமைக்கண்கள் என் மீதும் உண்டு என்பதையும், வாழ்த்துகள் எனச் சொல்லக் கூட விரும்பாமல் விலகிப் போனவர்களையும் இந்த விருது அடையாளம் காட்டியிருக்கிறது. யார் மீதும் எந்தக் குறையுமில்லை. எல்லோர்க்கும் என் அன்பு.
வந்திருந்த அத்துனை நல்ல நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் நன்றி.. வராமல் போன இன்னும் சில முகங்களைக் கண்கள் தேடின என்பதும் உண்மைதான் ..



10 கருத்துகள்:

  1. உணர்வான தருணங்கள் சேமித்து வையுங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நிகழ்ச்சிக்கு நேரில் வந்து பார்த்த நிறைவு கொண்டது நெஞ்சம்,இக்கட்டுரையும் புகைப்படங்களும் கண்டே,
    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  3. உங்களது பணிக்கு இது தகுந்த அங்கீகாரம்,வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  4. உங்களின் அர்த்தமுள்ள கவிகள்,உண்மையான தமிழ்பற்று,கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்,உங்களுக்கு கிடைத்திருக்கிறது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் பூபாலன். - கிருஷ்.ராமதாஸ், துபாய்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் பூபாலன். - கிருஷ்.ராமதாஸ், துபாய்.

    பதிலளிநீக்கு