செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா சார் ?

மாலை நேரத்து வானம் மேகங்களைத் திரட்டி குவித்து வைத்திருந்தது. வழக்கத்துக்கு முன்பாகவே இருட்டி விட்டது பொழுது. எப்போது வேண்டுமானாலும் வானம் பொத்துக்கொண்டு ஊற்ற  ஆரம்பிக்காலாம். வேலை முடிந்து வேகமாக ஓடிவந்து பேருந்து  ஏறினேன். சில இருக்கைகள் காலியாக இருக்க ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அருகில் ஏற்கனவே அமர்ந்து இருந்தவருக்கு என்னை விடவும் இரண்டு வயது குறைச்சலாக இருக்கலாம். கிராமத்து இளைஞனைப் போன்ற வெள்ளந்தியான தோற்றம் ( ஆம், அதை விவரிக்கத் தேவையில்லை, இந்த ஒரு வார்த்தையில் நீங்கள் யூகித்துக் கொள்ளலாம் ). நடத்துனரிடம் ரெண்டு டிக்கட் என்று கேட்டார் அருகில் இருந்தவர், கேட்டுவிட்டு உடனே இல்லை ஒன்னு குடுங்க என்று ஒரு டிக்கட் மட்டும் வாங்கிக் கொண்டார். அலைபேசியைப் பார்ப்பதும் வெளியில் பார்ப்பதுமாக ஒரு மாதிரி அவசரகதியிலேயே இருந்தார். நடத்துனர் வந்து போன பிறகு நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கியிருந்தேன். மழைக்கு முன்பான பரபரப்பில் சாலையும் மனிதர்களும் வாகனங்களும் வேகம் காட்டிக் கொண்டிருந்தனர்.
அலைபேசி ஒலிக்க எடுத்து ஏதோ மெதுவாகக் கொஞ்ச நேரம் பேசியவர்; சுற்றிலும் ஆட்கள் இருப்பதை, அது பேருந்து என்பதை எல்லாம் மறந்துவிட்டு  சற்றைக்கெல்லாம் சத்தமாகப் பேசத் தொடங்கிவிட்டார் " மச்சான், ஒன்னும் இல்லை. நான் பொள்ளாச்சி போயிட்டு இருக்கேன். பஸ் ஏறிட்டேன். காலைல முதல் பஸ்ஸ புடிச்சு வந்துடுவேன் . பாத்துக்க டா " என்று சொல்லும் போதே உடைந்தவர் தேம்பி அழ ஆரம்பித்தார். மறுமுனையில் இருப்பவர் ஏதோ சமாதானம் சொல்லியிருக்கக் கூடும். “ சரிடா, சரிடா பஸ்ல இருக்கேன். நான் பாத்துக்கறேன். நீ பாத்து இரு " என்று அலைபேசியைத் துண்டித்துவிட்டு அதன் தொடு திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் நீர் இன்னும் கோர்த்து திரண்டிருந்தது.
என்ன என்று கேட்கலாமா வேண்டாமா என்று அவ்வளவு யோசனையும் தயக்கமுமாக இருந்தது. வெளியூர்க்காரர் மாதிரித் தெரிந்தார். நாமே கேட்காமல் விட்டால் யார் தான் அவருக்கு ஆதரவாகக் கேட்பது என்று தோன்றியது. அவரது தோளைத் தொட்டழைத்தேன் " சார், என்ன ஆச்சு. ஏன் அழுதீங்க " என்று நேரடியாகக் கேட்டுவிட்டேன். அவர் அதை எதிர்பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்கள் அவர் மட்டுமே பேசினார் " சார் ஃபிரெண்டுக்கு உடம்பு சரியில்ல சார்,  வேலை செய்ய செய்ய அப்படியே மயங்கி விழுந்துட்டான் சார். அவன் எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட் சார், அவனுக்கும் அப்பா இல்லை சார். ஆஸ்பத்திரில சேர்த்ததும் டாக்டர் குறைந்த ரத்த அழுத்தம் , ராத்திரி ஐ.சி.யூ ல இருக்கட்டும் னு சொல்லிட்டாங்க சார். ரொம்ப பாவம் சார் , அதான் தாங்கல " என்றார்.
 எனக்கும் கண்கள் கலங்கி விட்டன, உடன் பணிபுரியும் நண்பனுக்காக இவ்வளவு துடிக்கிற நண்பன் உண்மையில் வரம் தானே. மேலும் பேசியதிலிருந்து அவர் ஒரு தனியார் குறுந்தொழில் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிகிறார் என்று தெரிந்தது. “ சார், இதுக்கு ஏன் அழறீங்க. லோ பி.பி எல்லாம் சாதாரணம் ஒன்னும் ஆகாது. கவலை படாதீங்க. செலவுக்கு பணம் எதும் வேணுமா " என்று கேட்டேன்.
 இல்ல சார், நேத்து ஓனரே பணம் கட்டிட்டாரு ஆஸ்பத்திரிக்கு. மேல் செலவுக்கு பணம் வேணும், பொள்ளாச்சி ல சித்தப்பா வீடு அருக்கு அங்க பணம் குடுத்து வச்சிருக்கேன். அதை வாங்க தான் போயிட்டு இருக்கேன் ; ஒன்னும் பிரச்சினை இல்லை. பணம் எல்லாம் வேண்டாம் சார் " என்றார்."நேத்து அவன் கண்ணெல்லாம் சொருகி விழுந்துட்டான் சார் அதான் கொஞ்சம் பதட்டமாயிடுச்சு.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா சார் ? “ என்றார்.
அப்போது இருந்த மனநிலையில் தொண்டை வரை வெளியில் வரப்பார்த்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு “ இருக்குங்க சார், சொல்லுங்க" என்றேன் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று யூகித்தபடி.. “ கடவுள் நம்பிக்கை இருந்தா, முடிஞ்சா அவனுக்காக வேண்டிக்கோங்க சார், நாளைக்கு நல்லாகி வந்துடனும் " என்றார். “ கண்டிப்பா வேண்டிக்கிறேன். நல்லாயிடுவார் தைரியமா இருங்க " என்று சொல்லிவிட்டு ஜன்னலைப் பார்க்கத் துவங்கியிருந்தேன். மழை லேசாகத் தூற ஆரம்பித்தது. எனக்கு முன்னாலேயே பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவர். கீழே இறங்கியதும் திரும்பி நான் இறங்கும் வரைக்கும்  காத்திருந்து கையசைத்து போய் வருகிறேன் சார் என்று சொல்லிவிட்டு சென்றார். ஒரே ஊருக்கு இரண்டு பேரும் வேறு வேறு பேருந்தில் ஏறிக் கிளம்பிவிட்டோம்.



x

6 கருத்துகள்:

  1. மனிதம்.. அதுதான் மனிதர்களை இணைப்பது. அதற்கு கடவுள் ஏது, மதம் ஏது, சாதி குறியீடுகள் ஏது..

    பதிலளிநீக்கு
  2. நானும் அந்த நண்பருக்காக, பிரார்த்திக்கிறேன் சார்!

    பதிலளிநீக்கு
  3. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு

    பதிலளிநீக்கு