திங்கள், 19 ஆகஸ்ட், 2019

தீராத விளையாட்டுப் பிள்ளை

மகள் பாரதியின் இந்தி சிறப்பு வகுப்பு ஆசிரியை ஆயிஷா புதிதாக மழலையர் விளையாட்டுப் பள்ளி ஆரம்பித்துள்ளார். பள்ளியின் அறிமுகத்துக்காக குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் பாரதியை பரதநாட்டியம் ஆட முடியுமா என்று கேட்டிருந்தார். பாரதி மாமா மகள் தமிழியும் உடன் ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தங்களது நடன ஆசிரியை கவிஞர் கீதா ப்ரகாஷ் அவர்களின் பயிற்சியோடு சிறப்பாக நடனமாடினர் கடந்த ஞாயிறு நடைபெற்றது நிகழ்வு.. இது முன் தகவல்




முதல் நிகழ்வாகவே ஒரு வந்தனம் மற்றும் பாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளை பாடல் என இவர்களது நடனம் சிறப்பாக முடிந்தது ஆனால் முழு நிகழ்வையும் இருந்து பார்த்தோம்.

குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த எதை வேண்டுமானாலும் மேடையில் செய்யலாம். அவர்கள் அனைவருக்கும் பரிசு என்கிற சுதந்திரம் எனக்குப் பிடித்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்துக்கு சுமார் 20 மழலைகள் மேடையேறினர்.

ஒரு குழந்தை திருக்குறள் சொன்னது, ஒரு குழந்தை ஜானி ஜானி எஸ் பாப்பா சொன்னது, ஒரு குழந்தை வழக்கம் போல தனது அம்மாவுடன் ரெய்ன் ரெய்ன் கோ எவே சொன்னது…

ஒரு குழந்தை வந்தது.. எல்லோருக்கும் வணக்கம் என்றது எல்லோருக்கும் வணக்கம் என்றது மீண்டும் எல்லோருக்கும் வணக்கம் என்றது பிறகு மீண்டும் எல்லோருக்கும் வணக்கம் என்றது.. அதற்குப் பிறகு என்ன சொல்வது என்று மறந்து விட்டது போலும் , மேடைக்குக் கீழே இருந்து அம்மா ஏதேதோ சைகையில் காட்டினார்.. ம்ஹூம் மறந்தே போச். சிரித்துக் கொண்டே இறங்கிக் கொண்டது மேடையிலிருந்து.

ஒரு குழந்தை தனது அப்பா சொல்லச் சொல்ல திருப்பிச் சொன்னது. ஒரு குழந்தை தனது அம்மா சொன்னதற்கெல்லாம் மலங்க மலங்க விழித்துக் கொண்டே நின்று விட்டு இறங்கிவிட்டது. ஒரு குழந்தைக்கு அழகாக அலங்கரித்து அட்டையில் கேக் போன்ற உருவத்தைச் செய்து அனுப்பி இருந்தார்கள், அது வந்து அதை வெட்டுவது போல பாவித்து விட்டு ஹேப்பி பர்த்டே டூ யூ என்று பாடிவிட்டுச் சென்றது. கிருஷ்ணர் வேடம் போட்ட ஒரு குழந்தை பானையுடன் வந்தது பானையில் ஐஸ்கிரீம் போட்டு அனுப்பி இருப்பார்கள் போல, வந்து மேடையில் அமர்ந்து அழகாக வாயெல்லாம் ஆக்கிக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு சென்றது ; கேட்பவர்களுக்கெல்லாம் சிறு கை அழாவிய கூழென ஒரு பிடி கூழ்மத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றது. ஒரே கை தட்டல் குழந்தைக்கு…





மிகப் பெரிய நிகழ்வென்றோ, முழு நிறைவாக குறைபாடுகளற்ற ஒரு நிகழ்வென்றோ கண்கள் ஆராயவில்லை.. ஆனால் உற்சாகத்துக்குக் குறைவில்லை… குழந்தைகள் எது செய்தாலும் அழகு.. எதுவுமே செய்யாமலிருந்தாலும் அழகு ..

மனம் என்ன நிலையில் இருந்தாலும் , அத்துணை இறுக்கங்களின் முடிச்சுகளையும் அவிழ்த்துவிட்டு இலகுவாக்கிட வேறு எதையும் விட ஒரு குழந்தை போதுமானதாக இருக்கிறது…

குழந்தைகளைப் பார்த்து ரசித்தபடிக் கழிந்த அந்தப் பொழுதில் மிகச் சாதாரணமான நகைச்சுவைக்கும் மிக மகிழ்வாகச் சிரித்தேன், மிகச் சின்ன அசைவுக்கும் பெரு உற்சாகத்தோடு கை தட்டினேன்,

குழந்தைகள் கலை இலக்கியக் கொண்டாட்டம் என பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் துவங்கிய முன்னெடுப்பு எவ்வளவு முக்கியம் என்று புரிந்தது. குழந்தைகளின் உலகத்துக்குள் பெரிய மனிதர்களால் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடிவதில்லை. அவர்களின் மகிழ்ச்சியை அவர்களின் கொண்டாட்டத்தை அவர்களின் குழந்தைமையைத் தக்க வைக்க குழந்தைகள் கலைக் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அமைப்பும் செய்து தான் ஆக வேண்டும்..

கதைகளின் வழியாக, பாடலின் வழியாக நாம் புத்தகக் கல்வியைக் காட்டிலும் அதிகம் சொல்லித் தந்துவிட முடியும் என நம்புகிறேன்..











1 கருத்து:

  1. குழந்தைகள் எது செய்தாலும் அழகு.. எதுவுமே செய்யாமலிருந்தாலும் அழகு

    Beautiful sir :)

    பதிலளிநீக்கு