திங்கள், 5 மார்ச், 2018

அப்பாவின் நினைவுக்கு ஆண்டு ஒன்று

காடு மேடுகளிலெல்லாம்
தோளிலும் முதுகிலும் 
தூக்கிச் சுமந்த
அப்பாவை
நினைவுகளில் மட்டுமே
சுமந்தலையும் படி
விதி செய்து
ஆண்டொன்றும் ஆகிப்போனது


___________________

அம்மாவின் கருவறையிலிருந்து
வெளியேறிய கணம் முதல்
கோர்த்துக் கொண்டு உடனழைத்து வந்த
விரல்களை திடுதிப்பென்று
விடுவித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் அப்பா.

பணமதிப்பிழப்பு வரிவிதிப்பு
எரிபொருள் பேருந்து கட்டணம் ஏற்றம்
என என் பொடனியில் அடித்தபடியிருக்கிறது அரசு.
சகல சூழல்களிலும் உடனிருப்பேன் உடனிருப்பேன்
என்றவள்
என்றாவதொருநாள் தான் உண்மையில் இருக்கிறாள்
முதுகில் தடவிக்கொடுத்தபடியே இருந்த
கைகள்
இத்தனை காலம் வளர்த்துக்கொண்ட
நகங்களால் ஆழக்கீறி குருதிபார்க்கின்றன
ஏன் கவிதை எழுதவில்லை
எனக் கேட்டபடியிருக்கும் குரல்களுக்கான
பதிலை
எப்போதும் உச்ச வெப்பநிலையில் கொதிகொதித்தபடியே இருக்கும்
மனதின் அடியாழத்துக்குக் கடத்திவிடுகிறேன்
எல்லாவற்றிலிருந்தும் கவிதைகளின் வழியே
தப்பியோடிக் கொண்டிருந்தவன்
எல்லாவற்றிடமும் கவிதைகளின் வழியே
சிக்கிக் கொள்கிறேன்
இப்போதெல்லாம்

____________________

அப்பாவுக்கு மனிதர்களைத் தெரிந்திருந்தது யாரை விடவும்.
எங்களின் கற்பிதங்களைக் கலைத்து
யார் யார் என்னென்ன முகமூடிகளுடன் வருகிறார்கள் என்பதைத் தெளிவாக்குவார்.
அப்பாவுக்கு கடவுள்களைப் பற்றியும்
தெரிந்திருந்தது.
எந்தெந்தக் கோவிலில் எதெதற்குப் பரிகாரம்
எந்தக் கடவுளுக்கு என்ன சிறப்பு என அடுக்குவார்.
விலங்கினங்களையும் அறிந்தவர்
ஆடு எந்த நாளின் எந்நேரத்தில் குட்டி ஈனும்
மாட்டின் ஈனக் குரல் எதன் பொருட்டு
சுவர்ப்பல்லி ஏன் கத்துகிறது
காகம் ஏன் கரைகிறது என்பதாக.
மரம் செடி கொடிகளையும் இப்படித்தான்
தெரிந்து வைத்திருந்தார்.
எங்களையும் முழு முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார்
எல்லாரையும் போலவே
எல்லாம் தெரிந்த அப்பாவுக்கு
எல்லாரையும் போலவே
தனது மரணம் தெரிந்திருக்கவில்லை
ஆகவே தான் அந்தக் கருப்பு இரவிலும்
கேட்டபடியிருந்தார்
" ஏம்பா, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கள்ல ?"

4 கருத்துகள்: