புதன், 28 செப்டம்பர், 2016

புன்னகை கல்விச்சுடர் விருது 2016

சோலை மாயவன்

கவிஞர் , ஆசிரியர் சோலை மாயவன் (எ) மூர்த்தி அவர்களுக்கு கடந்த பொள்ளாச்சி இலக்கியவட்டத்தில், புன்னகை சிற்றிதழ் சார்பாக கல்விச்சுடர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த விருது, தொடர்ந்து கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது. இந்த ஆண்டுதான் முதன் முதலில் இந்த விருதை புன்னகை அறிவித்திருக்கிறது.

இந்த விருது ரூபாய் மூவாயிரம் ரொக்கப்பணத்தையும், சான்றிதழையும் பட்டயத்தையும் உள்ளடக்கியது.

கவிஞர் சோலைமாயவன் சிறந்த கவிஞர், நல்ல வாசகர், மிகச்சிறந்த ஆசிரியர். நேர்மையான நல்ல மனிதர். கடின உழைப்பாளியும் சேவகரும் கூட. சமத்தூர் அரசுப்பள்ளியில் உதவித் தலைமையாசிரியாரகப் பணியாற்றுகிறார். கொலுசு மின்னிதழ் மற்றும் புன்னகை சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார்.

தொடர்ந்து பொள்ளாச்சி இலக்கிய வட்டம், புன்னகை ஒருங்கிணைக்கும் இலக்கிய நிகழ்வுகள்,சமுதாயப் பணிகள் அனைத்திலும் முழு ஈடுபாட்டுடன் இறங்கி செயலாற்றும் செயல் வீரர்.
ஒவ்வொரு மாதமும் இலக்கிய வட்ட நிகழ்வுகளுக்காக ஓடி ஓடி வேலை செய்பவர்.
வனத்தில் மிதக்கும் இசை எனும் கவிதைத் தொகுப்பை, பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடாக கடந்த 2014ஆம் ஆண்டு வெளியிட்டிருப்பவர்.
கடந்த சென்னை வெள்ளத்தின் போது, பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மற்றும் புன்னகை சார்பாக வெள்ள நிவாரணப் பொருட்கள் கிட்டத்திட்ட இரண்டு லட்சத்த்துக்கும் அதிக மதிப்பிலாக சேகரித்து கடலூரின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. அப்போது பொள்ளாச்சியிலும் மழை. மழையிலும் இரவு முழுவதும் அலைந்து பொருட்களைச் சேகரிப்பது, சேகரித்த பொருட்களை பொட்டலம் கட்டுவது, வண்டி பிடித்து அனுப்புவது என அனைத்துப் பணிகளிலும் மிகச்சிறப்பாக எங்களுடன் இணைந்து பணியாற்றியவர்.
ஒவ்வொரு வருடமும் தான் பணிபுரியும் பள்ளியில் தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்ளுக்கும் தனது சொந்தப்பணத்தை பரிசுத்தொகையாக சில ஆயிரங்கள் வழங்குகிறார்.
மேலும் மாணவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். கொலுசு நூலகத்துக்கும் இவர் தொடர்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.
சரியான நபருக்கு, சரியான சமயத்தில் இந்த விருது அளிக்கப்பட்டது மிகவும் மகிழச் செய்கிறது.
சோலைமாயவன் அவர்கள் தனது அடுத்த தொகுப்புக்கு தயாராகி வருகிறார். அந்தத் தொகுப்பு நவீன கவிதைகளில் நல்ல வரவேற்பைப் பெறும்.
இந்த விருது அவரது தொடர் பயணத்துக்கான கிரியா ஊக்கியாக இருக்கும். இன்னும் உத்வேகத்துடனும் தன்முனைப்புடனும் அவர் பல நற்செயல்களைத் தொடர வழிகாட்டும். இன்னும் பலவிருதுகள் அவரை அடையட்டும்.
கவிஞர் சோலை மாயவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரை இயங்கச் செய்யும் அவரது காதல் மனைவி அனிதா மூர்த்தி அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் அன்பும்.
புன்னகை கல்விச்சுடர் விருதைத் துவங்கி , அதை சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து வழங்கும் புன்னகை கவிதை இதழுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.
பொள்ளாச்சியில் நிகழும் பல இலக்கிய மாற்றங்களுக்கான முதற்புள்ளியாக விளங்கும் புன்னகையின் ஆசிரியர்கள் கவிஞர் க.அம்சப்ரியா மற்றும் கவிஞர் செ.இரமேஷ்குமார் ஆகியோருக்கு தீரா அன்பு என்றென்றைக்கும் ...



1 கருத்து: