புதன், 14 செப்டம்பர், 2016

சும்மா விளையாட்டுக்கு ...

கொலுசு மின்னிதழில் வெளியாகும் எனது கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையின் இம்மாதக் கட்டுரை ..

தேநீர் இடைவேளை - 6

சும்மா விளையாட்டுக்கு ...

ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. சிந்து பேட்மின்டன் போட்டியில் வெள்ளியும், ஷாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கலமும் வென்று இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியுள்ளார்கள். நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். இது மிகப்பெரிய சாதனைதான். அவர்களுக்குப் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அரசு இவர்கள் உட்பட நான்கு வீரர்களுக்கு கேல்ரத்னா விருதை அறிவித்துள்ளது. மேலும் பல பரிசுகளும், நாடு முழுவதுமிருந்து பல பாராட்டுகளும் அவர்களுக்குக் குவிந்தவண்ணம் இருக்கின்றன. மகிழ்ச்சி. அவர்கள் இதை அடைய எத்தனை தடைகளைத் தாண்டி வந்திருப்பார்கள். வாழட்டும்.

இரண்டு பதக்கங்களுடன் இந்தியா 67ஆவது இடத்தில் உள்ளது பதக்கப்பட்டியலில். எப்போது இந்த மாதிரி சர்வதேசப் போட்டிகள் நடக்கும்போதும், குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் நம்மால் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போய்விடுகிறது. இதைப்பற்றி பல்வேறு ஊடகங்கள், நிபுணர்கள் தங்கள் ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

எத்தனையோ குட்டிக் குட்டி நாடுகள், வறுமையில் உழலும் நாடுகள் எல்லாம் பதக்கப்பட்டியலில் முந்திக்கொண்டு போக, 120 கோடிக்கும் மேல் மக்களையும், மக்கள் வளத்தையும் , வைத்துக்கொண்டு நாம் ஏன் ஒரே ஒரு தங்கப்பதக்கம் கூட வாங்க முடியாமல் போகிறது. சர்வதேச அளவில் நாம் நமது வீரர்களைத் தயார் செய்வதில் பிரச்சினையா, வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் பிரச்சினையா என பல கேள்விகள் ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதெல்லாம் இந்த ஒலிம்பிக் வெளிச்சம் கண்களிலிருந்து மறையும் வரைக்கும் தான். பிறகு அடுத்த 4 வருசத்துக்கு எந்த சத்தமும் இருக்காது. இடையில் ஒரு பத்திரிகையின் கடைசிப்பக்கத்தின் பெட்டிச்செய்திகளில் எங்காவது ஒரு விளையாட்டு வீரன் அல்லது வீராங்கனை ஏதாவது ஒரு ஊரில் வெற்றி பெற்றதாகச் செய்தி வரும் அல்லது போட்டிக்கே போக முடியாத அளவு பொருளாதாரத் தடை, அந்தத் தடை இந்தத் தடை என்று கூட செய்தி வரும். நாம் அதையெல்லாம் படிக்கவே மாட்டோம். இப்படியாக கண்டுகொள்ளாமலே இருந்து, ஒலிம்பிக் அறிவிப்பு வந்து, நம்மவர்கள் கலந்து கொண்டு, காலிறுதி வரைக்கும் வந்துவிட்டால் கமான் இந்தியா என்று கத்துவோம், வெற்றி பெற்றுவிட்டால் கொண்டாடுவோம் அவ்வளவுதான்.

விளையாட்டு துறையில், மற்ற எல்லா துறைகளையும் போலவே லஞ்சம் ஊழல் என சகலமும் மலிந்து கிடப்பதால் தான் நம் நாடு முன்னேறவே இல்லை என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

நம் ஊரில் விளையாட்டுத்துறையில் சாதிப்பதென்பது மிகப்பெரிய விசயம், பாதைகளே இல்லை, வழிகாட்டிகள் இல்லை, ஆனாலும் பயணிப்பது அதில் வெற்றியும் பெறுவதென்பது சாதனை தானே அப்படியான சாதனை தான் ஷாக்சியும், சிந்துவும் இன்னும் பலரும் நிகழ்த்துவது.

நாம் குற்றாலீஸ்வரனைத் தெரிந்து வைத்திருப்போம்.13 வயதில் இங்கிலிஷ் கால்வாயை நீந்திக் கடந்தவர்.அதே வருடத்தில் பட படவென உலகின் பெரிய மற்ற 5 கால்வாய்களையும் நீந்தி உலக சாதனை படைத்தவர். உலகத்தில் தலை மன்னார் பாக் ஜலசந்தி முதல் இத்தாலியின் மெஸ்ஸின்னா ஜலசந்தி வரை நீந்தி நீந்தி உலகக் கடலையே கலக்கினார். ஒரு நடுத்தரக் குடும்பச் சிறுவன் இந்தச் சாதனையை நிகழ்த்தியதும் இந்தியாவே திரும்பிப் பார்த்தது. இந்தியாவில் பல பெற்றோர்கள் குற்றாலீஸ்வரனை ரோல் மாடலாக நினைத்து தங்கள் குழந்தைகளை நீச்சலுக்குப் பழக்கினர். ஒரு உலக சாதனை, இப்படித்தான் நிறைய இளம் சாதனையாளர்களை தன்பக்கம் திரும்ப வைக்கும். அவருக்கு தனது 17ஆவது வயதிலேயே அர்ஜூனா விருது கிடைத்தது. ஆனால் , அதன் பின்னர் அவர் என்ன ஆனார்..? இந்தியாவுக்கு பல தங்கப் பதக்கங்களைத் தந்திருக்க வேண்டியவர் சத்தமில்லாமல் எங்கோ வாழ்கிறார் என்பது எதனால் ?

13 வயதில் தனக்கு வந்த பல வெளிநாட்டு வாய்ப்புகளை யாரிடமும் கேட்காமல் எனக்கு இந்தியா தான் உயிர் என்று சொல்லி மறுத்துவிட்டார். ஆனால் அடுத்த சில மாதங்களில் சாதனை நடத்தியவுடன் பேசியவர்கள், ஊக்கமளித்தவர்கள், இந்திய அரசாங்கம், அரசு, அரசியவாதிகள், எல்லாம் அவரை மெதுவாகக் கை கழுவி விட ஆரம்பித்தன. ஒரு பெரிய நீச்சல் போட்டியில் உலக அளவில் கலந்து கொள்ள பணம் தேவை. முதலில் அரசாங்கத்தை நாடினார். இங்கே அங்கே என்று அழைக்கழித்தார்கள். அடுத்து பிரைவேட் நிறுவனங்களை நாடினார். கடலில் நீந்தும் போது கூட்டம் வராது என்று கிரிக்கெட் பக்கம் திரும்பிக் கொண்டார்கள்.அவர் அப்பாவே தன் சேமிப்பில் இருந்து செலவு செய்து போட்டிக்கு அனுப்பினார். இப்படி ஒவ்வொரு முறையும் அலைய முடியாமல், அரசாங்கத்தின், அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல், அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து, இன்று IBM ல் சாப்ட்வேர் என்ஜினீயராக கலிபோர்னியாவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். யோசித்துப் பாருங்கள். இன்று அமெரிக்காவில் அவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டியை பார்க்கும் போது எப்படி அவரின் மனது என்னவெல்லாம் நினைத்துப் பார்க்கும் ? எப்படி வலிக்கும்?

இது நமக்குத் தெரிந்த கொஞ்சம் வெற்றிகளுடன் வெளியில் வந்த ஒரே ஒரு குற்றாலீஸ்வரனின் கதை. இப்படித் தெரியாமல் முளையிலேயே வசதியும் வாய்ப்பும் இல்லாமல் எத்தனை சாதனையாளர்கள் முடக்கப்பட்டிருப்பார்கள். யார் சிந்திப்பார்கள் ?

இந்த ஒலிம்பிக்கில் கூட மாரத்தான் போட்டியில் ஓடிய ஓபி ஜெய்சாவின் நேர்காணலைப் படித்தபோது கண் கலங்கியது. ஆத்திரமாக வந்தது நம் மீதே.

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓடிய பெண் இந்திய சாதனையாளர் ஓபி ஜெய்ஷா. அவர் 42கிமீ தூரத்தை 2 மணி 47 நிமிடத்தில் கடந்திருக்கிறார். ஆனால் அவரது சென்ற ஆண்டு சாதனை 2 மணி 34 நிமிடங்கள். சென்ற முறையை விட இந்த முறை ஏன் இவ்வளவு மோசமாக ஓடியிருப்பார் ?
எந்த ஒரு மாரத்தான் ஓட்டமும் மிகுந்த உழைப்பும், திட்டமிடலும் தேவை. ஏனென்றால் தொடர்ந்த இயக்கத்தால் உடல் தனது நீர்ச்சத்தை இழந்து விடும். தாதுக்களை இழந்து விடும். இவற்றைத் தொடர்ந்து வழங்கா விட்டால் தசைப்பிடிப்பும் அதீத நீரிழப்பால் மரணமும் கூட நடக்கும்.இதைத் தவிர்க்க வழி நெடுக நீர் வழங்க வசதிகள் இருக்கும்.
ஒலிம்பிக் மாரத்தானில் இந்த நீரையும் இதர சத்துப் பொருட்களையும் வழங்கும் நிலையங்கள் 2.5 கிலோமீட்டருக்கு ஒன்று என்று வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அங்கே அந்தந்த நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் அணியைச் சேர்ந்தவர்கள் நீரையும் சக்தி அளிக்கும் பிற உணவுகளையும் வைத்து நிற்பார்கள். தலையைத் துடைத்துக் கொள்ள ஐஸில் நனைக்கப்பட்ட ஸ்பாஞ்ச் போன்றவற்றை நீட்டுவார்கள். ஊக்கப்படுத்துவார்கள். உள்ளூர் மாரத்தான்களில் கூட ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டருக்கும் நீர், எலுமிச்சை, உப்பு, ஆரஞ்சு, வாழைப்பழம், கடலைமிட்டாய் என்று வைத்திருப்பார்கள்.
ஆனால் இந்தியாவின் சார்பில் போட்டி நெடுக எந்த நிலையத்திலும் யாருமே நிற்கவில்லை என்கிறார் ஜெய்ஷா. இந்திய நிலையங்களில் வெறும் கொடி மட்டும் நட்டு வைத்து இருந்தார்களாம்.வேறு அணியினர் தரும் எதையும் வாங்கவோ அருந்தவோ கூடாது என்பது விதி. 8 கிலோ மீட்டருக்கு ஒன்று என்று ரியோ ஒலிம்பிக் அணியினர் வைத்திருக்கும் நிலையங்களில் வேண்டுமானால் நீர் அருந்தலாம். இதனால் ஒவ்வொரு எட்டு கிலோமீட்டருக்கு ஒரு முறை மட்டுமே நீர் அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் ஜெய்ஷாவும் அவருடன் ஓடிய கவிதாவும். அதுவும் அந்த வேகத்தில் ஓடும்போது இது தற்கொலைக்கு சமம்.
இறந்து விடுவோம் என்ற அச்சத்துடன்தான் ஓடி இருக்கிறார் ஜெய்ஷா. முடிவுக் கோட்டில் மயங்கி விழுந்தவர் மூன்று மணி நேரம் கழித்து ஏழு பாட்டில்கள் குளுகோஸ் இறக்கிய பிறகு எழுந்திருக்கிறார். அப்போதும் இந்திய மருத்துவக் குழு அருகில் இல்லை. ரியோ மருத்துவக் குழுவினர்தான் அவரைக் கவனித்திருக்கிறார்கள்.இதுதான் இந்தியாவின் ஒலிம்பிக் அமைப்பினர் ஒலிம்பிக் வீரர்களை கவனித்துக் கொள்ளும் லட்சணம். இப்படி அலட்சியமாக இருக்கும் இந்த நாட்டில் இரண்டு பதக்கங்களை இரண்டு பெண்கள் கொண்டு வந்திருப்பதே மிகப்பெரும் சாதனை தானே.
மேலும், வெற்றிபெற்றவர்களை மட்டும் கொண்டாடும் மனநிலை நம் ஊரில் மட்டும் அல்ல , மனித சமுதாயத்துக்கே உரித்தான மனநிலை தான். ஆனால், வெற்றிக்கான வாய்ப்புகளையும், வாசல்களையும் திறந்து விடும் அமைப்பு நம் ஊரைக் காட்டிலும் மற்ற இடங்களில் அதிகம். விளையாட்டு என்றால் நமக்கு கிரிக்கெட் தான் கிரிக்கெட்டையும் கிரிக்கெட் வீரர்களையும் நாம் கொண்டாடும் அளவுக்கு, நமது தேசிய விளையாட்டான ஹாக்கி மற்றும் நம் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, மல்யுத்தம் போன்றவற்றை நாம் மருந்துக்காவது நினைத்துப்பார்க்கிறோமா என்றால் இல்லவே இல்லை.

விளையாட்டு வகுப்பு என்று ஒன்று பள்ளியில் இருக்கும். வாரத்தில் ஒரு நாள். ஒன்பதாம் வகுப்பு,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த வகுப்பு இருக்கவே இருக்காது. கணக்கு வாத்தியார் அல்லது அறிவியல் வாத்தியார் அதையும் கடன் வாங்கி மிச்சமாகிப்போன பாடங்களை நடத்திவிடுவார்கள். பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நேர்ந்து விடப்பட்டவர்கள்.
எட்டாம் வகுப்பு வரை பள்ளியைச் சுற்றிலும் இருக்கும் குப்பைகளைப் பொறுக்கியது போக, வாத்தியார்களுக்கு டீ வாங்கித்தந்தது போக, ரெக்கார்டு ரூமை சுத்தம் செய்தது போக, கொடிநாள் அந்த நாள் இந்தநாள் என பேரணி போனது போக மிச்சமிருக்கும் ஏதாவது ஒரு நாளில் விளையாட்டு பீரியடில் விளையாட விடுவார்கள். மைதானம் பிரம்மாண்டமாக இருக்கும். விளையாட்டு உபகரணங்கள் கேள்விக்குறிதான். சில பள்ளிகளில் கிரிக்கெட் மட்டைகள், சாப்ட் பால் மட்டைகள் இருக்கும் பந்துகள் இருக்காது இப்படி பல பல சிக்கல்களைத் தாண்டி, உற்சாகமாக வீட்டிலிருந்து கொண்டு போன மட்டையோ பந்தையோ வைத்து ஒரு மணி நேரம் விளையாடலாம். விளையாட்டு உடற்பயிற்சி எதற்கும் பள்ளிகளில் முக்கியத்துவம் இல்லை. சிறு வயதிலிருந்தே பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுத்தினால் தானே ஆர்வம் வரும். பின்னர் பெரியவர்களானதும் எந்த விளையாட்டில் அதிக நாட்டம் இருக்கிறதோ அதைத் தொடர்வோம்? அப்படி ஒரு அமைப்பே இங்கு இல்லையே.

அரசுப்பள்ளிகளிலாவது இப்படி இருக்கும், தனியார் பள்ளிகளில் வெறும் படிப்பு படிப்பு தான். காரணம் மதிப்பெண் மட்டும் தான் இலக்கு. அடிப்படை அமைப்பையே நாம் இப்படி வைத்துக்கொண்டு, சாதிக்கனும் மெடல் வாங்கனும் என்றெல்லாம் கனவு கண்டால் எப்படி நடக்கும் ..?

மாற வேண்டும். யார் மாற்றுவது ..?
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக