ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்


போதிப்பவர்களெல்லாம் ஆசிரியர்கள் அல்லர்
யார் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களே ஆசிரியர்கள்
  • கதே

சிறு வயதிலிருந்தே என் கனவு ஆசிரியர் ஆகவேண்டும் என்பது தான். இதற்கான முதல் விதையைத் தூவியவர் என் கனவு ஆசிரியராகவும் பக்கத்து வீட்டு வழிகாட்டியாகவும் வந்தவர் ஆசிரியர் பஞ்சலிங்கம் அவர்கள். நான் ஏழாம் வகுப்புவரை படித்தது ஆனைமலை அருகிலுள்ள எனது சொந்த ஊரான பெத்தனாயக்கனூரில். ஆறாம் வகுப்பு வரை அதே பள்ளியில் தான் படித்தேன் என்றாலும் ஏழாம் வகுப்பு போகும்போது தான் அந்தப்பள்ளிக்கு மாற்றலாகி வந்திருந்தார் பஞ்சலிங்கம் வாத்தியார். முறுக்கு மீசை, வெள்ளை வேட்டி சட்டை, கண்டிப்பான பார்வையுடன் அவர் எங்கள் பள்ளிக்கு வந்ததுமே பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். கற்பித்தல் முறை, மாணவர்களின் எழுத்து வடிவம் என அனைத்தையும் மாற்றினார். அவரிடம் நான் படித்தது ஆறுமாத காலம் தான் அதற்குள் நாங்கள் அந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்துவிட்டோம்.

வகுப்பில் வந்த முதல் நாளிலேயே என்னை இனம் கண்டுகொண்டார் போலும் , ஆனாலும் என்னிடம் எதுவும் சொன்னதில்லை. பள்ளியில் அவர் சேர்ந்து சில வாரங்களிலேயே எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியேறினார். அவர்களது மகள்களும் மகனும் எனக்கு நெருக்கமான நண்பர்களானார்கள். விடுமுறை நாட்களில் ஒன்றாகவே இருப்போம். அவர் பள்ளிக்கு வந்து ஒரு மாதத்திலேயே என் அப்பாவைச் சந்தித்து என்னைப்பற்றி பெருமையாக சொல்லியிருக்கிறார். நான் நன்றாக வருவேன் என. அப்பாவுக்கு ரொம்பப் பெருமிதம். அதனாலேயே அப்பாவுக்கும் அவரைப் பிடிக்கும்.

பள்ளியில் சீருடையில் ஒழுங்காக வருவது, காலந்தவறாமை, பாடங்களை மிக எளிமையாகக் கற்பிப்பது என ஒரு நல்லாசிரியரின் அனைத்துச் செயல்பாடுகளையும் செவ்வனே செய்தார், அதுமட்டுமல்ல, தினமும் மாலை டியூசன் எடுப்பார். பணம் கட்டாயமில்லை. கொடுப்பவர்கள் கொடுக்கலாம். அதில்தான் அனைத்து வகுப்பு மாணவர்களையும் மிகச் சிறப்பாக வழிநடத்தினார். ஆங்கிலம் முக்கியம் எனச் சொல்லி வினைத்தொகைகள், சொற்றொடர்கள் , விடுப்பு விண்ணப்பம் போன்றவற்றை பிரத்யேகமாக சொல்லிக்கொடுத்தார். ஆங்கில எழுத்துகளை வித்தியாசமாக பெட்டி பெட்டியாக எழுத வைத்தார். எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் அவ்வாறே எழுத ஆரம்பித்தனர். பார்ப்பதற்கு கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். முதன் முதலாக பள்ளியில் சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட வைத்து, என்னை வட்டாட்சியர்முன்னால் பேச்சுப்போட்டியில் பேச வைத்து என் தன்னம்பிக்கையை வளர்த்தது என இப்போது வரைக்கும் என் மனதில் நிற்கும் ஆசிரியர் அவர்.


ஏழாம் வகுப்பு அரையாண்டுக்கே, வடக்கிபாளையம் பள்ளியில் சேர்ந்தேன். அந்தப்பள்ளியின் சூழலுக்கு என்னை மாற்றுவதற்கே கொஞ்சம் திணறிய சமயம். என்னை நம்பி பல்வேறு பணிகளைப் பணித்து, எனக்கு பாரதியை அறிமுகம் செய்து, என்னைப் பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்க வைத்தவர் தமிழாசிரியர் கந்தவேல் அய்யா. பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே பள்ளி முழுதும் நல்ல பெயர் வரக் காரணமானவர் அவர்தான். ஒரு மாணவி நான் போடி வாடி எனத் திட்டிவிட்டதாக தலைமையாசிரியரிடம் புகார் அளித்த போது தானாகவே வந்து இவன் அப்படிப் பேசியிருக்க வாய்ப்பேயில்லை என்று தலைமையாசிரியரின் முன்னால் அவர் பேசியபோது நான் கண்கலங்கிப் போனேன். அவரிடம் படித்தது ஆறுமாதம் தான். நான்கு வருடங்கள் கழித்து பேருந்து நிலையத்தில் என்னைப் பார்த்து அடையாளம் கண்டவர், தான் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை அவசரமாகப் போட்டுவிட்டு நீ பூபாலன் தானே நல்லா இருக்கியா என அவராக வந்து பேசினார். ஆசிரியர் என்பவர் யார், அவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணங்களாக இன்றைக்கு வரைக்கும் என் மனச்சித்திரங்களில் இவ்விரு ஆசிரியர்கள் தான் இருப்பர்.

அதே பள்ளியின் கலாவதி டீச்சர், ஆசிரியர் மாணவன் உறவைத் தாண்டி சொந்த மகனைப்போலக் கொண்டாடியவர். பள்ளியில் இறுதி நாட்களின் ஆண்டுவிழாவில் நான் நடித்த நாடகம், பேசிய பேச்சையெல்லாம் கேட்டுவிட்டு என் பையன் இப்படித்தான் சுட்டியா இருப்பான் என்று ஒரு எட்டாம் வகுப்பு மாணவனான என்னை மடியில் அமரவைத்து அணைத்துக்கொண்டாரே.. அந்தக் கதகதப்பில் தான், அந்த அன்பில் தான் நான் உருவானேன்.

ஒன்பதாம் வகுப்புக்கு காளியண்ணன் புதூர் பள்ளியில் சேர்ந்தேன். சேர்ந்து மூன்றாம் நாள் காலையில் முதல் வகுப்பில் மாணவர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள். தமிழ் அய்யா வருவாராமாடா, எல்லாம் சுத்தம் பண்ணுங்க என்று அறையை ஒழுங்கு செய்து மணியடிக்கும் முன்பே அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து அமைதியாக இருக்கின்றனர். எனக்கே ஆச்சர்யம். மாணவர்கள் பலர் ஐந்தாம் வகுப்பிலிருந்தே அதே பள்ளியில் படித்தவர்கள் அவர்களுக்குத் தெரியும் அவரைப்பற்றி. 9 மணிக்கு மணியடிக்கும் சத்தத்துடன் வகுப்பறைக்குள் ஆஜானுபாகுவான உடலுடன் நுழைகிறார் தமிழ் அய்யா. கிருட்டினசாமி என்பது அவர் பெயர் என்று மூன்று நான்கு மாதம் கழித்துத்தான் தெரியும்.

முதல் நாள் முதல் வகுப்பிலேயே பாடம் நடத்தத் துவங்கிவிட்டார். முதல் வகுப்பில் அவர் நடத்தியது கம்பரின் கடவுள் வாழ்த்துப்பாடலான " உலகம் யாவையும் " பாடல். ஒரு முறை ஒவ்வொரு வார்த்தையாக, ஒவ்வொரு வரியாக படித்து அதற்கான அர்த்தங்களைச் சொல்லி, கதை சொல்வது போல விளக்கம் சொல்லி, கடைசியாக அவர் முழுச் செய்யுளையும் படித்தார் எங்களை கூடவே ஒருமுறை சொல்லச் சொன்னார். அவ்வளவுதான் அன்றைக்கு அவர் நடத்திய அந்தச் செய்யுள் அதன் பிறகு எங்குமே படிக்காமலும் இன்னும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அது தான் அய்யா.

பாடம் நடத்தி முடித்தவுடனேயே மாணவர்களை அந்தச் செய்யுளை பார்க்காமல் ஒப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். திக்கென்று ஆகிவிட்டது அனைவருக்கும். செய்யுளைச் சரியாக ஒப்பித்தவர்கள் மட்டும் வகுப்பறைக்குள் இருக்கச் சொல்லிவிட்டு , மற்றவர்கள் வெளியே போகலாம் மரத்தடிக்கு. மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டு உள்ளே வரலாம் என்றார். முதல் முறையிலேயே ஒப்பித்து வகுப்பறைக்குள்ளேயே இருந்தது நான்கைந்து பேர் தான் என்பது நினைவு. நான், சந்திரசேகர், ராமச்சந்திரன், பூங்குழலி, செல்வி அவ்வளவு தான் மற்ற அனைவரும் மரத்தடியில் தான். அவருக்கு அவரது கற்பித்தல் மேல் அத்தனை நம்பிக்கை.

மிகக் கண்டிப்பான தமிழ் அய்யா சிரித்துக்கூட நான் பார்த்ததில்லை. புல்லட்டில் தான் வருவார். புல்லட் சத்தம் கேட்டாலே வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் மாணவர்கள் தெறித்து ஓடுவார்கள் வகுப்பறைகளுக்குள். காலாண்டுத்தேர்வு வந்தது, தமிழ் இரண்டாம் தாளில் ஆறு தன் வரலாறு சொல்லுதல் கதை என்ற கேள்விக்கு அல்லது என்று குறிப்பிட்டு வரதட்சனை என்ற தலைப்பில் பதினைந்து வரிகளுக்குள் கவிதை எழுதவும் எனக் கேட்கப்பட்டிருந்தது. கட்டுரை இரண்டுபக்கமாவது எழுத வேண்டும் அல்லவா, அதற்கு சோம்பேறித்தனப்பட்டு கவிதையைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஒருத்தன் தான் கவிதையை எழுதியிருக்கிறேன் என்பது பின்புதான் தெரிந்தது.

வகுப்பில் விடைத்தாள் கொடுக்க வந்தார் தமிழ் அய்யா. முதல் மதிப்பெண் என்று ஒரு மாணவிக்கு 97 மதிப்பெண்களுக்கு கை தட்டி கொடுத்தவர் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். 50க்கும் கீழ் வாங்கியவர்களுக்கு ஒரு அடி, இரண்டு அடி என போய்க்கொண்டிருந்தது. அஸ் புஸ்ஸென கைகளில் வாங்கிக் கொண்டு வந்து அமர்கிறார்கள். என் விடைத்தாளைத் தரவேயில்லை. எனக்கு நடுக்கமாகிவிட்டது என்னது இன்னும் என் பேப்பர் வரலியே ரொம்பக் கம்மியோ, அடி வெளுக்கப் போறாரோ என பயந்தபடியே இருந்தேன். கடைசியாக என் பேப்பரை எடுத்தவர் என்னை அருகில் அழைத்து நிற்கவைத்தார்.நடுங்கிக்கொண்டே நின்றேன். டேபிளுக்கு முன்னால் வந்து நின்று இவன் 91 மதிப்பெண்கள் எடுத்துள்ளான் என்றார். எனக்கு போன உயிர் கொஞ்சம் திரும்பி வந்தது. ஆனால் ஏன் …? நான் நினைப்பதற்குள் அவரே தொடர்ந்தார். அதுவல்ல முக்கியம். பூபாலன் மட்டும் தான் ஒரு கவிதை எழுதியுள்ளான் என்று சொல்லி வரதட்சணை என்பது முதுகெலும்பற்ற மூடர்களின் தேவை என்பதாக நான் எழுதிய கவிதையை உரக்க வாசித்தார். மாணாவர்கள் கை தட்டினார்கள். பெருமையாகச் சொன்னார் ரொம்ப அற்புதமா எழுதியிருக்க தம்பி. நல்லாயிருக்கு நல்லாயிருக்கு என்று. நெகிழ்ந்து போனேன். அதுமட்டுமா உடனே தலைமையாசிரியரிடம் அழைத்துப்போனார், அதே குரலில் படித்துக்காட்டினார். அப்போது அவ்வளவு பெரிய ஆஜானுபாகுவான உடல் ஒரு குழந்தையைப் போலக் குழைவதை நான் கண்டேன். ஒரு சிறுவன் அதுவும் தன் மாணவன் எழுதிய கவிதையைத் தன் தலையில் தூக்கிக் கொண்டாடிய ஒரு நல்லாசிரியரைக் கண்டேன். அடுத்தநாள் ப்ரேயரில் அந்தக் கவிதையைப்பற்றிச் சொல்லி என்னை வாசிக்கவும் வைத்தார்.

இவை அனைத்துமே எனக்குப் புதுமையாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல பள்ளிக்கே அவரது செயல் புதுமையாகவும், மிகுந்த ஆச்சர்யத்தைத் தருவதாகவும் இருந்தது. அவர் விதைத்த விதை, அவர் தெளித்த உயிர் நீர் தான் அன்று முதல் இன்று வரைக்கும் என் கவிதைகள் வேர்பிடிக்கக் காரணமாயிருந்தது.

இந்த ஆசிரியர்களையெல்லாம் அதன்பின்னர் ஒரு நாளும் நான் சந்தித்ததில்லை. இப்போது எங்கு எப்படியிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால், இன்னும் என் நினைவில் வாழ்கிறார்கள். இப்படி எத்தனை மாணவர்களை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள். ஒழுக்கசீலனாக, மனிதனாக, ஒரு படைப்பாளனாக, கலைஞனாக, அதிகாரியாக என எத்தனை விதைகள் முளைத்திருக்கும் இவர்களால்.

நாடு முழுவதும் பல நல்ல ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பார்த்து வருகிறோம். தனது சொந்தப்பணத்தை மாணவர் நலனுக்காக செலவழிப்பது, அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளியிலும் திறமையான மாணவர்களை உருவாக்க மெனக்கெடுவது, மாறிவரும் காலகட்டத்துக்கு ஏற்ப தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாடம் நடத்துவது என அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மிகப்பெரும் சாதனைகளைச் செய்துவருகிறார்கள்.

என் நட்பு வட்டத்திலும் நிறைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு பெருமையாக இருக்கும். சமுதாயத்தின் பெருமைமிகு பணி மட்டுமல்லாது சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும்பணி இவர்களது. கவிஞர் க.அம்சப்ரியா தனியார் பள்ளி தமிழாசிரியர் அவர் மாணவர்களிடத்தில் செலுத்தும் அன்பு, மாணவர்கள் அவரிடம் காட்டும் மரியாதை ஆகியவற்றைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவருடன் எங்கு போனாலும் ஒரு மாணவன் அல்லது ஒரு மாணவி அய்யா என்று வந்து நிற்பார், உதவிகள் செய்வர். கவிஞர் சோலைமாயவன், புன்னகை ஜெயக்குமார் ஆகியோர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இவர்கள் மாணவர்களுக்கு கற்பித்தலைத் தாண்டியும் செய்யும் உதவிகளும் , செயல்பாடுகளும் இவர்கள் மீது பெரும் மரியாதை கொள்ளச் செய்தது.

தனது பள்ளியில் திறம்படக்கேள் என்னும் நிகழ்ச்சியை மாணவர்களுக்காக சிரமப்பட்டு நடத்தி வரும் ஆசிரியர் பாலமுருகன், மாணவர்களுக்கு மிகச்சரியான பாதைகளை அமைத்துத் தந்து வழிகாட்டும் செந்திரு, பானுமதி அம்மா, ஜீவாபாரதி, அனிதா, இவர்கள் மட்டுமல்லாது நிறைய ஆசிரியர்கள் என் முகநூல் நட்பில் இருக்கிறார்கள் … இரா.எட்வின், வசந்த்,ப்ராங்க்ளின், ராம்ராஜ்,  இவர்களையெல்லாம் பார்த்து ஏங்குகிறேன் நான் ஆசிரியராக இல்லாமல் போனதற்காக .. இவர்களெல்லாம் உண்மையிலேயே கனவு ஆசிரியர்கள்

ஆசிரியர் பணியை தவம் போலச் செய்யும் அத்தனை பேருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக