திங்கள், 16 மார்ச், 2015

பொள்ளாச்சி இலக்கியவட்டம் 23ஆவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி மூன்றாவது இலக்கிய சந்திப்பு நேற்று (15.03.2015) ஞாயிற்றுக் கிழமை பாலக்காடு சாலை, நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

வழக்கமாக நடக்கும் அறையில் கட்டிட வேலைப் பொருட்களை வைத்திருந்ததால், உள்ளே ஒரு வகுப்பறை தான் கிடைத்தது. மின்விசிறி, மின் விளக்கு இரண்டும் இல்லை. கோடை நெருங்கும் காலம். புழுக்கமாக இருக்குமே என பயந்தோம். நல்ல வேளை, வானிலை நமக்குக் கொஞ்சம் சலுகை காட்டியது.

ஓரளவுக்குப் போதுமான அறைதான் எனினும், இந்த முறை நிறைய புதிய நண்பர்கள் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட 75 வாசக,படைப்பாளர்கள், பங்கேற்பாளர்களால் அறை நிரம்பிவிட்டது. கொஞ்சம் பேர் வெளியில் நின்று கேட்கும் படி ஆனது. ஆனாலும் மிகவும் உற்சாகமானதாக இருந்தது.



வழக்கம் போலவே ஒன்பது மனிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடித்தே ஆக வேண்டும் என்ற திட்டமிடலுடன் வந்திருந்தோம். ஆனால், குமரகுருவைச் சுமந்து வந்த பேருந்து 7 மணிக்குப் பொள்ளாச்சி வருவதாகச் சொல்லிவிட்டு 9 மணிக்குத்தான் வந்தே சேர்ந்தது. அவர் குளித்து தயாராகி வரவே 10 ஆகியிருக்க, அவைநாயகன் மற்றும் சு.வேணுகோபால் ஆகியோர் இன்னும் தாமதமாக வர, நிகழ்ச்சியை ஆரம்பிக்க 10.30 ஆகிவிட்டது.

நிகழ்ச்சியி ல்முதலில் என்னைக் கவர்ந்த பெண் ஆளுமை என்ற தலைப்பில் மாணவர்கள், வாசகர்கள் பல்வேறு பெண் ஆளுமைகளைப் பற்றிப் பேசினர். குறிப்பாக பூ.சா.கோ மாணவிகள் நாகஷியாமளா, சந்திரமதி, பி.கே.டி மாணவி கோகிலா மற்றும் பெரியகுளம் இர.அறிவழகன் ஆகியோரது உரை சிறப்பாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு முதல்முறை வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் மிமிக்ரி செய்யட்டுமா என்று கேட்டான். இலக்கியக் கூட்டத்திலும் மிமிக்ரியா? இருந்தாலும் சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றினோம். பல முன்னணி நடிகர்களின் குரலில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தான். அரங்கமே உற்சாகத்தில் நிறைந்தது. கைதட்டல்களில் நிறைந்தது. கவிதை வாசிப்புக்கு இப்படி கைதட்டல்கள் கிடைக்குமா ..?

அடுத்ததாக படித்ததில் பிடித்தது பகுதியில் செலீனா , .தி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

நான் வரவேற்புரையாற்ற. எழுத்தாளர் அவைநாயகன் அவர்கள் எழுதிய கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது என்ற நூலை எழுத்தாளர் சு.வேணுகோபால் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.





எழுத்தாளர் சு.வேணுகோபால் பேசியதாவது " மாயா ஏஞ்சலோ எழுதி அவைநாயகன் மொழி பெயர்த்த கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது எனும் நூல், மாயா ஏஞ்சலோவின் சுய வரலாரின் ஒரு பகுதி ஆகும். இவர் தன் வாழ்க்கை வரலாறை ஏழு பாகங்களாக எழுதியுள்ளார். முதல் பாகமான இந்த நூல் அவரதி 3 வயதிலிருந்து 17 வயது வரையிலான காலகட்டத்தின் பதிவாக உள்ளது. பொதுவாக ஒரு சுயசரிதை நூல் , நூலாசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு என்ற அடைப்புக்குறிக்குள் நின்றுவிடும், ஆனால் மாயா ஏஞ்சலோவின் வாழ்க்கை வரலாறு ஒட்டு மொத்த கருப்பின மக்களின் வரலாற்றின் ஒரு பதிவாகவே உள்ளது. கருப்பின மக்களின் வாழ்க்கை முறையின் ஒரு குறியீடாகவும், ஆண்,பெண் பாலினங்களுக்கு அப்பாற்பட்ட ஒடுக்கப்பட்ட ஒரு மனிதனின் வேதனைக்குரலாகவே உள்ளது.

தமிழில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்ட சுயசரிதை நூல்களில் இந்நூல் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த நூல், மாயா ஏஞ்சலோ என்னும் கருப்பினப் பெண்ணின் ரத்தத்தால் எழுதப்பட்ட ஒரு காவியமாகவே தோன்றுகிறது. மேலும் இந்த நூலை வாசிக்கையில் கருப்பினர்கள் சந்தித்த போராட்டங்களை நமது தலித் மக்கள் , அவர்களுடைய போராட்டங்களை அறிந்து உணர்ந்துகொள்ளக் கூடிய வகையிலேயே இருக்கிறது.” என்று பேசினார்.

கவிஞர் குமரகுரு அன்பு எழுதிய மணல் மீது வாழும் கடல் கவிதைத் தொகுப்பை கவிஞர் செளந்தரராஜன் அறிமுகப்படுத்தி வைத்துப்பேசினார்.

முதல் மேடை என்று கூச்சத்துடனே ஏற்புரை வழங்கினார் குமரகுரு. அப்பாவின் கால்கள் கவிதையைத் தன் அப்பாவுடன் நினைவு படுத்தி அவர் சொன்னபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

பின்னர் கவியரஙக்த்தில் மாணவர்கள், கவிஞர்கள் என மொத்தம் பதினேழு பேர் கவிதை வாசித்தனர். கனகீஸ்வரி, நாகஷியாமளா,அனாமிகா, யாழி ஆகியோரது கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தன.

ஒவ்வொரு மாதமும் நடக்கும் நிகழ்வுகளை அடுத்த மாதம் புகைப்படங்களுடன் பொள்ளாச்சி இலக்கிய வட்ட செய்தி மடல் என்று அச்சிட்டு வழங்குவது வழக்கம். இந்த முறையும் செய்தி மடல் வெளியிட்டோம். செய்தி மடல் உங்கள் பார்வைக்கு இங்கு இணைத்துள்ளோம். வாசித்துவிட்டு ஆலோசனைகளைப் பகிரலாம்.


சிறு விவாதத்துக்குப் பிறகு நிகழ்ச்சி கவிஞர் அம்சப்ரியாவின் நன்றியுரையோடு இனிது முடிந்தது.

மதிய உணவு சித்ரா அம்மா வீட்டில் இந்த முறை. நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவரது கையால் உணவும் அன்பும். உணவுக்குப் பின் திண்ணையில் வட்டமாக அமர்ந்து சு.வேணுகோபால், அவைநாயகன் மற்றும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். இந்த செளகர்யம் எங்கும் கிடைக்காது.



கிளம்பும் போது சித்ரா அம்மா சொன்னார், தனியாகவே இருப்பேன், மாதத்தில் ஒருநாள் தான் இந்த வீடு கலகலப்பாக இருக்கிறது என்று. மனம் கொஞ்சம் கனமானது. அடுத்த வாரம் குடும்பத்துடன் சென்று அவரைப் பார்த்துவிட்டு வர வேண்டும்.

நண்பர்கள் கிளம்பிவிட, பத்திரிகைக்கு செய்தி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வர வழக்கம் போல ஆறு மணியாகி விட்டது. பம்பிக் கொண்டே வந்தேன். வாசலிலேயே காத்திருந்த பாரதி காலைக் கட்டிக் கொண்டாள். கொஞ்ச நேரம் வாசலிலேயெ இனியா , பாரதியுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த இடைவெளியில் மனைவியின் முகம் மலர்ந்துவிட்டிருக்குமென்றே நினைக்கிறேன். யாவும் சுமூகமாகவே முடிந்தது.

இனி ஏப்ரல் மாதக் கூட்டத்துக்கு யோசிக்க வேண்டும். அத்துடன் மே மாதம் குழந்தைகள் கலைக் கொண்டாட்டமாக முழுநாள் நிகழ்வாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கும் இப்போதிருந்தே தயாராக வேண்டும் ..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக