திங்கள், 18 செப்டம்பர், 2017

கவிதைகளுக்கான அங்கீகாரம் - த.மு.எ.க.ச விருது விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் - செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது கடந்த 16.09.2017 அன்று எனக்கு வழங்கப்பட்டது.

எனது அத்துனை இன்ப துன்பங்களிலும் உடன் இருக்கும் மாமா , ச.தி.செந்தில்குமார் அவரும் நானும் சென்றிருந்தோம்.




விழா நிகழ்வு முழு நாள் நிகழ்வாகத் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. நாகர்கோவிலில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில்  காலை முதல் மாலை வரை விருது பெற்ற ஒன்பது நூல்களின் ஆய்வரங்கம் நடைபெற்றது.

எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி நூலின் ஆய்வரங்கத்துக்குக் கவிஞர் குமரித் தோழன் தலைமை தாங்கினார்.  கவிதைத் தொகுப்பின் அறிமுகத்தையும் எனது நூல் தேர்வானதன் காரணங்களையும் தோழர் , கவிஞர் அ.லெட்சுமி காந்தன் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். எனது சில கவிதைகளைக் குறிப்பிட்டு வாசித்து அறிமுகம் செய்தவர், நான் உணர்ந்து எழுதிய ஒரு கவிதையை வாசிக்கையில் தானும் உணர்ச்சி வசப்பட்டார்.
உண்மையையும் அனுபவங்களையும் நேர்மையாக எழுதும் போது தான் இவ்வாறான தருணங்கள் வாய்க்கின்றன என்பதை உணர்ந்தேன்.

அந்தக் கவிதை இதோ 

வாழ்வை எதை விடவும்
அதிகம் வெறுத்த அம்மா
அடுக்களையில் மறைவாக
ஒளிந்து
சாணிப்பவுடரைக் 
குடிக்கப் போன சமயம்
எனக்கொரு வாய் 
குடுங்க அம்மா என்று
கேட்ட போது தான்
அவள் சாவை விடவும்
கொடுமையான இந்த
வாழ்வைத் தேர்ந்தெடுத்தாள் 








அதன் பின்னர் எனது ஏற்புரை. வழக்கத்தினும் வழக்கமாக என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது நான் ஏன் கவிதை எழுதுகிறேன் என்று. வழக்கத்தினும் வழக்கமாக நான் அதற்கு பதில் சொல்கிறேன் என் ஆத்ம திருப்திக்காக என்று. ஆனால், இந்த ஆத்மாவைத் திருப்திப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அதற்கான சிறு சிறு முயற்சிகள் தான் என் கவிதைகள். உண்மையையும், அனுபவங்களையும் சொற்களாக்கிக் கவிதை செய்கிறேன். எந்தத் திட்டமிடலும் எந்த எதிர்பார்ப்புகளும் எப்போதும் இருப்பதில்லை.


மாலை கிருஷ்ணன் கோவிலில் திறந்த வெளி மைதானத்தில் விருது வழங்கும் விழா மக்கள் மத்தியில் பிரம்மாண்டமாக ஏற்பாடாகியிருந்தது.
நிகழ்வின் துவக்கத்தில் களரி கலைக்குழுவினரின் பறையிசை நடனம், கும்மியாட்டம் போன்ற நிகழ்வுகள் மேடையை அதிரச் செய்தன.

ஒன்பது விருதாளர்களையும் ஒரே மேடையில் அமரவைத்து விருதளித்தார்கள். த.மு.எ.ச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் விருதளித்து வாழ்த்துரை நிகழ்த்தினார்.

 
                                    

இந்த விருது இன்னும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்திருக்கிறது. சோர்ந்து கிடக்கும் எனக்கு ஒரு பிடி உற்சாகத்தைக் கையளித்திருக்கிறது.





த.மு.எ.க.ச நிர்வாகிகளுக்கும், விருது தேர்வுக்குழுவினருக்கும், உடன் இருக்கும் நண்பர்களுக்கும் எப்போதைக்குமான அன்பு.

5 கருத்துகள்:

  1. உண்மையிலேயே அங்கீகரிக்கப்பட வேண்டிய கவிதை வரிகள்.நூல் கிடைக்கிறபோது கட்டாயம் வாங்கி படிக்கிறேன்.வாழ்த்துக்கள், நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. வாழ்வை எதை விடவும்
    அதிகம் வெறுத்த அம்மா
    அடுக்களையில் மறைவாக
    ஒளிந்து
    சாணிப்பவுடரைக்
    குடிக்கப் போன சமயம்
    எனக்கொரு வாய்
    குடுங்க அம்மா என்று
    கேட்ட போது தான்
    அவள் சாவை விடவும்
    கொடுமையான இந்த
    வாழ்வைத் தேர்ந்தெடுத்தாள்

    தங்களின் கவிதை மனதை கலங்க அடித்து விட்டது நண்பரே

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள்!! கவிதை வரிகள் கலங்க வைத்தன!

    பதிலளிநீக்கு
  4. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

    பதிலளிநீக்கு
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் எழுத்து மென்மேலும் சாதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    பதிலளிநீக்கு