செவ்வாய், 22 நவம்பர், 2016

கலை இலக்கியப் பெருமன்ற விருது விழாவும் புதுக்கோட்டை நினைவுகளும்


எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி கவிதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான கே.சி.எஸ் அருணாசலம் நினைவு விருது கடந்த நவம்பர் பன்னிரண்டாம் தேதி புதுக்கோட்டையில் வைத்து வழங்கப்பட்டது.

விருது அறிவித்தவுடன் நண்பர்களுக்கு தகவல் பரிமாறியிருந்தேன் வாய்ப்புள்ளவர்கள் வரட்டும் என்று. பல்வேறு அலுவல்களால் உடன் யாரும் வர இயலவில்லை. எச்சந்தர்ப்பத்திலும் உடன் இருக்கும் மாமா செந்தில்குமார் மட்டும் வருவதாக முன்பே கூறியிருந்தார். இருவரும் மகிழ்வுந்தில் செல்லலாம் என முடிவானது. நெடுந்தூரம் என்பதால் ஓட்டுநராக தம்பி சரவணனை உடன் அழைத்துக்கொண்டோம்.. கவிஞர் கோவை சசிக்குமார் அவர்களும் இணைந்து கொண்டார்.

புதுக்கோட்டை செல்வதின் பிரதான நோக்கங்களில் ஒன்று சகோதரி ரோஸ்லின் வைகறையையும் , ஜெய்குட்டியையும் சந்திப்பது. அவர்களிடம் முந்தைய நாள் அலைபேசியில் பேசிய போது பள்ளி இருப்பதாகக் கூறினார். எனவே நான் சனிக்கிழமை இரவு விருது விழா நிகழ்வு முடிந்ததும் அறையில் தாங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமைக் காலை அவர்களைச் சந்திக்க வருவதாகத் தான் கூறியிருந்தேன்.

காலை ஆறுமணிக்குக் கிளம்பி அங்கு சென்ற போது பன்னிரண்டு மணி ஆகியிருந்தது. விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே அறை எடுத்திருப்பதாகவும் அங்கு சென்றுவிட்டு நகர்மன்றத்துக்கு வந்துவிடுமாறும் சொல்லியிருந்தார்கள்.
விடுதியின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே இருக்கும் பையை எடுக்கக் குனிந்தேன். பின்னால் யாரோ என்னத் தொட்டு அழைப்பது போல உணர்ந்து திரும்பிப்பார்த்தால் இன்ப அதிர்ச்சியாக ஜெய்குட்டி நின்றிருந்தான். உடன் அவனது அம்மாவும். உண்மையிலேயே இன்ப அதிர்ச்சி தான். ஜெய்குட்டி என்று அவனைக் கட்டிக்கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன். அவனது கையில் ட்ரிப்ஸ் போட்ட ஊசி அப்படியே இருந்தது. ரோஸ்லின் சகோதரி சொன்னார் நான்கு நாட்களாக சரியான காய்ச்சல் , இப்போது மருத்துவமனை போய் ட்ரிப்ஸ் போட்டு வந்தோம் இன்று பள்ளிக்கு இருவரும் விடுமுறை என்றார். அவரை, காரில் அனுப்பி வைத்துவிட்டு தம்பியை அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வீட்டையும் பார்த்து வா என்று அனுப்பினோம். அதற்குள் நாங்கள் கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொண்டோம். இப்போதே அவர்களது வீட்டுக்குச் சென்று பார்த்து வரலாம் என்று முடிவானது.

கொஞ்ச நேரத்தில் அவர்களது வீட்டுக்குச் சென்றுவிட்டோம். வைகறையின் இழப்புக்குப் பின் இப்போது தான் இந்த வீட்டிற்கு வருகிறேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். வைகறையின் இழப்பு அவர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது என்பது சத்தியமான உண்மை. சகோதரி அழுதுகொண்டே இருந்தார். சமாதானம் சொல்லிக்கொண்டே இருந்தோம். பிறகு பிரிய மனமில்லாமல் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டோம்.

மாலை ஆறுமணிக்கு நகர்மன்றத்தில் விருது விழா துவங்கியது. ஒரு விருது விழா எப்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நிறைவாகச் செய்திருந்தார்கள். விருதாளர்களை மேடையின் இடப்பக்கம் தனியிருக்கையில் அமர வைத்தனர். விருதாளர்கள் மிக நல்ல முறையில்  பொறுமையாக ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களது நூல் விவரங்கள், செயல்பாடுகள் அடங்கிய சுய விவரக்குறிப்பை புத்தகமாக அச்சடித்துக் கொடுத்திருந்தனர் அனைவர்க்கும். மேடையில் முஸ்தபா அவர்கள் அழகான குரலில் மீண்டும் அறிமுகம் செய்து ஒவ்வொருவராக அழைத்தார்.

என் முறை வந்த போது , விழா மேடையின் நடு நாயகமாக முதலில் அழைத்து அமர வைக்கப்பட்டேன். அப்போது என்னைப்பற்றிய குறிப்புகள் வாசிக்கப்பட்டன. பின்னர் பா.பா.ரமணி அய்யா அவர்கள் பொன்னாடை போர்த்தினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விருதும் பொற்கிழியும் அளித்தார். பின்னர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.



நிகழ்வில் அனைவரும் சிறப்பாகப் பேசினர். பாடல்களாலும் மேடை அழகானது. மொத்தத்தில் மிகச் சிறப்பான விழா. மகிழ்வாகவும் பெருமையாகவும் உணர்ந்த தருணம்.

எனக்காக நிகழ்வுக்கு வந்திருந்த தேவதா தமிழ் கீதா அம்மா  மற்றும் அமிர்தா தமிழ் ஆகியோர் பொன்னாடையுடனும் புத்தகப் பரிசுடனும் வந்து நிகழ்வு முடியும் வரை இருந்து வாழ்த்திவிட்டுச் சென்றனர். தோழி வினோ தாஸ் அவர்களும் நிகழ்வுக்கு வந்து இறுதிவரை இருந்துவிட்டுச் சென்றார்.
அடுத்தநாள் காலையில் கிளம்பி தஞ்சை பெரிய கோவில் சென்றுவிட்டு ஊர் திரும்பினோம். மறக்க முடியாத நிகழ்வு … நினைவுகளில் பல காலம் நிற்கும்.




வைகறை மனைவிக்கு தக்க சமயத்தில் கொஞ்சம் பணம் கொடுத்தோம். அது உண்மையிலேயே அவசியமான சமயம் என்பதையும் உணர்ந்திருந்தேன். பணம் கொடுத்த போது அவர் வாங்க வில்லை. ஆனாலும் அது எங்களது கடமைகளிலும் வைகறைக்குப் பட்டிருக்கும் கடன்களிலும் ஒன்று என்று சொல்லி கைகளில் திணித்தோம். அது எனது பணமாக மட்டும் இருந்திருந்தால் இங்கு குறிப்பிட்டிருக்கவே மாட்டேன். என்னை நம்பி வைகறை வீட்டுக்குப் போகிறேன் என்று சொன்னதும் பணம் கொடுத்து விட்டவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் எனவே நான் வைகறை மனைவியிடம் கொடுத்த பணத்தை, விபரங்களோடு இங்கு குறிப்பிடுகிறேன்.

இரா.பூபாலன்
5000
அமிர்தா முத்துவேலவன்
5000
சோலை மாயவன்
3500
.தி.செந்தில்குமார்
1000
கோவை சசிக்குமார்
1000
மொத்தம்
15500

இது முதல் தவணைதான், இன்னும் சில மாதங்களில் மீண்டும் அவருக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும். செய்வோம்.

புதுக்கோட்டைக்காரர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. இரண்டு ஆண்டுகள் தான் வைகறை அங்கு இருந்திருப்பார். அவர்களோடு பழகியிருப்பார். அவரது இறப்புக்கு அணி திரண்டு வந்ததாகட்டும், பின்பும் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு பல்வேறு வகைகளில் உதவுவதாகட்டும் மனதை நெகிழச் செய்கிறது. நன்றாக இருப்பீர்கள் நண்பர்களே.

தங்கம் மூர்த்தி அய்யாவின் பள்ளியிலேயே ரோஸ்லின் சகோதரிக்கு வேலை தந்துள்ளார் அதுமட்டுமல்லாது ஜெய்குட்டியையும் செலவின்றிப் படிக்க வைப்பதாக உறுதியளித்துள்ளார் என்பதைக் கேட்க மனம் நெகிழ்கிறது. கொஞ்ச நாட்களில் முத்துநிலவன் அய்யா உள்ளிட்ட வீதி, விதைக்கலாம் குழு மற்றும் அத்துனை புதுக்கோட்டை நண்பர்களும் இணைந்து இரண்டரை லட்சத்தைத் திரட்டி வைகறையின் குடும்பத்துக்கு நிதியாக அளித்துள்ளனர். எத்தனை இடங்களில் இப்படிச் செய்வர். சில ஊர்களில் கூட இருந்தவன் சகபடைப்பாளி போய்விட்டால் ஒர் இரங்கற்கவிதையோடு கடமையை முடித்துக்கொள்வோம். அவனது குடும்பத்தைப் பற்றி நினைத்திடோம். மீறி ஏதாவது செய்யலாம் என்றாலும் ஆயிரம் அரசியல்கள், ஈகோக்கள், இழவு வீட்டிலும் எதிர்பார்க்கப்படும் மாலைகள் மரியாதைகள் என நிறைய நிறையத் தடைகள் உண்டு... அத்தனையையும் தாண்டி வைகறை என்ற நல்ல படைப்பாளிக்கும் மிகச்சிறந்த மனிதனுக்கும் புதுக்கோட்டை மண் நல்ல மரியாதையைச் செய்திருக்கிறது. மனம் நிறைந்த நன்றி.

4 கருத்துகள்:

  1. புதுக்கோட்டை வாழ் படைப்பாளிகளைப் பாரட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. விருது பெற்ற மகிழ்ச்சியை மீறி , வைகறையின் மறைவு குறித்த துக்கம் வெளிப்படும் நெகிழ்வான பதிவு .

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மாறிமாறி வந்த பதிவு. மனிதர்கள் என்றால் இப்படித்தானே இருக்க முடியும்? நாம் மனிதர்கள். தொடர்ந்து எழுதுங்கள் கவிஞரே.. அடுத்தடுத்த பரிசுகளைத் தாண்டியும் உங்கள் பயணம் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு